திருச்செந்தூர் திருக்கோவிலில் நான்கு உற்சவ மூர்த்திகள் உண்டு.
1. ஜெயந்திநாதர்
2. அலைவாயுகந்தர்
3. குமாரவிடங்கர்
4. சண்முகர்
1. ஜெயந்திநாதர்
ஜெயந்திநாதர் தான் சஷ்டி விழா நாயகர். கந்த சஷ்டி உற்சவத்தில் இவரே முதன்மை மூர்த்தி. சூரனை சம்காரம் செய்து வெற்றி வாகை சூடியதால் ஜெயந்தி நாதர் என்று அழைக்கப்படுகிறார். இவர் சஷ்டி உற்சவம், வசந்த உற்சவம் மற்றும் அன்றாட தங்கத்தேர் உற்சவத்திலும் எழுந்தருளுவார்.
2. அலைவாயுகந்தர்
இவர் வைகாசி விசாக நாயகர். வைகாசி விசாகத் திருவிழாவன்று மேலக்கோவிலில் இருந்து தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார். தவிர மாசி, ஆவணி திருவிழாக்களில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டை காண்பார்.
3. குமரவிடங்கர்
இவர் ஆவணி, மாசி திருவிழாவில் எழுந்தருளும் பிரதான உற்சவர். மேலும் ஐப்பசியில் சஷ்டி முடிந்து தெய்வானைத் திருக்கல்யாணத்திலும், பங்குனி உத்திரத்தில் வள்ளித் திருக்கல்யாணத்திலும் இவரே மாப்பிள்ளை சுவாமி.
4. சண்முகர்
ஆறுமுகநயினார் என்று சிறப்பிக்கப்படும் மூர்த்தி. ஆறுமுகங்களும், பன்னிரண்டு கரங்களும் கொண்ட பெருமான். கோவிலுக்குள் தெற்கு வாசல் வழியாக நுழையும் போது, நேரெதிராகக் காட்சி தரும் பெருமான். இவர் வருடத்தில் இருமுறை ஆவணி, மாசித் திருவிழாவின் ஏழாம் திருநாள் சிவப்புச் சாத்திக் கோலத்திலும், எட்டாம் திருநாளில் வெள்ளைச் சாத்திக் கோலத்திலும், பச்சைச் சாத்திக் கோலத்திலும் வீதி உலா எழுந்தருளுவார்.