அது ஒரு பெரிய கல்யாண மண்டபம். ஒரு பெரிய புள்ளியின் மகனின் கல்யாணம். அங்கு சொல் வித்தகர், சொல் விளக்கச் செம்மல் என்று பல சிறப்பு பெயர்களைக் கொண்ட கவிஞர் தமிழ் விழைவோன் வந்திருந்தார். அவருடன் உரையாட விரும்பாதர்களே இருக்க முடியாது. எதற்கும் அளவாய் அழகாய், பொருத்தமாய், திருத்தமாய், ஆணித்தரமாய் விளக்கம் தருவதைப் பாரட்டாமல் இருக்க முடியாது.. அந்தத் துறையில் அவர் ஓர் அசத்தல் மன்னன்.
மாப்பிள்ளை அழைப்பு கல்யாண மண்டப வாசலில் மெதுவாக வந்து கொண்டிருந்தது.. உள்ளே குறைந்த பேர்களே இருந்தனர். அவர்களும் கல்யாண ஏற்பாடுகளில் மும்மரமாக இருந்தனர். தமிழ் விழைவோன் ஒரு இருக்கையில் அமர்ந்த வண்ணம் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்த இடத்தில் ஒரு சுவற்றின் அருகே ஒரு ஓரத்தில் 8 வயது மதிக்கத்தக்க சிறு பெண் ஏதோ செய்துக் கொண்டிருந்தாள். எதோ ஒரு ஆவலில் அந்தப் பெண் அருகே சென்று, “அம்மா, என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்” என்று கேட்டார்.
அதற்கு அவள், “நான் எறும்பைக் கொன்று கொண்டிருக்கிறேன்.” என்றாள்.
“அம்மா, இப்ப இந்த ஜென்மத்தில் நீ ஒரு பெண்ணாய் இருந்து எறும்பைக் கொன்றால் அடுத்த ஜென்மத்தில் அந்த எறும்பு பெண்ணாகி நீ எறும்பாக இருக்கும் போது உன்னைக் கொல்லும். வேண்டாம் கொல்லாதே” என்றார். தான் இப்படி சொல்வதால் அவள் மேற்கொண்டு எறும்பைக் கொல்வதை நிறுத்துவாள் என நினைத்தார்.
ஆனால்.. அவளோ, “போன ஜென்மத்தில் நான் எறும்பாக இருந்த போது என்னைக் கொன்ற எறும்பைத்தான் நான் இப்போது கொன்று கொண்டிருக்கிறேன்” என்றாள்.
அவள் சொல்வதை முழுவதும் ஏற்க முடியாது என்ற போதிலும் தான் சொன்ன வார்த்தைகளைக் கொண்டே அவள் பதில் சொன்ன விதம் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. பொதுவாக அவர் விளக்கத்தைக் கேட்டு மற்றவர் வாய் அடைத்துப் போவது உண்டு. இன்றோ தனக்கு அந்த நிலை ஏற்பட்டதை அவர் உணர்ந்தார்.
யாரும் மலை தடுக்கி வீழ்வதில்லை. சிறு கல் தடுக்கித்தான் வீழ்வார்கள்.