வீட்டுக்குள் நுழைந்ததும் ஒரே அமைதி. என்னனு கேட்டா பதில் சொல்லாத பிள்ளைகள்.
”கண்ணொடு கண் இணை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல”
காதலுக்கு மட்டுமல்ல கண்டிப்பான அம்மா ஒரு பார்வை பார்த்தாலேப் போதும் பிள்ளைகள் பொட்டிப் பாம்புகளாய் அடங்கி விடுவார்கள். முன்பெல்லாம் விடிஞ்சா காடு; அடஞ்சா வீடுனு காலுல சக்கரத்தைக் கட்டிட்டு ஓடிஓடி உழைக்கிற அம்மாக்கள் பக்கத்தில இல்லையேன்னு பிள்ளைக ஏங்குவாங்க. ஆனா, இப்பெல்லாம் தனிமையைத்தான் அதிகமாக விரும்புறாங்க. என்னத்தச் சொல்றது. உலகமே அப்படித்தான் போய்க்கிட்டிருக்கு. இன்னக்கிக் காலத்துல பிள்ளைககிட்ட கொஞ்சம் பேசினாலே அதிகமாகப் பேசுறதா நினைக்கிறாங்க.
“ஏம்மா எப்பப் பார்த்தாலும் பேசிட்டே இருக்கீங்க. உங்களாலப் பேசாமலேயே இருக்க முடியாதா? வாய் வலிக்காதா? பேசுறதுக்கேச் சாப்பிடுவீங்களா...? உங்க வாய்க்குப் பூட்டுதான் போடணும். சாவியே இல்லாம திறந்துடுவீங்க... அப்பக்கூட” என்றாள் சின்னவள்.
“சரி என்னைய விடுங்க. நீங்க என்ன பேசுறீங்க? அதச்சொல்லுங்க முதல்ல...” என்றாள் அம்மா.
“காலையிலேயேப் பாட்டியைப் பார்க்கப் போறப்ப சொல்லிட்டுப் போனேன். சாய்ந்தரம் நான் வர்றப்போ வீடு கூட்டி, துணி மடிச்சு வச்சிருக்கணும்னு. என்னாச்சு? எல்லாம் நான் போட்டது போட்டபடி அப்படி அப்படியே கிடக்குது. என்ன செஞ்சீங்க?” சாய்ந்தரம் வீட்டுக்கு வந்தவுடனே அப்படி அப்படியேக் கிடக்குறதைப் பார்த்துட்டு ஒரே டென்சன் அம்மா கமலாவுக்கு. இரண்டு பிள்ளைங்க வீட்டுல இருந்தும் வீட்டை இப்படிப் போட்டிருக்கீங்களேனு ஒரே கத்தல்.
“செய்யிற வேலையை நேரத்தோட செஞ்சிட்டா எதுக்குக் கத்தப் போறேன்?”
“பொம்பளப் பிள்ளனா சுத்தமா வைச்சிருக்கணும், ஆம்பளப் புள்ளனா எப்படி வேணா இருக்கலாம்னு ஏதாவது சட்டமிருக்காம்மா?” என்றாள் துடுக்குடன் சின்னவள்.
நீங்க எப்பவும் தாத்தா, பாட்டியைப் பாக்கப் போனா வீட்டுக்கு 7 மணிக்குப் பிறகு தானே வருவீங்க. வெரசா 5 மணிக்கே வந்தா இப்படித்தான். யாரு உங்கள இப்ப வரச் சொன்னாங்க என்றாள் பெரியவள்.
கோவமும் சிரிப்பும் கலந்த கலவையாக, “இனிமேதானே எல்லா வேலையும் செய்வோம்” என்றார்கள் ஒருமித்தக் குரலில்.
“பொறுங்கம்மா இப்பதானே வந்திருக்கீங்க. எப்ப இருந்தாலும் நாங்கதானேச் செய்யப் போறோம். இது என்ன அபீசா? இன்ன இன்ன மணிக்கு, இன்ன இன்ன வேல செய்யணும்னு. வீடுதானே. இருந்தாலும் நீங்க முதலாளி மாதிரியே ஆர்டர் போடுறீங்க” என்றாள் பெரியவள்.
“எப்படியும் போங்க...” என்றபடி தன்னாலும் முடியாது என்பதலாயேப் பொறுமையாக இருந்தாள் கமலா.
“என்ன நானும் வந்ததிலிருந்து பாத்துட்டுதான் இருக்கேன். அக்காவும் தங்கச்சியும் குசுகுசுன்னு ஏதோ கமுக்கமா பேசிட்டு இருக்கீங்களே என்ன விசயம்?”
“ஏம்மா நாங்களாட்டும், ஏதோ பேசிட்டு இருக்கோம் உங்களுக்கென்ன?” என்றாள் சின்னவள்.
“ஏன் அதை எங்கிட்ட சொல்லிட்டுத்தான் பேசுங்களேன் கொஞ்சம்…” என்று விடாப்பிடியாகப் பிடித்தாள் அம்மா.
“வேலையைப் பிரிச்சி செய்யறதால நீ செய், நான் செய்னு ஒரே எசலிப்பு. ரெண்டு பேருனாலே இப்படித்தான். மூனு பேர் மோசம்; நாலு பேர் நாசம்னு ஒரு வேலையும் ஆகாததுக்குப் பெரியவங்க சொன்னது சரியாத்தான் போச்சு. எப்பப்பாரு எலியும் பூனையுமா சண்டை போடுவீங்க. பிறகு, கொஞ்ச நேரத்துல அக்காவைப் போல வருமா, தங்கச்சி போல வருமானு ராசியாயிடுவீங்க” என்று சலித்துக் கொண்டாள் அம்மா.
சின்னவள் பெரியவளை ஏய் ப்ளீஸ் எனக்கு இந்தவேல இருக்கு, அந்த வேலை இருக்கு… நீ சும்மாத்தானே இருக்க என்றவுடன் பெரியவள் சரின்னு இரண்டு மொணங்கு மொணங்கிட்டு வெளியேத் திட்டமுடியாமல் வேலையைச் செய்வாள். அவ்வளவு பயம் சின்னவளைப் பார்த்து. இளையது காளை; மூத்தது மோளைனு சும்மாவா சொன்னாங்க. அப்படி ஒரு புரிதல் அவங்களுக்குள். வீட்ல ஏதோ அவ ரகசியம், இவ ரகசியம் வெளியேத் தெரியக்கூடாதுன்ற டீலிங் வேற. டீ போட்டுட்டு வந்த அம்மா, “இந்தாங்க முதல்ல டீயைக் குடிச்சிட்டு தெம்பாப் பேசுங்க” என்றாள்.
“ஏதோ நீங்களே பேசி சிரிக்கிறீங்களே, ஏங்கிட்ட சொன்னா நானும் சிரிப்பேனே...” டீ குடிக்கிறப்ப பேசுகிற பேச்சுக்கே அலாதிப் பிரியம்தான்.
“போங்கம்மா நாங்க ஏதாவது பேசுவோம். அதைக் கேட்கிற வயசு உங்களுக்குக் கடந்து போச்சு. அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?” என்றாள்.
குழந்தைகளுக்கு அம்மா என்பது இயல்பு. அதே வளர்ந்த பிள்ளைங்ககிட்ட பக்குவமான பேச்சு இருக்கே அது எத்தனை அம்மாக்களுக்குச் சமம். எந்தக் கல்லூரியில் படிச்சாங்கன்னு தெரியாது. அப்படி ஒரு பக்குவமானப் பேச்சு. ஒரு சில நேரம் பெத்தவங்களுக்குப் புத்திமதி சொல்றாங்களேனு உள்ளூரப் பூரித்துப் போவாள் அம்மா.
அம்மாவின் தொல்லை தாங்காமல் சின்னவள் சொன்னாள், “என் கூடப் படிக்கிற பிள்ளைங்கல்லாம் லவ் ப்ரொப்போஸ் பன்றாங்கம்மா. ஒரு பிள்ளைக்கெல்லாம் பத்து பேர் கொடுத்தாங்களாம். எனக்கெல்லாம் யாரும் கொடுத்ததில்லயேனு கவலையா இருக்கு” என்றாள் முகத்தைத் தொங்கப்போட்டுட்டு.
அந்நேரம் பாக்கணுமே, அவளோட முகத்தை... தண்ணி ஊத்தாத செடி, முகத்தைத் தொங்கப் போட்டது போல இருந்தது.
பெரியவள் சொன்னாள், “உன்னப் பார்த்தாலேப் பயமா இருக்குது போல. அதான் யாரும் கொடுக்கல. இல்ல யாராவது கொடுத்து பிக்ஸ் பண்ணியிருப்பாங்கனு நினைச்சிருப்பாங்க’ என்று சொல்லி சிரித்தாள்.
இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு எது எதெல்லாம் கவலையத் தருதுன்னு அம்மா நொந்து கொண்டாள். ’கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மணவறையில வை’ என்பது மாதிரி எவ்வாளவோப் பிரச்சினைகள் இருக்கும் போது உனக்கு இதுதான் பிரச்சனையா?ன்னு அம்மா கடிந்து கொண்டாள்.
பெரியவள் சின்னவளைப் பார்த்து, “நீயாவது படிச்சப் பள்ளிக்கூடம், காலேஜ் எல்லாமுமே கோஎட். நா படிச்சதெல்லாம் மொக்கக் காலேஜ். கேர்ள்ஸ் ஸ்கூல், உமன்ஸ் காலேஜ்னு. இப்பப் படிக்கிற காலேஜ்ல பாதி பேரு அண்ணங்க மாதிரி. மீதிபேரு யு.ஜி. படிக்கும் போதே பிக்ஸ்டு” என்று கவலையாகச் சொன்னாள்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அம்மா சிரித்தாள். அந்தச் சிரிப்புக்குக் காரணம், பிள்ளைக மேலே வெச்ச நம்பிக்கை. பொம்பிளப் பிள்ளையைப் படிக்க வச்சாலே அந்தப் பிள்ளை நமக்குச் சொந்தமில்லைன்ற கிராமத்து பேச்சுதான் பல பெண் குழந்தைகளின் படிப்பு நின்னு போனதற்குக் காரணமாச்சு. பொம்பளப் பிள்ளைகள ஒரு லட்சியத்தை நோக்கி வளர்த்தா டீனேஜ் வயசுல மனசு அலைபாயாது என்பது அவங்க அப்பாவின் எண்ணம். பிள்ளைகளைக் கல்யாணம், நகை, நட்டுனு வளர்க்கக் கூடாது. படிப்பும் ஒழுக்கமும் கொடுத்தாப் போதும். அவங்க எதிர்காலத்தை அவங்களே அமைச்சிக்குவாங்கனு அடிக்கடி அவங்க அப்பா சொன்னது பிள்ளைகளின் ஆழ்மனசுல பதிஞ்சிருச்சு. அதனால நான் பிள்ளைகளைப் பத்தி நிறைய யோசிக்கிறதில்லை. வழிகாட்டினாப் போதும் பாதையை உருவாக்கிக்கிடுவாங்கனு நம்பிக்கை எப்போதும் உண்டு. அதுபடியே வளர்ந்ததால் பிள்ளைகளுக்கு அம்மா இப்ப நல்ல தோழியானாள். அம்மாவுக்கும் தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளைகள் தோழியானார்கள்.
எல்லா விசயங்களையும் மனம்விட்டு பகிர்ந்து கொள்கிற இடம் வீடாகவும், சோர்ந்து போகும் போதும், ஆறுதல் தேடும் போதும் சாய்ந்து கொள்ள கிடைக்கும் தோளாகப் பெற்றவர்கள் இருந்தால் இன்னும் கொஞ்சம் பலம் பிள்ளைகளுக்கு. அவங்க என்ன பேசுனாலும் அம்மா, உடனே தன் வாழ்க்கையைப் பொருத்திப் பார்க்கிறதுல அவங்களுக்கோர் அலாதி மகிழ்ச்சி.
நாங்கல்லாம் படிக்கும் போது..... என்றவுடனே பிள்ளைக அய்யய்யோ அம்மா ஆரம்பிச்சாட்டாங்க என்று கலாய்ப்பாங்க.
எங்க ஊருல எட்டாப்பு முடிச்சு பக்கத்து ஊருக்கு பஸ்ல அனுப்புறதுக்குள்ளாவே அம்மா, அண்ணன், தம்பி என மொத்தக் குடும்பமும் பயப்படுவாங்க. எங்க நம்ம பொண்ணப் பத்தி, தங்கச்சி பத்தி கண்டக்டர்கிட்ட பேசுனாங்க, டிரைவர்கிட்ட பேசுனாங்க, அங்கன பாத்தேன் இங்கன பாத்தேன் எனப் பேச்சு வந்திரக்கூடாது என்ற பயம். ஏன்னா பொம்பளப் பிள்ளைக பஸ்ல ஏறின உடனேச் சினிமாப்பாட்டை மாத்தி மாத்தி போடற பஸ் டிரைவரும் கண்டெக்டரும் உண்டு. ஏன்னா ஒரே பேருந்துதான் அந்த ஊருக்கு. ஒருமணி நேரத்துக்கொரு முறை வரும். வேறு பேருந்து கிடையாது. சகோதர பாசத்துடன் பழகுவோருமுண்டு. பழகி காதல் வயப்பட்டோருமுண்டு. அந்தக் காலத்தில் பல காதலர்களை உருவாக்கியதில் பேருந்துக்குப் பெரும்பங்குண்டு.
வாயிருந்தும் ஊமையாய், கண்ணிருந்தும் குருடாய் இருப்பதுதான் அந்தக் காலப் பெண் பிள்ளைகளின் நிலைமை. அதிலும் பிள்ளைகளுக்குப் பிடிச்ச பாட்ட பஸ்ல போட்டுட்டா அந்த கண்டெக்டரை எல்லாருக்கும் பிடிச்சுப் போயிடும். எல்லாரும் இவருக்கு உருவமற்றவர்களாகப் போகணும்னு மனசுக்குள்ள ஒரு சபிப்பு. இப்ப எல்லாம் முகத்தை மறைச்சி துணியைக் கட்டிக்கிடுறாங்க. பெத்தவங்களுக்கே நம்ம பொண்ணுதானானு அடையாளம் தெரியல. யோசிக்க வேண்டியதிருக்கு. அன்னக்கி எல்லாம் எங்க போனாலும் இன்னாரு வீட்டுப் பொண்ணு, பையன்னு சுத்துபட்டி கிராமம் எல்லாருக்கும் தெரியும். ஏன்னா மாமா, மச்சான்னு பழகி உறவு கொண்டாடிய காலகட்டம். அது ஒரு கனாக்காலம்தான். எல்லாருக்கும் எல்லார் வீட்டுப் பிள்ளைகளையும் தெரியும்.
மனசு எங்கயும் அலைபாயக்கூடாது என்ற பயமே வயசுப் பொண்ணுங்களுக்கு ஒவ்வொருநாளும் இருக்கும். அதைவிட பள்ளிக்கூடம்னா அதுவும் பி.டி. டீச்சர்னா அதை விடப் பயம். சந்தேகம்னு வந்துட்டா பிரேயர்ல நிக்க வச்சி எல்லார் முன்னாடியும் விசாரிப்பாங்க. அப்படி ஒரு நிலைமை வந்துரக்கூடாது என்பதில் எல்லாரும் கவனமாக இருப்பாங்க.
பள்ளிக்கூடத்துல கணக்கு வகுப்புக்கு உட்கார்வது தினமும் ஒரே இடத்துலதான். அதுதான் ரிசர்வ்டு எனக்கும் என் பிரண்டு ராஜிக்கும். அப்படி ஒருநாள் அந்தப் பெஞ்சுல ஒரு நாள் ’ஐ லவ் யூனு’ எழுதியிருந்தது. ஒரே பயம் எங்களுக்கு. அதை என் பிரெண்டு பிளேடால சுரண்டி எடுத்திட்டா. ஏன்னா அந்த இடத்துல இவங்கதான் உக்காருவாங்கனு அந்த வகுப்புல எல்லாருக்கும் தெரியும். ஒன்னுமில்லாததுக்கு எல்லாம் ஒரே பயம். நடுக்கம். ஏன்னா அந்தக் காலத்துச் சூழல் அப்டி. இப்படிப் போனது ஒரு கட்டத்துல யாருன்னு நாங்களேக் கண்டு பிடுச்சது பெரிய டிடெக்டிவ் பிராசஸ். இது முடிஞ்சி 40 வருசத்துக்கும் மேல ஆயிடுச்சு. ஆனாலும் இதை வெளியே இதுவரை சொல்லாத அழுத்த மனசுதான் இப்பவரைக்கும். பெண்களுக்கே உள்ள அச்ச உணர்வு.
இதை வீட்டுல அம்மாகிட்ட இப்படியெல்லாம் நடந்ததுன்னு சொன்னாக்கூட பெரிய களேபரம் வெடிக்கும். பிறகு நீ ஒன்னும் இனிமேல் பள்ளிக்கூடம் போய் கிழிக்க வேண்டாம். பேசாம தீப்பெட்டி ஆபிசுக்கோ, பட்டாசு ஆபிசுக்கோ, களை எடுக்கவோ போனு அனுப்பிடுவாங்க. இல்லைனா அடுப்படியைப் பாத்துக்கோம்பாங்க. நீ ஒன்னும் படிச்சு கலெக்டர் உத்தியோகம் பாக்கப்போறது நின்னு போயிருதாக்கும். பஸ்ஸூ எந்த ஊருக்குப் போகுதுனு போடு வாசிக்கத் தெரியுமில்ல அது போதும்பாங்க... ஒன்னுமில்லாததுக்கெல்லாம் கிராமத்துல ஊரைக் கூட்டிடுவாங்க. ஏழை சொல் அம்பலம் ஏறாதும்பாங்க. அதுவும் பெண்கள்னா சொல்லவா வேணும். சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைச்சது போல அவரவர் இஷ்டம் போல பேசுவாங்க. என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டாங்க. நம்ம வீட்டுலயும் பிள்ளைக இருக்காங்கனு நினைக்க மாட்டாங்க. ஓரெ தீர்ப்புதான். இதையெல்லாம் தெரிஞ்சிதான் அந்தக் காலத்துக் கிராமத்துப் பிள்ளைகளே வளர்ந்தாங்க.
ஆனா, இன்னக்கிப் பாரு எப்படி நிலைமை தலைகீழா மாறிடுச்சி. மாற்றம் வேணும் மாற்றம் வேணும்ங்கிறது இதுதான்போல. இதைத்தான் தலைமுறை மாற்றம்னு சொல்றாங்க என்று நிதானித்தாள் அம்மா. பள்ளிக்கூடம் படிக்கிற வயசு நல்லது கெட்டதைப் பிரித்தறியத் தெரியாத வயசு. வண்ண வண்ணக் கனவுகள், எண்ணங்கள், யாருமற்ற உலகில் தான் மட்டுமே தேவதையாக உலா வரும் பருவம். பிள்ளைகளைப் பெத்த அம்மாங்களுக்கு மடியில் நெருப்பைக் கட்டிட்டு இருந்தது போல ஓர் அச்ச உணர்வு. பிள்ளைகளைச் சரியாக வளர்த்திருந்தாலும் இந்தச் சமூகத்தைப் பார்த்து ஒருவித பயம் மனசுல.
பெண் பிள்ளைகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என்பது போல நீ இப்படித்தான் வளர வேண்டும். இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று சமூகம்தான் கட்டமைக்கிறது. பெண்பிள்ளை பிறந்தால் என்ன செய்வாய் எனும்போது ”மண்ணில் பட்டால் மாசுபடுமென்று கண்ணில் வைத்துக் காப்பேன்” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
அம்மாவா இருந்தா என்ன, பெத்த பொண்ணா இருந்தா என்ன? அந்தந்த வயசுக்கேத்த உணர்வு, உணர்ச்சி எல்லாருக்கும் ஒன்னுதானே. இளவயதைக் கடந்துதானே எல்லாரும் வந்திருப்பாங்க. ஆனா என்ன இதை வெளிப்படுத்துற காலம்தான் வேறவேறயா இருக்கு. இந்தக் காலத்து பொண்ணுக எதுவாக இருந்தாலும் பட்டுப்பட்டுனு போட்டு உடைச்சிடுறாங்க. எல்லாத்திலயும் ஒரு வேகம், பரபரப்பு. மனசுக்குள்ள ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கின்ற வயசு, காலம். எல்லாத்துலயும் சமத்துவம், சமநீதினு பேசுறாங்க. இருந்தாலும் ஆண், பெண் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. இதெல்லாம் எப்பத்தான் தீருமோ...? எல்லாத்தையும் எல்லா நேரத்துலயும் பேசிவிடமுடியாது. அதுஅதுக்கென்று காலம் கனிந்து வரும் வரைக் காத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதி.