கலைவாணன் அந்தக் கிராமத்தில் பண்டிதர். அவர் சிறந்த அறிவு கொண்டிருந்ததோடு, அன்பும் அடக்கமும் மிகுந்தவராக விளங்கினார்.
ஏழைக் குழந்தைகளுக்காக இலவசப் பாடசாலை ஒன்றை அமைத்து கல்வி போதித்து வந்தார். மக்கள் பண்டிதரின் மீது நல்ல மரியாதை வைத்திருந்தனர்.
கண்ணப்பன் என்ற பணக்காரனும், அதேக் கிராமத்தில் வசித்து வந்தான். முரடனாகிய கண்ணப்பன் மீது கிராம மக்களுக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை. பணக்காரனாக இருந்தும் தனக்குக் கிடைக்காத மதிப்பும், மரியாதையும் பண்டிதருக்குக் கிடைக்கிரதே? என்று கண்ணப்பன் பண்டிதரின் மீது பொறாமை கொண்டான்.
பண்டிதரை எங்கு கண்டாலும், கண்ணப்பன் வம்புக்கு இழுப்பான். அவமானப்படுத்த நினைப்பான்.
ஒருநாள் மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்த பின், பண்டிதர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கண்ணப்பன் தன் தோட்டத்திலிருந்து பறித்த பூசனிக்காயோடு வந்து கொண்டிருந்தான். கண்ணப்பனுடன் அவனது இரு நண்பர்களும் வந்தனர்.
கண்ணப்பனையும், அவனது நண்பர்களையும் கண்ட பண்டிதர் ஒதுங்கி நடந்தார்.
ஆனால் அவர்களோ, “என்ன, பண்டிதரே பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறீர்களா?” என்று வழியை மறித்தபடிக் கேட்டு வம்பிழுத்தனர்.
“ஆமாம் கண்ணப்பா. நான் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் வழியை விடு” என்றபடி பண்டிதர் விலகி நடக்கத் தொடங்கினார்
“நீங்கள் பெரிய அறிவாளி என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். அப்படியானால், நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் விட்டுவிடுகிறோம். இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் சரியாகப் பதில் சொல்லிவிட்டால் உங்கள் வழிக்கே நான் வரமாட்டேன்” என்று வீம்பாகப் பேசினான்.
“சரி, உன் கேள்வி என்னவென்று கேளு கண்ணப்பா! எனக்கு நேரமாகிறது” என்றார் பண்டிதர்.
“என் கையிலுள்ள இந்த பூசணிக்காயின் எடை எவ்வளவு? நீங்கள் சொல்லும் எடை சரியாக இருக்கிறதா?” என்று நாங்கள் நிறுத்துப் பார்ப்போம். சரியாகச் சொல்லாவிட்டால் நீங்கள் முட்டாள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும்” என்று ஆணவமாகப் பேசினான் கண்ணப்பன்.
பண்டிதர் சிறிது நேரம் யோசித்தார். “கண்ணப்பா இந்தப் பூசனிக்காய் உன் தலையின் எடைதான் இருக்கிறது. வேண்டுமானால் நிறுத்துப் பார்த்துக்கொள்” என்று பதில் சொன்னார் பண்டிதர்.
அதைக் கேட்டக் கண்ணப்பனும் அவனது கூட்டாளிகளும் அதிர்ந்து போனார்கள்.
“அட பண்டிதர் நம்மை மடக்கிவிட்டாரே? பூசணிக்காயின் எடையைச் சரி பார்க்க நம் தலையைத் துண்டித்தால் அல்லவா முடியும். தலையைத் துண்டிக்க முடியுமா? பூசணியை எடை போட முடியுமா?” என்று திகைத்த கண்ணப்பன், தன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஓடியேப் போனான்.
அதன்பின் அவன் பண்டிதரிடம் வம்பு செய்வானா?