வீட்டிற்குள் பிரவேசித்தான் அபுல்கலாம் ஆசாத். வயது இருபது. உயரம் 180 செமீ. இளங்கலை பௌதிகம் மூன்றாம் ஆண்டு படிக்கிறான். வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் அவனுக்குத் தேடல் அதிகம். குறிப்பாக, ஆன்மிகத் தேடல்.
அவனுடைய கேள்விகளில் சில மாதிரிகள் இதோ -
உயிர்களைப் படைப்பதற்கு முன் இறைவன் ஒரு அந்தகார இருளில் இருந்தான் என்கிறீர்கள். எது அவனை உயிர்களைப் படைக்க தூண்டியது?
இஸ்லாம் தோன்றி 1400 ஆண்டுகள் ஆகின்றன. இஸ்லாமுக்கு முன் நன்மை செய்த மாற்றுமத அல்லது மதமே இல்லாத மனிதர்கள் சொர்க்கம் போவார்களா, நரகம் போவார்களா?
சொர்க்கமும் நரகமும் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு தயாராக உள்ளனவா அல்லது மறுமை நாளின் போதுதான் நிர்மாணிக்கப்படுமா?
நபிகள் நாயகத்திற்கு இறை செய்திகள் 23 வருட இடைவெளியில் அவ்வப்போது வந்தன. சொல்ல வேண்டிய இறைசெய்திகளை எல்லாம் ஒன்றாக இணைத்து எழுத்து வடிவில் இறைவன் ஜிப்ரயீல் வானவர் தலைவர் மூலம் கொடுத்து விட்டிருக்கலாமே?
மறுமை நாளில் கேள்வி கணக்கு எதற்கு? ஒரு மனிதனின் உள்ளும் புறமும் இறைவனுக்கு நன்கு தெரியுமே? நேரடியாக மனிதரை சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அனுப்புவதை விட்டுவிட்டு கேள்வி கணக்கில் நேர விரயம் எதற்கு?
ஏழ்மையை வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என கூறுவதை விட்டு ஏழை எளியவருக்கு ஜக்காத் ஸதகாத் கொடுக்க வேண்டும் என இஸ்லாம் ஏன் கூறுகிறது?
இறைவனின் படைப்பில் வறுமை ஒரு அம்சமா?
இஸ்லாம் பூமி தட்டை எனக் கூறுகிறதா?
நபிகள் நாயகம் 23 வருடங்களில் இறைவனை தெரிந்து கொண்டதை விட இறைவன் பல்லாயிரம் மடங்கு மகத்தானவன் இல்லையா? நபிகள் நாயகத்திற்கும் தெரியாத இறைவனின் தன்மைகள் கோடி இருக்குமே?
சைத்தான் இறைவனுக்கு எதிரானவன் எனக் கூறுகிறோம். ‘மனிதரை நீ கெட்டது பக்கம் இழு. நான் நன்மையின் பக்கம் இழுக்கிறேன். மனிதன் எப்பக்கம் போகிறான் என பார்ப்போம். இது நான் உனக்கு கொடுக்கும் அஸைன்மென்ட். மறுமை நாள் வரை செய்’ என இறைவன் சைத்தானை பணித்திருப்பானோ என்னவோ?
ஏதேனும் பரிகாரமாக நபிகள் நாயகம் அடிமைகளை விடுதலை பண்ண சொன்னாரே தவிர ஏன் அடிமைத்தனத்தை ஆரம்பத்திலேயே முற்றிலும் தடை செய்யவில்லை?
நாள்தோறும் ஆயிரம் கேள்விகள் கேட்பான். அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல், அவனது தந்தை மீரா மைதீன் திணறுவார். பல சமயம் மகனின் கேள்விகளைப் பள்ளிவாசல் இமாமின் பக்கம் திருப்பி விடுவார்.
கேள்விகள் கேட்கிறானே தவிர, இஸ்லாம் அபுல் கலாம் ஆசாத்தின் உயிர் மூச்சு.
தஸ்பீஹ் மணி மாலையை எடுத்து உருட்டிக்கொண்டிருந்த மீரான் மைதீனை மகனது “அஸ்ஸலாமு அலைக்கும்!” இடைமறித்தது.
“வஅலைக்கும் ஸலாம்!”
“அத்தா!”
“என்னப்பா?”
“நான் உங்ககிட்ட கொஞ்ச நேரம் பேசலாமா?”
“தாராளமா!”
தந்தையின் காலடியில் அமர்ந்தான் ஆசாத்.
“ஒரு ஆணுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கோ வாழ்க்கையில் ஒரு அழகிய முன்மாதிரி தேவையா?”
“முன் மாதிரிகள் இருந்தால் தப்பில்லை!”
“ஒரு மனிதனுக்கு எத்தனை முன் மாதிரிகள் இருக்கலாம்?”
“உலக வாழ்க்கைக்கு ஒன்று! ஆன்மிகத் தேட்டத்துக்கு ஒன்று!”
“இயற்பியல் படிப்பிற்கான என் முன் மாதிரி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். எனது ஆன்மிக தேட்டத்துக்கு பொருத்தமான முன் மாதிரி இதுவரை கிடைக்கவில்லை!”
“ஓ...!”
“உங்களை முன் மாதிரியாகக் கொள்ள ஆசைபட்டேன்!”
“வேண்டாமப்பா. நன்மைக்கும் தீமைக்கும் இடையே அல்லாடும் எறும்பு நான்!”
“ஜமால்?”
“ஜமால் யார்?”
“பள்ளிவாசலில் அறிமுகமானவர். அவருக்கு வயது முப்பது இருக்கும். பல் மருத்துவத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார். ஐந்து வேளை தொழுகையாளி. முப்பது நோன்பும், ஆறு நோன்பும் நோற்பவர். குர்ஆனை அரபியில் ஓதத்
தெரிந்தவர். அளவாகச் சாப்பிடுவார். அந்நியப் பெண்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டார். புதிதாய் மலர்ந்த பூ போல சுய சுத்தம் பேணுவார். பிற சமய சகோதரர்களுடன் கண்ணியமாகப் பழகுவார். மனைவி மகனுடன் நீதமாய் வாழ்கிறார்.. மார்க்கம் தொடர்பாக எது கேட்டாலும் அவருக்குத் தெரிந்த பதில் கூறுவார்!”
“ஜமாலை எத்தனை வருடங்களாகப் பள்ளியில் பார்க்கிறாய்?”
“கடந்த பத்து வருடங்களாக...!”
“அதற்கு முன்?”
“ஜமால் ஒரு நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறியவர். திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்டு இருந்திருக்கிறார். பெரியார் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்…!”
“மீண்டும் ஜமால் நாத்திகனாக வாய்ப்பு உண்டுதானே?”
“வாய்ப்பில்லை என நம்புகிறேன். ஆனால் மனித வாழ்வில் எதுவும் நடக்கலாம்!”
“ஜமாலை எங்கெங்கு சந்தித்து இருக்கிறாய்?”
“பெரும்பாலும் பள்ளிவாசலில் அபூர்வமாய் அவரது மருத்துவமனையில்...!”
“ஜமால் தன் பெற்றோருக்கு ஒரு முகம் காட்டலாம். மனைவி குழந்தையிடம் ஒரு முகம் காட்டலாம். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் ஒரு முகம் காட்டலாம். பொது இடங்களில் ஒரு முகம் காட்டலாம். பள்ளி வாசலில்
ஒரு முகம் காட்டலாம்!”
மௌனித்தான் ஆசாத்.
“ஜமால் 30 வயது இளைஞன். அவருக்கு கவனம் சிதறும் வாய்ப்புகள் அதிகம். அடுத்த 30 வருடங்களில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்!”
“நம்ம பள்ளிவாசல் இமாமை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளவா?”
“இமாம்களுக்கும் தடுமாற்றம் உண்டு மகனே!”
“பள்ளிவாசலுக்கு பக்ரூதீன் என்கிற எண்பது வயது பெரியவர் வருகிறார். அவரை முன் மாதிரியாக எடுத்துக் கொள்ளவா?”
மீரான்மைதீன் பகபகவென சிரித்தார்.
“எதுக்கு சிரிக்கிறீங்க அத்தா?”
“யு ஆர் ஸோ டெஸ்பரேட் டு சூஸ் எ ரோல்மாடல்!”
“யெஸ்... அப்கோர்ஸ்!”
“அஷ்ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி (ரஹ்) கூறியதைப் பார்ப்போம்!”
“என்ன சொன்னார்?”
“ஒருவர் உயிர் வாழும் போதே அவரை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில், அவரது வாழ்வின் முடிவில் என்னவாகும் என்று உங்களுக்குத் தெரியாது என்கிறார்!”
“ஓ...!”
“மார்க்கத்தைப் பேசிக் கொண்டிருப்பவர்களைப் பின்பற்றாதீர்கள்.
மார்க்கத்தைப் பின்பற்றுகின்றவர்களை பின்பற்றுங்கள் எனக் கூறுகிறார்!”
‘ஊப்..!”
“மார்க்கத்தின் அடிப்படையில் வாழ்ந்து முடிந்த ஓர் உன்னத மனிதரை மாதிரியாகக் கொள்ளுங்கள். காரணம் காலையில் நம்பிக்கையாளராக இருக்கும் பிரசாரகர் கூட, மாலையில் நிராகரிப்பாளராக மாற வாய்ப்புண்டு எனவும் மொழிகிறார்!”
“அத்தா! பேசாம நபிகள் நாயகத்தை முன் மாதிரியாக வரித்துக் கொள்ளவா?”
“நாம் அந்த மாமனிதரின் கால் தூசி பெற மாட்டோம்!”
“உமறு இப்னு அல்-கத்தாப்- நபிகள் நாயகத்தின் மூத்த தோழர் மற்றும் மாமனார் இரண்டாவது கலீபா. அவரை முன் மாதிரியாகக் கொள்ளவா?”
“வேண்டாம். நான் உனக்கு ஒரு தெளிவான அறிவுரை கூறுகிறேன். மார்க்கத்தின் அடிப்படைகள் முழுக்க உனக்குத் தெரியும். இதுதான் சிலபஸ். ஆன்மிகம் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி கேள்வித்தாள் கொடுத்து தேர்வு
வைக்கிறது. அந்தத் தேர்வினை நீ தான் எழுத வேண்டும். அதற்கான மதிப்பெண்களைத் தர தகுதியானவன் இறைவன் ஒருவனே. அழகிய முன்மாதிரிகளைத் தேடி அலையாதே. முன்மாதிரிகளைத் தேடி அலையும் நேரத்தை ஆன்மிகத் தேடலுக்குச் செலவழி. மனித நேயத்துடன் எப்போதும் இரு. தவறுகளுக்கு நெஞ்சைத் தொட்டு மன்னிப்பு கேள். உதவிகளுக்கு உளமார நன்றி சொல். எதிலும் மிதமாய் இரு. தேவைகளில் தன்னிறைவு கொள். கேள்விகளைக் குறைத்து நம்பிக்கையில் மூழ்கு. சொர்க்கத்தின் விருப்பம் கருதாது நல்லவனாக இரு. வாழும் வாழ்க்கையில் பரிபூரணம் தொடு… எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன்!”
“யா அல்லாஹ்!” நெட்டுயிர்த்தான் அபுல் கலாம் ஆசாத். ஆசாத்தின் மூக்கின் நுனியில் முழு நிலா பூத்தது.