|
சிறுகதை-42
பாழாய்ப் போன இரவில்...
-ராம்ப்ரசாத்.

அந்த லண்டன் மாநகரின் அமைதியான
தெருவில் அமைந்த ஆடம்பர ஹோட்டலின் நான்காவது தளத்தில் உள்ள 11வது ரூமில்
நிர்மலாவும் சாண்டி என்கிற சந்தியாவும் அவசர அவசரமாய்க் கிளம்பிக்
கொண்டிருந்தார்கள். வடநாட்டுத் தோழி ஒருத்தியின் பார்ட்டி தரை தளத்தில்.
பார்ட்டிக்கு வருபவர்களில் சிலர் வெளியூரிலிருந்து வருகிறார்கள் என்பதால்
நிர்மலா, சாண்டி உட்பட வெகு சிலருக்கு ரூம்கள் புக் செய்யப்பட்டிருந்தது. உச்சி
முதல் பாதம் வரை இழுத்துப் போர்த்திய சல்வார் அணிய எத்தனித்தவள், சந்தியாவின்
ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் பார்த்தவுடன் பார்ட்டியில் தன் மதிப்பு போய்விடுமோவென எண்ணி
தானும் ஒரு ஃப்ராகிற்கு மாறினாள். 10 வயதாய் இருந்த போது பிங்க் நிறத்தில் ஃப்ராக்
போட்ட நியாபகம். அதற்கப்புறம் ஃப்ராக் போட வாய்ப்பு கிட்டவில்லை. நிர்மலா,
இருக்கும் இடத்திற்கேற்றவாறு உடை அணிய வேண்டுமென்று தோழிகளுக்கெல்லாம் அட்வைஸ்
செய்பவள். கல்லூரி கலை நிகழ்ச்சிகளுக்கு வீட்டிலிருந்து சுடிதாரில் வந்து,
காலேஜில் ஜீன்ஸ்க்கு உடை மாற்றிக்கொள்ளும் ரகம்.
இந்த ஃப்ராக், நிர்மலாவின் காதலன் ரகு வாங்கிக் கொடுத்தது. இருவரும் பன்னாட்டு
நிறுவனத்தில் வேலையில் இருப்பவர்கள்.
அவனும் பார்ட்டிக்கு வருகிறான் என்பதால் நிர்மலாவிடம் துள்ளல் அதிகம் இருந்தது.
ரூமை லாக் செய்துவிட்டு, வெளியில் வந்த பின்பு, உள்ளே மறந்து வைத்துவிட்ட மொபைல்
ஃபோன் எடுக்க மீண்டும் ரூமிற்க்குள் ஓடி, மறுபடி ரூமை லாக் செய்து, ஒரு வழியாக
பெண்கள் இருவரும் பார்ட்டி நடக்கும் ஹோட்டல் வந்து சேர்ந்தனர். பார்ட்டி ஏற்கனவே
தொடங்கி விட்டிருந்தது. ரகு ரெண்டாவது பெக்கை தொண்டைக்குள் இறக்கிக்
கொண்டிருந்த போது நிர்மலா அவன் அருகே அமர்ந்து ஹாய் சொன்னாள். பரஸ்பரம் இருவரும்
கன்னங்கள் உரசிக் கொள்ள முத்தமிட்டுக் கொண்டனர். இந்தியாவில் இருந்தவரை,
கைகுலுக்கிக் கொள்வதோடு நின்றுவிடும். லண்டனில் இதெல்லாம் சகஜம் என்பதால்,
நிர்மலாவுக்கும் இது கனநேரத்தில் தொற்றிக் கொண்டது. வேற்று நாட்டில்
காலடியெடுத்து வைத்த பிறகு அவள் பழக்கப்படுத்திக் கொண்ட பல செய்கைகளில் இதுவும்
ஒன்று.
சுமாராக ஒரு 30 பேர் வந்திருந்தார்கள். மெடையில் மெல்லியதாய், என்ரிக்கின் இசை
ஆல்பமும், பேயொன்ஸ் இசையும் சேர்ந்து சிந்தையை மயக்கிக் கொண்டிருந்தது.
சந்தியாவும் தன் பங்குக்கு ஒரு பெரிய கோப்பையில் மது ஊற்றி, நிர்மலாவிற்கும்
ஒன்று எடுத்து வந்தாள். நிர்மலாவிற்கு இதெல்லாம் பழக்கமில்லை என்பதால் முதலில்
பெரிதாகத் தயங்கினாள். கூட வந்தவர்கள் ஒரு மாதிரியாக பார்க்கத் தொடங்க, அதற்கு
மேல் மறுத்தால் நன்றாக இருக்காதென்று வாங்கிக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் அடிவயிறு முட்டத் தொடங்க, ரகு ரெஸ்ட்ரூம் எங்கே எனக்கேட்டு
லேசாக தள்ளாடியபடி சென்று விட்டான். திரைப்படங்களிலும், அலுவலக பார்ட்டிக்களில்
அடுத்தவர் கைகளில் மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட மதுக்கோப்பை. அதிலும் இரண்டு
வருடம் அவள் வேலை செய்த ப்ராஜெக்டில் ரீவ் என்கிற அமேரிக்க பெண்மணி ஸ்டைலாகக்
குடிப்பாள். அலுவலகமே அவள் அழகில், நவீனத்தில், ப்ராஜெக்ட் நுணுக்கத்தையும்,
கோப்பையையும் ஒரே வேகத்தில் கையாளும் அழகில் மயங்கிப் போகும். அப்போதெல்லாம்
நினைத்திருக்கிறாள், இந்த மதுவை கையில் கொண்டிருந்தவர்கள் அனைவரும் மேல்தட்டு
வகுப்பைச் சேர்ந்த, தன்னிறைவு பெற்ற, தனித்தன்மை வாய்ந்த, சுதந்திரத்தின்
எல்லைகள் கடந்தவர்கள் போலும் என்று. இன்று அப்படி ஒரு இடத்தில் தானும் நிற்பது
பெருமையாகப்பட்டது அவளுக்கு.
கல்லூரி படிப்புவரை தன் ஒவ்வொரு செயலுக்கும் அப்பா அம்மாவின் கேள்விகளுக்கு
பதில் சொல்லிகொண்டிருந்துவிட்டு, கேம்பஸில் பன்னாட்டு நிறுவனத்தில், 54 வயது
அப்பாவை விட 3 மடங்கு சம்பளம் வாங்கும் வேலையில் அமர்ந்த பிறகு அதுநாள் வரையில்
கேள்வி கேட்ட பெற்றோர் அதன் பிறகு தன் மகள் செய்வதெல்லாம் சரி என்கிற
அங்கீகாரத்தை வெளிப்படையாய் காட்டத் துவங்க, அந்த சுதந்திரம் அவளுக்கு தன்னை
பாரதியின் புரட்சிப் பெண்ணாய் தன்னையே பார்க்க வைத்ததில் அதிசயம்
ஒன்றுமில்லைதான்.
சந்தியா இரண்டாவது கோப்பையை எடுத்திருந்தாள். நிர்மலாவுக்கு ஏனோ இந்நேரத்தில்
ரீவின் நினைப்பு அதிகம் வந்தது. உலகின் ஃபார்ச்சுன் 500 நிறுவனத்தின் ப்ராஜெக்ட்
லீட், ரீவ்வைப்போல் ஒரு பெண்ணாய் தானும் மாறிவிட்டதாய் அந்த நொடி தோன்றியது.
மெல்ல மெல்ல மதுவை சுவைக்கத் தொடங்கினாள். முதலில் சுவை சற்றே வித்தியாசமாய்த்
தோன்றினாலும் நேரம் போக போக, அப்படித் தோன்றவில்லை. ஒரு அரைமணியில்
முழுக்கோப்பை காலி. சந்தியா மூன்றாவதுக்கு தாவியிருந்தாள்.
நேரம் செல்ல செல்ல, உள்ளே சென்ற மது தன் வேலையை காட்டத் துவங்கியிருந்தது.
நிர்மலாவிற்கு தலை சுற்றியது. தட்டாமாலை சுற்றுவது போலிருந்தது. சற்றைக்கெல்லாம்
கண்களைத் திறப்பதே கடினமாக இருந்தது. அலுவலக நண்பர்கள் முன்
குடித்து மயங்கி விழுந்ததாய் பெயர் வந்துவிடுமோவென பயம் வந்தது. சந்தியாவின்
காதில் தன்னை ரூம் வரை கைதாங்கலாய் அழைத்துச் செல்லும்படி கிசுகிசுத்தாள்.
அப்போதுதான் ஒரு ஆடவனுடன் சுவாரஸ்யமாய் பேசத் தொடங்கியிருந்த சந்தியா
முதலில் மறுத்தாலும் பிறகு மறுநாள் அலுவலகத்தில் சந்திக்க வேண்டுமே
என்கிற நிர்பந்தத்தில் அவனுக்கு எக்ஸ்க்யூஸ் சொல்லிவிட்டு நிர்மலாவை
கைத்தாங்கலாய் அழைத்துச் சென்றாள். சந்தியாவுக்கும் தள்ளாட்டமாகவே இருந்தது.
இருந்தாலும் அவளுக்கு பழக்கம் தான் என்பதால் வழக்கம் போல் சமாளித்தாள்.
நிர்மலாவை லிஃப்ட் ஏற்றி ரூமிற்கு கொண்டு வந்து படுக்கையில் படுக்க வைத்து
விட்டு மீண்டும் தரைதளத்துக்கு போய்விட்டாள்.
நேரம் நள்ளிரவு தாண்டி விடிகாலை மூன்று மணி ஆகிவிட்டிருந்தது. நிர்மலா
மெல்ல கண் விழித்தாள். தலை வலித்தது. உடம்பெல்லாம் வலியாய் இருப்பதாய்
உணர்ந்தாள். இந்த ரூம் தன் ரூம் போல் முற்றிலும் இல்லை என்பதாய் தோன்றியது. தன்
பெட்டி, படுக்கை, துணிகள், லாப்டாப் என எதுவும் இல்லை. தலைசுற்றல் சற்று தனிந்திருந்தது.
மெல்ல எழுந்தாள். படுக்கையில் அவள் கண்ட காட்சி அவளுக்கு தூக்கிவாரிப்
போட்டது. அவள் அணிந்திருந்த ஃப்ராக் தனியே கிடந்தது. அவள் உடல் பிறந்த
மேனியாய், உள்ளாடைகள் ஆங்காங்கே சிதறி, அவள் இடுப்புக்கு கீழே படுக்கையில்
ரத்தமாய், உடல் வலி பின்னியெடுத்து, நடந்தது என்னவென்று அவளுக்கு உணர்த்தியது.
இத்தனை வருடம் கட்டிக்காத்த கற்பை அங்கே அவள் எவனுக்கோ இழந்து
விட்டிருந்தாள்.
அழுகையும் ஆத்திரமும் வந்தது. உடல் வலியோடு, துணிகளை அணிந்தாள். வெளியில்
வந்து ரூம் கதவு பார்த்தாள். ரூம் நம்பர் 17. தன்னுடையது 11 ஆயிற்றே. அவளுக்கு
புரிந்துவிட்டது. குடிபோதையில் சந்தியா ரூம் நம்பர் சரியாய் பார்க்காமல்
தன்னை இந்த ரூமில் விட்டிருக்க வேண்டும். குடிபோதையில் தான் மயங்கி இருந்த
சமயத்தில், எவனோ தன்னை நாசம் செய்திருக்கிறான். அவளுக்கு வாய்விட்டு
கதறி அழவேண்டும் போலிருந்தது. தட்டுத் தடுமாறி தன் ரூமிற்கு வந்தாள்.
கதவு சாத்தி தாழிட்டு, ஆடைகள் களைந்து, பாத்ரூம் சென்று ஷவரில் நின்றாள்.
குலுங்கிக் குலுங்கி அழுதாள். நெடுநேரம் அழுதாள். உடம்பெல்லாம் புழு ஊர்வது
போல் அருவருப்பாய் இருந்தது. தன் முழு உருவமும் சாக்கடையாய் உணர்ந்தாள்.
எத்தனை குளித்தாலும் இந்த சாக்கடை உணர்வு போகாது போலிருந்தது. உடல்
துடைத்து, உடை மாற்றி படுக்கையில் வந்து அமர்ந்தாள்.
இத்தனை வருடம் கட்டிக்காத்த மானத்தை, ஆசைக் காதலன் ரகுவிற்காக
பாதுகாத்து வைத்த அன்புப் பரிசை யாரென்று கூடத் தெரியாமல் எவனிடமோ இழந்ததை
நினைத்து மனம் வெதும்பினாள். இனி ரகுவிற்குக் கொடுக்க என்ன இருக்கிறது தன்னிடம்.
ஆசை ஆசையாய் காதலிப்பவன் ரகு என்றாலும் இந்தியாவில் இருந்தவரை அவனை தொடக்கூட
விட்டதில்லை. கல்யாணம் முடிந்து முதலிரவன்று தன்னையே அவனுக்கு விருந்தாய் தர
அவனிடமிருந்தே தன்னை எத்தனை முறை பாதுகாத்திருக்கிறாள். அவன் பிறந்த நாளுக்குக்
கூட ரகு எத்தனை கெஞ்சியும் ஒரு முத்தம் கூட தந்ததில்லை. அப்படியெல்லாம்
பாதுகாத்து வைத்த கற்பை இன்று எவனோ அனுபவித்து விட்டு போய்விட்டான். அவன்
யாரென்று கூட தெரியவில்லை.
ரகுவிற்கு இனி தான் எவ்வகையிலும் பொருத்தமில்லை. இனி என்ன செய்தாலும் தன்
மனம் அதை ஏற்காது. எதை இழக்கக் கூடாதோ அதையே இழந்துவிட்ட பின் இனி வாழ்ந்து
என்ன பயன். செத்துவிடலாம் போலிருந்தது. விரக்தி, தனிமை, இழக்கக் கூடாததை
இழந்துவிட்ட வேதனை, அதனால் வந்த அருவருப்பு அவளை முழுமையாய் ஆட்கொண்டது.
படுக்கையை ஒட்டிய ட்ராயரை திறந்தாள். அதில் சந்தியா பயன்படுத்தும்
தூக்க மாத்திரைகள் இருபதை எடுத்து மேஜையில் வைத்தாள். வாஷ்பேசினை திறந்து
ஒரு க்ளாஸில் தண்ணீர் பிடித்தாள். ஒரு முடிவுக்கு வந்தவளாய், மாத்திரைகளை
விழுங்க கைகளில் எடுக்கையில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. அவசர அவசரமாய்,
மாத்திரைகளை தலையணைக்கு அடியில் வைத்து விட்டு, முகம் துடைத்து விட்டுக்
கதவு திறந்தாள். ரகு நின்றிருந்தான். அவன் மார்பில் புதைந்து ஓவென்று அழ
வேண்டும் போலிருந்தது. வெறுமையாய் ஹாய் சொல்லிவிட்டு திரும்பி நடந்து படுக்கையில்
அமர்ந்தாள். தொடர்ந்த ரகு அருகிலிருந்த சோபாவில் அமர்ந்தான்.
”ஹெய் நிர்மலா, ஏன் என்னமோ போல இருக்க?”
”ஒண்ணுமில்ல”
”ம்ம்ம்...”
சற்று தயக்கத்துக்குப்பின் ரகு தொடர்ந்தான்.
”நிர்மலா, உன்கிட்ட நான் எதையும் மறைக்க விரும்பல. நேத்து ஒரு விஷயம்
நடந்தது. நானும் ஒரு பொண்ணும் தப்பு பண்ணிட்டோம். நான் தெரிஞ்சு பண்ணல.
தண்ணியடிச்சிருந்ததுனால தெரியல. அவ யாருன்னு கூட தெரியாது. நேத்து நைட்
தண்ணி அடிச்சதும் தம்மடிக்க மர்வானா சிகரெட் ரூம்ல இருக்குனு ப்ரண்டு
சொன்னான்னு நான் அவன் ரூம் போனேன். அங்கதான் அது நடந்துடுச்சு. போதைல
அந்தப் பொண்ணு யாருன்னு கூட தெரியல......'.
”எந்த ரூம்?” நிர்மலா அவசரமாய் இடைமறித்தாள்.
”ரூம் நம்பர் 17”
நிர்மலாவிற்குப் போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது. அடி வயிறு
ஒருமுறை சுருண்டு திரும்பியது. எழுந்து போய் அவனை கட்டிக் கொண்டாள். ரகு,
ரகு, ரகு. மனசு நொடியில் ஆயிரம் முறை அவன் பெயர் சொல்லியது. தன் ஆசைக்
காதலனிடம் தான் தன்னை இழந்திருக்கிறோம் என்ற நினைப்பே தேனாய் இனித்தது.
புழு ஊரும் அருவருப்பு மறைந்து, அந்த வலியை மனசு அனுபவிக்க ஆயத்தமாவதை
உணர்ந்தாள். நல்ல வேளை, ரகுதான் அது.
ரகு திணறினான். எப்பவும் தொடக்கூட விடாதவள் இன்று கட்டிப் பிடிக்கிறாளே
என குழம்பினான். அதுவும் தன்னை அறைவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு, இது
முற்றிலும் புதியதாக இருந்தது. ரகு குழம்புவதை உணர்ந்தவள், சற்றே
சுதாரித்து, விடிகாலை மூன்று மணியை காரணம் காட்டி தான் அவனிடம் பிறகு பேசுவதாக
சொல்லி, அனுப்பினாள்.
எல்லாம் இந்த பாழாய்ப் போன குடியால் வந்த குழப்பம். நமக்கு இதெல்லாம்
தேவையா. அணிலைப் பார்த்து முயல் சூடு போட்டுக் கொண்டதைப் போல, மேற்கத்தியர்
கலாசாரத்தை பார்த்து நாமும் செய்ய நினைத்தது தவறு தான். மேற்கத்தியரைச்
சொல்லி குற்றமில்லை. ஆங்கிலம் அவர்களது தாய்மொழி. அவர்களின்
தாய்மொழியைதான் அவர்கள் பேசுகிறார்கள். நம் தாய்மொழி தமிழ். ஆனால் நாம்
ஆங்கிலம் தான் அதிகம் பேச நினைக்கிறோம். ஆங்கிலம் பேசினால் உயர்வாய்
நினைக்கிறோம். ஹாரிபாட்டர் எழுதிய ஜெகெ ரொளளிங்கின் பேரன்கள் கூட
மெர்சிடிஸ் காரில் செல்கிறார்கள். அந்தளவிற்க்கு அவரின் நாவல் விற்கப்படுகிறது
தமிழகத்தில். மது கூட அவர்களின் கலாசாரமே. அவர்கள் கலாசாரத்தை அவர்கள்
பின்பற்றுகிறார்கள். நாம் நம் கலாசாரத்தை விட்டு விட்டு அவர்கள் கலாசாரத்தை
பின்பற்ற முயல்கிறோம். இது முற்றிலும் தவறுதான்.
நிர்மலா ஒரு முடிவிற்கு வந்தாள். முதலில் தன்னிடமிருந்த ஜீன்ஸ் பாண்ட், ஃப்ராக்,
ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் எல்லாவற்றையும் தூக்கி எறிந்தாள். பாந்தமாய் சல்வார்
அணிந்து கொண்டாள். கந்த சஷ்டி கவசத்தை லாப்டாப்பில் தட்டி பாட வைத்தாள்.
மனசு லேசானது. நிம்மதி பரவியது. அந்த நிம்மதியை முழுக்க உணர்ந்தாள்.
விடிந்ததும் ரகுவிடம் விஷயத்தை சொல்ல வேண்டும் என்று தீர்மானித்துக்
கொண்டாள்.

ராம்ப்ரசாத்
அவர்களது மற்ற படைப்புகள்

முந்தைய கதைகள் காண

|