"உனக்கு அலுக்கவே அலுக்காதா... வாசுகி...?"
"எது... சாவித்திரி...!"
"அதுதான்... இந்த வாழ்க்கை... இப்பிடியே வெறுமனே இருக்கறது... எந்த வித ஆதரவும் இல்லாம... எந்தவிதத் தனிப்பட்ட விருப்பமுமில்லாம... கடைசி வரைக்கும் இப்படியே நிரந்தரமா இருந்திடலாம்னு முடிவு பண்ணிட்டியா...!"
வாசுகி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். சாவித்திரியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது... சின்ன வயதுச் சிநேகிதி அவள்.
இந்த ஒரு சிநேகிதம் மட்டும் அவர் வாழ்வில் இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் நீடித்திருந்தது. அது ஒன்றுதான் ஆறுதலாகவும் இருந்தது வாசுகிக்கு.
காலம்தான் எவ்வளவு கொடுமையானது. தன் இயல்பில் சென்று கொண்டிருந்த வாழ்க்கையை, திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அப்படியேப் புரட்டிப் போட்டுக் குப்புறக் கவிழ்த்திவிட்டு எதுவுமே நடைபெறாத வண்ணம் கடந்து கொண்டிருக்கும் காலம் தான் எவ்வளவு கொடுமையானது.
வாசுகி எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
தம் இளமை நாட்களில் எவ்வளவு குதூகலமாகவும் கொண்டாட்டமாகவும் இருப்பார்... கலகலவென்ற பேச்சும் துறுதுறுவென்ற நடவடிக்கையும் யாரையும் எளிதில் கவர்ந்துவிடும் வண்ணம் இருந்தது.
வாசுகியின் அம்மாவே அடிக்கடி சொல்வார்... "என் கண்ணே பட்டுடும் போலிருக்கேடி... நல்லபடியா ஒருத்தன் கிட்டெ ஒப்படைக்கிற வரைக்கும் என் உசிரு உன் கிட்டெயே இருக்கும். அப்பா இல்லாத குறைய கஷ்டப்பட்டு இதுவரைக்கும் நீ உணராதபடி வளத்துட்டேன்... இனிமே கடவுளா கண்ணத் திறந்து ஒரு வழி காட்டணும்டி குழந்தே..."
ஆமாம்... கடவுள் கண்ணைத் திறந்துதான் பார்த்தார். ஆனால் அரைகுறையாகப் பார்த்துவிட்டாரோ என்னவோ... வாசுகிக்கு ஒரு நல்ல வரன் அமைந்தது, அசலில் தான் என்றாலும் அனுசரணையான மாப்பிள்ளைதான். கல்யாணத்தேதி எல்லாம் நிச்சயித்தாயிற்று. தம் சக்திக்கு மீறி இருப்பதையெல்லாம் விற்றாவது வாசுகி கல்யாணத்தை முடித்துவிட வாசுகி அம்மா நினைத்தார்.
திருமணம் ஒரு வாரம் இருக்கும் போது, கடுமையான மாரடைப்பின் காரணமாக வாசுகி அம்மா இறந்துவிட, தனி மரமாக நின்றார், வாசுகி.
வாசுகிக்குப் பார்த்த மாப்பிள்ளைதான் ஓடியாடி எல்லாக் காரியத்தையும் முன் நின்று செய்ய வைத்தார்.
மாப்பிள்ளையின் தாயாருக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை. முகத்தைக் கடுகடுவென்று துக்கம் விசாரிக்க வந்து, பின் வலுக்கட்டாயமாக மகனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மாமனாரும் ஒன்றும் செய்யவியலாமல் பின் தொடர, வாசுகிக்கு இந்த உலகமே இருண்டது. செய்வதறியாது திகைத்தார்.
ஆனால் மாப்பிள்ளை தன் தாயாரிடம் பிடிவாதமா வாசுகியைத்தான் திருமணம் செய்து கொள்வேன் எனத் தெரிவித்து விட்டதால், வேறு வழியின்றி தாயார் ஏற்றுக்கொள்ள, மீண்டும் திருமணத்தேதி நிச்சயிக்கப்பட்டது.
மாமியாரின் முணுமுணுப்பு மட்டும் நிற்கவில்லை.
"முதல்ல தேதியஂ நிச்சயஞ்செஞ்சப்ப அம்மாக்காரிய முழுங்கிப்புட்டா... இப்ப இரண்டாவதா நிச்சயித்திருக்கோம்... இப்ப யார முழுங்கப்போறான்னு தெரியலியே... என்ன மாயஞ் செஞ்சாளோ... இவன் வேற... ஊர்லெ வேற பெண்ணே இல்லாத மாதிரி இவளையே கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒத்தக்கால்லே நிக்கிறான்... என்ன நடக்குமோ..."
வாசுகிக்குச் ச்சே என்றாகிவிட்டது.
... என்ன மனிதரிவர்... ஒரு பெண்ணாய் இருந்து கொண்டு இன்னொரு பெண்ணை இவ்வாறெல்லாமா நோகடிப்பது... என்ன செய்ய... மாப்பிள்ளைக்காகவாவது விதியே என்று சகித்துக் கொள்ள வேண்டும்.
திருமணத்தேதி நெருங்க... நெருங்க... வாசுகிக்குத் திக்திக் என்று இருந்தது.
எல்லாம் நல்லபடியாய் நடந்து முடிந்தது.
வாசுகி மாப்பிள்ளையின் மார்பில் சாய்ந்து கொள்ளும் இன்பம் உணர்ந்தாள். மாமியார்க்காரியின் முகம் எள்ளும் கொள்ளும் வெடித்தவாறே இருந்தது. அது, இது என்று சொல்லி நல்ல நாள், நல்ல நேரம் எனப் பார்த்து முதல் இரவை ஒரு வாரம் தள்ளிப்போட, புதுமணத் தம்பதிகள் வேறுவழியின்றி ஏற்க வேண்டியதாயிற்று.
நண்பரைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று போன மாப்பிள்ளை, ஏதோ ஓர் ஆலையை மூடக்கோரி நடக்கும் போராட்ட ஊர்வலத்தில் சிக்கிக் கொள்ள... ஊர்வலத்தில் திடீரென வெடித்த கலவரத்தினை அடக்கக் கூடிய காவல்துறை, முடியாது போகவே, நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானான்.
மாமியார்க்காரியின் அவலமான அழுகையினூடே வாசுகியைக் கரித்துக் கொட்ட அவர் தவறவில்லை.
"இதுக்குத்தான் சொன்னேன்... என் பையன் கேக்கலியே... இந்த விளங்கா மூஞ்சியத்தான் கட்டிக்குவேன்னு நின்னானே... இப்ப அவனையும் முழுங்கிப்பிட்டு நிக்கிறாளே... ராட்சசி... இவ நல்லா இருப்பாளா... எம் பையன இப்படி வாரிக்கொடுத்திட்டு நிர்க்கதியா நிக்கிறமாதிரி ஆயிடிச்சே..."
இதில் வாசுகிக்கு யார் ஆறுதல் கூறுவார். அழக்கூட முடியாமல் பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்திருந்தாள். கண்கள் வெறித்தபடி இருந்தன.
யார் யாரோ வந்தார்கள்...போனார்கள். எல்லாம் முடிந்தது.
அரசியல் கட்சிகளின் கண்டனம் காரணமாக துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு அரசு நிவாரணம் வழங்கப்பட்டது.
பிடிவாதமாய் வாங்கிக்கொண்ட மாமியார்க்காரி வாசுகியைத் தெருவிலே நிர்க்கதியாய் நிற்கவைத்தாள்.
போகுமிடம் அறியாது ஒரு வழியும் தெரியாது நின்றாள்.
... ஆமாம்... சாவித்திரி... நீ படிச்சு முடிச்ச கையோட கல்யாணம் பண்ணிட்டு வெளிநாட்டிலே செட்டிலாயிட்டே... இவ்வளவு வருடம் கழித்து என்னைத் தேடி எல்லா விபரமும் தெரிஞ்சிக்கிட்டு இங்கே வந்திருக்கே... இங்கே நான் ரொம்ப மனநிறைவா இருக்கேன் சாவித்திரி... நான் அனாதரவா நின்னப்போ இந்த இடந்தான் எனக்கு அடைக்கலம் குடுத்திச்சி... இப்ப எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கேன் தெரியுமா...
உனக்கு ஒண்ணு தெரியுமா... எனக்கு இப்ப முப்பத்து மூன்று குழந்தைக... எல்லாம் தங்களோட விதவிதமான குரல்லே என்னை அம்மான்னு அழைக்கும்போது எப்படி எல்லாம் இருக்கும் தெரியுமா... திருமணமாகி தாம்பத்ய சுகங்கூட அனுபவிக்காத எனக்கு இவ்வளவு குழந்தைகளை என் கணவர் எனக்குக் கொடுத்திருக்கார்னா... பாரேன்.
உனக்கு வேண்ணா... இவங்க மன வளர்ச்சி குன்றிய குழந்தைங்கன்னு தோணலாம்... ஆனா... கள்ளங் கபடமில்லாம, ஒரு கல்மிஷமும் அறியாம இருக்கற இவங்க தெய்வத்தோட குழந்தைங்க... இவங்களச் சிரிக்க வைக்கறதும், விளையாட வைக்கறதும், சாப்பாடு ஊட்டுறதும், தூங்க வைக்கறதும், இவங்க மலஜலம் கழிச்சா அத அசிங்கமாப் பாக்காம, சுத்தம் செய்றதும், தொடச்சி விட்றதும், இவங்களுக்குப் பாடம் நடத்தறதும், சேர்ந்து கூத்தடிக்கறதும்... இதிலெல்லாம் கிடைக்கற சந்தோஷம், சொர்க்கம்னு சொல்றாங்களே அங்கே கூடக் கிடைக்காது...
என்ன சொன்னேன்... இவ்வளவு குழந்தைகளையும் என் கணவர் கொடுத்ததாச் சொன்னேனா... ஆமாம்... அவர் இந்த மன வளர்ச்சி குன்றியோர் பராமரிப்பு இல்லத்துக்கு மாதாந்தர நன்கொடையாளர். அவரோட சாவுச் செய்தி கேள்விப்பட்டு, அந்த இல்லத்துப் பொறுப்பாளர், துக்கம் விசாரிக்க வந்த போது, என் நிலைமையப் பாத்து புரிஞ்சிக்கிட்டு இங்கே அழச்சி வந்தார். இப்ப என்னையேக் காப்பாளராக்கிட்டு அவர் ஓய்விலே
இருக்கார்.
எப்பவும் பெண் துவண்டு போய் நிற்கக் கூடாது... புதுமைப்பெண்ணாக் கூட வேணாம்... ஒரு சாதாரண பெண்ணா சூழ்நிலை அனுசரித்து, கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக்கணும், எப்பவும் மனந் தளராம சுற்றியுள்ள கெட்டவங்கள தவிர்த்து, ஒரு சுய முன்னேற்றங் கொள்ள கத்துக்கணும்... அப்படி எனக்கு அமைந்த வாய்ப்பு... இந்த இல்லம்... இந்தக் குழந்தைங்க... இன்னார்க்கு இன்னார்னு சொல்றாங்களே... அது கல்யாணத்துக்கு மட்டுமில்லே... இந்தக் குழந்தைங்க விஷயத்திலேயுந்தான்...
இவங்களுககு நீ தான் அம்மான்னு கடவுள் விதிச்சத, வாழ்க்கையிலே யாரு மாத்த முடியும். இந்தக் குழந்தைங்க கடவுள்கள்னா... நான் கடவுள்களின் அம்மா இல்லையா... சாவித்திரி.!
"மேடம்... குழந்தைங்க உங்களோட சாப்பிட்றதுக்காக காத்துக்கிட்டிருக்காங்க..."
பராமரிப்பு இல்லப் பணியாளர் ஒருவர் வாசுகியை அழைத்தார்.
"வா... சாவித்திரி... இன்னைக்கு என் தெய்வக்குழந்தைகளோட சேர்ந்து நீயும் சாப்பிடலாம்..."
வாசுகி அழைக்க, சாவித்திரி பெருமிதமாய் வைத்த கண் வாங்காமல் கடவுள்களின் அம்மாவைப் பார்த்துக் கொண்டேஇருந்தார்.