-
சூரியன் உதிப்பதற்கு முன்பே
எழுந்துவிட வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளை தியானம் செய்ய வேண்டும்.
-
இயற்கைக்
கடன்களை கழித்த பின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள்
ஆகியவற்றில் உள்ள அசுத்தங்களையும், கை, கால் போன்ற
உறுப்புகளில் உள்ள அழுக்குகளையும் வெந்நீரால் தேய்த்து சுத்தமாகக்
கழுவ வேண்டும். பின்னர், வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதைத்
தொடர்ந்து கரிசலாங்கண்ணி கீரைத்தூள் கொண்டு, உள்ளே சிறிது சாறு போகும்படி பல்
தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
-
அதன்பிறகு, கரிசலாங்கண்ணி
இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கை இலை சேர்ந்த கலவை கால் பங்கு, சீரகம் கால்
பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடியாக தயாரித்து வைத்துக்
கொள்ள வேண்டும். அந்த பொடியில் ஒரு கிராம் எடுத்து, அதை ஒரு டம்ளர் தண்ணீரில்
சேர்க்க வேண்டும். இன்னொரு டம்ளரில் பசும்பாலை எடுத்துக்
கொள்ள வேண்டும். இந்த இரண்டு டம்ளர் திரவத்தையும் ஒன்றாகக்
கலந்து நன்கு கொதிக்க வைத்து, ஒரு டம்ளராக சுண்டிய பின், அதில் நாட்டுச் சர்க்கரை
கலந்து சாப்பிட வேண்டும்.
-
காலை வெயில் உடலில் படாமல்
இருக்க மேல்சட்டை அணிய வேண்டும்.
-
ஒன்றரை மணி நேரம் கழித்து,
வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். பின்னர், இளம் வெந்நீரில் குளிக்க
வேண்டும். சிறிது நேரம் கடவுளை வணங்க வேண்டும்.
-
பசி எடுத்தவுடன் சாப்பிட
வேண்டும். சாப்பிடும் போது அள்ளிப்
போட்டுக் கொள்ளக் கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர்
குடிக்க வேண்டும்.
-
கிழங்கு வகைகளை உண்ணக்
கூடாது. ஆனால், கருணைக் கிழங்கை உண்ணலாம். பேயன்
வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி,
மிளகாய் ஆகியவற்றை குறைவாகவும், மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க
வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பை குறைவாக சேர்த்துக்
கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்லெண்ணெய் உபயோகிக்கலாம்.
அல்லது, பசு வெண்ணெயால் தாளிக்கலாம்.
-
கத்தரிக்காய், வாழைக்காய்,
அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய்,
கொத்தவரைக்காய் ஆகியவற்றை கறி செய்வதற்கு உபயோகிக்கலாம்.
முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம்.
மற்றவற்றை எப்போதாவது செய்ய வேண்டும்.
-
சர்க்கரைப் பொங்கல்,
புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்திரான்னங்களை அடிக்கடி சாப்பிடக்
கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.
-
புளித்த தயிர் சேர்த்துக்
கொள்ளலாம்.
-
பருப்பு வகைகளில் துவரம்
பருப்பை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது
சேர்த்துக் கொள்ளலாம்.
-
விருந்து என்றாலும் சற்று
குறைவாகவே உண்ண வேண்டும்.
-
வெந்நீரையே குடிக்க வேண்டும்.
-
மாலை வெயில் உடலில் படுமாறு
சற்று நடக்க வேண்டும். காற்று அதிகமாக இருந்தால், திறந்த
வெளியில் நடக்கக்கூடாது. வெயில், பனி, மழை ஆகியவை உடலில் படுமாறும் நடக்கக்
கூடாது.
-
இரவின் தொடக்கத்தில் முகம்,
கை, கால் ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பின், தியானம் செய்யலாம். மந்திரங்கள் சொல்லி கடவுளை வணங்கலாம். நல்ல புத்தகங்கள்
படிக்கலாம். வீட்டு விவகாரங்கள் பற்றி பேசலாம்.
-
பிறகு இரவு உணவை உட்கொள்ள
வேண்டும். பகலில் எந்த அளவுக்கு சாப்பிட்டீர்களோ, அதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண
வேண்டும்.
-
இரவில் கீரை, தயிர் மற்றும்
உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகளை உண்ணக் கூடாது.
சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும்.
-
இரவு சாப்பாடு முடிந்து 2
மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க
வேண்டும்.
-
பெண்களுடன்
உடலுறவு கொள்ளும் நாட்களில், அதற்கு ஒரு மணி நேரம்
முன்பிருந்து உடலுறவைப் பற்றி எண்ணாமல், அதன் பின் உறவு
கொள்ள வேண்டும். ஒரே இரவில், ஒரு முறைக்கு மேல் உறவு வைத்துக்
கொள்ளக் கூடாது.
-
உடலுறவு முடிந்தபிறகு உடலைத்
தூய்மைப்படுத்திக் கொண்டு கடவுளை தியானம் செய்து, அதன்பின்
உறங்க வேண்டும். 4 நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு வைத்துக்
கொள்வது அதமம். 8 நாட்களுக்கு என்றால் மத்திமம். 15 நாட்களுக்கு ஒருமுறை என்றால்
உத்தமம்.
-
படுக்கும்
போது இடது கைப் பக்கமாகவே
உறங்க வேண்டும்.
-
கொலை, கோபம், சோம்பல், பொய்,
பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.
-
கத்திப்
பேசுதல், வேகமாக நடந்து செல்லுதல், ஓடி நடத்தல், வழக்குப்
போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.
-
பதற்றம் அதிகரித்தால்
பிராணவாயு அதிகமாக செலவாகும். அதனால், பதற்றம் கூடாது.
-
4 நாட்களுக்கு ஒருமுறை
நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு, வெந்நீரில் குளிக்க
வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறை காய்ச்சிய நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக்
கொண்டு முழுக வேண்டும்.
-
புகை, கஞ்சா, கள், சாராயம்,
போன்ற போதை தரும் பொருட்கள் கூடாது.
-
மாதத்துக்கு ஒரு
முறை அல்லது 6 வாரத்துக்கு ஒரு முறை பேதிக்கான
மருந்தை உட்கொள்ள வேண்டும்.