ஒரு அழகான இளைஞன் விவசாயி ஒருவனின் மகளைத் திருமணம் செய்ய விரும்பி அவனிடம் சென்று அனுமதி கேட்டான்.
அதற்கு அந்த விவசாயி அந்த இளைஞனைப் பார்த்துச் சொன்னான்.
“இளைஞனே, நீ என் மகளை மணக்க விரும்பினால், நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன். அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும், என் மகளை மணமுடித்து வைக்கிறேன்” என்று சொல்ல அவனும் ஒத்துக் கொண்டான்.
மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது.
முதலில் ஒரு மாடு வந்தது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அந்த மாடு சீறியபடி பாய்ந்து வந்தது.
அதைப் பார்த்த இளைஞன் வாலைப் பிடிக்கத் தயங்கி, அடுத்த மாட்டைப் பார்க்கலாம் என்று விட்டு விட்டான்.
சிறிது நேரத்தில், அதை விடப் பெரிய மாடு வெளியே ஓடி வந்தது. பார்க்கவேப் பயங்கரமான தோற்றம்.
அவனைக் முட்டி மோதிக் கொல்வதற்காகக் கடும் வேகத்துடன் ஓடி வந்தது.
இளைஞன் அச்சப்பட்டு அதுவும் வேண்டாம், மூன்றாவதைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வேகமாக ஓடிப் பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டான்.
ஓடி வந்த மாடு அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடிச் சென்றது.
மூன்றாவது முறையாகக் கதவு திறக்க, அப்போது வெளியே வந்த மாட்டைப் பார்த்து இளைஞன் முகத்தில் புன்சிரிப்பு வந்தது.
அவன் வாழ்க்கையில் பார்த்ததில் இதுவே மிகவும் பலவீனமான மாடு. எலும்பும் தோலுமாய்ப் பார்ப்பதற்கேப் பரிதாபமாக ஓட முடியாமல் ஓடி வந்தது.
“இந்த மாட்டை விடக்கூடாது. இதைத்தான் நான் பிடிக்க வேண்டும்” என்று தீர்மானித்த அவன், அந்த மாட்டின் வாலைத் தொடத் தயாராக இருந்தான்.
மாடு அருகில் வந்ததும், ஒரு தாவு தாவி மாட்டின் வாலைத் தொடப்போனான்.
ஆனால் அதிர்ச்சி அடைந்தான். ஆம்.அந்த மாட்டுக்கு வாலே இல்லை.
நமது வாழ்க்கையும் இப்படித்தான். அது பல வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது.
சில வாய்ப்புகள், எளிதாகத் தோன்றலாம். சில வாய்ப்புகள், கடுமையாக இருக்கலாம். ஆனால், எளிதானவற்றைக் கண்டு ஆசைப்பட்டு, மற்றது கடுமையாக உள்ளது என்று நம்பி அதைத் தவற விட்டால் எதையும் சாதிக்க முடியாது.
அந்த வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது, ஆகவே, வாய்ப்புகளை பயன் படுத்துவதில்தான் உங்கள் திறமை இருக்கிறது...