ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சுப் பழங்களை வாங்குவார். பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு, இந்தப் பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்தப் பாட்டியிடம் கொடுத்துச் சாப்பிடச் சொல்லிப் புகார் செய்வார்.
உடனே பாட்டி, ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு, “இல்லையேப்பா, நல்லா தானே இருக்கு" என்பார்.
உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதிப் பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம், “ஏங்க... பழங்கள் நல்லா இனிப்பாகத்தானே உள்ளது, ஏன் தினமும் இப்படி நல்லா இல்லைனு அவங்ககிட்ட குறை சொல்றீங்க" என்று கேட்டார்.
உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம், “அந்தப் பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறார், ஆனாலும் தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட மாட்டார். நான் இப்படிக் குறை கூறி கொடுப்பதால் தினம் அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தைச் சாப்பிடுகிறார்” என்றார்.
தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு, அந்தப் பாட்டியிடம், அந்த ஆள் தினமும் உன் பழங்களைக் குறை கூறுகிறான், இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாகப் போட்டுப் பழங்களைக் கொடுக்கிறாய்” எனக் கேட்டான்.
உடனே அந்தப் பாட்டி புன்னகைத்துவிட்டு, “அவன் என்னைத் தினமும் ஒரு பழத்தைச் சாப்பிட வைப்பதற்காக இப்படிக் குறை கூறுவது போலக் கூறி, பழத்தை என்னிடம் கொடுத்துச் சாப்பிட வைக்கிறான், இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான், நான் எடை அதிகமாகச் பழங்களை போடுவதில்லை. மாறாக, அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்து விடுகிறது” என்றார் அன்போடு.