மனிதர்களின் காலடித் தடம் படாத காடு அது.அங்கே பறவைகளும் விலங்கும் எண்ணற்று பெருகி பெருவளத்துடன் காட்டையும் தங்களையும் வளர்த்து வந்தன.
திடீரென ஒருநாள் அந்தக் காட்டில் சலசலப்பு தென்பட்டது. என்னவென்றால் விலங்குக் கூட்டங்கள் தங்களுடைய ராஜா சிங்கத்தைப் புகழ்ந்து கோஷமிட்டு அந்தக் காட்டைச் சுற்றிச்சுற்றி வந்தன.
அதைப் பார்த்த பறவை இனங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தன. காக்கையும், மயிலும் விலங்குகளுக்கெல்லாம் தலைவனாக சிங்க ராஜா இருப்பதைப் போல், நம் பறவை இனத்திற்கும் நாம் ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்குள்ளும் ஒற்றுமை மிகுந்து காணப்படும் என்றார்கள்.
அதை அனைத்துப் பறவைகளும் ஆமோதித்தன.
ஒரு சிட்டுக்குருவி மட்டும் இது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், நம்மில் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமான விஷயம் என்றது.
அதற்கு அங்கிருந்த பெரிய பருந்து ஒன்று, உங்க எல்லோரையும் விட நான்தான் இங்கே உயர்ந்தவன். அதனால், என்னையே உங்களுடைய தலைவனாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றது.
மற்றப் பறவைகள் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி விட்டன.
அப்பொழுது அந்த பருந்து, “சரி நம்மில் யார் மிக உயரமாக பறக்கிறாரோ, அவரையேத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம்” என்றது.
தான்தான் மிக உயரமாகப் பறக்க கூடிய ஒரே பறவை என்பதை உணர்ந்த பருந்து, இந்த மாதிரி ஒரு போட்டியை முன்மொழிந்தது. விவரமறியாத மற்ற பறவைகளும் இதை ஒப்புக்கொண்டு போட்டிக்குத் தயாராயின.
போட்டி தொடங்கப்பட்டது, அனைத்துப் பறவைகளும் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையில் இறக்கைகள் வலிக்க வலிக்க உயரத்தில் பறக்க முயற்சி செய்து கொண்டிருந்தன.
ஆனால் பருந்தின் திட்டப்படி பருந்து தான் மிக உயரமாக பறந்து கொண்டிருந்தது. பறக்கும் போது மற்ற பறவைகளைப் பார்த்து நக்கலாக சிரித்தது.
“முன்பே என்னைத் தலைவனாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னேனே... இப்போது பாருங்கள்... நான்தான் மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறேன்” என்பது போல் இருந்தது பருந்தின் சிரிப்பு.
போட்டியில் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டிருந்த பருந்து மெல்ல கீழே இறங்கி வரத் தொடங்கியது. அப்பொழுது அங்கிருந்த மற்ற பறவைகள் ஏன் பருந்தே எதிர்பாராத வண்ணம் ஒரு நிகழ்ச்சி நடந்தேறியது. அது என்னவென்றால், பருந்து வெற்றியைக் கொண்டாடக் கீழே இறங்கிய சமயத்தில் அதன் இறக்கையின் மேலே அமர்ந்து கொண்டிருந்த சிட்டுக்குருவியானது பருந்தின் தலையில் ஏறிப் பறக்க ஆரம்பித்தது.
தற்பொழுது அந்தச் சிட்டுக்குருவி பருந்தை விடவும் மிக மிக உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
அதனைப் பார்த்த மற்ற பறவைகள் சிட்டுக்குருவியின் புத்திசாலித்தனத்தைக் கண்டு வியந்து, அந்த சிட்டுக்குருவியை ஒட்டுமொத்த பறவை இனத்திற்கும் தலைவனாக தேர்ந்தெடுத்து மகுடம் சூட்டிக் கொண்டாடி மகிழ்ந்தன.