அக்கார அடிசில்
உ. தாமரைச்செல்வி

அக்கார அடிசில் என்பது வைணவ ஆலயங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் ஓர் உணவுப் பொருளாகும். குறிப்பாக, இது மார்கழி மாதம் 27 ஆம் நாள், ‘கூடாரவல்லி பிரசாதம்’ என்கிற பெயரில் செய்யப்படும் இனிப்புச் சிற்றுண்டி ஆகும். ஆண்டாள் திருப்பாவையில் கூறியவாறு, "நெய்யுண்ணோம் பாலுண்ணோம்" என்று மார்கழி மாத முதல் தேதியில், பாவை நோன்பைத் துவங்குவோர், 27 ஆம் நாள், தங்களின் விருப்பங்கள் நிறைவேறியதாக எண்ணி, மிகையளவு நெய்யும் பாலும் கலந்து இப்பண்டத்தைச் செய்வர். பால், நெய், அரிசி, பயத்தம் பருப்பு வெல்லம், ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம் இவை கலந்து இந்த உணவு செய்யப்படுகிறது. பொதுவாக, சோறு சமைக்கப்படும் போது, அரிசி நீரில் வேக வைக்கப்படும். ஆனால், அக்கார அடிசில் செய்யும் போது, பச்சரிசியானது பாலில் வேக வைக்கப்படுகிறது. இது சர்க்கரைப் பொங்கல் போல திடமாகவும் இராது. பாயசம் போல திரவமாகவும் இருக்கிறது.
வைணவ நூலான, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில், நாச்சியார் திருமொழி, முதல் ஆயிரம், திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல். (பா. 596) ல், ஆண்டாள் நாச்சியார் அக்கார அடிசில் பற்றி கூறிய குறிப்பு உள்ளது.
ஆண்டாள் நாச்சியார் திருமொழியில்,
”நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ?”
என்று பாடித் தனது பாடல்களினாலேயேத் திருமாலிருஞ்சோலைப் பெருமானுக்கு அக்கார அடிசிலைப் படைத்து வழிபட்டாள். சொன்னேன் சொன்னேன் என்பதால் நேர்ந்து கொண்டேன் என்பதேப் பொருள். ஆதலால், பெருமாளுக்கு அக்கார அடிசில் படைக்க வேண்டும் என்பது அவள் விருப்பம் என்பது தெரிகிறது.
ஸ்ரீஆண்டாளின் நேர்த்தியை அறிந்த இராமனுஜர், அவளுடைய நேர்த்தியைப் பூர்த்தி செய்யத் திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தாடா அக்கார அடிசிலும், வெண்ணைய்யும் சமர்பித்தார். பின்பு, ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை அடி பணிந்து நின்றார். தான் பாடியதை செயல்படுத்திய இராமனுஜரின் செயலுக்கு உகந்து, ஆண்டாள் அசரீரியாக, “வாரும் என் அண்ணலே” என்று அழைத்தார் என்று சொல்லப்படுகிறது.
இராமனுஜர் பல நூற்றாண்டு இளையவர் என்றாலும், இந்தச் செயலின் காரணமாக, அவர் ஆண்டாளுக்கு அண்ணனானார் என்று கருதப்படுகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.