ஒரு ஊரில் ஒரு பணக்காரர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வாழ்நாளில் ஒவ்வொரு நிமிடமும் கடினப்பட்டு, தன் வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு வந்தவர். அவரிடம் அனைத்துச் செல்வங்களும் இருந்தன. எல்லாம் இருந்தாலும், அவர் சற்று வேதனையுடனே வாழ்ந்து வந்தார். காரணம், அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பயங்கரமான சோம்பேறி. தன்னுடைய நேரத்தை வீணாகச் செலவழித்து, வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருந்தான். தன்னுடைய மகன் தன்னைப் போல் இல்லாமல் பெரும் சோம்பேறியாக இருப்பதைப் பார்த்த அந்தப் பணக்காரன், அவனை எப்படித் திருத்துவது? என்று யோசித்துக் கொண்டு இருந்தார். தன் மகனிடம் எத்தனையோ முறை எடுத்துக் கூறியும், அதை அவன் கண்டு கொள்ளாமல் போனதையும் நினைத்து வருந்திக் கொண்டிருந்தார்.
ஒருநாள், தன் வீட்டின் அருகில் இருந்த பூங்காவிற்குச் சென்று, சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்பொழுது, அங்கே சில பிச்சைக்காரர்கள் இருப்பதைப் பார்த்த பணக்காரருக்குத் திடீரென ஒரு யோசனை வந்தது.
உடனடியாக, தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு அவருடைய வீட்டுக்குச் சென்றார். அங்கு டீவியில் கால்பந்தாட்டப் போட்டியினைப் பார்த்துக் கொண்டிருந்த மகனைத் தன்னுடன் வருமாறு அழைத்தார். மகனோ ஒன்றும் புரியாமல், தந்தையுடன் காரில் ஏறினான். கார் வேகமாக அருகிலுள்ள பூங்காவிற்குச் சென்றது.
பூங்காவிற்குத் தன் மகனை அழைத்து வந்த தந்தை, அங்கு வெகு நாட்களாகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மூன்று பிச்சைக்காரர்களை அழைத்தார். ஒவ்வொரு பிச்சைக்காரர்களையும் தனித்தனியே அழைத்து, தன் மகனின் கையால் ரூபாய் ஒரு லட்சத்தை அந்தப் பிச்சைக்காரர்களுக்கு தரச் சொன்னார். ஒன்றும் புரியாத மகனும், தந்தை சொன்னபடி அந்தப் பிச்சைக்காரர்களுக்கு அந்தப் பணத்தைக் கொடுத்தான்.
வீட்டிற்கு வந்த மகனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஏன் தந்தை இவ்வளவு பணத்தை அந்தப் பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கச் சொன்னார் என்று யோசித்துக் கொண்டே இருந்தான். தன் தந்தையிடமும் அதைப் பற்றிக் கேட்டான். ஆனால், அவரோ வாய் திறக்கவே இல்லை. சிறிது நாட்கள் அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்த மகனும் அதை மறந்து போனான்.
அந்த நிகழ்ச்சி நடந்து ஆறு மாதங்கள் ஆனது.
பின் ஒரு நாள், தன் மகனை காரில் ஏற்றிக்கொண்டு மீண்டும் அதேப் பூங்காவிற்குச் சென்றார் அந்தப் பணக்காரர்.
அங்கே, அவர் கை நிறைய பணம் கொடுத்த மூன்று பிச்சைக்காரர்களில் ஒருவர் மட்டும், இன்னும் அதே இடத்தில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அவனிடம் சென்று, “என்னை நினைவு இருக்கிறதா? உங்களுக்குக் கை நிறையப் பணம் கொடுத்தேனே...” என்றார்.
“ஆமாம் ஐயா, உங்களை எனக்கு நினைவு இருக்கிறது” என்றான்.
“சரி நான் உங்களுக்குக் கொடுத்தப் பணத்தை நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்களுடன் இருந்த இன்னும் ரெண்டு பேர் எங்கே?” என்று கேட்டார்.
“ஐயா நீங்கள் கொடுத்த பணத்தை வைத்து, எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதை வைத்து, இரண்டு மாதங்கள் நிம்மதியாகச் சாப்பிட்டேன். பணம் தீர்ந்து போனதும், மீண்டும் இங்கு வந்து பிச்சை எடுக்கிறேன்” என்றான்.
“உன்னுடன் இன்னும் இருவர் இருந்தார்களே, அவர்கள் எங்கே?” என்று கேட்டார்.
“அதில் ஒருவன் எங்கு இருக்கிறான் எனக்குத் தெரியவில்லை. ஆனால், இன்னொருவன், இதோ அருகில் ஒரு ஐஸ்கிரீம் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறான்” என்றான்.
பணக்காரர், தன் மகனை அந்த ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்து சென்றான்.
அங்கு கடை முதாலாளியை சந்தித்து, “என்னை நினைவு இருக்கிறதா?” என்று கேட்டார்.
உடனே அந்த முதலாளி, “உங்களை என்னால் மறக்க முடியுமா? உங்களால்தான் இந்த வாழ்க்கை எனக்குக் கிடைத்தது” என்றார்.
பின் தொடர்ந்து, “நீங்கள் கொடுத்த பணத்தால் தான் ஒரு சிறிய கடை வைத்துப் படிப்படியாக உயர்ந்து, இப்போது ஒரு பெரிய ஐஸ்கிரீம் கடையைத் திறந்துள்ளேன். உங்களுக்குக் காலம் முழுவதும் நன்றிக் கடன்பட்டவனாக இருப்பேன்” என்றான்.
“சரி, உன்னுடனிருந்த மூன்றாவது நபர் எங்கே?” என்று கேட்டார்.
அந்தக் கடை முதலாளி, “இங்கிருந்து நேராக சென்றால், அங்கே ஒரு சூதாட்ட விடுதி இருக்கும். அங்குதான் அவன் சூதாடிக் கொண்டிருப்பான். நீங்கள் தந்த பணத்தைச் சூதாடிச் சூதாடி இழந்தான். இப்போது அந்த பழக்கத்தை விட முடியாமல், காலையில் பிச்சையெடுத்து வரும் பணத்தில் மாலை சூதாடுவான். நீங்கள் அவனுக்குக் கொடுத்த பணம் வீணாகி போனது. அவனும் சூதாடி கெட்டுப் போனான்” என்றான்.
அதைக் கேட்ட தந்தை தன் மகனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
இப்போது அவரது மகனுக்குத் தான் எப்படியிருக்க வேண்டுமென்று ஓரளவு புரிந்திருந்தது.
மறுநாளிலிருந்து தந்தையுடன் அவரது தொழிலைக் கவனிக்க உடன் செல்லத் தொடங்கினான்.