முல்லா மிகவும் நகைச்சுவையான மனிதர். அவருக்கு நல்ல பெயர் உண்டு. அவர் இருக்குமிடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் என்பது அனைவரது கணிப்பும்... அதனாலேயே, அவரை அனைவரும் வெகுவாக ரசிப்பார்கள். அதே சமயம் நீதிகளையும் சரியாகப் புகட்டுவார். ஒவ்வொருவரும் முல்லாவிடம் நட்பு பாராட்டவே விரும்புவார்கள், அப்படிப்பட்ட குணம் படைத்தவர் முல்லா.
ஒரு நாள் முல்லா அவர் வீட்டின் முன்பு நின்று கொண்டு அழுது கொண்டிருந்தார்.
முல்லா ஏன் அழுகிறார்? என்று அனைவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினர்.
அதில் ஒரு நபர் முல்லாவின் அருகில் சென்று, அவரின் தோளைத் தொட்டு, “முல்லா நீங்கள் எங்கள் எல்லோருக்கும் ஆறுதல் சொல்வீர்கள். இன்றோ நீங்கள் இவ்வளவு கதறிக் கதறிக் அழுகிறீர்கள். என்ன பிரச்சனை உங்களுக்கு? ஏன் அழுகிறீர்கள்? எதற்காக அழுகிறீர்கள்? நாங்கள் எப்பொழுதும் உங்களுடனே இருக்கிறோம். தயவு செய்து அழாதீர்கள் முல்லா, என்ன காரணம் என்று சொல்லுங்களேன்... நாங்கள் தெரிந்து கொள்கிறோம்” என்று அனைவரும் கேட்டனர்.
அதுவரை அமைதியாக நின்று கொண்டிருந்த முல்லா மீண்டும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.
“என்ன முல்லா, சிறுபிள்ளை போல் அழுது கொண்டு இருக்கிறீர்களே! உண்மையைச் சொல்லுங்கள் என்ன ஆயிற்று?” என்று ஒரு நபர் கேட்டார்.
அவரிடம் முல்லா, “என் பாட்டி எனக்கு பெரும் சொத்தை எழுதி வைத்துவிட்டு நேற்று முன்தினம் இறந்துவிட்டார்கள் என்று கூறினார். சரி இதற்காகவா அழுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
முல்லாவோ, “என் பெரியப்பா ஒரு வாரம் முன்பு எனக்கு அதை விடப் பத்து மடங்கு சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார்” என்று சொல்லிக் கொண்டேக் கூடுதலாக அழுதார்.
அங்கிருந்தவர்கள், “சரி முல்லா, இதற்காகவா அழுகிறீர்கள்? என்று கேட்டனர்.
அதற்கு முல்லா, “மூன்று நாட்கள் முன்பு என் அத்தை எனக்கு பதினைந்து மடங்கு சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார்கள்” என்று அழுதார்.
“சரி, சரி முல்லா இதற்காகவா அழுகிறீர்கள்?” என்று எல்லோரும் கேட்டார்கள்.
அதற்கு முல்லா, “நான்கு வாரங்கள் முன்பு, என் தாத்தா எனக்கு முப்பது மடங்கு மதிப்புள்ள சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார்” என்று கதறி கதறி அழுதார்.
“சரி! சரி! முல்லா... முல்லா! அழாதீர்கள்... அழாதீர்கள்! உங்களுக்கு என்ன இப்போ, அவர்கள் எல்லாம் இறந்தாலும் உங்களுக்குத்தான் அவர்களுடைய சொத்து ஏகபோகமாக வந்து சேர்ந்து இருக்கிறதே, அதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு முல்லா மீண்டும் கதறி கதறி அழுதார்.
“நிறுத்துங்கள் முல்லா ஏன் இப்படி அழுது கொண்டே இருக்கிறீர்கள்? எங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தெரிகிறது? ஒன்று காரணத்தைச் சொல்லுங்கள்? உங்களின் மீது எங்களுக்கு பெரும் மரியாதை உண்டு. சொல்லுங்கள் முல்லா ஏன் அழுகிறீர்கள்? என்று குழுவாகக் கேட்டார்கள்.
அதற்கு முல்லாவும், “எனக்கு இனிமேல் சொத்து எழுதி வைத்து விட்டுச் சாகும் அளவிற்கு பணக்கார உறவுக்காரர்கள் யாருமே இல்லையே... என்று நினைத்து அழுகிறேன்” என்று கூறினார்.
அங்கு நின்று கொண்டிருந்த ஒட்டுமொத்தக் கூட்டமும் முல்லாவைப் பார்த்து, என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றனர்.
அங்கிருந்த பாதிப்பேருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. எல்லோரும் வாய்விட்டுச் சிரித்தனர்.
ஊரிலுள்ள எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்ற முல்லாவின் ஆசையும் நிறைவேறியது.