அந்த ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவனை எல்லோரும் முட்டாள் என்று சொல்லிக் கேலி செய்து வந்தனர்.
அவன் ஒரு நாள் ஒரு பிரபல துறவி ஒருவரைச் சந்தித்து, "சுவாமி, எல்லோரும் என்னை முட்டாள் என்று சொல்கின்றனர். நான் எப்படி அறிவாளியாவது?"என்று கேட்டான்.
அந்தத் துறவி, அவனுக்கு அறிவாளியாக ஒரு ரகசிய ஆலோசனை வழங்கினார்.
மறூநாள், காலை எழுந்தவுடன் அந்த இளைஞன் மக்கள் கூடும் கடைவீதிக்குச் சென்றான்.
அங்கே, ஒரு நண்பன் மயில் தோகை விரிக்கிறது மழை வரும் என்றான்.
அதற்கு இளைஞன் மழை வருவதால்தான் மயில்தோகை விரிக்கிறது என்றான்.
இன்னொரு நண்பன், கோயிலுக்குச் சென்றால் கடவுளைப் பார்க்கலாம் என்றான்.
அதற்கு அந்த இளைஞன் கஷ்டமான நேரத்திற்கு உதவுபவர்கள்தான் கடவுள் என்றான்.
அங்கே ஒரு பெரியவர் அந்த நதி அழகு என்றார்.
அதற்கு இளைஞன் நதி அழகல்ல, அதில் ஓடும் தண்ணீர்தான் அழகு என்றான்.
யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்ளாமல் தர்க்கம் செய்தான்.
மக்கள் குழம்பிப் போனார்கள்.
“இவனுக்கு என்ன ஆச்சு? திடீரென்று இப்படி ஆயிட்டானே...” என்று பேசிக்கொண்டனர்.
இளைஞன் வீட்டிற்கு சென்றான்.
அங்கே அவன் அம்மா ஒரு அழகிய பெண்ணைக் காட்டி, "டேய், இந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொள்" என்றார்.
அதற்கு இளைஞன், “இந்தப் பெண் அவலட்சனமாக இருக்கிறாள். எனக்கு இவள் வேண்டாம்” என்றான்.
மறு நாள் காலை அவன் வழக்கம்போல் கடைவீதிக்குச் சென்றான்.
அவனிடம் பேசிய அனைவருடனும், எதிர்மறையான கருத்துகளைச் சொன்னான்.
அதன் பிறகு, மக்கள் அவனை அறிவாளி என மரியாதையோடு நடத்தினர். அவன் சொல்வதிலும் பொருள் இருக்கிறது என்றனர்.
அவன் அறிவாளியாக துறவி சொன்ன ஆலோசனை என்னவென்றுதானேக் கேட்கிறீர்கள்.
அது ஒன்றுமில்லை...
"நீ யார் எது சொன்னாலும் எதிர்த்துப் பேசு, மறுத்துப் பேசு. எதிர்மறையாகப் பேசு. எதையும் அப்படியே ஏற்றுகொள்ளாதே. அவர்கள் சொல்வதிலுள்ள குறைகளைக் கண்டுபிடித்து வாதம் செய்... நீ அறிவாளியாகிவிடுவாய்" என்பதுதான்.