உலகில் உள்ள பெரிய பெரிய நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டுக்கு அருகில் உள்ள குட்டி குட்டி தீவுகள் மீது போர்தொடுத்து அவற்றை ஆக்கிரமிக்க தொடங்கிய காலகட்டம்.
ஒரு கப்பலில் 500 வீரர்களை அனுப்பி 500 பேர் மக்கள்தொகை கொண்ட ஆதிவாசிகள் வாழ்கின்ற ஒரு தீவைக் கைப்பற்ற அனுப்பினார்கள்.
கப்பல் தீவைச் சென்றடைந்தது.
சிலநாட்களில் திரும்பிவந்தது, 500 வீரர்களும் கைகால் உடைந்த நிலையில் தோற்றுப் போய்த் திரும்பி வந்தார்கள், ஆதிவாசிகள் அவர்களை அடித்து உதைத்து அனுப்பி விட்டார்கள்.
அடுத்த நாள் 1000 வீரர்களைக் கப்பலில் அனுப்பினார்கள். 1000 வீரர்களும் கைகால் இழந்த நிலையில் பயந்து ஓடிவந்தார்கள்.
மீண்டும் 2000 பேரை அனுப்பினார்கள் அவர்களுக்கும் அதே கதிதான்.
பின் 5000 பேர்! அவர்களுக்கும் அதே கதி!
அவர்களுக்கு ஒன்றுமேப் புரியவில்லை வெறும் 500 ஆதிவாசிகள் ஆயுதங்களுடன் சென்ற 5000 பேரையும் தோற்கடித்துக் கைகால்களை உடைத்துத் திருப்பி அனுப்பிவிட்டார்களே, எப்படி முடிந்தது? என்று தீவிரமாக யோசித்தார்கள். பின் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
இந்த முறை வெறும் 500 பேரை மட்டுமேக் கப்பலில் அனுப்பினார்கள். இரண்டு நாட்கள் நடந்த தீவிர சண்டையில் ஆதிவாசிகளைத் தோற்கடித்துவிட்டார்கள்.
5000 பேர் சென்று தோற்ற இடத்தில் வெறும் 500 பேர் சென்று எப்படி ஜெயித்தார்கள்?
இந்த முறை ஒரே ஒரு மாற்றத்தைதான் செய்திருந்தார்கள்.
500 பேரைத் தீவில் இறக்கியதும் கப்பல் திரும்பி விட்டது. இனிமேல் இந்தத் தீவில் இருந்து திரும்பிச் செல்ல முடியாது, உயிருடன் வாழவேண்டும் என்றால் தீவைக் கைப்பற்றியே ஆகவேண்டும். இந்த நெருக்கடிதான் அவர்களை ஜெயிக்க வைத்தது.
லட்சியத்தில் உறுதியாக இருப்பதைவிட, அதை அடைவதற்கான முயற்சியில் மிகவும் உறுதியாக இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும்.
படிக்கட்டில் இறங்கி நீச்சல் கற்றுக்கொள்பவனை விட, மேலிருந்து குதிப்பவனே எளிதில் நீந்துகிறான்.