மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறை 1987 ஆம் ஆண்டில் வெளியிட்ட, சி. கோவிந்தராசன் அவர்கள் எழுதிய ‘கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி (கி.பி.7 முதல் 12 ஆம் நுாற்றாண்டு வரை)’ எனும் நூலில் இடம் பெற்றிருக்கும் விளக்குகள் பற்றியச் செய்திகள் அகர வரிசைப்படி திரட்டித் தொகுத்துத் தரப் பெறுகின்றது. இதன் மூலம் அக்காலத்தில் வழக்கில் இருந்த பல்வேறு வகை விளக்குகளைப் பற்றியச் செய்திகளைக் காண்போம்.
1. அணுக்கன் திருநுந்தா விளக்கு
2. அணுக்க விளக்கு
3. அனந்தலை விளக்கு
4. ஏறும்பு காணித் திருக்குத்து விளக்கு
5. குத்து விளக்கு, ஐச்சு நிலை குத்து விளக்கு
6. சந்தியா தீபம்
7. தரா நிலை விளக்கு
8. தாழி விளக்கு - (கலை)
9. துஞ்சா விளக்கு, துாங்கு விளக்கு, நந்தா விளக்கு, நுந்தா விளக்கு,
10. நிலை விளக்கு
11. பாதத்தில் எழுத்து வெட்டித் தரா விளக்கு
12. பாவை விளக்கு
13. பிடி விளக்கு
14. மேதினி விளக்கு
15. சிங்கம் வைச்ச விளக்கு
16. சோதி விளக்கு
17. தாழி விளக்கு
ஆகிய உட்தலைப்புக்களின் கீழ் விளக்கு பற்றியச் செய்திகள் தரப்பெறுகின்றது.
1. அணுக்கன் திருநுந்தா விளக்கு - (சம)
கருவறையுள் மூலவர்க்கு அருகில் எப்பொழுதும் எரியும் படியாக அமைக்கப் பெறும் திருவிளக்கு.
“திருவண்ணாமலை உடைய நாயனாற்கு - திருமுன் பேய் அணுக்கன் திருநுந்தா விளக்காக எரிய நான் இட்ட திருக்குத்தி விளக்கு.” (தெ.கல்.தொ.8 கல். 124.)
2. அணுக்க விளக்கு - (சம)
கருவறையைச் சூழ்ந்த திருச்சுற்றில் இரவில் எரியும் விளக்கு. (க.க.சொ.அகரமுதலி, ப.15.)
3. அனந்தலை விளக்கு - (பொ)
அன்னப்பறவை உருவைத் தலைப்பாகக் கொண்ட திருவிளக்கு. இதனை, ஓதிமவிளக்கென்றும் கூறுவர். ”யவனர் ஓதிம விளக்கு) (பெரும்பாண். வரி.318.)
“அனந்தலை விளக்கு உள்கருவும் நாராசமும் உள்பட” (திருவையாறு ஒலோகமாதேவீச்சரக் கல்வெட்டு) (தெ.கல்.தொ.5 கல். 521.) (க.க.சொ.அகரமுதலி, ப.31.)
4. ஏறும்பு காணித் திருக்குத்து விளக்கு
பீடத்திலிருந்து எழுந்துள்ள உலோகக் கம்பியில் மாட்டப் பெறும் நெய்ய கலை வேண்டிய உயர அளவில் நிறுத்தி வைப்பதற்கமைந்ததாக, கம்பியில் உள்ள துளையில் புகு ஆணியிட்டு நிறுத்தி எரிய வைக்கும் குத்து விளக்கு. (புகு ஆணி - புகாணி)
“திரு நந்தா விளக்கு எரிய நான் இட்ட ஏறும் புகாணித் திருநந்தாவிளக்கு ஒன்று” (தெ.கல்.தொ.4 கல். 860.) (க.க.சொ.அகர முதலி, ப.85.)
5. குத்து விளக்கு - (பொ)
பாதமும், தண்டும், அகலுமாக அமைந்த உலோக விளக்கு. (குத்திட நிற்கும் விளக்கு)
“தொண்டைமானார் வார்ப்பித்துக் குடுத்த திருக்குத்து விளக்கு இரண்டில்” (தெ.கல்.தொ.7 கல். 93.) (க.க.சொ.அகரமுதலி, ப.145.)
ஐச்சு நிலை குத்து விளக்கு - (சம)
ஐந்து அடுக்காக அமைந்த குத்துவிளக்கு. மூன்று அடுக்குள்ள குத்து விளக்கும் வழக்கிலுள்ளது. (ஐச்சு - ஐந்து)
“திருவண்ணாமலை உடைய நாயனார்க்கும், திருக்காமக் கோட்ட நம்பிராட்டியார் உண்ணாமலை நாச்சியார்க்கும் திருநந்தா விளக்கு இட்ட ஐச்சு நிலை குத்து விளக்கு”
“இவ்வட வாயிலாண்டை இட்ட மூன்று நிலை குத்து விளக்கு” (தெ.கல்.தொ.8,கல்.95.101.) (க.க.சொ.அகரமுதலி, ப.85.)
6. சந்தியாதீபம் - (சம)
மாலைக் காலத்தில் திருக்கோயில்களில் எரிய விடும் விளக்கு. (சந்தி - மாலைப்பொழுது)
“சந்தியாதீபம் ஐந்தினுக்கு நிசதம் நெய் உழக்காக” (தெ.கல்.தொ.5, கல். 724.)
சந்தி - (சம) பகுதிப் பொழுது. திருக்கோயில்களில் வழிபாடு நிகழும் காலங்கள். 71 ?2 நாழிகை - ஒரு சந்தி காலமாகும். ஒரு நாள் 60 - நாழிகைக்கு 12 சந்தியாகக் கொள்ளும் வழக்கும் உள்ளது.
திருக்கோயில்களில் ஆறு சந்தி, அதாவது - ஆறு காலம் வழிபாடு நிகழ்வதும் சிறப்புடையது ஆகும். இச்சந்தி வழிபாட்டினை நிவந்தம் செய்தார் பெயராலும் குறித்தல் உண்டு. “நம் பேரால் கட்டின விக்கிரமபாண்டியன் சந்திக்கும்” (தெ.கல்.தொ.17, கல். 202.)
“அந்தியம் போது ஏற்றிய பொழுது அமுது செய்தருளுந்தனையுஞ் செல்ல ஒரு சந்தி விளக்கு எரிக்கக் கடவோமாகவும்” (தெ.கல்.தொ.7, கல். 43.)
“சிறு காலை சந்தி ஒருதிருமாலை சார்ந்த சம்மதித்துத் கைக்கொண்ட காசு முக்காலே ஒரு மாவும்”
“மத்யாக சந்திக்கு ஐஞ்சு திருமஞ்சனக்குடம் நாங்களே கொண்டு திருமஞ்சனமெடுத்து அபிஷேகம் பண்ண சம்மதித்துக் கைக்கொண்ட காசு ஒன்று” (தெ.கல்.தொ.8,கல்.27 முதல் இராசராசன், கி்பி. 990.) (க.க.சொ.அகரமுதலி, ப.176.)
7. தரா நிலை விளக்கு
தரா என்னும் கலப்பு உலோகத்தால் செய்யப்பட்ட நிலை விளக்கு (நிலையாகத் தொங்கும் விளக்கு, குத்து விளக்கு.)
“ஸ்ரீராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு மூன்றாவது வரை குடுத்த தராநிலை விளக்கு ஒன்று” (தஞ்சைப் பெரிய கோயிலில் கல்வெட்டு) (தெ.கல்.தொ.2: 2 கல். 41.) (க.க.சொ.அகரமுதலி, ப.227.)
8. தாழி விளக்கு - (கலை)
குடவிளக்கு. வட்டத்தட்டின் நடுவே அமைந்ததாகச் செய்யப்பெறும் விளக்கு. மண்ணால் செய்யப்பட்ட விளக்கு.
“தாழி விளக்கு மாகாணிக்கு ஆடு ஐஞ்சரை” (தெ.கல்.தொ.5. கல்.645.) (க.க.சொ.அகரமுதலி, ப.240.)
திருவிளக்குடையார் - (சம) தீவர்த்தி பிடிக்கும் கோயில் பணியாளர்.
திரு விளக்குப்பட்டி - (சம) கோயிலில் திரு விளக்கு எரிப்பதற்குரிய நிவந்தமாக அளிக்கப் பெற்ற இறையிலி நிலம் அல்லது ஊர்.
“அந்தியம் போழ்து துடங்கி திருவர்த்த சாமம் அறுதியாக எரிக்க கடவதான விளக்குக்கு இசைந்தபடியே திருவிளக்குப் பட்டியாக இந்நிலம் கொண்டு விட்டேன்.” (தெ.கல்.தொ.12, பகு.1,கல்.176.) (க.க.சொ.அகரமுதலி, ப.263.)
திரு விளக்குப் பிடிக்கும் கூனர், குறளர் - (சம)
இரவுக் காலங்களில் ஊர்த் தெருக்களில் திருவிளக்குப் பிடிப்பதற்கு பிறவிக்கூனரும், குள்ளரும், சோழர் காலத்தில் தொழில் செய்து வந்துள்ளனர். அவர்கட்கு ஊர்ச்சபையார் “குடிவிலை நிலம்” என்ற பெயரால், இறையிலி நிலமும் அளித்துள்ளனர்.
“இன்னாட்டு ஆவூர் கூற்றத்து திருவிளக்குப் பிடிக்கும் கூனர் குறளர் இறையிலியாந நிலம்” (தெ.கல்.தொ.8, கல்.204.) (க.க.சொ.அகரமுதலி, ப.264.)
9. துஞ்சா விளக்கு - (சம)
கருவறையில் திருமேனிக்கு முன்னர் எக்காலத்தும் தொடர்ந்து எரியுமாறு செய்யப்பெறும் திருவிளக்கு. இதனைத் துாண்டாவிளக்கு, நுந்தாவிளக்கு என்றும் கூறுவர்.
“வைகாவூர் திருமலை யட்ஷ படாரர்க்குத் துஞ்சா விளக்கொன்று வைத்தார்.” (தெ.கல்.தொ.23. கல்.65, கன்னரதேவர் - கி்பி. 953.) (க.க.சொ.அகரமுதலி, ப.268.)
துாங்கு விளக்கு - (சம)
தொங்கும் விளக்கு. கோவில் கருவறையுள் இரும்பு நாராயத்திலோ, உலோகச் சங்கிலியிலோ தொங்குமாறு அமைக்கப் பெறும் திருவிளக்கு.
“திருமணஞ்சேரி பரமசுவாமிக்கு துாங்கு விளக்கு - க” (தெ.கல்.தொ.19.கல்.99.) (க.க.சொ.அகரமுதலி, ப.272.)
நந்தா விளக்கு - (சம)
கோயிலில் இறைவனுக்கு முன்னர் இடையறாமல் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் திருவிளக்கு. கல்வெட்டுக்களில் நுந்தாவிளக்கு, நொந்தாவிளக்கு என்றெல்லாம் கறிக்கப் பெறும் துாண்டா விளக்கு. “நொந்தா வொண்சுடரே” என்பர் சுந்தரர்.
“நந்தா விளக்கணைய நாயகனே” என்பர் கம்பர்.
“திருச்செந்துறைக் கற்றளிப் பரமேஸ்வரர்க்கு சந்திராதித்தவல் ஒரு நொந்தா விளக்கெரிப்பதற்குக் குடுத்தேன்.” (முதல் பராந்தகன், தெ.கல்.தொ.8.கல்.602.) (க.க.சொ.அகர முதலி, ப.289.)
நுந்தா விளக்கு
அ. கோயில்களில் நிவந்தமாக பொன், நிலம், ஆடு இவற்றுள் ஏதாவதொன்றினை வைத்து, இடப்பட்டதாகக் கூறப் பெறும், இந்நுந்தா விளக்கு என்பது, இறைவன் சன்னிதியில் நாள் முழுதும் தொடர்ந்து துாண்டா விளக்காக எரியும் விளக்காகும். விளக்கின் வடிவம் பலவாக அமையிலும் அதன் நிவந்தச் செயல் துாண்டாது தொடர்ந்தெரியுமாறு செய்யப் பெறும் விளக்கென்பதேயாகும். கல்வெட்டுக்களில் நொந்தா விளக்கு, நந்தா விளக்கு என்றெல்லாம் கூறப் பெறுவது இவ்விளக்காகும்.
“திருவாலந்துறை மஹாதேவர்க்கு சந்திராதித்தவல் இரவும் பகலும் ஒரு நொந்தாவிளக்கு எரிய வைத்த நெய்” (தெ.கல். தொ.5, கல்.682.)
“உதைய அற்தமனமும் அற்தமன உதயமும் எரிய வைத்த திருநுந்தா விளக்கு” (தெ.கல்.தொ.17, கல்.447.)
“இத்திரு நுந்தா விளக்கு எரிக்க இட்ட குத்து விளக்கு ஒன்று இது தரா இடை அய”. (தெ.கல்.தொ.7,கல்.741.)
ஆ. துாண்டப் பெறாமல் எரியும் விளக்கு. இவ்விளக்கு இறைவன் திருமேனிக்கு அருகில் தொங்கு விளக்காகப் பெரும்பான்மையும் அமைக்கப் பெறினும், குத்து விளக்கு அமைப்பிலும் இவ்விளக்கு தரையில் நிலையாக நிற்கும் தோற்றத்திலும் செய்யப் பெறுவதுண்டு என்பதைத் திருவோத்துார் கல்வெட்டு உணர்த்துகின்றது.
“தொண்டைமானார் வார்ப்பித்துக் குடுத்த திருக்குத்து விளக்கு இரண்டிலெரியுந் திரு நுந்தா விளக்கு இரண்டுக்கு.” (தெ.கல்.தொ.7, கல்.93.)
“திருவுண்ணாழிகையில் ஒரு நொந்தாவிளக்கு இரவும் பகலும் எரிய வைத்த பொன் முப்பதின்கழஞ்சு.” (முதல் இராசராசன் - தெ.கல்.தொ.8, கல்.676.)
நுந்தா விளக்கு குடி - (சமு) நுந்தா விளக்கு எரிப்பதற்கு மூலதனமாக வைக்கப்பட்ட ஆடுகளைப் பெற்றுப் பாதுகாத்து, நிவந்தப் படி நாளும் கோயிலுக்கு நெய்யளக்கும் குடியினராகும் மன்றாடிகள் (இடையர்)
“இத்தேவர்க்கு திரு நுந்தா விளக்கு குடிகளாய் ஆடு கைக்கொண்டு நெய்யளந்து வருகிற மன்றாடிகளில்” (தெ.கல்.தொ.5, கல்.643.) (க.க.சொ.அகரமுதலி, ப.313.)
10. நிலை விளக்கு - (பொ)
தரையில் பீடம் பொருந்த, நெய்யகலுடன் எழுந்த அமைப்பிலுள்ள உலோக விளக்கு. இதனைக் குத்து விளக்கென்றும் கூறுவர்.
“ஐஞ்சான் நிளத்து நிலைவிளக்கு - க” (முதற்பராந்தகன் கி.பி.907, தெ.கல். தொ.7, கல்.509.)
“இத்திருநுந்தா விளக்கு எரிக்க இட்ட குத்துவிளக்கு ஒன்று. இது தரா இடை அரு.” (விக்கிரம சோழன், தெ.கல்.இ.தொ.7, கல்.741.) (க.க.சொ.அகரமுதலி, ப.308.)
11. பாதத்தில் எழுத்து வெட்டித் தரா விளக்கு - (பொ)
அடி பீடத்தில் கொடுத்தாரின் பெயர், காலம் முதலிய செய்திகள் வெட்டப்பட்ட தரா என்ற உலோகத்தாலான விளக்கு.
முதல் இராசராசன் ஆட்சியாண்டு 208 ல் நாங்கூர் நாட்டு நாங்கூர் வில்லவன் மஹாதேவியார் தங்களாச்சி நக்கன் ஒலோக சிந்தாமணியார் - குடுத்த தரா என்னும் கலப்பு லோகத்தால் செய்யப்பட்ட நிலை விளக்கு. விளக்கின் பாதத்தில் இன்னாரால் அளிக்கப்பட்டது என்ற செய்தி வெட்டப்பட்டுள்ளதைக் கல்வெட்டுச் செய்தி உரைக்கின்றது. (தெ.கல்.தொ.5, கல்.981.) (க.க.சொ.அகரமுதலி, ப.353.)
12. பாவை விளக்கு - (கலை)
அழகிய மங்கல மகள் இருகையாலும் விளக்கு அகலை ஏந்திய பாங்கில் உலோகத்தால் வார்க்கப் பெற்ற விளக்கு.
“பாவை விளக்கிற் பரூஉச்சடர் அழல” (முல்லைப்பாட்டு வரி.85.)
சங்க காலத்தில் யவன வாணிபம் தமிழகத்தில் நிகழ்ந்ததால், “யவனப் பாவை அணி விளக்கு” தமிழகத்தில் வழக்கிலிருந்தாகப் பெருங்கதை வரி. 171 - 175 குறிக்கும்.
“பாவை விளக்கும் பணிவுடன் பரவுமின்” (மணிமேகலை விழாவரை காதை) (க.க.சொ.அகரமுதலி, ப.358.)
13. பிடி விளக்கு - (பொ)
பிடியோடு கூடியதாகச் செய்யப் பெறும் உலோக விளக்கு. கோயில்களில் திரு விளக்குகள் ஏற்றுவதற்குப் பயன் படுத்தும் கைப்பிடியோடு கூடிய விளக்கு. இவ்விளக்கினை எரிய விடும் விளக்காகவும் எடுத்துச் செல்வர்.
“ஸ்ரீ பலிக்கு எரியும் பிடி விளக்கு” பிடி விளக்கு” (தெ.கல்.தொ.8, கல்.235.) (க.க.சொ.அகரமுதலி, ப.363.)
14. மேதினி விளக்கு - (அ)
உலகத்தில் தம் புகழ் விளங்கும் படிச் செய்து, (வீரராசேந்திரன் - மெய்கீர்த்தி) ப.428.
15. சிங்கம் வைச்ச விளக்கு - (கலை)
சிங்க உருவம் தலைப்பில் கொண்ட விளக்கு. இவ்விளக்கு பாண்டி நாட்டு இளங்கோய்க் குடி கோயிலில் கி.பி. எட்டாம் நுாற்றாண்டில் சாத்தன் அந்தரி என்பானால் செய்தமைக்கப்பட்டதாகும். (தெ.கல்.தொ.14, கல்.38.) (க.க.சொ.அகரமுதலி, ப.189.)
16. சோதி விளக்கு - (சம)
இறை வழிபாட்டில் எடுத்து வலமிட்டுக் காட்டும் திரி விளக்கு.
“சிறு காலை ஒரு சந்தி விளக்கு எரிக்க வைத்த பொன் கழஞ்சு - இது சோதி விளக்கு.” (புதுக். கல்.39.) (க.க.சொ.அகரமுதலி, ப.209.)
17. தாழி விளக்கு - (கலை)
குட விளக்கு. வட்டத் தட்டின் நடுவே அமைந்ததாகச் செய்யப் பெறும் விளக்கு. மண்ணால் செய்யப் பட்ட விளக்கு.
“தாழி விளக்கு மாகாணிக்கு ஆடு ஐஞ்சரை” (தெ.கல்.தொ.5, கல்.645.) (க.க.சொ.அகரமுதலி, ப.240.)
இவ்விதமாக பல நிலைகளில் பல்வேறு வகை விளக்குகள் ஆலயங்களில் தானமாகத் தரப் பெற்றதை “தென்னிந்திய சிலாஸனம் கல்வெட்டியல் தொகுதி” சான்று பகர்வதை இந்த “கல்வெட்டுக் கலைச்சொல் அகர முதலி” எனும் அகராதி நுால் தெரிவிக்கின்றது.