இந்து சமயத்தில், மனிதர்கள் பதினாறு வகையான செல்வங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. அந்தப் பதினாறு பேறுகளும் அவற்றைப் பெறும் வழிமுறைகளும்;
1. புகழ்
யாரும் புகழோடு தோன்றுவதில்லை. செய்யும் செயலிலும், நடக்கும் விதங்களிலும், நன்னடத்தை மற்றும் உதவி மனப்பான்மையான குணங்களைப் பொறுத்துத்தான் புகழ் கிடைக்கும்.
2. வெற்றி
வெற்றி என்பது பிறரைத் தோற்கடித்து வெற்றி பெறுவது அல்ல. நம்மை நாமே வெற்றி கொள்வதாகும். இன்றைய நிலையை விட நாளைய நிலைமை உயர்த்துவதற்குக் கடின உழைப்பும், விடாமுயற்சியும் மேற்கொள்ளுதல் வேண்டும்.
3. பணம் (பொன்)
செழிப்பான வாழ்க்கைக்குத் தேவையானவைகளில் பணமும், பொன்னும் ஆகும்.அவற்றைப் பெறுவதற்குச் சிறந்த வழிகள் தொழில் செய்வது அல்லது நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிப்பது.
4. இரக்கம்
இருப்பவர்களுக்கு கொடுக்கிற மனமில்லை. மனமிருப்பவர்களுக்கோ கொடுப்பதற்கு ஏதுமில்லை. இது தான் இன்றைய நிலை. அன்பு காட்டுவது, அரவணைப்பிற்குக் கூட பணம் கேட்கும் காலம். இருப்பினும், வெகு சிலர் இரக்கம் கொண்டு, பல ஏழைகளுக்கு உதவி செய்து இறைவனைப் போல் தரிசனம் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றனர்.
5. அறிவு
கல்வியும், அறிவும் வேறு வேறு என்று உணர வேண்டும். படித்துத் தெரிந்து கொள்வது கல்வி. அறிவோ பார்த்து, கேட்டு, அனுபவப்பட்டு வருவது. அறிவுடையோருக்கு கல்வி குறைவாக இருந்தாலும், எந்த நேரத்தில் என்ன செய்தால் வாழ்க்கை நன்றாக வாழ முடியும் என்பதில் அதிக அறிவு இருக்கும்.
6. அழகு
பார்த்தவுடன் கவருகின்ற தன்மையை அழகு என்று பெரும்பாலோர் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். கருப்பு நிறமுடையவர்கள், குண்டாக இருப்பவர்கள் ‘தாங்கள் அழகில்லையே’ என்று தாழ்வு மனப்பான்மையோடு வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்குள் பலவகையான அழகுகள் இருப்பதை தெரிந்து கொண்டால் இந்த மாதிரி தாழ்வுமனப்பான்மை எண்ணங்கள் வரவே வராது. குரல் இனிமை, கவரும் பேச்சு, தாளம் போட வைக்கும் பாட்டு, நளினமான நடனம், உடை அழகு, அறிவு, அன்பு, கருணை காட்டுதல் என்று எத்தனையோ அழகுகள் ஒவ்வொருவரிடமும் குவிந்து கிடக்கின்றன.
7. கல்வி
கல்வி பெரிதாகத் தேவைப்படாவிட்டாலும், அடிப்படைக் கல்வி மிகமிக அவசியம். படித்து மனப்பாடம் செய்யும் ஏட்டுக் கல்வி நல்வாழ்க்கை வாழ்வதற்கு உதவாது. அதோடு செய்முறை பயிற்சி வளமான துணையோடு கையும் கொடுக்கும். வளமான வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்வது நல்லது.
8. நோயின்மை
நல்ல உணவு, சிந்தனை மற்றும் செயல் நோயற்ற வாழ்வுக்கு ஆணிவேராகும். ‘நோயின்மை’ மட்டுமே ஒருவன் வாழ்நாளில் பெற்ற விலைமதிப்பில்லாத வளமாகும். எங்கே நோய் இல்லையோ, அங்கே மகிழ்ச்சி பொங்கி வழியும்.
9. வலிமை
உடல் வலிமை பெற உடற்பயிற்சியும், மனவலிமை பெற தியானம் மற்றும் தன்னம்பிக்கையும் வேண்டும். வலிமை பெற அதிக நேரம் செலவழிக்க வேண்டியதில்லை. சில நிமிடங்கள் போதுமானது.
10. நல்விதி
நல்ல எண்ணமும், செயலும் நல்விதிக்கு அடிப்படைக் காரணமாக விளங்குகின்றது. ‘விதி’ என்பது கஷ்டம் தருவது மட்டுமல்ல. நன்றாக மகிழ்ச்சியோடு இருப்பதுதான் நல்விதியாகும். விதி என்பது நம் கையில்தான் இருக்கின்றது. அதை நமக்குச் சாதகமாக ஏற்படுத்திக்கொள்வது நமது புத்திசாலித்தனத்தில் இருக்கின்றது.
11. உணவு
உடை, இருப்பிடம் முக்கியமானதாக இருந்தாலும் மூன்று வேளைக்கும் நல்ல உணவு உண்ணுவது அவசியம் வேண்டும். உணவானது, உடலும் அறிவும் வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
12. நன் மக்கள்
பொதுவாக குழந்தையாக இருக்கும்போது சூது, வாது ஏதும் தெரிவதில்லை. தீ ஜுவாலை கூட கவர்ச்சி மிக்கப் பொருளாகத் தெரியும். நெருப்புக் கங்கு கூடச் சாப்பிடும் பழமாகத் தெரியும். ஆனால், அவர்களை நன்மக்களாக வளர்ப்பது பெற்றோர் கையிலும், சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள் கையிலும், அவர்களை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வது மக்கள் கைகளிலும் இருக்கின்றது.
13. பெருமை
பிறர் பெருமைப்பட வாழ்தல் ஒரு மனிதனுக்கு வாழ்நாளில் சாதனையாகும். ஆனால், ‘தற்பெருமை’ என்பது அறவே விரும்பத்தகாததாகும். பெரும்பாலும் தற்பெருமை பேசுபவர்களைச் சுற்றிலும் ஒரு கூட்டம் வெறும் பணத்திற்காகவும், பதவிக்காகவும் வேறு பல எதிர்பார்ப்போடும் இருப்பார்கள். உண்மையான பெருமை என்பது சர்க்கரையைத் தேடி எறும்பு வருவது போல நல்ல செயல்களைச் செய்யும் போது பெருமை தானாகத் தேடி வரும்.
14. இனிமை
பேச்சில் இனிமை, நன்மக்களிடம் பழகுவதில் இனிமை, சொற்களில் இனிமை, எழுதுவதில் இனிமை ஆகியவைகள் என்றுமே நன்மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.
15. துணிவு
துணிவு இல்லையேல் வெற்றி இல்லை. திட்டமிடுதல் துணிவுக்கு அடித்தளம். திட்டம் சரியாக இருந்தால் எந்தச் செயலையும் துணிவோடு செய்யலாம். வெற்றி பெறலாம்.
16. நீண்ட வாழ்நாள்
மேற்கூறிய 15 செல்வங்களையும் பெற்றுவிட்டால் நீண்ட வாழ்நாளுக்குத் துணையாய் இருக்கும்.