இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதங்களில் ஒன்றாக இருப்பது, மகா சிவராத்திரி. இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை), சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல், இதன் நோன்பு முறைகளைக் கூறுகிறது.
இவ்விரத்தைப் பற்றிய தொன்ம நம்பிக்கைகள் பல இருக்கின்றன. ஒரு காலத்தில், உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களேத் தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு, இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது, இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து அனைத்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது, உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெற வேண்டும் என்றும், அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதைக் கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்றும் வேண்டினார். இறைவனும் அன்னையின் கோரிக்கையை ஏற்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் ஆகியோர் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றனர்.
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். அவை;
1. நித்திய சிவராத்திரி
2. மாத சிவராத்திரி
3. பட்ச சிவராத்திரி
4. யோக சிவராத்திரி
5. மகா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து, நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
முதல் யாமம்
வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்
அபிஷேகம் - பஞ்சகவ்யம்
அலங்காரம் - வில்வம்
அர்ச்சனை - தாமரை, அலரி
நிவேதனம் - பால் அன்னம், சக்கரைப் பொங்கல்
பழம் - வில்வம்
பட்டு - செம்பட்டு
தோத்திரம் - இருக்கு வேதம், சிவபுராணம்
மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
புகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை
ஒளி - புட்பதீபம்
இரண்டாம் யாமம்
வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்
அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
அலங்காரம் - குருந்தை
அர்ச்சனை - துளசி
நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் - பலா
பட்டு - மஞ்சள் பட்டு
தோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
மணம் - அகில், சந்தனம்
புகை - சாம்பிராணி, குங்குமம்
ஒளி- நட்சத்திர தீபம்
மூன்றாம் யாமம்
வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்
அபிஷேகம் - தேன், பாலோதகம்
அலங்காரம் - கிளுவை, விளா
அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
நிவேதனம் - எள் அன்னம்
பழம் - மாதுளம்
பட்டு - வெண்பட்டு
தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
புகை - மேகம், கருங் குங்கிலியம்
ஒளி- ஐதுமுக தீபம்
நான்காம் யாமம்
வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர் (இடபரூபர்)
அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் - கரு நொச்சி
அர்ச்சனை - நந்தியாவட்டை
நிவேதனம் - வெண்சாதம்
பழம் - நானாவித பழங்கள்
பட்டு - நீலப் பட்டு
தோத்திரம் - அதர்வண வேதம், போற்றித்திருவகவல்
மணம் - புணுகு சேர்ந்த சந்தனம்
புகை - கர்ப்பூரம், இலவங்கம்
ஒளி- மூன்று முக தீபம்
மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். செயல்களில் வெற்றி ஏற்படும். 'சிவாய நம' என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது, 'உபாயம்' ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்தப் புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும். "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.