தொழில்நுட்ப ஆலோசகர்

கோ. சந்திரசேகரன்
சேலத்தைச் சேர்ந்த கோ. சந்திரசேகரன், தற்போது சென்னையில் வசித்து வருகிறார். விலங்கியல் துறையில் முதுநிலைப் பட்டம் (M.Sc), ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டமும் பெற்ற இவர் சில ஆண்டுகள் விலங்கியல் துறையில் கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கணினி மற்றும் இணையத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாகத் தம்மை முழுமையாக இணையதள வடிவமைப்பில் ஈடுபடுத்திக் கொண்டவர். 2001 ஆம் ஆண்டில் இவர் துவங்கிய ‘சென்னை நெட்வொர்க்.காம்’ இணையதளம் இன்று வரை தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 2006ல் இவர் துவங்கிய ‘சென்னைநூலகம்.காம்’ இணையதளம் இன்று உலகின் முன்னணி இணையத் தமிழ் நூலகமாக இருந்து வருகிறது. தற்சமயம் 8 இணையதங்களை சொந்தமாக நடத்தி வரும் இவர், பல்வேறு இணையதளங்களை வடிவமைத்தும் பராமரித்தும் வருகிறார்.
கௌதம் பதிப்பகம், தரணீஷ் பப்ளிகேஷன்ஸ் என்று இரு பதிப்பகத்தினைத் தொடங்கிப் புத்தக வெளியீட்டிலும் ஈடுபட்டு வரும் இவர், 2003 ஆம் ஆண்டு முதல் தமிழ் நூல்களை மின்னூல்களாக குறுந்தகடுகளிலும் வெளியிட்டு வருகிறார். அவற்றில் ‘தமிழ் மின்னூல் தொகுப்பு’, ‘அமரர் கல்கியின் படைப்புக்கள்’, ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’, ‘தமிழ் புதினங்கள் -1’, ‘கம்பராமாயணம்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.
சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் தலைவராக இருந்து வரும் இவரது சிறுகதைகள் பல்வேறு தமிழ் இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இரு சிறுகதை நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். இது தவிர, இணையதளங்கள் தொடர்பான இரு நூல்கள், பங்குச் சந்தை தொடர்பான நூல் ஒன்றையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். முத்துக்கமலம் இணைய இதழுக்கான இணையதளம் தொடர்புடைய தொழில்நுட்ப உதவிகள் அனைத்தையும் செய்து வருகிறார்.
* * * * *
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|