சிவபெருமானைப் போற்றி தென்னிந்திய நாயன்மார்கள் 6 ஆம் நூற்றாண்டு முதல் 11ஆம் நூற்றாண்டு வரை பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களின் 12 தொகுப்புகள் திருமுறை எனப்படுகிறது.
தமிழ் சைவ சித்தாந்த சாத்திரங்களில் மிகவும் முக்கியமானவையாகவும் இவை இருக்கின்றன.
முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் (கி.பி. 600) பாடிய தேவாரப் பாடல்கள் ஆகும்.
நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரை சம்பந்தர் காலத்தில் வாழ்ந்த திருநாவுக்கரசு சுவாமிகளால் அருளப்பட்ட தேவாரங்கள் ஆகும். ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயன்மாரால் (கி.பி.800) பாடப்பெற்ற தேவாரப் பாடல்களை உள்ளடக்கியது. இந்த ஏழு திருமுறைகளின் பாடல்களையே நாம் தேவாரம் என்கிறோம்.
இனி எட்டாம் திருமுறையில் மாணிக்கவாசகர் (9ம் நூற்றாண்டு) அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும் இடம் பெற்றுள்ளன.
அடுத்து, ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பாவும், திருப்பல்லாண்டும் இடம்பெற்றுள்ளன. இவை ஒன்பது பேர் அருளியவை.
பத்தாம் திருமுறையாக திருமூல நாயனாரின் (கி.மு.200) திருமந்திரம் இடம் பெற்றுள்ளது.
பதினொன்றாம் திருமுறையில் நக்கீரர், நம்பியாண்டார் நம்பி உட்பட 10பேர் அருளிய பாடல்கள் இடம் பெறுகின்றன.
இறுதியாக பன்னிரண்டாம் திருமுறையாக சேக்கிழார் (11ம் நூற்றாண்டு) பாடிய 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறான பெரியபுராணம் இடம் பெற்றுள்ளது.