ஒரு காட்டை ஒட்டி சிறு நதி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.
அதில் ஒரு முதலையும் ஒரு நண்டும் இருந்தன. அவை இரண்டும் நதியில் இருந்த மீன்களை உண்டு உயிர் வாழ்ந்தன.
அந்த நதியில் வேறு சில விலங்குகளும் தண்ணீர் அருந்த வருவதுண்டு.
கோடைகாலம் வந்ததது.
நதியில் நீர் வரத்தும் குறைய மீன்களே இல்லாத நிலை வந்தது. தண்ணீர் குறைந்ததால், முதலைக்குப் பயந்து விலங்குகள் அங்கு தண்ணீர் அருந்தவும் வருவ்தில்லை.
உண்ண எதுவும் இல்லா நிலையில், ஒரு நாள் முதலை நண்டிடம், நீ விலங்குகளிடம் சென்று நான் இறந்து விட்டதாகச் சொல். அதை நம்பி ஏதேனும் விலங்குகள் வந்தால் அதை அடித்து நாம் உண்ணலாம் என்றது.
நண்டும் அப்படியேச் செய்ய... நரி ஒன்று முதலையை உண்ணலாம் என்கிற ஆசையோடு நண்டுடன் வந்தது.
செத்தது போலக் கிடந்த முதலையைப் பார்த்ததும் நரிக்குச் சந்தேகம் வந்தது.
உடனே தன் மூளையை உபயோகித்து, "முதலை செத்தது போலத் தெரியவில்லையே ! அப்படி இறந்திருந்தால் அதன் வால் ஆடுமே... " என்றது.
அதைக் கேட்டவுடன் முதலை தன் வாலை ஆட்டிக் காண்பித்தது.
அதைப் பார்த்த நரி நண்டிடம், “செத்த முதலை எப்படி வாலை ஆட்டும்? நீங்கள் இருவரும் பொய் சொல்கிறீர்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடியது.
அறிவில்லாத முதலையும் நண்டும் ஏமாந்தது.
நாமும் யாரேனும் ஏதேனும் கூறினால், அதை உடனே நம்பாது நம் அறிவைப் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும்.