........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                             
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

2

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

   குறுந்தொடர் கதை

ஒரு இனிய கானம்

  மூலக்கதை: FELICIA MASON (பெலிசியா மேசன்)       தமிழாக்கம்: இஷாரா

3.அந்தரங்கச் செயலாளர். 

சட்டென்று, கம்பெனி விழாவில் அறிமுகப்படுத்த ஒரு சகா இல்லையே என்ற பிரச்சினை மதிப்பிழந்து போனது. விஷ்ணுவின் கேள்விக்கு அவள் உண்மையான பதிலளித்தால் சகாவிற்கு அவசியமே  இல்லாமல் போய்விடும். காரணம் அந்த இடத்திலேயே அவளுடைய துறை தலைவர் அவளை வேலையிலிருந்து தூக்கிவிடுவார்.

அதே சமயம் பொய் சொன்னால் அவளது மனசாட்சியே அவளைக் கொன்றுவிடும்.

ஜோதி வாயைத் திறந்தாள். மூடினாள். மறுபடியும் திறந்தாள், பிறகு கையில் இருந்த குறிப்பேட்டை நோக்கினாள். "அறிக்கை, துறைக்கு கிடைத்த சிறந்த தகவல்களின் அடிப்படையால் தயாரிக்கப்பட்டது."

அழகு மட்டுமல்ல சமாளிக்கும் திறனும் இருக்கிறது என்றெண்ணினான் விஷ்ணு. பெண்களின் செயல்திறனை எப்போதும் போற்றுபவன்.

நிமிர்ந்தமர்ந்து மார்பின் குறுக்கே கைகளைக் கட்டி, இருக்கையில் நெளியும் ஒவ்வொரு உபதலைவரின் பார்வையையும் சந்தித்தான்.

"நண்பர்களே," அவன் ஆரம்பித்தான். "நான் இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்து ஒரு வருடம் முடியப் போகிறது. இந்த காலகட்டத்தில் நான் நமது நிறுவனத்தின் பலம், பலவீனங்களை மதிப்பீடு செய்ததில், பலவீனங்கள் அதிகமாகவும் பலம் என்று சொல்லிக் கொள்வதற்கு கிட்டதட்ட எதுவுமே இல்லாததும் தெரியவந்தது."

முடிவெடிக்கும் நேரம் நெருங்கிவிட்டதாக உணர்ந்தாள் ஜோதி. அவளுக்கென்று கம்பனி இருந்தால், நிச்சயமாக விஷ்ணுவைப் போல் அதை நடத்தமாட்டாள் - சர்வாதிகார தொனியில்.

நடக்க ஆரம்பித்திருந்தான். தன் இருக்கைக்கு பின்னால் நடைப்பயின்றபடி தான் அறிந்து கொண்ட விஷயங்களை கவலையுடன் நோக்கிய அந்தந்த துறைத் தலைவரை நேர் பார்வையாய் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தான்.

உதவியாளர்களோ அவர்களின் பங்கிற்கு, சிலர் ஆவலுடன் அவனை நோக்கினாலும் பலர் தங்களின் பாஸைப் போலவே திருடனுக்கு தேள் கொட்டியது போல் முழித்தார்கள்.

ஜோதி அமைதியான தோற்றத்துடன் அவனது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.

"என் தாத்தா இந்த கம்பனியை ஆரம்பிக்கும் போது தன் காலத்தையும் தாண்டிய தொலைநோக்குப் பார்வையுடன் தான் திட்டங்களைத் தீட்டினார்." என்றான் விஷ்ணு. "பலர் அதை பைத்தியக்காரத்தனம் என்றனர். ஏன் தயக்கத்துடன் முதலீடு செய்ய இருந்த இரு முதலீட்டாளர்களுக்குமே அந்த திட்டங்களால் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையிருக்கவில்லை."

நடந்து சென்று பெரிய ஜன்னலின் வழி வெளியே நோக்கினான். பிப்ரவரி மாதக் குளிரில் பூக்கள் பூத்திருக்கவில்லை. ஆனால், இன்னும் சில மாதங்களில் நடுவே வீற்றிருக்கும் நீர்த்தேக்கத்தினால் அந்த தோட்டமே பசுமையாய் மாறிவிடும்.

"இன்று புதிய நாள்," அறையிலிருந்தவர்களை விட தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

திரும்பி அதிகாரிகளை நோக்கியவன், சில காலமாகவே தனது மனதில் இருப்பதைக் கொட்டினான். "இன்றிலிருந்து, புதிய விளையாட்டும் ஆரம்பம்."

"அந்த புதிய விளையாட்டுதான் என்ன?" ஒரு அதிகாரி மெதுவாக அசட்டுத் துணிச்சலுடன் வினவினார்.

உங்கள் அனைவரையும் வேலையிலிருந்து தூக்குவது என்ற வாக்கியம் நாக்கு நுனிவரை வந்தது. அவர்களுடைய யோசனைகளாலும், ஆக்கபூர்வமில்லாத அணுகுமுறையாலுமே அந்த நிறுவனம் படுத்துவிட்டது. இனி அதன் எதிர்காலம், எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காத செயற்திறமைமிக்க நிர்வாகக் குழுவிடமே உள்ளது. அது காலத்தை பொறுத்ததல்ல, நோக்கத்தைப் பொறுத்தது.

அதற்கு சரியான உதாரணம் சந்தோஷ், அவர் கிட்டத்தட்ட நாற்பதாண்டு பழமையான அதிகாரி. அவருடைய கூர்மையான புத்தியும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் கம்பனிக்கு கிடைத்த சில வரப்பிரசாதங்களுள் ஒன்று.

குமரவேலை போலில்லாமல் அவருடைய துறையை எப்போதும் வெற்றியின் கோட்டுக்கு உள்ளேயே
வைத்திருந்தார்.

எல்லாத் தரப்பிலிருந்தும் அதே போன்ற உதவி கிட்டினால் அவரைப் போன்றோர் எப்படி செயல்படுவர்?

யாரெல்லாம் சவாலுக்கு தயார் என்று அறிந்து கொள்ளும் நேரம் எட்டிவிட்டது. "அதாவது புதிய முறையில் தொழிலை நடத்தும் விதம்."

விஷ்ணு தன்னுடைய தோல் பையை திறந்து கற்றை தாள்களை வெளியில் எடுத்தான். இதைப் பற்றி அதிகம் சிந்தனை செய்து விட்டான்.

"ஆறு குழுக்களாய் பிரித்திருக்கிறேன். ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு வார காலக்கெடு. அதற்குள் உற்பத்தித் திறனைப் பெருக்குவதில் மட்டுமல்லாமல் நாம் தொழில் நடத்தும் முறையையே மாற்றியமைக்கும் விதமான புதிய சிந்தனைகளை அலசி ஆராய வேண்டும்."

"இது ஒழுங்கீனமானது." என்றார் குமரவேல். "எனது துறையில்..."

"இன்று முதல் ஒவ்வொரு கிளையும், ஒவ்வொரு துறையும் மறுபரிசீலனை செய்யப்படும். நான் நிறுவனத்தையே மாற்றியமைக்கப் போகிறேன். அதன் முதல் முயற்சியாக எனது அந்தரங்கச் செயலாளராக ஜோதியை நியமிக்கிறேன்"

( தொடரும்...)

பகுதி-2                                                                                                                                                                பகுதி-4

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.