சிவபெருமானும் தேங்காயும் பேசிக் கொண்டிருந்த போது அவர்களிடையே விவாதம் முற்றியது.
அப்போது தேங்காய், “ நான் தேவர்களையேக் கா(ய்)ப்பவன் அதனால்தான் எனக்குத் தேங்காய் என்று பெயர் வந்தது தெரியுமா?”
அதனைக் கேட்ட சிவபெருமான், “அப்படியா? நான் கெட்டியான ஆமை ஓடு அணிந்திருக்கிறேனே” என்றார்.
தேங்காய், “எனக்குக் கூடத்தான் மேலே கெட்டியான ஓடு வைத்திருக்கிறேன். தேங்காய் ஓடு என்பார்களே நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?” என்றது.
சிவபெருமான், “யானை, புலி போன்றவற்றை உரித்திருக்கிறேனே” என்றார்.
அதைக் கேட்ட தேங்காய், “நான் கூடத்தான் மட்டையை உரித்துவிட்டு உட்கார்ந்திருக்கிறேன்” என்றது.
சிவபெருமான் பொறுமையாக, “சரி…சரி..நான் வெண்ணீறு பூசி, வெள்ளை வெளேரென்று விளங்குகிறேனே” என்றார்.
தேங்காய் மேலும் ஆணவத்துடன், ” எனக்கு அந்தக் கட்டாயமெல்லாம் இல்லை. இயற்கையாகவே நான் வெள்ளையாகத்தான் இருக்கிறேன்” என்றது.
சிவபெருமான், “நான் கங்கையைத் தாங்குகிறேன்” என்றார்.
தேங்காய், “நான் கூட இளநீரைத் தாங்குகிறேன்” என்றது.
சிவபெருமான், “எனக்கு மூன்று கண்கள் இருக்கின்றன” என்றார்.
தேங்காய், “அட… எனக்கும் கூடத்தான் மூன்று கண்கள் உள்ளன” என்றது.
சிவபெருமான், “நான் மறைகளின் முடியி்ல் இருக்கிறேன்” என்றார்.
தேங்காய், “நான் மரங்களின் முடியில் இருக்கிறேன்” என்றது.
சிவபெருமான், “எனக்கு சடைக்குடுமி இருக்கிறதே” என்றார்.
தேங்காய், “எனக்கும்தான் குடுமி இருக்கிறது” என்றது.
ஆணவத்தின் உச்சியிலே ஒலித்த தேங்காயின் பதிலைக் கேட்ட சிவபெருமான், “தேங்காயே… பணிவு என்பதேச் சிறிது கூட இல்லாத அகம்பாவம் பிடித்த நீ சிதறும்படியாக எல்லாரும் உன்னை உடைக்கட்டும்” என்றார்.
அன்றிலிருந்து கோயில் முன்பாகத் தேங்காயைச் சிதறு தேங்காயாக உடைக்கும் வழக்கமும் தொடங்கியது.
அடக்கம் இல்லாமல் ஆணவமாகப் பேசினால் சிதறு (தேங்)காயாக நம் வாழ்க்கை சிதறிப்போகும் என்பதை நாமும் உணர வேண்டும்.