ஒரு ஊரில் மிகப்பெரிய பணக்காரன் இருந்தான். அவனிடம் இல்லாத சொத்துக்களே இல்லை, அந்த அளவுக்குப் பெரிய பணக்காரனாக இருந்தான். அவனுக்குக் குதிரைகள் என்றால் மிகவும் பிரியம். எங்கு சென்றாலும் குதிரையில்தான் செல்லுவான்.அவனிடம் அனைத்து ரகங்களிலும் குதிரைகள் வரிசையில் நின்றன. உலகிலேயே மிக வேகமாக ஓடும் குதிரையும் அவனிடம் இருந்தது.
ஒரு நாள் அவனிடம் இருக்கும் அந்த வேகமாக ஓடும் குதிரையை எடுத்துக் கொண்டு அவனுடைய சொந்தக்காரர் ஒருவரைப் பார்ப்பதற்காக அவருடைய ஊருக்குச் செல்ல தயாரானான். ஆனால், பாவம் அவனுக்கு அந்த ஊருக்குச் செல்ல வழி தெரியாது. ஆனால், நம்மால் அந்த ஊரைக் கண்டுபிடித்து விட முடியும் என்ற நம்பிக்கையில் குதிரை ஏறினான் அந்தப் பணக்காரன்.
இரண்டு நாட்கள் தொடர்ந்து பயணம் மேற்கொண்டான். எவ்வளவு தூரம் சென்றிருப்பான் என்பது அவனுக்குத் தெரியாது.
சிறிது நேரம் இளைப்பாராலாம் என்று ஒரு மரத்தடியில் குதிரையை நிறுத்தி விட்டு உட்கார்ந்தான். அப்போது, அங்கு வந்த வழிப்போக்கர் ஒருவர், “ஐயா நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பணக்காரன், அவனுடைய உறவினருடைய ஊரைச் சொன்னான்.
“சரிங்கள் ஐயா” என்ற வழிப்போக்கர் சிறிது தூரம் நடந்து சென்றார்.
உடனேத் தன் பயணத்தைத் தொடங்க நினைத்த பணக்காரன் குதிரை ஏறினான்.
வழிப்போக்கன் சென்ற வழியேக் குதிரையை ஓட்டினான்.
அவ்வழியே அந்தக் குதிரை வருவதைப் பார்த்த வழிப்போக்கன் அந்தக் குதிரையை நிறுத்த முயன்றான்.
பின்னர் அவன், “ஐயா, இது நீங்கள் சொன்ன ஊருக்குப் போகும் வழியல்ல. அந்த ஊருக்குப் பக்கத்திலிருக்கும் இன்னொரு வழியாகச் செல்ல வேண்டும்” என்றான்.
அந்த பணக்காரனோ, “யார் நீ? எனக்கே வழி சொல்கிறாய், நான் எவ்வளவு பெரிய பணக்காரன் தெரியுமா? என் அந்தஸ்து உனக்குத் தெரியுமா? எனக்கு நீ வழி சொல்கிறாயா?” என்று கோபப்பட்டார்.
அதற்கு அந்த வழிப்போக்கனோ, “நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், நீங்கள் போகும் பாதை தவறானது என்பதைத்தானே சொல்கிறேன்” என்றான்.
அதற்கு அந்தப் பணக்காரன், “நான் வைத்திருக்கும் குதிரை, உலகில் உள்ள எல்லாக் குதிரைகளை விடவும் வேகமாகச் செல்லும். இதன் விலை எவ்வளவு என்று தெரியுமா? எனக்கே நீ வழி சொல்கிறாயா?” என்று கேட்டான்.
அந்த வழிப்போக்கன், “இவன் என்ன முட்டாளா? போகும் வழி தவறென்று கூறினால், இவன் எதை எதையோப் பேசிக்கொண்டிருக்கிறான்” என்று நினைத்தபடி அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
அந்தப் பணக்காரனோ தவறான வழியில் குதிரையைச் செலுத்திச் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லாமல் எங்கெங்கோ அலைந்து திரிந்தான்.
இப்படித்தான் பணக்காரர்கள் சிலர், வாழ்க்கையிலும் சரியான பாதையில் செல்லாமல், எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.