........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
|
a |
மனம் திறந்து-59 கற்பனை வாழ்க்கையை விரட்டுங்கள்!
ஒருநாள் புத்தர் தனது மாணவர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தனர். முன் வரிசையில் உட்கார்ந்திருந்த மாணவன் புதியவன்; ஒரு நாட்டின் மன்னன். தரையில் உட்கார்ந்து பழக்கமில்லாதவன். உடல் நெளிந்தும், கால்களை மாற்றியும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். தான் படும் சிரமத்தை, புத்தர் அறிந்து விடக் கூடாதென்பதற்காக, அதை மறைக்கவும் முயற்ச்சித்தான். இதனை ஜாடையாக புத்தரும் கவனித்தார். அவர் மற்றொன்றையும் பார்த்தார். அவனுடைய கால் கட்டைவிரல் ஆடிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். அந்த ஆட்டம் அவனை அறியாமல் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டார். பின் தனது பேச்சை நிறுத்தினார். “உன் காலின் கட்டைவிரல் ஆடிக் கொண்டிருப்பதைக் கவனித்தாயா?” என்று மன்னனைப் பார்த்து கேட்டார். மன்னன் அப்பொழுதுதான் தன் கால் கட்டை விரல் ஆடிக் கொண்டிருப்பதைக் கவனித்தான். அவன் பார்த்தவுடன் கட்டை விரலின் ஆட்டம் நின்று விட்டது. அங்கிருந்த அனைவரும் “என்ன ஆச்சரியம்!” என்று வியந்தனர். “இப்பொழுது கட்டைவிரலின் ஆட்டம் நின்றுவிட்டது! ஏன் தெரியுமா?” அனைத்து மாணவர்களிடமிருந்து தனது கேள்விக்குப் பதிலை எதிர்பார்த்தார். ஒருவரிடமிருந்தும் பதில் வராமல் போகவே, அவரே பேச ஆரம்பித்தார். “அவன் தனது கால் விரலின் ஆட்டத்தை உற்றுப் பார்த்தவுடன் அதாவது விழிப்புணர்வுடன் (கவனத்துடன்) பார்த்தவுடன் கட்டைவிரலின் ஆட்டம் நின்றுவிட்டது! விழிப்புணர்வு மட்டும் இருந்தால் போதும். வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்!” என்றார் புத்தர். “ஜென்” என்பது புத்தர் கொள்கையின் மேல் நிலை என்று ஒரு வகையில் சொல்லலாம். ஆனால் புத்தர் கொள்கையை அப்படியே பின்பற்றுவதும் இல்லை. எப்படி கவன வாழ்க்கைக்ககு ஒரு தத்துவமோ, கொள்கையோ, கோட்பாடோ கிடையாதோ. அதேபோல ஜென்னுக்கும் கிடையாது; வந்தனை, வழிபாடு என்பது போன்றது எதுவும் இரண்டுக்கும் இல்லை. கவன வாழ்க்கையை ‘மனப்பயிற்சி’ வாழ்க்கை என்றும் சொல்லலாம். ’ஜென்’ என்பதுவும் ‘மனப்பயிற்சி’ தான். ’மனப்பயிற்சி’ எல்லாவற்றிலும் இருப்பாதாக இரண்டும் சொல்கிறது. பேசுவது, நடப்பது, இருப்பது, உண்பது, உறங்குவது, தொழில் செய்வது மற்றும் அனைத்துச் செயல்களையும் மனப்பயிற்சி யாக்குவதுதான் இரண்டின் அடிப்படையாகும். பெரும்பாலும் அதிர்ச்சியின் மூலமே ஞான தரிசனத்தை அருள்கிறாகள் ஜென் குருமார்கள். உங்களின் மதக் கொள்கைதான் என்ன? என்று ஒரு ஜென் குருவிடம் ஒருவர் விளக்கம் கேட்டார். அதற்கு குருவானவர் “நான் வாழக்கையை வாழ்கிறேன்!.”என்றார். ”நாங்களும்தான் வாழ்கிறோம்!”என்றார் கேள்வி கேட்டவர். ”நான் எனது வாழக்கையில் எந்த மூட்டையையும் சுமப்பதில்லை!” என்று அமைதியாகச் சொன்னார் குரு. கேள்வி கேட்டவருக்கு ஒன்றுமே புரியவில்லை. புரியாமல் விழித்தார். சிறிது நேரம் கழித்து “நாங்களும் எந்த மூட்டைகளையும் சுமப்பதில்லையே!” என்றார் வியப்புடன் “எந்த மூட்டைகளையும் சுமப்பதில்லையா!” என்று சொல்லிவிட்டு ’கல, கல’ வென்று சிரித்தார். சிரிப்பு நின்றவுடன் “நீங்கள்தான் எப்பொழுதும், வாழ் நாள் முழுவதும், கற்பனை மூட்டையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு சுமந்து நொந்து நூலாப் போறீங்களே!” என்றார் வேதனையுடன். “புரியவில்லையே குருவே! உங்கள் கொள்கைதான் என்ன குருவே!” “நான் எந்தவிதமான ஆர்ப்பாட்டமில்லாத சாதாரண வாழ்க்கை வாழ்கிறேன். பசி எடுக்கும் போது சாப்பிடுகிறேன்; தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிக்கிறேன்; தூக்கம் வந்தால் தூங்குகிறேன். இதுதான் எனது கொள்கை!” என்றார் குரு. தவறான இடத்தில் தவறான ஒருவரிடம் மாட்டிக்கொண்டோமோ! என்று கேள்வி கேட்டவருக்கு மனதில் தோன்றி குழப்பத்தில் ஆழ்ந்து விட்டார். சிறிது நேரத்தில். குழப்பத்திலிருந்து மீண்ட அவர் “எல்லாரும் செய்றதைத்தானே நீங்களும் செய்றீங்க! இதிலென்ன சிறப்பு இருக்கு?” குருவை மடக்கி விட்ட பெருமிதம்,கேள்வி கேட்டவர் முகத்தில் பளிச்சிட்டது. “ ஆமாம்! எந்தத் தனிச்சிறப்பும் கிடையாது! அதுதான் முக்கியம்!” என்றார் குரு. ”பசித்தால் சாப்பிடுவதும்; தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பதுவும்; தூக்கம் வந்தால் தூங்குவதுவும் இயற்கைதானே! நாங்களும் அதைத்தானே செய்றோம்! தனிச்சிறப்பும் கிடையாதுன்னு நீங்களே சொல்றீங்க! ஆனால் முக்கியமுன்னு சொல்றீங்க! குழப்புறேங்களே குருவே!” குரு அவரைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். “நீங்க சாப்பிடும் போதுதான் புத்தகம் படிப்பீங்க; பேசுவீங்க; வேடிக்கை பார்ப்பீங்க; அல்லது மனம் சதா வேறு சிந்தனையிலே இருக்கும். ஏன் சில சமயங்களில் கோப தாபங்களுடன் சண்டை போட்டுக் கொண்டே கூட சாப்பிடுவீர்கள். கை சாதத்தை எடுக்கும்; வாயில போடும்; பற்கள் மெல்லும். இது எதுவுமே சாப்பிடுகிற உங்களுக்குத் தெரியாது. சாப்பாடு இனிப்பா கசப்பான்னு கூடத் தெரியாது. ஆனால். நான் சாப்பிடும் செயலில் மூழ்கி விடுவேன். அதாவது சாப்பாட்டோடு சாப்பாடாக இணைந்து விடுவேன். சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதே எனக்குத் தெரியாது. படுக்கையில் படுத்து விட்டால் ஆழ்ந்து தூங்கி விடுவேன். நீங்களோ பல்வேறு சிந்தனைகளில் மூழ்கி படுக்கைகளில் புரண்டு கொண்டிருப்பீர்கள். தாகத்தின் போது தண்ணீர் குடிப்பதில் ஏற்படும் இன்பத்தில் மூழ்கி விடுவேன். நீங்களோ இன்பத்தில் மூழ்காமல் சிந்தனையில் மூழ்கி விடுவீர்கள். நடக்கும் போது நடையோடு ஒன்றிவிடுவேன். எந்தச் செயலைச் செய்கிறோனோ அந்தச் செயலில் இணைந்து விடுவேன். இதுதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்”, என்றார் குரு. இப்படித்தான் கி.மு. காலத்தில் நமது முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். செய்யும் செயல்களைக் கவனமாகச் செய்வதின் மூலம் தெய்வத்தைக் கண்டார்கள். வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் செய்யும் போது தெய்வத்தோடு இணைந்து தெய்வ ஆற்றலையும் மற்றும் இவ்வண்டத்தின் ஆற்றலையும் பெற்றார்கள்; அவ்வாறு பெற்றதினால் செய்யும் செயல்களில்/ வேலைகளில் ஒரு நுணுக்கத்தையும் சிறப்பையும் கண்டார்கள். அவைகளினால் உண்டாகும் சிரமம் எதுவுமில்லாமல் மகிழ்ச்சியுடன் வேலைகளைச் செய்தார்கள். புதியவை கண்டு பிடித்தார்கள். கி.பி.யின் தொடக்கக் காலங்களிலும். இடைக்காலங்களிலும். கவன வாழ்க்கை வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கற்பனை வாழ்க்கை என்கின்ற மாய வாழ்க்கை வாழ்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்திருக்கிறது. காரணம், கி.பி. தொடங்கியவுடன். உருவ வழிபாடு புகுத்தப்பட்டது. மனிதன் இறையம்சம் கொண்டவன்; ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன் குடியிருக்கிறான் என்று கவனவாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவம் அழிக்கப்படுகிறது. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற உண்மை நிலை மாறி, உருவத்தைக் காட்டி, இறைவன் வெளியிலிருக்கிறான் என்ற மாயை பரப்பப்படுகிறது. நம்பமுடியாத கட்டுக்கதைகளை புராணக்கதைகளாக்கி மக்களை மதி மயங்கச் செய்தார்கள். இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய காலங்களை அறியாமல் பழந்தமிழர்கள் கால மற்ற வாழ்க்கை வாழ்ந்தார்கள். ‘யாதும் ஊரே’ என்ற உயர்ந்த பண்பாட்டுடன் வாழ்ந்த தமிழர்கள் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற ஆழ்ந்த உண்மையை உணர்ந்தவர்களாய் வாழ்ந்தார்கள். ஆனால், உருவ வழிபாட்டிற்கு வழி வகுத்தவர்கள், காலத்தை மூன்றாக்கியதோடு மட்டுமல்லாமல் அதில் நல்ல நேரம். கெட்ட நேரம் என்ற கோட்பாட்டையும் புகுத்தி ‘தீதும் நன்றும் காலத்தால் வருபவை’ என்ற மூட நம்பிக்கையை பிற்காலத் தமிழர்கள் மனதில் ஆழப்பதிய வைத்தனர். இந்த மூட நம்பிக்கையை அடிக்கட்டிடமாக வைத்து, மக்களின் மனஅழுத்தங்களை அதிகரிக்கும் படியான... பஞ்சாங்கம், ஜோதிடம் ஆகிய மேல் கட்டிடங்களை எழுப்பினார்கள். சிறிது சிறிதாகக் கவன வாழ்க்கையை கற்பனை என்னும் மாய வாழ்க்கை கவ்வி விழுங்கி விடுகிறது. மீதமாக இருப்பது ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பழமொழி மட்டும்தான். கி.மு.500-க்கும் கி.பி.250-க்குமிடைப்பட்ட கடைச்சங்க காலத்தைத் தமிழகத்தின் சங்ககாலம் என்பர். இக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கவன வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. கவன வாழ்க்கை அவர்களுக்கு அபரிமிதமான தமிழ்ப் புலமையைக் கொடுத்தது. சமய சார்புடையதாகவோ, புராணக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவையாகவோ சங்ககால இலக்கியங்கள் அமையவில்லை. அவ்விலக்கியங்கள் கற்பனைகளால் வடித்தவை அல்ல. கற்பனைக்கப்பால் பேராற்றலால் வடித்த இலக்கியங்களாகத் தோன்றுகின்றன. அன்று மின்சாரம் இல்லை. எழுதும் உபகரணங்களான காகிதம், பேனா இல்லை. போக்குவரத்து வாகன வசதிகள் இல்லை. தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை. வேறு மொழி இலக்கிய பண்ட மாற்றுகள் இல்லை. இவ்வாறு இமாலய வசதி குறைபாடுகள் உள்ள காலத்தில், தீப்பந்த வெளிச்சத்தில், காய்ந்த ஓலைச் சுவடுகளில், கூர்மையான எழுத்தாணியைக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். தொல்காப்பியம் பழமையான இலக்கண நூல். 1275 பாடல்களைக் கொண்ட நூல். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்று அதிகாரங்களைக் கொண்டது. எழுத்துக்களின் பிறப்பைப்பற்றி மிகச் சிறந்த ஆராய்ச்சி விளக்கம் தந்துள்ளார் தொல்காப்பியர். சொல்லதிகாரத்தில் சொற்களின் அமைப்பைப் பற்றி விளக்குகின்றார். திருக்குறளின் கட்டமைப்பைப் பாருங்கள்! 133 அதிகாரங்கள்,ஒவ்வொருஅதிகாரத்திலும் 10 பாடல்கள், மொத்தம் 1330 பாடல்கள். இவை அகம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் 2 வரிகளைக் கொண்டது. இரண்டு வரிகளில் மனச்சாட்சியின் பிரதிபலிப்பு, கருத்துத்தெளிவு, எக்காலத்திற்கும் பொருத்தம்- இப்படி அமைக்கப் பட்டிருப்பதில் ஒரு ஒழுங்கு முறை கடைப்பிடிக்கப் பட்டிருப்பதை அறிய முடிகிறது. என்றைக்குத் தமிழன் உருவ வழிபாட்டிற்கு பூஜை போட்டானோ அன்றைய தினம்தான் தமிழனின் கெட்டகாலம் ஆரம்பமாகியது. அவன் பூஜை போடப் போட அவனுக்குள்ளிருந்த அநிநீ பேராற்றல் (அறிவாற்றல், நிர்வாக ஆற்றல் மற்றும் நீதிபரிபாலன ஆற்றல்) சிறிது சிறிதாக அமுக்கப்பட்டு அடங்கிவிட்டது. வெளியிலுள்ள உருவத்திலிருந்துதான் அந்த ஆற்றல் வருகிறது என்ற நம்பிக்கை, பொய்யான நம்பிக்கை அவனின் மனதில் குடியேற்றப்பட்டது. அன்றைய தினத்திலிருந்துதான் கலிகாலம் துவங்கியது என்று கூட சொல்லலாம்.) நான் பல சமயம், தமிழ் இலக்கியத்தில் அறநெறிப் பாடல்கள் ஏன் இவ்வளவு மண்டிக் கிடக்கின்றன; மலிந்து கிடக்கின்றன என்று நினைத்ததுண்டு கி.மு.காலத்தில் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்கின்ற உயரிய இறை வழிபாட்டில் அமைந்த கவன வாழ்க்கையில் அறநெறிகளை கடைப்பிடிப்பது சுலபமாகவும் இயல்பாகவும் இருந்தது. காரணம் அநிநீ பேராற்றல், மக்களை, தீய எண்ணங்களினால் விளையும் தீய சக்திகள் நெருங்க விடாதபடி பாதுகாப்பு அரணாக விளங்கியது. கி.பி. காலத்தில், உருவ வழிபாடு அநிநீ பேராற்றலை வழங்க இயல முடியாத தால், மக்கள், தவறான வழிகளிலும், குறுக்கு வழிகளிலும் சென்றால்தான். பொருள் ஈட்டமுடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதன் மூலம் துன்பத்திற்கும் துயரத்திற்கும் உள்ளானார்கள். உருவ வழிபாடு துன்பத்தையும். துயரத்தையும் போக்குவதற்கு பஞ்சாங்கம், ஜோதிடம் பக்கம் கைகாட்டி துன்பத்தையும் துயரத்தையும் அதிகமாக்கியதே தவிர, குறைக்க முடியவில்லை. இவ்வாறு கி.மு.காலத்தில் பின்பற்றப்பட்ட அற நெறிகள் கி.பி.காலத்தில் உருவ வழிபாடு வந்தபிறகு சிறிது சிறிதாக மீறப்பட்டு மக்கள் சொல்லொண்ணாத துயரத்திற்குள்ளானார்கள். இதனைப் பொறுக்காத தமிழ்ப் புலவர்கள் அற நெறிகளை இலக்கியப் படைப்புகளாக்கி பரப்பியிருக்கின்றனர். உதாரணமாக, நற்றிணை எட்டுத் தொகை நூலாகும். இது சோழ அரசர்கள் அறம் தவறாது நீதி வழங்குபவர்கள் எனக் கூறுகிறது. குறுந்தொகை 5 வகை ஒழுக்கங்களை சுவையாகக் கூறுகிறது. தானம் அளிப்பதின் சிறப்பு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. வாழ்க்கை நெறிமுறைகளைப் பற்றி கலித்தொகை கூறுகிறது. செல்வம் நிலையற்றது. இளமை சிறப்பானது. கொடை குணம் இல்லாதவனது செல்வத்தால் அவனைச் சார்ந்தவர்களுக்குப் பயனில்லை. தீங்கு செய்பவன் இறுதியில் கெடுவான். இளமையும், செல்வமும் அழியும் தன்மையுடையவை. நற்குணமுள்ள சான்றோர் வாய்மை தவற மாட்டார்கள். சோம்பல் இல்லாதவன் செல்வம் வளரும். நேர்மையான முறையில் தேடப்படாத பொருளால் துன்பமே ஏற்படும். மனித யாக்கை பெறுவதற்கரியது. பொருளற்றவரின் இல்லறம் மகிழ்வைத் தராது. இவ்வாறு பல நடைமுறை அறநெறிச் செய்திகளை கலித்தொகை கூறுகிறது. திருக்குறளை உள்ளடக்கிய பதிநெண்கீழ்கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதியை எடுத்துக் கூறுபவையாக அமைந்துள்ளன. சிலம்பு கூறும் மூன்று உண்மைகளில் ஒன்று ‘ ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்’ என்பதாகும். “ கோவலன் இப்பிறப்பில் செய்தனவெல்லாம் நல்வினைகளே. ஆயினும் அவன் பொருள் இழந்து. யாருமற்ற அனாதை போல் மனைவியுடன் மற்றவரறியாமல் நள்ளிரவில் ஊரை விட்டுக் கால் நடையாய்ப் புறப்பட்டு வந்ததற்குக் கோவலன் முற்பிறப்பில் செய்த தீவினை” என்கிறார் சேர அரசின் இளவல் இளங்கோவடிகளார். வாழ்க்கை இன்பமயமாக இருக்க வேண்டுமென்றால், அவனின் காலத்தை அபகரிக்காதீர்! அவனுடைய இடத்தில் கனவு கோட்டை (Dream Fort) கட்டாதீர்! நோய்களின் மூல வேர் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று பார்ப்போம்! மனிதன் வாழ்நாள் முழுவதும் கற்பனையில் (Imagine) திளைக்கிறான்; குறிக்கோளை (Aim) வளர்த்துக் கொள்கிறான்; அக் குறிக்கோளில் வெற்றிபெற திட்டமிடுகிறான் (Planning); திட்டம் நிறைவேற முயற்சியில் (Effort) இறங்குகிறான்; பிரச்சனைகளைத் தீர்க்கச் சிந்தித்து முடிவு (Decision) எடுக்கிறான். இந்தவிதமான மனச் செயல்பாடுகளினால்தான் மனிதன் தோல்விகளில் துவழ்கிறான்; செல்லொனா துன்பத்திற்குள்ளாகிறான்; துன்பங்களை தாங்கமுடியாதவன் வாழ்க்கையை முடித்து கொள்கிறான். கற்பனையின்படி வாழ்க்கை அமையப்போவதில்லை என்று அறிந்தும். மக்கள் பகற் கனவு கண்டு கொண்டு தானிருக்கிறார்கள்; திட்டமிடுகிறார்கள்; மறு நாளைக்கு என்ன செய்வது, ஒரு வாரத்திற்கு என்ன செய்வது, இந்த ஆண்டுக்குள் என்ன என்ன காரியங்கள் செய்து முடிக்க வேண்டுமென்று ஆற அமர்ந்து யோசித்துத் திட்டமிடுகிறார்கள். ஆனால் திட்டமிட்டபடி எதுவும் நடக்கிறதா என்றால் ‘இல்லை!’ என்றுதான் அனைவரும் பதில் சொல்கிறார்கள். இருந்தாலும் திட்டமிட்டுத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முயற்சிகள் அனைத்தும் பலித்துவிடுகிறதா என்று கேட்டால், ‘இல்லை!’ என்றுதான் பதில் சொல்கிறார்கள். குறிக்கோளைத் தேடி அலைகிறார்கள்!. தனக்குறிய குறிக்கோள் எது என்று அறிய முடியாமல், ஒவ்வொரு குறிக்கோளிலும் காலை ஊன்றி ஊன்றிப் பார்க்கிறார்கள். சரியான குறிக்கோளைக் கண்டுபிடிப்பதற்குள் வயதின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விடுகிறார்கள். இதனால் வயோதிக காலத்தில் விரக்தி நிலையை அடைந்து விடுகிறார்கள். பகற்கனவு காணுதல், திட்டமிடுதல், சிந்தித்து முடிவெடுத்தல் ஆகிய மூன்றின் சேர்க்கையால் விளைவது எதிர்பார்த்தல் (Expectation) ஆகும். இதுவே பின்னாளில் ஆசையாக (Desire) மாறுகிறது. ஆகவே நோய்களின் மூல வேர் எதிர்பார்த்ததிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. எதிர்பார்த்தல் கிடைக்கவில்லை என்ற நிலை வரும்போது ஏமாற்றம் (Disappointment) ஏற்படுகிறது ஏமாற்றத்திலிருந்து விளையக்கூடிய காய்கனிகள்தான் பொய்யுரைத்தல், நம்பிக்கையின்மை, விரக்தி, கோபம், பொறாமை, சந்தேகம், அவசரம், பயம், பதட்டம், ஏமாற்றுதல், வெறித்தனம், கோழைத்தனம், தாழ்வு மனப்பான்மை, காமவெறி, மதுவுக்கு அடிமையாதல், திருட்டுக்குணம், கொலைவெறி மற்றும் மற்ற அனைத்து எதிர்மறை குணங்களாகும். இவை அனைத்தும் புடம் போட்ட மன அழுத்தங்களாக மாற்றமடைந்து மனதில் குடியேறி, மனிதனின் வாழ்நாள் முழுக்க அவையும் வாழ்கின்றன. கோபம், பயம், பதட்டம், விரக்தி, பொறுமையின்மை ஆகிய உணர்வுகள் ஆளுகை செய்யும்போது, ஒருவரால் அரோமணியின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அளவாகச் சாப்பிடமுடிவதில்லை. அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டுவிடுகிறார். மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா கோபமாக இருக்கும் போதெல்லாம் அதிகமாகவே சாப்பிட்டு விடுவாராம். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் சூடான உப்பு அதிகமான சுவை மிகுந்த உணவை நாடுவார்கள் என்று மருத்துவ உலகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. .பிர்மிங்காம் அலபாமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் “மன அழுத்தத்தின் போது சோம்பேறித்தனத்தினால் வேலை எதுவும் செய்யாமல் இருந்து விடுகிறோம்; உடலுழுழைப்பு எதுவும் இல்லாமலே அதிகமாகவே சாப்பிடுகிறோம். இதனால் உடலின் எடை கூடிவிடுகிறது. அதிக மன அழுத்தத்தின்போது, மன அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுவதினாலும், பக்கவிளைவாக எடை கூடி விடுகிறது ” என்கிறார். ஆகவே ஆராய்ச்சியின்படி, மன அழுத்தத்தினால், எடை கூடி உடல் பருமன் அதிகரிக்கிறது. பொறுமையின்மையால், உணவு சூடாக இருக்கிறதா அல்லது குளிர்ச்சியாக இருக்கிறதா என்று உணர்ந்து சாப்பிட முடிவதில்லை. இயற்கை உணவு நோய்களை உண்டு பண்ணுகிறது என்ற அறிவியல் ரீதியான உண்மை நிலையை ஏற்கத் துணிச்சலில்லை. டாக்டர்கள் சொல்லி விட்டார்கள் என்பதற்காக பயத்தினால் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிக்கிறார்கள். மனஅழுத்தம் எப்பொழுதும் குடி கொண்டிருப்பதால், மனக்கட்டுப்பாடு இல்லாமல் நொறுக்குத்தீனி அல்லது டீ, காபி ஆகிய பானங்களைக் குடிக்கிறார்கள். இவ்வாறு மனச்சோர்வை நீக்க முயற்சித்து நோய்களை வரவழைத்துக் கொள்கிறார்கள். மலம் வெளியேற்றுவதில். கவனமில்லாமல் அந்த நேரத்தில் கற்பனையிலும், கவலையிலும் மூழ்கி விடுகிறார்கள். அதன் விளைவு நோய்கள் அழையா விருந்தாளிகளாக தாராளமாக வந்துவிடுகின்றன; வாழ்வில் பின்னடைவு ஏற்படுகிறது. ஆகவே, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு கற்பனை, திட்டமிடுதல், யோசித்து முடிவெடுத்தல் ஆகிய மூன்றையும் நிறுத்திவிடுங்கள்!; இப்பொழுது இந்த கட்டுரையைப் படிக்கின்ற உங்களுக்கு இந்த படிக்கின்ற நேரம்தான் உங்களுக்குச் சொந்தமான நேரமாகும். இந்த நேரத்தை முழு ஈடுபாட்டுடன் படிப்பில் செலவழிக்க வேண்டும். இந்த நேரத்தைத் தவிர அடுத்த விநாடி கூட உங்களுக்குச் சொந்தமில்லை.
|
முகப்பு |