அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டு கொள்ளவில்லை.
அதனால் கோபமடைந்த முனிவர், “இந்த ஊருக்கு… இன்னும் 50 வருடங்களுக்கு மழையேப் பெய்யாது. வானம் பொய்த்துவிடும்” என்று சாபமிட்டார்.
இந்தச் சாபம் பற்றிக் கேள்விப்பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர்.
கோபத்திலிருந்த முனிவர், “தன் சாபத்திற்கு விமோசனம் கிடையாது” என்று கூறி விட்டார். வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.
மேலிருந்து இதைக் கவனித்த இறைவன் தனது சங்கினை எடுத்துத் தலைக்கு வைத்துப் படுத்து விட்டார். இறைவன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை.
இன்னும் 50 வருடங்கள் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே இறைவனும் நினைத்து விட்டார்.
ஆனால், அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது. ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைத் தூக்கிக் கொண்டு போய் தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகப் பார்த்தனர்.
மழையே பெய்யாது எனும் போது இவன் வயலுக்குப் போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு.
ஒருநாள் அவர்கள் அவனிடம், “நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா?” என்று கேட்டனர்.
அதற்கு அவன், “முனிவரின் சாபத்தால் ஐம்பது வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால், ஐம்பது வருடங்கள் கழித்து உழுவது எப்படி என்று எனக்கு மறந்து போய்விடும். அதனால்தான் தினமும் ஒரு முறை வயலுக்குச் சென்று உழுது கொண்டு இருக்கிறேன்” என்றான்.
இது இறைவன் காதிலும் சென்று விழுந்தது.
இறைவனும் யோசிக்க ஆரம்பித்தார்.
ஐம்பது ஆண்டுகள் சங்கு ஊதமால் இருந்தால் எப்படி ஊதுவது என்று தனக்கும் மறந்து போய்விடுமே, என்று நினைத்துச் சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார்.
இடி இடித்தது, மழை பெய்ய ஆரம்பித்தது. நம்பிக்கை வென்றுவிட்டது.