இப்படித்தான் ஒரு அசாதாரண சொல் என்னுடைய நினைவு மண்டலத்திற்குள் நுழைந்து வந்தது. அந்த நேரம் நான் நடுங்கிப் போய்விட்டேன். அந்த நடுக்கம் இப்போதும் என்ன்னை விட்டுப் போகவில்லை. ஆரம்பம் முதல் சொன்னால்தான் உங்களுக்குப் புரியும். குறிப்பிட்டுச் சொல்லும்படியான முக்கியத்துவம் எதுவும் இல்லாத என்னுடைய சாதாரண வாழ்க்கையில் ஒரு பகுதி இதோ உங்கள் முன்னால்.
நான் கிரிதரன் நாயர். வீடும் வாசலும் கோயிலும் ஆம்பல் குளமும் விவசாயத்தை இன்னும் விவாகரத்து செய்யாத நெல் வயல்களும், தென்னையும் கமுகும் மிச்சமாய் நிற்கும் ஒரு கேரளிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். கிராமப்புறத்தான். கொஞ்ச தூரத்தில் இருக்கும் ஸ்கூலிலும் கல்லூரியிலும் சேர்ந்து நல்ல மதிப்பென்ணுடன் தேர்ச்சி பெறவும் முடிந்தது.
வேலைக்கான போட்டித் தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கும் போது, விவசாயத்தில் அப்பாவுக்கு உதவி செய்யவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்காமல் பக்கத்தில் இருந்த ஒரு கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுக்கப் போனேன். அந்தக் காலகட்டத்தில்தான் எதிர்பாராமல் கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷனுடைய ரேங்க் பட்டியலில் என்னுடைய பெயர் வந்தது. எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி அரசு வேலை கிடைத்தது. கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று எந்த ஆசையும் இல்லை. ஆனால் சொந்தக்காரரும், கல்யாண தரகராகவும் இருந்த சிவன் குட்டி நாயர் என்னுடைய சம்மதம் இல்லாமல் எனக்காகப் பெண் பார்க்கத் தொடங்கினார்.
எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் அவர் கொண்டு வந்ததில் கடைசியாக வந்ததைப் பரிசீலித்தே ஆகவேண்டும் என்று அம்மா கட்டாயப்படுத்தினாள். “நீ அவளை ஒரு தடவைப் பாரு. அப்புறம் பிடிக்கலைன்னா வேணாம். சிவன் குட்டி எத்தன நாளா இதுக்காக நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போறாரு”.
அப்பா ஓய்வு பெற்ற கண்டிப்பான ஒரு ஹை ஸ்கூல் ஹெட் மாஸ்டர். இருந்தாலும் அதற்கும் மேல் விவசாயத்தை ஒரு வாழ்க்கை முறையாக செய்து கொண்டு நடந்த நாட்டுப்புற ஆள் என்று பெண் வீட்டுக்காரர்கள் புரிந்துகொண்டார்கள். அப்பாவுக்குப் பரம்பரைச் சொத்தாக கொஞ்சம் நிலமும், தோப்பும் துரவும், விவசாயம் செய்ய வேறு இடங்களும் உண்டு என்பதும், அம்மா ஒரு பத்தாம்பசலி என்பதும், அவர்களுக்கு ஒரே ஒரு பையன் நான் என்பதும் பெண் வீட்டாருக்கு கவர்ச்சிகரமான விஷயங்களாக இருந்தன.
பெண்னுடைய இரண்டு அக்காக்கள் நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். இருவரும் வேலையில் இருந்தார்கள். ஒருவள் நியூசிலாந்தில். மற்றொருவள் கரமனையில். இந்த சம்பந்தத்தில் மட்டும் இல்லை, வேறெந்த கல்யாண ஆலோசனையிலும் விருப்பம் இல்லாத புதிய தலைமுறைக்காரியாக ஐஸ்வரியா லஷ்மி இருந்தாள். செட், நெட், சிவில் சர்வீஸ் என்று ஏதாவது ஒரு தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைத்த பிறகு நல்ல சம்பந்தமாக இருந்தால் மட்டும் கல்யாணம் செய்துகொண்டால் போதும் என்ற பிடிவாதத்தில் இருந்தாள். சுருக்கமாகச் சொன்னால், அவள் மற்றவர்களின் வற்புறுத்தலுக்காகத்தான் பெண் பார்க்கும் சடங்கிற்கு சம்மதித்தாள். முதல்முதலில் பார்த்தபோது அவள் வெட்கத்துடன் காட்சி தரவில்லை. அவளுடைய அம்மாவும் அப்பாவும்தான் எங்கள்
எல்லோருக்கும் உண்பதற்கும் குடிப்பதற்கும் கொண்டுவந்தார்கள். பழகுவதற்கும் பேசுவதற்கும் எங்கள் இருவரையும் தனிமையில் விட்டுவிட்டு எல்லோரும் இடத்தைக் காலி செய்தபோதுதான் நாங்கள் ஒருவரையொருவர் உண்மையாகப் பார்த்துக்கொண்டோம்.
எல்லாம் விதிப்படி நடந்தன. எடுத்த தீர்மானங்கள் என்ன என்பதை இரண்டு பேரும் மறந்துபோனோம். வெள்ளைக்காரன் சொன்னது போல லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் சம்பவித்தது. அடுத்த சுப முகூர்த்தத்தில் நாங்கள் கணவன் மனைவியானோம். முதல் திருமண நிறைவிற்கு சில நாட்கள் இருக்கும்போதே எல்லோரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தி எங்கள் முதல் குழந்தை பிறந்தது. ஐஸ்வரியா லஷ்மி சகல சித்தாந்தங்களையும் மறந்து அர்ப்பணிப்புடைய மனைவியாகவும், பாசம் மிக்க தாயாகவும் மாறினாள்.
குழந்தையின் பெயர் சூட்டு விழாவை சந்தோஷமாகக் கொண்டாடினோம். வாழ்க்கை நிம்மதியாகப் போய்க் கொண்டிருந்த போது எங்களுடைய வாழ்வில் மாற்றங்கள் வரத்தொடங்கின. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கனடாவில் இருந்த அக்காவிடம் போயே தீரவேண்டும் எண்ற நிலமை ஏற்பட்டது. அவள் மூன்றாவது தடவையாக தாயாகப் போகிறாள். ஊருக்கு வரமுடியாதவிதத்தில் கருப்பையில் பிரச்சனைகள்.
ஐஸ்வரியா லஷ்மியுடைய அம்மா பக்கவாதம் வந்து அவள் அப்பாவுடைய ஆதரவிலும் உதவியிலும் வாழவேண்டிய கதி ஏற்பட்டது. இதெல்லாம் போதாதென்று எனக்குப் பணியிட மாற்றமும் எற்பட்டது. இப்படி நான் வேலை பார்த்த இடத்தில் இருந்து கொஞ்சதூரத்தில் ஏறக்குறைய நகரமாக மாறிக்கொண்டிருந்த ஒரு கிராமப்பிரதேசத்துக்கு போய்ச்சேர்ந்தேன். வீடு வாடகைக்கு எடுத்தேன். வெளிநாட்டில் வசித்த ஒரு குடும்பத்தினருக்கு சொந்தமான காலியான முழுக்க முடிக்கப்பட்ட வீட்டிற்கு குடிபெயர்ந்தேன்.
எல்லாம் புதிய சூழல். ஏராளமான வேலைகள். மூடிக்கிடந்த என்னுடைய வீட்டுக்கு அவ்வப்போது போய் சுத்தப்படுத்தி விட்டு வந்தேன். வேலை ஆரம்பித்த போதே வங்கியில் இருந்து கடன் எடுத்து புதுக்கார் வாங்கியதால் பட்ஜெட்டை ஓரளவிற்கு அப்படியும் இப்படியுமாக சமாளித்தேன். புதிய வீடு செட்டில் ஆனது. புதிய சூழல்களுடன் பொருந்தி வாழ்க்கையென்னும் நதி ஒரு வழியாக அமைதியாக ஓட ஆரம்பித்தது.
ஒரு வருடம் என்னுடைய அம்மா அப்பாவுடன் இருந்த போது பழைய தலைமுறை சம்பிரதாயங்களை திருத்தி எழுத தானும் தன் பங்குக்கு எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் என்னுடைய மனைவிக்கு ஏற்பட்டது. ஆனால் பகல் முழுவதும் தனியாக இருந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டு வேலைகளுடன் மூச்சு முட்டியதால் அவளுக்குள் பெண்ணுரிமை சிந்தனைகள் உதயமாகத் தொடங்கின.
நான் செய்துகொடுக்கும் சிறிய சிறிய உதவிகளுக்கு மதிப்பில்லாமல் போனது. வாசல் பெருக்கி கோலம் போடவும், வீட்டைச் சுத்தப்படுத்தவும் வயதான ஒரு நாட்டுப்புற மூதாட்டியை வேலைக்கு வைத்தாள். அவள் சட்டென்று வேலைகளை முடித்து தேநீரையும் குடித்து இடத்தைக் காலி செய்வாள். இப்படி அதிருப்தியின் ஆரம்ப கட்டத்தில் ஐஸ்வரியா லஷ்மிக்கு என்றோ எழுதிய ஒரு தேர்வின்
அடிப்படையில் ஒரு நேர்முகத்துக்கு அழைப்புக் கடிதம் வந்தது.
நேர்முகத் தேர்வுக்குப் போகும் முன்பு நான் அவளிடம் அது பற்றி விசாரித்தேன். “இதென்ன கேள்வி?” என்ற பாணியில் அவள் என்னைப் பார்த்தாள்.
“வேல கிடச்சா குழந்தய?”. நான் கேட்டேன். “அதுக்கு ஆள் பாப்போம். ஒன்னரை வயசாயிடுச்சு இல்லயா? பாட்டில் பால் குடிக்கிறான் இல்லயா?” பிறகு பல வழிகளிலும் வேலைக்காரிக்கான தேடல் ஆரம்பித்தது. திருப்திகரமாக யாரும் கிடைக்கவில்லை. ஐஸ்வரியா லஷ்மி வேலைக்குச் சேர்ந்த ஆரம்ப நாட்களில் லீவு போட்டுவிட்டு நான் குழந்தையைப் பார்த்துக் கொண்டேன்.
இளமைகாலத்தில் கேரளாவில் வேலை கிடைத்த வளர்மதியுடைய எங்கள் வீட்டுக் கிரகப் பிரவேசம் அப்போதுதான் நிகழ்ந்தது. வளர்மதி என்ற பெயருக்குப் பொருந்தாத நிறம். என்றாலும் கருங்கல்லில் செதுக்கி எடுத்த அழகான தேவ சிற்பம் போன்ற வடிவத்துடன் இருந்தாள். பெயருக்கு ஏற்ப அவள் பழக்க வழக்கத்திலும், ஒத்துழைப்பு தருவதிலும் முழுநிலவாக இருந்தாள். என்னுடைய புதிய நண்பர்களில் ஒருவனான தோட்டங்கல் ராஜாமணியின் மூலம்தான் அவள் எங்களுக்குக் கிடைத்தாள்.
தோட்டங்கல் பிரதேஷ் என்ற பெயரில் அவனுக்கும், அவனுடைய சகோதரர்களுக்கும் பலசரக்கு கடை உட்பட நகரத்தில் பல வணிக நிறுவனங்கள் சொந்தமாக இருந்தன. கிராமத்தில் பரம்பரை வீட்டுடன் சேர்ந்தே விவசாய நிலமும், தோப்பும் இருந்தது. அவனுடைய வேலைக்காரிகளில் ஒருத்திதான் வளர்மதி.
எங்களுடைய நிலைமையைப் பார்த்து ராஜாமணி உதவிக்கரம் நீட்டினான். நானும் ஐஸ்வரியா லஷ்மியும் அந்த உதவிக்கரத்தை இறுகப் பற்றிக்கொண்டோம்.
வளர்மதியுடைய இரண்டு குழந்தைகளும் பள்ளிக்கூடத்திற்கு செல்பவர்கள். அவர்களைக் கவனித்து வேண்டியதை செய்து கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்பிய பிறகும் நாங்கள் ஆபீசிற்குப் கிளம்பும் முன்பு வீட்டுக்கு வருவாள். இருட்டும் முன்பு திரும்பிப் போவாள். முத்துகள் போன்ற வெள்ளையான பற்களைக் காட்டி சிரிக்கும் அவளுடைய புன்முறுவலும், பணிவுடன் பழகும் தன்மையும் எங்களுக்கு
வளர்மதியின் மீது நல்ல நம்பிக்கை ஏற்பட அதிக நாள் ஆகவில்லை. குழந்தைகளைப் பெற்று வளர்த்த தாய் என்பதால் குழந்தையைக் கவனித்துக் கொள்ள அவளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. நாம் செய்யவேண்டிய சில முன்னேற்பாடுகள், உணவு விஷயங்கள், உடல் தூய்மை போன்றவற்றைப் பற்றி சொல்லிக் கொடுத்தோம். குழந்தையைப் பார்த்துக் கொள்வதுடன் வீட்டைச் சுத்தமாக
வைத்துக் கொள்ள, சமையல் செய்ய அவள் உதவினாள். மூன்று நான்கு மாதங்கள் கடந்த, ஒரு நாள் இரவு. மகனை கட்டிலில் எங்களுக்கு நடுவில் கிடத்தி ஐஸ்வரியா லஷ்மி தொடையில் தட்டித் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் தூங்குகின்ற குழந்தையைப் பார்த்து ஏதோ யோசித்துவிட்டு அவள் சொன்னாள். “கிரி. இங்க பாருங்க. பாருங்க. குழந்தைகிட்ட ஒரு சோர்வு இருக்கு”. எனக்கும் அவ்வாறே தோன்றியது. குழந்தையிடம் ஒரு வாட்டம். நானும் அதை கவனித்தேன். அவள் எழுந்திருந்து தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை மெல்ல எடுத்து தொட்டிலில் படுக்க வைத்தாள். திரும்பி வந்து என்னுடன் சேர்ந்து
படுத்துக் கொண்டாள்.
நான் அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். “கவலப்படாத. குழந்தைக்கு ஒன்னும் வராது”. ஒரு வாரமானது. குழந்தையின் வாட்டத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆபீசில் இருந்து நாங்கள் வந்ததுக்கு அப்புறம் கொடுக்கும் எதையும் அவன் சாப்பிடுவதில்லை. தாய்ப்பால் குடித்து முடிப்பதற்கு முன்பாகவே தூங்கிப் போனான். ஒரு நாள் ஐஸ்வரியா லஷ்மி வளர்மதியிடம் கேட்பது காதில்
விழுந்தது.
“குழந்தை கொஞ்சநாளா சரியா சாப்பிடறது இல்ல. பகல்ல என்ன செய்யறான்?” வளர்மதியின் முக பாவம் கொஞ்சம் மாறியது. முகம் கடுமையானது.
“எல்லாம் சாப்பிடறானே அக்கா”. அவள் சொன்னாள். அவளுடைய பட்டென்று தோன்றிய முக பாவ மாற்றத்தை ஐஸ்வரியா லஷ்மி திகைப்புடன் நோக்கினாள் என்றாலும் அவள் சொன்னாள்.
“நல்லாக் கவனிச்சுக்கணும். அவங்கிட்ட உற்சாகம் இல்ல”.
வளர்மதியின் முக பாவம் மேலும் கடுமையானது. இப்போது அவளுடைய முகத்தில் எதிர்ப்பின் தீவிரம் இருந்தது. கொஞ்சம் உரத்த குரலில் அவள் சொன்னாள்.
“எனக்கு எதுவும் தெரியல. உங்களுக்கு சும்மாத் தோனுறதா இருக்கும். வளர்மதியின் இந்த சுபாவ மாற்றத்தை ஐஸ்வரியா லஷ்மி இரவு என்னிடம் சொன்னாள்.
அவளுடைய பழகும் விதத்தில் இரண்டு பேருக்கும் முதல் தடவையாக திகைப்பும் சங்கடமும் ஏற்பட்டது.
அடுத்த இரண்டு நாட்கள் குழந்தை தாய்ப்பால் கூடக் குடிக்காமல் தூங்கிப் போனது. அன்று குழந்தையைத் தொட்டிலில் கிடத்திய பிறகு நாங்கள் தூக்கம் வராமல் ஒரு கறுப்பு காபி குடித்து கொஞ்ச நேரம் வரவேற்பறையில் இருந்தோம்.
ஏதோ மனதில் நிம்மதி இல்லை. என்னென்னவோ வீட்டு விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். கடைசியில் ஐஸ்வரியா லஷ்மி கேட்டாள். “நாம குழந்தய ஒரு சைல்டு ஸ்பெஷலிஸ்ட்டு கிட்ட காட்டினா என்ன?”. அது சரி என்று எனக்கும் தோண்ரியது. அடுத்த நாளே நாங்கள் குழந்தையைக் கூட்டிக் கொண்டு போனோம். பரிசோதனைகள் நடந்தன. பிறகு டாக்டர் சொன்னார்.
“பிரச்சனை ஒன்னும் இல்ல. சாப்பாட்டை கவனிச்சாப் போதும் ஒரு டானிக் குடிப்பானா?”. கொஞ்ச நேரம் யோசித்தார். பிறகு கேட்டுவிட்டு அவர் எழுதிக் கொடுத்தார். “குழந்தையோட பகல் நேர செயலுங்க, சாப்பாடு, தூக்கம் இதையெல்லாம் கண்காணிக்கறதுக்கு ஒரு சி சி டி வி வச்சா என்ன? குழந்தயப் பாத்துக்கறவங்க சொல்றததானே நீங்க கேக்கறீங்க? அவுங்க கவனிக்காத விஷயங்க
ஏதாச்சும் இருக்கான்னு நீங்க பாருங்க”.
இன்னமும் நகரமாகாத எங்களுடைய இடத்தில் சி சி டி வி பற்றி யாரும் யோசிக்கவில்லை. டாக்டர் சொன்னதால் சி சி டி வி பொருத்தத் தீர்மானித்தோம்.
“வளர்மதிக்குத் தெரிய வேணாம். அவ மேல நம்பிக்கை இல்லைன்னு அவ நினைச்சா என்ன செய்யறது? குழந்த மேல பாசமா இருக்கற வேலைக்காரி வீட்டை விட்டுப் போயிட்டா என்ன செய்யறது?”. அடுத்த நாள் வீட்டுக்கு விருந்தாளிகள் வருகிறார்கள் என்று சொல்லி வளர்மதிக்கு மூன்று நாள் விடுப்பு கொடுத்து அனுப்பினோம்.
குழந்தை அதிக நேரம் செலவழிக்கும் ஹாலிலும், எங்கள் படுக்கையறையில் தொட்டில் பக்கத்திலும் கேமராக்களைப் பொருத்தினோம்.
ஆரம்ப நாட்களில் பிரச்சனை எதுவும் இல்லை. முன்பை விட பகலில் தூங்குவது அதிகமாவது தெரிந்தது. தூக்கக்கலக்கத்தால் தேவையான உணவையும் சாப்பிடுவதில்லை. விழித்துக் கொண்டிருக்கும் போது சாப்பாடு கொடுக்க வளர்மதி எந்த முயற்சியையும் பெரிதாக செய்யவில்லை. என்றாலும் கோபப்படுத்தவேண்டாம் என்று நினைத்து ஐஸ்வரியா லஷ்மி அடுத்த நாள் வளர்மதியிடம் நேசத்துடன் பேசினாள்.
“குழந்தைக்கு சாப்பிடறதுல நாட்டம் இல்லைன்னு தோனுது. கவனிக்கணும். குழந்தைக்கு சோர்வு இருக்கு. சாப்பாட்டை கட்டாயப்படுத்தி கொடுக்கணும்” சட்டென்று வளர்மதியின் சுபாவம் மாறியது.
முன்பு ஒருபோதும் இல்லாத விதத்தில் அவள் திருப்பிக்கேட்டாள். “என்ன? என் மேல நம்பிக்கை இல்லயா?”. அவளுடைய குரலில் அதற்கு முன் இல்லாத ஒரு முரட்டுத்தனம் தோன்றியது.
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. நாங்க வழக்கமாப் போகற செக் அப்புக்குப் போயிருந்தோம். டாக்ட சொன்னதுதான் இது”. ஐஸ்வரியா லஷ்மி நிதானமாக சொன்னாள். பாம்பு படம் தாழ்த்தியது போல வளர்மதி அடங்கிப்போனாள் என்பதை ஐஸ்வரியா லஷ்மி கவனித்தாள். குழந்தையின் சாப்பாடு விஷயத்தில் வளர்மதி கொஞ்சம் அக்கறை காட்டுவது போலத் தோன்றியது.
ஒன்றிரண்டு நாட்கள் கழித்து நான் சி சி டி வி காட்சிகளைப் பரிசோதிக்க ஆரம்பித்தேன். காலை பத்தரைக்கு குழந்தைக்கு பால் கொடுக்கிறாள். பாதி குடிப்பதற்குள் குழந்தை தூங்க ஆரம்பிக்கிறது. குழந்தையைத் தொட்டிலில் கொண்டு போய் படுக்கவைக்கிறாள். அரை மணிநேரம் கழித்து வளர்மதி வீட்டு வாசல் கதவைத் திறக்கிறாள். ஒரு ஆண் உள்ளே நுழைகிறான். ஒரு நிமிடம் நான்
திகைத்துப் போனேன். அப்புறம் நடுங்கிப்போனேன்.
தோட்டங்கல் ராஜாமணி. வீட்டிற்குள் வந்ததும் ராஜாமணி வளர்மதியை தன்னுடன் சேர்த்துப் பிடிக்கிறான். ஹால் வாசல் கதவை வளர்மதி போட்டி போட்டு தாழ்ப்பாள் போடுகிறாள். இரண்டு பேரும் வீட்டிற்குள் மறைகிறார்கள். நல்லவேளை. அவர்கள் படுக்கையறைக்கு போகவில்லை. அதனால் எதையும் பார்க்க வேண்டி ஏற்படவில்லை. இரண்டு மணி நேரம் கழித்து அவர்கள் ஹாலிற்கு வருகிறார்கள்.
குழந்தை அப்போதும் தூங்கிக்கொண்டிருந்தது.
ராஜாமணியும் வளர்மதியும் வாசலிற்கு வந்து நேருக்கு நேராக நிற்கின்றார்கள். அவனுக்குப் போக மனது வரவில்லை. அவளுக்கும் அவனை விட மனமில்லை.
அவள் இப்போது மூடிய வாசல் கதவின் மீது சாய்ந்து தளர்ந்து போய் நின்று கொண்டிருந்தாள். எவ்வளவு நேரம் அவளுடைய உடல் அழகுகளை அவன் விரல்களால் அளந்து கொண்டிருந்தான் என்று தெரியவில்லை. கடைசியில் அரை மனதுடன் அவர்கள் பிரியும் போது என்னுடைய குழந்தை தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன் விழித்துக்கொண்டு அழாமல் இருக்க பாலில் மருந்து சேர்த்து தூங்க வைக்கிறாள் என்பது தெளிவாயிற்று. எத்தனை நாட்களாக இது நடக்கிறது? மரியாதையை விட்டு பேசிப் பழக்கம் இல்லாத நானும் ஐஸ்வரியா லஷ்மியும் உடனே ஒரு முடிவு காண என்ன செய்வது என்று யோசித்து அன்றைக்கு ராத்திரிப் பொழுதை தூக்கம் இல்லாமல் கழித்தோம். ராஜாமணியுடன் இருக்கும்
கள்ளத்தொடர்பை சொல்லி வெளியே அனுப்பினால் ராஜாமணிக்கு அது தெரியவரும். பகைதான் மிஞ்சும்.
“நான் இனிமே ஆபீசுக்கு போகப்போகறது இல்ல”. கடைசியாக ஐஸ்வரியா லஷ்மி சொன்னாள். அடுத்த நாளே நாங்கள் ஆபீசுக்கு லீவு போட்டோம்.
காலை உணவை முடித்துவிட்டு ஹாலில் டிவியையும் நியூஸ் பேப்பரையும் பார்த்துக் கொண்டிருந்தோம். குழந்தை பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். வளர்மதி வந்து கேட்டால். “சோறும் பொறியலும் செஞ்சுட்டேன். துவையல் அரைக்கட்டுமா?”. “செய்யேன்”. ஐஸ்வரியா லஷ்மி சொன்னாள். பிறகு கேட்டாள்.
“நேத்திக்கு யாராச்சும் வந்தாங்களா? ஒரு பனினொரு மணி போல?” வளர்மதி திடுக்கிட்டு நின்றாள்.
ஐஸ்வரியா லஷ்மி தொடர்ந்தாள். “கிரியோட நண்பர் கூப்பிட்டாரு. கிரி ஆபீசுக்குப் போயிருக்காரான்னு கேட்டாரு. அவரு வேற யாரையோ பாத்ததா சொன்னாரு. கிரிதான்னு நினைச்சாராம். ஆனா கிரிக்கு ஆப்பீசுலேர்ந்து வரமுடியல”.
வளர்மதி லேசாகப் பதறிப் போனாள். என்றாலும் தைரியத்தை வரவழைத்தாள்.
“அக்கா. சாரோட ப்ரெண்ட் வீடு மாறி போயிருப்பாரு. இங்க யாரும் வரலயே”
ஐஸ்வரியா லஷ்மி சொன்னாள். “அவருக்கு வீடு நல்லாத் தெரியும். “என் மேல சந்தேகமா?” வளர்மதிக்குள் ஏதோ ஒன்று மீண்டு வந்தது. என்ன சந்தேகம்? எங்களப் பாக்க யாராச்சும் வந்தாங்களான்னு தெரிஞ்சுக்க தானே கேட்டேன்”. எதிர்பாராத அந்த பதிலைக் கேட்டு வளர்மதியின் நிலை தவறியது. அவளிடம் இருந்து விசித்திரமான சில பேச்சுகள் எழும்பி வந்தன.
வளர்மதியுடைய குரல் கனத்தது. “என்னை சோதிச்சுப் பாக்கறீங்க இல்லயா? நான் யாருன்னு தெரியுமா? நான் கலகமோகினி. என்னை அவமானப்படுத்தறீங்க”
இதைக் கேட்டு ஐஸ்வரியா லஷ்மி குழந்தையை எடுத்துக்கொண்டு ஹாலை விட்டு போனாள். வளர்மதி தனக்குள் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தாள். கை கால் வலிப்பு வந்தவளைப் போல நடுங்கினாள்.
வளர்மதி ஒரு நாடகத்தையே நடத்தினாள். அப்புறம் குழைந்து விழுந்தாள்.
வெகுநேரம் கழித்து அவள் நாங்கள் இருந்த வராந்தாவிற்கு வந்து கலங்கமில்லாமல் கேட்டாள்.
“நான் எப்ப ஹாலில் விழுந்தது அக்கா?”.
“கொஞ்ச நேரமாச்சு. தண்ணி கொடுத்து எழுப்பப் பாத்தேன். ஆனா எந்திரிக்கல. என்ன இப்படி?”. ஐஸ்வரியா லஷ்மி கேட்டாள்.
“எனக்கு சில சமயம் இப்படி வரும்”.
“அப்படீன்னா?”.
“என் மேல அவ வருவா. கலகமோகினி”.
“கலகமோகினியா?”
வளர்மதி எதுவும் சொல்லாமல் வெளியே பார்த்தாள்.
அப்போதுதான் அந்த மாதமே ஆரம்பித்திருந்தது. வளர்மதி வழக்கம் போல சாயங்காலம் போக முயன்ற போது முழுச் சம்பளத்தையும் கையில் கொடுத்து நான் சொன்னேன்.
“எங்களுக்கு வளர்மதி மேல நிறய ப்ரியம் இருக்கு. ஆனா இனிம வளர்மதி இங்க வேலைக்கு வரவேணாம். இப்படி நடுவுல வந்தா எப்படி சரிப்படும்? நினைவு தப்பிப் போச்சுன்னா குழந்தய எப்படிப் பாத்துக்கமுடியும்?”. எதையும் சொல்லாமல் கொடுத்த காசை வாங்கிக்கொண்டு அவள் வெளியில் போனாள்.
“கலகமோகினி”
இப்படித்தான் இந்த பெயரை நான் முதல்முறையாக கேட்டேன்.
“என்ன ஒரு வார்த்தை இது? அதுக்கு என்ன அர்த்தம்? கலகமோகினி உண்மயாவே வந்தாளா? இல்ல. தான் செஞ்சத மறைக்க அதுலேர்ந்து தப்பிக்க இத ஒரு வழியா அவ பயன்படுத்திகிட்டா. மனுஷங்கதான் எத்தன விசித்திரமானவங்க!”.
நினைத்துப் பார்க்கும் போதே எனக்கு வியப்பாகவும் நடுக்கமாகவும் இருந்தது.