சாதிக் குல் என்கிற முப்பத்திரண்டு வயது தந்தையும் நியமத் ஹமீது என்கிற ஏழு வயது சிறுவனும் உள்ளாடை அணிந்து ஒரே குளியலறையில் குளிக்க ஆரம்பித்தனர். இருவருமே அழகாய் சிகை திருத்தம் செய்திருந்தனர்.
“மகனே! நீ எப்படி பூமிக்கு வந்த?”
“அத்தாவிடம் கொஞ்சம், அம்மாவிடம் கொஞ்சம் எடுத்து பத்து மாதம் கொஞ்ச கொஞ்சமா வளர்ந்து பூமிக்கு வந்தேன்!”
“மனிதஉடம்பை பற்றி உனக்குச் சில தகவல்களைச் சொல்ல விரும்புகிறேன். உன் கண்கள் ஒரு நிமிஷத்துக்கு 20தடவைகள் துடிக்கின்றன. நீ இந்தத் துனியாவை விட்டுப் போகும் வரை உன் காதுகள் வளரும். உன் நாக்கில் எட்டாயிரம் சுவை அரும்புகள் உள்ளன. நீ உன் வாழ்நாளில் நாற்பதாயிரம் லிட்டர் எச்சிலைத் துப்புகிறாய். உன்னுடைய மூக்கு தினம் ஒரு கப் மூக்குச் சளியை உற்பத்தி செய்கிறது. நீ தினம் காலையில் எழும் போது ஒரு செ.மீ உயரம் கூடுதலாய் இருப்பாய், மாலையில் குறைவாய். உன் உடலில் ஓய்வெடுக்காத ஒரே தசை இதயம்தான். ஒவ்வொரு மாதமும் உன் மேற்தோல் புத்தாக்கம் பெறுகிறது. அதாவது உன் வாழ்நாளில் ஆயிரம் வகை வகையான தோல்களைப் பெறுகிறாய். ஒவ்வொரு நிமிடமும் முப்பதாயிரம் இறந்த செல்களை உதிர்க்கிறாய். நீ எழுபது வயது வரை உயிருடன் இருந்தால் உன் இதயம் 2.5 பில்லியன் தடவைகள் துடிக்கும். தினம் ஒரு பலூனை நிரப்பும் அளவுக்கு காற்று பிரிக்கிறாய். ஒரு மனித உடம்புக்குள் இத்தனை அற்புதங்கள் தானாக வந்திருக்குமா? யாராவது படைக்காமல் இந்தப் பூமிக்கு நாம் எதேச்சையாக வந்திருக்க முடியுமா? பில்லியன் ஜீவராசிகளும் ஏராளமான பிரபஞ்சங்களும் கடவுள் இல்லாமல் தானாக ஜீவித்திருக்க முடியுமா?”
“நீங்க சொல்வது உண்மைதான்த்தா. நம்மைப் படைத்தவன் ஒருவன் இருக்கிறான்!”
“அந்த ஒருவனை நாம் அல்லாஹ் என்கிறோம். இந்து மத சகோதரர்கள் சிவன், விஷ்ணு என்று பல பெயர்களில் சொல்கிறார்கள். கிறிஸ்துவர்கள் பிதாசு தன் பரிசுத்த ஆவி என்கிறார்கள்!”
“ஆமாம்!”
“நம் மத வழக்கப்படி ஒவ்வொரு முஸ்லிம் ஆணும், பெண்ணும் தினம் ஐந்து வேளை தொழ வேண்டும். அதிகாலை பஜ்ரு தொழுகை இரண்டு ரக்காயத்துகள், மதிய தொழுகை நான்கு ரக்காயத்துகள், சாயங்காலத் தொழுகை நான்கு ரக்காயத்துகள், அந்திநேரத் தொழுகை மூன்று ரக்காயத்துகள், இரவுத் தொழுகை நான்கு ரக்காயத்துகள் என்று மொத்தம் தினம் பதினேழு ரக்காயத்துகள் தொழுதாக வேண்டும். பொதுவாகப் பள்ளியில் கூட்டாகத் தொழுவது சிறப்பானது. நாளை உனக்கு ஏழு வயது முடிந்து எட்டு வயது ஆரம்பிக்கிறது. நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை. நாளைலயிருந்து உன்னைத் தொழப் பள்ளிக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். பள்ளிக்குச் செல்லும் போது உன் தொழுகையைக் களா செய்யலாம்”
“சரிங்கத்தா!”
“உன்னை வலுக்கட்டாயப்படுத்தவில்லை. உனக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு என்றால் என்னுடன் தொழ வா நியமத்!”
“முழு நம்பிக்கையுடன் தொழ வருகிறேன் அத்தா!”
“நாளை ஜும்ஆ தொழுகைக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் பள்ளிக்கு நாமிருவரும் செல்கிறோம். இரண்டு மணி நேரமும் உனக்கு மஸ்ஜித் சுற்றுலா… பள்ளியின் ஒவ்வொரு இண்டு இடுக்கை பற்றியும் உனக்கு விவரிப்பேன்!”
“மகிழ்ச்சி அத்தா!”
“மஸ்ஜித்தில் இருக்கும் எதைப் பற்றியும் நீ கேட்கலாம். பள்ளியில் தொழுகையை நடத்த இமாம் இருப்பார். பாங்கு சொல்ல மோதினார் இருப்பார். மஸ்ஜித்தை நிர்வகிக்க முத்தவல்லி இருப்பார்.”
நாளைய மஸ்ஜித் சுற்றுலா பற்றி குளித்துக் கொண்டே கனவு காண ஆரம்பித்தான் நியமத்.
அந்த மஸ்ஜித் பாரசீக துருக்கி கட்டடக்கலை பாதிப்பில் கட்டப்பட்டிருந்தது. அழகிய குமிழ்குமிழ் மினார்கள். மஸ்ஜித் கட்டி 137 ஆண்டுகள் ஆகியிருந்தன.
மஸ்ஜித்தின் இடப்பக்கம் இஸ்லாமிய நூலகமும் யுனானி மருத்துவமனையும் இருந்தன.
மகனும் தந்தையும் நூலகத்துக்குள் பிரவேசித்தனர். “மகனே! இந்த நூலகத்தில் ஆறாயிரம் புத்தகங்கள் உள்ளன. இஸ்லாமின் எந்த விழுமியம் கோட்பாட்டைப் பற்றியும் விளக்கம் தேவைப்பட்டாலும், இங்கு அதற்கான புத்தகங்களைப் படித்துத் தெளிவு பெறலாம்”
நூலகரும் சாதிக் குல்லும் அழகிய முகமன் பரிமாறிக் கொண்டனர்.
அடுத்து யுனானி மருத்துவம் பார்க்கும் அறைக்குள் போயினர். மருத்துவர் இருந்தார்.
அழகிய முகமன் பரிமாற்றம்
“அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதிக் மருத்துவம் போல தனித்துவம் கொண்டது யுனானி மருத்துவம். யுனானி பெர்ஷியன் -அரபிக் பாரம்பரிய மருத்துவம். கருஞ்சீரகத்தின் மருத்துவக் குணங்களைப் பெரிதும் போற்றி வியந்தார் நபிகள் நாயகம்!”
தலையாட்டினான் நியமத் ஹமீது.
மஸ்ஜித்துக்குள் நுழைந்ததும் நியமத்தின் கண்களில் நூறு சதுர அடி தடாகம் தென்பட்டது. தடாகத்தில் வண்ணவண்ண மீன்கள் நீந்தின.
தொழுகையாளிகள் உட்கார்ந்து ஒளு செய்ய சிமின்ட் திண்டுகள் ஹவ்ல்லைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தன.
“நீர்தடாகம் அமைக்க வசதி இல்லாத மஸ்ஜித்களில் தொழுகையாளிகள் கைகால்களை பைப் நீரில் சுத்தம்செய்து கொள்கின்றனர் நியமத். தொழுகைக்கு மனச் சுத்தத்தோட உடல் சுத்தமும் மிக முக்கியம் மகனே!”
மஸ்ஜித் உள்ளே தொழுமிடம். முழுக்க மெத்மெத் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. கிப்லா திசையில் இமாம் நின்று தொழ வைக்கும் இடம் மினார் வடிவக் குழிவாய் இருந்தது. இருபக்கக் கண்ணாடிச் சுவர்களில் இஸ்லாமிய மார்க்கப் புத்தகங்கள். வலது மேலே தொழுகை நேரங்கள் குறிக்கும் டிஜிட்டல் போர்டு. சுவரின் மூன்று புறமும் சுவர்க் கடிகாரங்கள். இருபதுக்கும் மேற்பட்ட மின் விசிறிகள், நாற்பது மின் விளக்குகள் எட்டு முக்கிய புள்ளிகளில் திரவக் கொசு விரட்டிகள்.
தொழுகையிடத்தின் முன் இடத்தில் பிளாஸ்டிக் கூடை. பிளாஸ்டிக் தொப்பிகள் இருந்தன.
“இதெல்லாம் எதுக்குத்தா?”
“தொழ வருபவர்களிடம் தொப்பி இல்லை என்றால், இந்த தொப்பி அணிந்து தொழுவர். தொழுது முடித்த உடன் தொப்பிகளைக் கூடைக்குள் போட்டு விடுவர்!”
“ஓஹோ!”
“மஸ்ஜித்தின் தொழுகைகளை நடத்திக் கொடுக்கும் இமாமின் அறை இது. கழிவறை, குளியலறை இணைந்தது. இது முத்தவல்லியின் அறை கணினி வசதி இருக்கிறது!”
இமாம் எட்டி பார்த்தார்.
“நியமத்! இமாமுக்கு சலாம் சொல்லு…”
சலாம் சொல்லி, சலாம் பெற்றான்.
“என் மகன் மொதமொத தொழ வருகிறான். அவனுக்குப் பள்ளிவாசலைச் சுற்றிக் காட்டுகிறேன்!”
“நல்லது!”
இமாம் தொழுகை நடத்தும் இடத்தில் மிம்பர் இருந்தது. மிம்பரில் 3+1 படிக்கட்டுகள். இமாம் ஓதும் போது ஏந்த பாரம்பரியமிக்க வாள் இருந்தது.
“மகனே! மஸ்ஜித் மினார்களை பார்த்தாயா? தொலைதூரப் பயணிகளுக்குப் பள்ளியை அடையாளம் காட்ட ஜமாத்தாரின் வலிமையை, பணபலத்தைக் காட்ட பிரமாண்டமான மினார்கள் கட்டப்படுகின்றன!”
பள்ளியின் பக்கவாட்டு வாசலில் வந்து நின்றனர்.
மூன்று முங்கீலால் ஆன சந்தூக்குகள் கிடத்தப்பட்டிருந்தன.
“இதென்னத்தா?”
“நம் பள்ளிக்கு கட்டுப்பட்ட முஸ்லிம்கள் இறந்து விட்டால் அவர்களைச் சுமந்து வந்து புதைக்க இந்த சந்தூக்குகள் பயன்படுகின்றன. சிறிய சந்தூக்கு சிறுவர் சிறுமியருக்கு. மெல்லியதாக இருக்கும் சந்தூக்கு ஒல்லியாக இருப்பவருக்கு. அகலமாக இருக்கும் சந்தூக்கு குண்டாக இருப்பவருக்கு. பெரியவர்களின் சந்தூக்குகள் ஏழடி நீளமும் மூன்றடி அகலமும் கொண்டவை…”
தோட்டத்தில் மண்ணைக்குழைத்து சிறுசிறு டேலா கட்டிகள் செய்து கொண்டிருந்தார் மோதினார்.
“இது என்னத்தா?”
“தொழுகையாளிகள் சிறுநீர் கழித்தவுடன், சிறுநீர்துளி ஆடையிலோ உடலின் மற்ற பகுதியிலோ படாமல் ஒற்றி எடுக்க இந்த டேலாக் கட்டிகள் பயன்படுகின்றன!”
தந்தையும் மகனும் மதரஸாக்குள் போயினர்.
“இது மார்க்கக் கல்வியை கற்றுத் தரும் பள்ளி. இதன் ஆசிரியர் பெயர் உஸ்தாத்!”
ஆசிரியர் அறை, பாடஅறை, மாணவர் அறை, கைப்பந்து விளையாடுமிடம் இருந்தன.
“நியமத் ஹமீது நீயும் பள்ளிப் படிப்புக்கு பாதிப்பு இல்லாமல் மதரஸாவுக்கு படிக்க வரலாம்!”
“சரிங்கத்தா...”
இறுதியாக கபர்ஸ்தான் போயினர். தென்னை, பனை, வேப்ப மரங்களும், பூஞ்செடிகளும் அடர்ந்திருந்தன.
குழி வெட்டுபவர் அடர் பச்சை நிறச் சீருடையில் இருந்தார்.
“இங்கதான் நம்ம மஹல்லா மக்கள் யாராவது இறந்தால் புதைப்பார்கள்... ”
நேரம் 12.45 மணி.
மோதினார் பாங்கு ஓதினார்.
“ஜும்ஆ தொழுகைக்கு நேரமாகி விட்டது ஒளு செய்து விட்டு தொழப் போவோம்...”
தந்தையைப் பார்த்துப் பார்த்து தனது உடலைச் சுத்தம் செய்தான் நியமத் ஹமீது.
புதிதாக வாங்கிய எம்ப்ராய்டரி துணி தொப்பியை மகனுக்கு அணிவித்தான் சாதிக் குல்.
தொழுது முடிந்ததும் வெளிவாசலுக்கு தந்தையும் மகனும் வந்தனர்.
நூறு ஐந்து ரூபாய் நாணயங்களை மகனிடம் கொடுத்து ஒவ்வொரு மிஸ்கீனுக்கும் தரச் சொன்னான்.
தந்தான் நியமத்.
“மஸ்ஜித் சுற்றுலா டாப் கிளாஸ் நன்றித்தா!” தந்தையைக் கட்டியணைத்துக் கொண்டான்.
பள்ளியில் பக்கத்து இருக்கை மாணவன் திருச்செந்தூர் முருகன் கோயில் படத்தை எடுத்து நியமத் ஹமீதிடம் நீட்டினான். “எப்படி இருக்கு எங்க கோவில்?”
“நாங்க எங்க சாமியை மஸ்ஜித்தில் கும்பிடுற மாதிரி, நீங்க உங்க சாமியை உங்க கோயிலில் கும்பிடுறீங்க. வெரி நைஸ் போட்டோ. நான் மசூதி சுற்றுலா போய் வந்தது போல, நீயும் உன் அப்பாவுடன் கோவில் சுற்றுலா சென்று வா”
மத நல்லிணக்கம் மல்லிகைப்பூ சிதறலில் முத்து குளித்தது.