அரசர் ஒருவர் இருந்தார். வளமும் செல்வமும் கொழித்த நாட்டில் பஞ்சம் எட்டிப் பார்த்தது.
அமைச்சர்களுடன் ஆலோசனை செய்த போது மழை ஒன்றுதான் இதற்கு தீர்வு என்று அரண்மனையின் ஆஸ்தான ஜோதிடர் சொல்ல, சரி வருணபகவானை குளிர்விக்க யாகம் செய்வோம் என்றார்.
மழை வேண்டி மிகச் சிறப்பாக யாகம் நடத்த ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார் அரசர்.
அமைச்சர்களும் யாகத்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
வேள்வி நடத்த, தொலைதூர தேசத்திலிருக்கும் வேதியர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.
மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அனைவருக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டது.
யாகம் நடத்தும் நாளும் வந்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக ஹோமத்தில் கலந்து கொண்டார்கள். ஹோமம் சிறப்பாக முடிவடைந்து ஹோமக்குண்டலத்தில் உள்ள தீ அணைவதற்குள் வருணபகவான் பலன் அளிக்க தொடங்கிவிட்டார். மழையால் மக்கள் மனமும் பூமியும் குளிர்ந்தது.
அரசனும் மனம் மகிழ்ந்தான். சரியான மந்திரங்களை முறையாக உச்சாடனம் செய்ததால்தான் மழை குறைவின்றி பெய்வதாக அரண்மனை ஆஸ்தான ஜோதிடர் கூறினார்.
அதைக் கேட்ட மன்னனுக்கு விபரீத ஆசை உண்டானது.
நாமே மந்திரங்கள் உச்சரிக்கக் கற்றுக்கொண்டால் என்ன என்று நினைத்தார்.
ஹோமம் வளர்த்து மந்திரங்கள் உச்சரித்த வேதியர்களின் தலைவனை அழைத்தார். மந்திரங்களில் பலனை இப்போதுதான் புரிந்து கொண்டேன். நானும் மந்திரங்களைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதனால் நீங்கள் எனக்கு மந்திரங்களைக் கற்றுத்தர வேண்டும் என்றார் அரசர்.
வேதியர் கூட்ட தலைவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நீங்கள் அரசர். உங்களுக்கு மந்திரத்தின் அதிகாரம் கட்டுப்படாது என்றான் மென்மையாக.
ஆனால், அரசனுக்கு கோபம் ஒரு அரசன் உன்னிடம் இரங்கிக் கேட்கிறேன். நீ என்னை அவமதிக்கிறாய் என்றார். மேலும் நீ எனக்கு ஒரு சில மந்திரங்களை மட்டும் கற்றுகொடுத்துதான் ஆக வேண் டும் என்று கட்டளையிட்டார்.
வேதியர் தலைவன் யோசித்தான்.
பிறகு அரசனின் அருகில் இருந்த காவலாளியை அழைத்து,“உடனடியாக அரசரைக் கைது செய்து சிறையில் அடையுங்கள். சீக்கிரம் என் கட்டளையை நிறைவேற்றுங்கள்” என்றான்.
அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கிருந்த காவலாளிகள் அரசரையும் வேதியனையும் மாறி மாறிப் பார்த்தார்கள்.
சிறிது நேரம் அங்கு நிசப்தமாக இருந்தது.
சுதாரித்த அரசர், “என்ன தைரியம் இருந்தால், என்னைக் கைது செய்ய உத்தரவிடுவாய்? யாரங்கே இந்த வேதியனைக் கைது செய்து கசையடி கொடுத்துச் சிறையில் தள்ளுங்கள்” என்றார்.
உடனடியாக ஓடி வந்த காவலர்கள் வேதியனைப் பிடித்து இழுத்தார்கள்.
அதுவரை அமைதியாக இருந்த வேதியன், “பார்த்தீர்களா அரசே! நான் கூறிய வார்த்தைகளைத்தான் நீங்களும் கூறினீர்கள். ஆனால், உங்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்ட காவலர்கள் என்னுடைய வார்த்தைக்குக் கட்டுப்படவில்லை. அப்படித்தான் மந்திரமும்... எனக்குக் கட்டுப்படும் மந்திரம், நீங்கள் சொல்லும் போது சித்திக்காது” என்றான்.
அரசனின் முகத்தில் இருந்த குழப்பம் அகன்றது. வேதியனுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பினான்.