முக்கூா் ஸ்ரீமதழகியசிங்கா் சாதாரணமான செயல்களின் மூலம் ஆழமான வைணவக் கருத்துக்களை சீடர்களின் மனதில் பதிய வைப்பதில் வல்லவா்.
ஒரு முறை சீடர் ஒருவா் ஸ்ரீமதழகியசிங்கரிடம், “சுவாமி, அறிவியலின் அபரிதமான வளா்ச்சியால் சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை அளக்க முடிகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை அளக்க முடிகிறது. இதே போல் இறைவனான பெருமாளுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை அளக்க இயலுமா?” என்று கேட்டார்.
ஸ்ரீமதழகியசிங்கர், “தாராளமாக அளக்கலாம். நாளை வரும் போது ஒரு தாளும் பென்சிலும் கொண்டு வா” என்றாரார்.
அந்தச் சீடரும் மறுநாள் தாள், பென்சிலை எடுத்துக் கொண்டு வந்தார்.
ஸ்ரீமதழகியசிங்கர் சீடரிடம், ‘இந்தத் தாளில் என்னுடையவை என்று ஒரு தலைப்பு போட்டுக் கொண்டு, என் பத்நீ, என்புத்ரன், என் வீடு, என் வண்டி, என் பேனா, என் கடிகாரம், என் வேட்டி என்று உன் உடமைகளாக நீ நினைப்பவை எல்லாவற்றையும் ஒரு பட்டியலிடு. எல்லாம் முடிந்த பின் கடைசியில் போனால் போகிறதென்று என்னுடைய பெருமாள் என்று எழுதிக்கொள்” என்று சொன்னார்.
சீடனும் அவர் சொன்னபடி, என் பத்நீ, என் புத்ரன் என்று எழுதத் தொடங்கி, அவருக்குத் தனதாகத் தெரிந்த எல்லாவற்றையும் எழுதிக் கடைசியாக என்னுடைய பெருமாள்” என்று எழுதி முடித்த பின், “அடுத்து என்ன செய்வது?” என்று கேட்டார்.
ஸ்ரீமதழகியசிங்கர் சீடரைப் பார்த்து, “இப்போது அந்தப் பட்டியலில் இருந்து, என்னுடையது என்று ஆரம்பித்து நீ எழுதிய எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அடித்துக் கொண்டு வா! உனக்கும், நீ கடைசியாகப் பட்டியலில் எழுதிய பெருமாளுக்கும் இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வரும். கடைசியில் உன்னுடையது என்று எதுவுமே இல்லாமல் நீயும் பெருமாளுமே எஞ்சியிருப்பீா்கள். இதுதாண்டா உண்மை நிலை. நான் எனது உடமை என்கிற நிலை மாறி, யானும் நீயே! எனது உடமையும் நீயே! என்று உனக்கும் பெருமாளுக்கும் உள்ள தூரம் குறைவது மட்டுமல்ல, தூரமே இல்லாமல் போய்விடும்” என்றார்.
அகங்கார, மமகாரங்களை விட்டொழிக்க வேண்டும் என்பதனை எத்தனை அழகாக, தெளிவாக விளக்கி விட்டார் ஸ்ரீமதழகியசிங்கா்.