ஒரு காட்டில் அழகான குளம் இருந்தது. அந்தக் காட்டின் நடுவில் தீவு மாதிரி ஒரு இடம் இருந்தது. அந்தத் தீவுக்குச் செல்வதற்கு அந்தக் குளத்தைக் கடந்துதான் போக வேண்டும்.
அந்தத் தீவில் சுவையான பழங்களும், காய்கறிகளும் இருந்தன். அந்தக் காட்டில் இருந்த எல்லா விலங்குகளுக்கும் அங்கேயிருக்கிற பழங்களைச் சாப்பிட ஆசை. ஆனால், யாருக்குமே அந்த இடத்திற்குப் போகத் தைரியம் இல்லை. ஏனென்றால், இடையிலிருக்கும் அந்தக் குளத்தில் நிறைய முதலைகள் இருந்தன.
ஒரு நாள் அந்தக் காட்டில் வாழ்ந்து வந்த முயல் தண்ணீர் குடிக்கக் குளத்திற்குப் போனது. அப்போது அந்தத் தீவைப் பார்த்து யோசித்தது.
“எனக்கு அந்தத் தீவுக்குப் போய் அங்கு இருக்கும் அனைத்துப் பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட ஆசை ஆனால், இந்த முதலைகளிடம் இருந்து தப்பித்து அங்கே எப்படிப் போவது?” என்று யோசித்தது முயல்.
அப்போதுதான் முயலுக்கு அந்த யோசனை தோன்றியது.
அடுத்த நாள் காலையில் முயல் குளத்திற்கு வந்து எல்லா முதலைகளையும் சத்தம் போட்டுக் கூப்பிட்டது. எங்களை இப்படிக் கூப்பிட யாருக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று முதலைகள் கோபத்துடன் முயல் அருகில் வந்தன.
“உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். என்னை எதுவும் செய்ய மாட்டீர்களென்று எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடுங்க” என்று முயல் சொன்னது.
அதற்கு “கவலைப்படாமல் சொல்லு, நாங்கள் உன்னை எதுவுமேப் பண்ண மாட்டோம்” என்று ஒரு முதலை சொன்னது.
“இந்தக் காட்டு ராஜா இங்கே இருக்கும் எல்லா விலங்குகளுக்கும் ஒரு பெரிய விருந்து வைக்க வேண்டுமென்று நினைக்கிறார். அதற்குக் காட்டில் இருக்கிற விலங்குகளோட ஒரு பட்டியல் தயார் பண்ணினார். நீங்க சம்மதித்தால் நீங்க எத்தனை பேரு இருக்கிறீர்கள் என்று எண்ணுவதற்குச் சொன்னாரு. உங்களை எண்ணி மொத்தம் எத்தனை பேர் என்று நான் ராஜா கிட்டப் போய்ச் சொல்லுவேன்” என முயல் சொன்னது.
அனைத்து முதலைகளும் அவர்களுக்குள்ளே கொஞ்ச நேரம் பேசிக்கொண்டன. அதற்குப் பின்பு ஒரு முதலை, “சரி, நீ எங்களை எப்படி எண்ணுவாய்?” என்று கேட்டது.
“எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக, ஒரே வரிசையில நில்லுங்க நான் உங்க முதுகு மேல ஏறிக் குதித்து, எளிதாக எண்ணி விடுவேன்” என்று சொன்னது முயல்.
முயல் சொன்னபடியே எல்லா முதலைகளும் செய்தன. அந்த வரிசை குளத்தோடக் கரையிலிருந்து தீவோட கரை வரைக்கும் இருந்தது.
முயல் உடனே முதலைகளின் முதுகின் மேல் குதித்து, குதித்து வெற்றிகரமாகத் தீவுக்குப் போய் சேர்ந்தது.
அந்த நாள் முழுக்க முயல் எல்லாப் பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட்டு நன்றாக ஒய்வு எடுத்துச் சாயங்காலம் தீவோட கரைக்கு வந்தது.
காலையிலேப் போன முயல், ஏன் இன்னும் திரும்பி வரவில்லை என்று தீவின் கரையிலேயேக் காத்திருந்த முதலைகள் முயலைப் பார்த்ததும் “இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டு இருந்தாய்?” என்று கேட்டது.
“அதிக எண்ணிக்கையில் இருக்கும் உங்களை எண்ணுவதில் கொஞ்சம் பிழை ஏற்பட்டு விட்டது. உங்களை எவ்வளவு பேர் என எண்ணுவது அவ்வளவு சுலபம் இல்லை. இன்னும் ஒரு முறை காலையில இருந்தது போல அந்த வரிசையில் நில்லுங்கள், இந்த முறை நான் கண்டிப்பாகச் சரியாக எண்ணிவிடுவேன்” என்று முயல் சொன்னது.
அனைத்து முதலைகளும் முயல் சொன்னதை நம்பி மறுபடியும் வரிசையில் நின்றன. உடனே முயல் முதலைகளின் முதுகில் குதித்துக் குளக்கரைக்கு பத்திரமாகச் சென்றது.
முயல் புத்திசாலித்தனமாக முதலைகளிடமிருந்து தப்பிச் சென்றதைப் போல நாமும் இடத்துக்கு ஏற்ற மாதிரி யோசித்து நாம நினைத்ததை செய்ய முயல வேண்டும்.