ஏலே... ராசாத்தி அங்க என்னல செய்யற… கீழத்தெரு மாடசாமி தன் மவன் வெற்றிக்கு ஜாம் ஜாம்ன்னு கல்யாணம் செய்வேன்னு சொன்னான்ல... சொன்னதச் சாதிச்சிட்டான்லே. சுத்துப்பட்டி கிராமமெல்லாம் மூக்கு மேல விரல வைக்கற மாதிரி என் மவனுக்குப் பொண்ணு பார்த்துத் திருவிழா மாதிரிக் கல்யாணம் செய்வேன்னு சொன்னாருல... அது போலவே தங்கச்சிலை மாதிரி வீட்டுக்கு விளக்கேத்த மருமவள கூட்டிட்டு வந்திட்டாய்ங்கல அவக சாதி சனம். சீக்கிரமா வாலே ஊரே அங்க தான் கூடிக்கிடக்குது. விரசாப் போயிப் பொண்ணப் பாத்துட்டு வந்திரலாம் என்று கூப்பாடு போட்டாள் வீராயி.
இதே வாரன் அக்கா வாரன், கைவேலையத் தூக்கிப் போட்டுட்டு அப்படியேவா... வர முடியும்... வா வா போலாம்... என்று விரைவாக நடையைப் போட்டாள் ராசாத்தி.
மினுக்கி வச்சக் குத்து விளக்காட்டம் மின்னுதாலே இந்தப் பொண்ணு என்றாவாறு கூட்டத்தை விலக்கிக் கொண்டே பொண்ணுப் பக்கமா உக்காந்தா மாரியாத்தாக் கிழவி.
ஏம்மா தாயி... உம் பேரு என்ன தாயி... நிறைஞ்ச பெளர்ணமி மாதிரி இருக்கியே! அன்னபூரணியின் முழு உருவமா எனக்கு தெரியற தாயி... உன்னப் பார்த்துக்கிட்டே இருந்தாலே போதும் போல... அன்ன ஆகாரம் எதுவுமே வேண்டாம் தாயி என்று நெட்டி முறித்தாள் மாரியாத்தா.
அந்தக் காலத்தல வெற்றியோட அம்மா ஆவடையம்மா, அதான் உன்னோட அத்தகாரி... ஊருல இருந்தாப் போதும், ஊருக்குள்ளாற உள்ள எந்த ஜீவனும் வயித்துப் பசியோட நடமாட முடியாது. எல்லார் வயித்தையும் நிரப்புற அன்னபூரணியா இருந்தவள். மவராசி போய்ச் சேர்ந்தாள் அன்னதானமும் ஊருல செத்துப் போயிட்டுதம்மா... நான் பாட்டுக்கு பேசிட்டேப் போறேன் பாரு... உன் பேரச் சொல்லுத் தாயி முதல்ல.
சொர்ணம்மா அப்பத்தா என்று மெதுவாக முனங்கினாள். அப்பத்தா இனிமே இந்த வீட்டுக்கு மட்டுமில்ல, இந்த ஊருக்கே எங்க அத்தம்மா மாதிரி அன்னபூரணியா இருப்பேன் அப்பத்தா என்று கூறினாள்.
பழைய நினைவுகள் தந்த வலியின் கணம்... தாங்க முடியாத சொர்ணம்மா விழியில் வழிந்த கண்ணீரைத் துடைக்க மனமில்லாது கிழிந்த பாயில் நத்தையாய் பம்புசெட் ரூமில் சுருண்டு கிடந்தாள். கணவன் வெற்றியின் மீது முழு கோபமும், ஆற்றாமையும் திரும்பியது. என்ன மட்டும் தனியா, இந்தத் தள்ளாத வயசுல விட்டுட்டு போயிட்டீகளே! முத்துக்கு முத்தா, கருவேப்பில கொத்தா ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு என் வயித்துல பொறந்த நம்ம பையன் சந்துருவோட இரத்தம் இப்ப சுயநல அரக்கனா உருமாறி வளந்து நிக்குதே... நான் இவன்கிட்ட இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கனுமோ தெரியலையே! என்ற எண்ணங்களுக்கு மத்தியில் கேட்பாரற்ற ஜீவனாக ஒடுங்கிப் போயிருந்தாள் சொர்ணம்மா.
குப்பைக் கிடங்காகக் காட்சி அளித்த அந்த அறைக்குள் வேகமாக நுழைந்த சந்துரு, என்னோட மான மரியாத எல்லாத்தையும் போக்கனும்னே இங்க வந்து கிடக்கியோ ஆத்தா. வீட்டுக்கு வந்த மருமவளோட ஒத்துப் போக முடியல, இத்தன வயசாகியும் புத்தி மட்டும் ஏந்தான் இப்படிக் கேவலமா யோசிக்குதோ தெரியல. மவனுக்கு சொத்து பத்து, சொந்த பந்தம்னு எதுவும் இருக்க்கூடாது. என் அப்பன், பாட்டன சம்பாதிச்ச எல்லா சொத்தையும் ஊருக்காரங்க திம்பாங்க, நானும் என் பொண்டாட்டியும் பாத்துக்கிட்டே இருக்கனும், என் பிள்ளைக நாளப்பின்ன தெருவுல அலையனும், எனக்குன்னு நாலு காசு இருக்க கூடாது ... அப்படித்தான ஆத்தா என்று சந்துரு ஆவேசமாய் முழங்கினான்.
அப்படில்லாம் இல்லடா சந்துரு... பெத்த மனசு இப்படியெல்லாம் யோசிக்குமா... இந்தச் சொத்தெல்லாம் உனக்கும் என் பேரப்பிள்ளைகளுக்குந்தான். நீயும் உன் பொண்டாட்டியோட சேர்ந்துட்டு என்னோட ஒரே ஒரு ஆசைக்கு மட்டும் கைவிலங்கு போடுதீகளே நியாயமாடா அது என்று கேவினாள் சொர்ணம்மா.
போத்தா போ... என்ன பெரிய ஆசை உனக்கு... கேவலமான ஆசை... ஊருல ஒண்ணுமில்லாம திரியற பிச்சக்காரப் பயலுவ எல்லாத்துக்கும் சமயக்காரியாத்தான் இருப்பேன்னு சொன்னா என்னன்னு சொல்ல உன்ன. காலம் போற வேகத்துல நம்மால முடிஞ்ச அளவு சொத்து பத்த சேத்து வைச்சிக்கனும் இல்லேன்னா நாலு பேரோட சொத்த ஏமாத்தி வாங்கிப் பிழைக்கக் கத்துக்கணும். ஆனா நீ இருக்குற நாலு சொத்துக்களையும் ஊருக்கு ஆக்கி போட்டே அழிச்சுடுவ போல இருக்கே... “தானம் புண்ணியம் எதுவும் வேண்டாத்தை. நமக்கு இருக்கிற சொத்துக்கு ஜெ ஜென்னு, வாழலாம்னு“ சொன்ன என் பொண்டாட்டி உனக்குப் பரம எதிரியாத் தெரியாறாளே ஆத்தா...
காலம் காலமா நடந்துக்கிட்டு வந்த புண்ணியமான அன்னதானம் இப்படி சுயநலத்தால செத்துப் போகப் போகுதே என்று மனதுக்குள்ளே எண்ணி நெக்குருகினாள். சரிடா சந்துரு எல்லாத்தையும் கெட்ட கனவா மறந்துடறேன். நான் கல்யாணமாகி நம்ம வீட்டுக்கு வந்த நாள்ல இருந்து செய்துட்டு வந்த புனிதமான அன்னதானத்த உம் பொண்டாட்டி வந்த மறுநாளே நிப்பாட்டினாளே அத மறந்துடறேன். இத்தன காலமா அணையாம இருந்த அடுப்புக்கு ஓய்வு காலத்தக் கொடுத்திடுவாகளோ... என்று வெளிய எதையும் சொல்ல முடியாம எதையும் மாத்த முடியாம தனக்கே ஓய்வக் கொடுத்துட்டு போனாகளே உங்க அப்பா என் குலசாமி... அதையும் மறந்துடறேன். ஊருக்கே சோறு ஆக்கிப் போட்ட என் வயித்துக்கு ஒரு வா சோறு தர யோசிச்சுப்புட்டாளே உன் பொண்டாட்டி... எத்தன பேருக்கு ஆக்கிப் போட்டீக அங்க போயி சாப்பிட வேண்டிதுதானே... ன்னு உன் மனைவி பேசின பேச்செல்லாம் கேட்டுட்டு மவனே ராசா நீ சும்மாத்தானப்பா இருந்த... அதையும் மறந்திடறேன்.
இப்ப என்னடா இந்த இடத்தில நான் கிடக்கிறது உனக்கு மானக்கேடா இருக்கு அவ்வளவு தான... வா நம்ம வீட்டுக்கேப் போயிடலாம். அப்படியே கையோட நம்ம ஊர் பெரியவக எல்லாரையம் அழைச்சிட்டு வந்திடு... இருக்கிற சொத்து பத்த உன் பேருக்கே எழுதிடலாம். சரியாப்பா! என்று மறு பேச்சிற்கு இடமில்லாமல் முந்தானையை இழுத்துச் சொருகிக் கொண்டே வரப்பிலே ஓட்டமும் நடையுமாக கிளம்பினாள் சொர்ணம்மா.
சந்துருவுக்கு ஆத்தா சொன்ன வார்த்தைகள விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு மனநிறைவு. கடைசிக் காலத்தில தன்னோட அப்பன் எல்லாச் சொத்தையும் தன் பொண்டாட்டிக்கு மட்டும்னு எழுதி வைச்சிட்டுப் போய் சேர்ந்திட்டாரு. மூனு வருஷமாப் போராடுன போராட்டம் இப்ப ஒரு வழியா முடியப் போகுது முருகா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
வீட்டின் தாழ்வாரத்தில் நுழையும் போதே, சொத்தில் மகனுக்கும், மகன் வழி உறவுக்கும் எத்தகைய உரிமையும் இல்லை என்று தன் குலசாமி எழுதி வைச்சிட்டுப் போய்ச் சேர்ந்த காட்சிகள் மனதில் முட்டி மோதியது.
வீராப்பா போனவுக அப்படியே போக வேண்டியதுதானே. இப்ப எதுக்கு மறுபடியும் வந்து ஒட்டணும், என்று மருமகள் சரண்யா பேசும் பேச்சு இன்று சொர்ணம்மா மனதை தாக்கவே இல்லை. ஏனெனில் அந்த உள்ளத்தில் எடுக்கப்பட்ட முடிவின் வலிமை மருமகள் பேச்சைச் சுக்கு நூறாக உடைத்து எறியச் செய்தது.
வீட்டினுள் சென்றவுடன் குழந்தைகள் ஓடோடி வந்தன. ஆச்சி... வாங்க ஆச்சி... எங்கள விட்டுட்டு எங்க போனீக... அம்மாக்கிட்ட கேட்டா சரியாவே பதில் சொல்ல மாட்டேனுட்டாக என்று மூத்தவன் விஷ்ணு இடுப்பைக் கட்டிக் கொண்டு கேவினான். சின்னவன் மிட்டாய் வாங்கப் போனியா, எனக்கு மிட்டாய் தா ஆச்சி என்று காலைக் கட்டிக் கொண்டான். ஆச்சி வந்துட்டேன்ல இனிமே எங்கேயும் போக மாட்டேன். உங்களச் சுத்தித்தான் என உசிரு எப்பவும் இருக்கும் சரியா! போங்க விளையாடுங்க என்று கூறிக் கொண்டே தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள் சொர்ணம்மா.
அரிசிப் பானையில் கைவிட்டுப் பார்த்ததில் இரண்டு கை அளவு அரிசி மட்டுமே இருந்த்து. கணவனுடன் தான் வாழ்ந்த சுகபோக ஆனந்து வாழ்க்கை நிழலாடியது.
யோசிக்காமல் வேகவேகமாக இருந்த அரிசிய உலையில் போட்டு, மர பீரோவில் இருந்த எல்லா பத்திரத்தையம் எடுத்து வெளியே வைத்தாள். சாதத்த வடிச்சு முடிக்க ஊர் பெரியவுக எல்லாரும் வந்து தாழ்வாரத்திலே கூடிய சத்தம் காதுக்குள் இறங்கியது. தனக்குன்னு ஆசை ஆசையாக் கணவன் முதல் திருமண நாள் அன்று பரிசளித்த வைர மோதிரத்துடன் ஆக்கிய ஒரு வாய் சோற்றினை மனநிறைவுடன் உண்டு முடித்தாள் சொர்ணம்மா.
எல்லோருக்கும் வணக்கம். என்ன மதிச்சு எல்லாரும் ஒன்னு சேர்ந்து வந்து நிக்கறதுக்கு என்ன புண்ணியம் செய்தேன்னு தெரியல. நான் என்னோட சொத்துக்கள் எல்லாத்தையும் என்னுடைய மகன், பேரன்கள் பேரில எழுதி வைச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன் என்று சொர்ணம்மா கூறியவுடனே பஞ்சாயத்துத் தலைவர், அட என்ன சொர்ணம்மா விவரம் இல்லாத பொண்ணா நீ சொத்து பத்து இருக்கும் போதே உன்ன வீட்டுக்குள்ள விட மாட்டேன்ங்கற உம் மருமவ. இப்ப இப்படி ஒரு முடிவ எடுத்திருக்க உன்ன உயிரோட உம் மவன் கொள்ளி வைச்சாலும் இந்த ஊர் ஆச்சரியப்படாது தெரியும்ல எனறு தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.
கணவன் சொல்லை முதன் முதலில் மீறிய குற்றவுணர்வுடன் பெருமூச்சு விட்டவாறு, சொர்ணம்மாவின் பார்வை மகனைத் தேடியது. மகனும் மருமகளும் வாழ்வின் ஆனந்தம் பேரானந்தம் வந்தடைந்த மகிழ்ச்சியின் உச்சியில் மிதந்து கொண்டிருந்தனர்.
என்னோட சொத்துக்களில் இந்த வீட்ட மட்டும் நம்ம ஊரான விருதுபட்டிக்கே எழுதி வைக்கப் போறேன். காலம் காலமா நடந்துட்டு வந்த அன்னதானத்தை இனிமேலும் தொடர்ந்து இந்த வீட்டுல ஊர்ப்பெரியவங்க எல்லாரும் சேர்ந்து நடத்தனும். இந்த வீட்டுல என்னுடைய மகனுக்கு ஒரு இம்மி இளவு கூட உரிமை கிடையாது. அன்னதானம் நடத்துறதுக்கு முதல் மூலதனமா என்னோட அப்பாரு எனக்கு தந்த 200 பவுன நான் இந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்கிட்ட கொடுத்திடறேன். என்னோட ஆசைய எம் மவன் பூர்த்தி செய்யலேன்னாலும் பிறர் நலம் விரும்பும் பஞ்சாயத்துத் தலைவர் கட்டாயமா பூர்த்தி செய்வாரு என்று கூறிவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று விட்டாள் சொர்ணம்மா.
என்னங்க கிழவி கடைசியில வீட்டத் தராமா, மத்த சொத்த மட்டும் கொடுத்திட்டாளே... அந்த காலத்து அரண்மனை மாதிரி வீடுங்க விட மனசே இல்லங்க... என்ன செய்யலாம் என்று கணவன் சந்துருவிடம் கெஞ்சினாள் சரண்யா.
விடுடா போட்டும்... இந்த வீடு இல்லேன்னா இதவிட பெரிய வீடா கட்டிடலாம். இல்லேன்னா பஞ்சாயத்துத் தலைவர்கிட்டே கிழவிக்குத் தெரியாமப் பேசிப் பார்ப்போம். ஒரு வழியா எல்லாச் சொத்தும் வந்திடுச்சில்ல என்ற சந்துருவின் வெற்றிப் பெருமிதமான வார்த்தைகள் அந்த வீட்டைச் சுற்றி வந்தன.
உள்ளே சொர்ணம்மா வாழ்வின் இறுதி நொடிக்குள் நின்று கொண்டிருந்தாள். பேராண்டி ஆச்சிக்குக் கொஞ்சம் தண்ணி கொண்டு வாப்பா என்று மூத்த பேரனை சொர்ணம்மா கூப்பிட தண்ணியுடன் ஓடோடி வந்தான் சிறுவன் விஷ்ணு. என்ன ஆச்சி செய்யுது உனக்கு... ஒருமாதிரி படுத்திருக்கியே... இப்படி நீ படுத்திருந்து நான் பார்த்ததே இல்லயே ஆச்சி என்று கேவினான். தண்ணிய வாயில ஊத்துடா பேராண்டி என்று தடுமாறிப் பேசினாள் சொர்ணம்மா. விஷ்ணு வாயில் ஊற்ற ஊற்ற சொர்ணம்மாவின் உயிர் மெல்ல மெல்ல நிம்மதியுடன் கணவனைத் தேடிச் சென்றது.
சுயநலமில்லாத கள்ளங் கபடமில்லாத அன்பு நிறைந்த கையாலே உலகை விட்டுப் பிரிகிறோம் என்ற நிறைவில் விழியின் வழியேச் சென்றது சொர்ணம்மாவின் இல்லை அன்னபூரணியின் ஜீவன்..