சிவபெருமான் வழிபாட்டிற்கு வில்வ இலையும், விஷ்ணு வழிபாட்டிற்கு துளசியும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது நமக்குத் தெரியும். இதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
வில்வம்
மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் (உயிர்களின்) பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி. இம்மூன்று சக்திகளின் வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்.
மனிதன் நிமிர்ந்து நிற்கக் காரணம் முதுகுத்தண்டு. வில்வமரம் அதிக வளைவுகள் இல்லாமல் நிமிர்ந்திருக்கும் தன்மை உடையது. இதனால் வில்வம் கொண்டு சிவனை வழிபடுபவர்கள் எதற்கும் அஞ்சாமல், நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் என்ற நாவுக்கரசரின் சொல்லுக்கேற்ப எமனையே எதிர்த்து நிற்கலாம் என்பது தொன்ம நம்பிக்கை. வில்வ இலைகள் முப்பிரிவானவை. ஒரு காம்பில் மூன்று இலைகள் இருக்கும். இது சிவனின் மூன்று கண்களைக் குறிக்கும். வில்வம் சிவன் கைகளில் ஏந்தியுள்ள திரிசூலத்தின் அடையாளம். அதன் மூன்று கூர்மைகளும் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியாசக்தி எனக் கருதப்படுகிறது.
வில்வ இலைகளைப் பறிக்கவும் சில நியதிகளும் உண்டு. சூரிய உதயத்துக்கு முன் பறிக்கவேண்டும். திங்கட்கிழமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய திதிகளில் வில்வம் பறிக்கக்கூடாது. வில்வ இலைகளைப் பின்னப்படுத்தாமல் அதாவது மூன்று இதழ்களும் முழுமையாக இருக்கும் படியாகப் பறிக்கவேண்டும்.
துளசி
துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவனும், மத்தியில் திருமாலும் வசிக்கிறார்கள். மேலும் 12 ஆதித்யர்கள் (சூரியன் போன்ற கிரகங்களின் சக்தி), 11 ருத்திரர்கள் (சிவாம்ச சக்தி), 8 வசுக்கள் (பீஷ்மருக்கு முன்னதாகப் பிறந்த கங்கா புத்திரர்கள்), 2 அசுவினி தேவர்களும் (தேவலோக மருத்துவர்கள்) வாசம் செய்வதாக தொன்ம நம்பிக்கை. துளசி இலை போட்ட நீர் கங்கை நதிக்கு சமமானது என்பதால் பெருமாள் வழிபாட்டில் துளசி முக்கிய இடம் பெறுகிறது.
செவ்வாய், வெள்ளி, மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, துவாதசி, இரவு, நேரங்களில் துளசியைப் பறிக்கக் கூடாது.