கிராமத்தில் வசித்த பால்காரர் ஒருவர் தான் வளர்க்கும் பசு ஒன்றை இழுத்துக் கொண்டு செல்கிறார்.
அப்போது திடீரென அந்த பசு அந்த சாலையிலேயே அமர்ந்து விடுகிறது.
கிராமத்தின் சாலை மிகவும் சிறியது என்பதால், பசு அமர்ந்தபிறகு அதில் வெறும் மிதிவண்டி மட்டுமே செல்ல இடம் இருந்தது.
அந்தப் பால்காரர் அதை எழுப்ப எவ்வளவோ முயன்றார். ஆனால், அவரால் பசுவை எழுப்ப முடியவில்லை. அந்த வழியே வந்த காவல்துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் அதை காண்கிறார். அவரும் மாட்டை எழுப்ப முயற்சிக்கிறார். ஆனால் அவரால் அதை அசைக்க கூட முடியவில்லை.
பின் இருவரும் சேர்ந்து மாட்டை இழுக்கின்றனர் ஆனால் எதுவும் நடக்கவில்லை.
அந்த வழியாக ஒரு பயில்வான் வருகிறார். அவர்கள் இருவர் செய்யும் செயலைப் பார்த்து சிரித்தபடியே, என்ன இது நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு மாட்டைக் கூடவா இழுத்து எழுப்ப முடியவில்லை, நகருங்கள் என்று கூறிவிட்டு அவர் தன்னந் தனியாக மாட்டை இழுக்கிறார். ஆனால், அவருக்கு அவமானம்தான் மிஞ்சியது.
பிறகு மூவரும் சேர்ந்து இழுக்கிறார்கள் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
இதை எல்லாம் கண்டு நகைத்தபடியே ஒரு பள்ளிச் சிறுவன் அங்கு வருகிறான். அவர்கள் செய்வதை சிறிது நேரம் நின்று வேடிக்கை பார்த்து சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்கிறான்.
சிறிது தூரம் சென்று அங்கு கிடந்த புல்லை எல்லாம் அறுத்து, அதை ஒரு கத்தையாகக் கட்டி பிறகு அதை மாட்டருகே கொண்டு வருகிறான்.
புல்லைப் பார்த்தவுடன் அந்த மாடு அதைச் சாப்பிடுவதற்காக எழுகிறது.
சிறுவனோ, புல்லை மாட்டின் வாயருகே காண்பித்தபடி நடக்கிறான், மாடும் அவனோடு சேர்ந்து நடக்கிறது.
எந்தப் பிரச்சனை வந்தாலும், அதைப் பலம் கொண்டு சீர் செய்துவிட முடியும் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் பலத்தை கொண்டு அனைத்தையும் சீர் செய்துவிட முடியாது. எந்த பிரச்சனைக்கும் மிக எளிமையான ஒரு தீர்வு நிச்சயம் உண்டு. அந்தத் தீர்வைக் கண்டறிவதேப் புத்திசாலித்தனம்.