ஸ்கூல் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்த தன்னுடைய அறையில் பின்பக்கமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு ஹெட்மாஸ்டர் ஜன்னல் வழியாக வெளியில் பார்த்துக் கொண்டு நின்றார். இயல்பாகவே சீரியசாக இருக்கும் அவருடைய முகம் அந்தச் சமயத்தில் தீவிரமான துக்கத்தால் இன்னும் சீரியசாக இருந்தது. அன்று விடுமுறை நாள்தான் என்றாலும் ஸ்கூல் கேட்டுக்கு முன்னால் மாணவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருந்தது.
பள்ளிக்கூடத்தை பொழுதுபோக்கும் இடமாக நினைக்கும் மாணவர்கள் கூட முன்கூட்டியே வந்திருந்தார்கள். ஊரைப் பொதுவாகப் பாதிக்கும் எல்லா நல்ல கெட்ட சம்பவங்களுக்கும் அந்த ஹெட்மாஸ்டர் அங்கே வந்த பிறகு அந்த ஸ்கூல் அதனுடைய பங்கை நிறைவேற்றுவதில் ஒரு சமயத்திலும் பின்னோக்கிப் போனதில்லை.
ஆனால் இதுவரை நடந்தது போல இல்லை இப்போது நடக்கும் சம்பவம். இந்த நஷ்டத்தில் அந்த ஊர் மட்டும் இல்லை உலகமே துயரத்தால் நடுங்குகிறது. பல யுகங்களுக்கு ஒரு தடவை மட்டுமே உலகில் அவதரிக்கும் விலைமதிக்கமுடியாத பேரொளி எதிர்பாராமல் அநியாயமாக அணைக்கப்பட்டிருக்கிறது. அதிகார மையங்களில் பதட்டத்தின் அலையொலிகள். மூலைமுடுக்குகளில் எல்லாம் மக்களின் இதயங்களில் அழுது தீர்க்க... சொல்லி ஆறுதல் அடைய முடியாத வேதனை.
தண்டனைக்குப் பயந்து நாட்டில் இருப்பவர்கள் கொண்டாடுவதற்குப் பதிலாக நாட்டுக்கு பாதுகாப்பு என்று நம்பப்பட்ட பாதுகாவலரும் போனதால் உண்டான துக்கத்தை நல்லவர்களும் கெட்டவர்களும் சேர்ந்து அனுசரிக்கிறார்கள். பிறவியால் மக்களுடைய ராஜாவானதில்லை, செயலால் இதயம் கவர்ந்த சக்கரவர்த்தியாய் மாறியவர் அந்தக் கர்ம யோகி. சுயநலமில்லை பொதுநலமே அந்த வாழ்க்கையின் இறுதிவரை இருந்த இலட்சியம்.
ஹெட் மாஸ்டர் தோளில் கிடந்த முரட்டு ஷாலை எடுத்து கண்களைத் துடைத்தார். சத்தம் போடாமல் ஒரு சிறுமி மாடிப்படிகளில் ஏறி அவருக்கு அருகில் வந்தாள். அப்பாவுடைய அந்த நிலையைப் பார்த்து கொஞ்சம் பயந்து அவள் சிறிது பதுங்கி நின்று மெதுவான குரலில் பேசினாள். “அப்பா”. அவர் திரும்பிப்பார்க்கவில்லை. என்ன வேணும் என்ற அர்த்தத்தில் “ம்” என்று மட்டும் முனகினார்.
அவள் சொன்னாள். “ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் வந்துட்டாங்க. மீட்டிங் ஆரம்பிக்க நேரமாச்சா?” அவர் பதில் பேசவில்லை. அவள் இன்னும் கொஞ்சம் நெருங்கிப் போய் அப்பாவைத் தொட்டுப் பேசினாள். “இதோ பாருங்கப்பா”. அவளுடைய திருப்திக்காக அவர் திரும்பிப் பார்த்தார். ஒரு சின்ன கறுப்புத் துண்டுத் துணியை ப்ளவுசில் குத்தி வைத்திருந்ததைக் காட்டி அவள் சொன்னாள். “இது எங்கேர்ந்து எங்களுக்குக் கிடைச்சுதுன்னு தெரியுமா? லலிதாம்மாவோட சாரியில இருந்து பின் பக்கம் முழங்காலுக்குக் கீழ தொங்கிக்கிட்டு இருக்கற பேஷன் வேணாம்னு வச்சுட்டோம்.
போதாக்குறைக்கு இது புதுப்புடவை. இருந்தாலும் நாங்க கேட்டவுடனேயே அவ கொடுக்க ஒத்துகிட்டா. ஒருத்தி கூட இந்த மாதிரி கறுப்பு கலர்ல டிரஸ் போட்டுகிட்டு வரல. மீட்டிங் ஆரம்பிக்க நேரமாயிடுச்சா?”.
”. “இல்ல.
ஆரம்பிக்கறப்ப ப்யூன் வந்து சொல்லுவாரு. நீ போ”. மந்தமான குரலில் சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தபோது மாடியின் கடைசிப் படியில் இருந்த ஒரு மாணவியின் மீது அவர் பார்வை பதிந்தது.
கண்களில் இருந்து வழிந்துகொண்டே இருந்த கண்ணீரை தன்னுடைய மினுமினுப்பான புடவையில் விழுவதற்கு முன்பே அவளுடைய பலவீனமான கைகள் துடைத்துக் கொண்டேயிருந்தன. அப்படியும் புடவையின் முன்பக்கம் கொஞ்சம் நனைந்து போயிருந்தது. ஹெட்மாஸ்டர் அவளைப் பார்த்தபடியே இரண்டு நிமிடம் ஆடாமல் அசையாமல் அப்படியே நிண்று கொண்டிருந்தார்.
.
அவளுடைய நிற்காத அழுகைக்கும் அந்த முகத்தில் தென்பட்ட உணர்ச்சிக்கும் காரனம் என்ன என்று அவருக்குப் புரிந்தது. ஸ்கூல் விட்டு வீட்டுக்குத் திரும்பிப் போகும்போது வீட்டில் நிச்சயமாகக் கிடைக்கும் அடி உதையையும் வசவுகளையும் நினைத்துப் பயந்து அருவி போலக் கொட்டும் கண்ணீர்தான் அது. தோழிகளுக்காகவோ இல்லை செத்துப் போன மகானுக்காகவோ தியாகம் செய்துவிட்டோம் என்ற பெருமிதம் ஒருபக்கம் அவள் முகத்தில் நிழலாடியதை அவர் கவனித்தார்.
அவளுடைய விதவை அம்மாவுடைய கஷ்டங்களைப் பற்றி ஒரு தடவை கட்டணத்தில் சலுகை கேட்டு வந்தபோது, அந்தப் பெண்மணி சொன்னதையெல்லாம் அவர் நினைத்துப் பார்த்தார். மகளுக்காக நல்ல டிரஸ் வாங்கிக் கொடுக்க அந்த அம்மா எவ்வளவு பாடுபட்டிருப்பாள்! எவ்வளவு கஷ்டங்களை சகித்துக் கொண்டிருப்பாள்? அதை இப்படி எதற்கும் உதவாத வகையில் கிழிக்கப்பட்டதை அந்தத் தாய்க்குத் தெரியும் போது எவ்வளவு துக்கம் ஏற்படும்?
செத்துப் போன மகானுக்கு காட்டற மரியாதையைக் காட்டிலும் இது அவர் உபதேசித்ததைப் புறக்கணித்ததாக எடுத்துக் கொள்ளலாமே? அப்பாவுடைய முகபாவம்தான் இருப்பதால் சந்தோஷமில்லாமல் போகிறது என்று மகளுக்குத் தோன்றியது. அவள் வேகவேகமாக தோழியையும் கூட்டிக்கொண்டு கீழே இறங்கிப் போனாள்.
ஹெட் மாஸ்டர் மேசைக்குப் பக்கத்தில் போய் நெற்றியில் கைகளைச் சேர்த்து முட்டிகளை மேசையில் ஊன்றி கண்களை மூடிக் குனிந்து கொண்டிருந்தார். எதைப் பற்றியும் யோசிக்கச் செயல்பட அப்போது அவருக்குத் திரானி இல்லை. தலைக்கு ஏதோ பலமான ஒரு அடி விழுந்தது போல மூளையில் ஒரு வெறுமை அனுபவப்பட்டது.
அவர் தளர்ந்து போயிருந்தார். அந்த அளவு அந்த நிகழ்ச்சி எதிர்பாராதது. துக்கமானது. சத்தத்தோடு ஒரு ஆள் மாடிப்படி ஏறி அந்த அறைக்குள் நுழைந்தார். ஹெட்மாஸ்டர் தலையைத் தூக்கிப் பார்க்கவில்லை. ஆக, தன் ஒரு நாற்காலியை இழுத்து அவருக்கு முன்னால் போட்டு அதில் உட்கார்ந்து துக்கத்தை வெளிப்படுத்துகிற குரலில் சொன்னார்.
“இப்படி யாரும் எதிர்பார்க்காம இது நடந்துடுச்சு. இனி நாம என்ன செய்யறது? என்ன நடக்கப் போகுது? நினைச்சுக் கூடப் பாக்கமுடியல”. ஸ்கூல் பெயரில் பிரிண்டிங் பிரஸ் நடத்துபவர். விஷயம் என்னவென்று ஹெட்மாஸ்டருக்குப் புரிந்தது. பிரஸ் தவிர, ஒரு ஹோட்டல்... ஜவுளிக்கடை... புத்தகக்கடை... பொழுதுபோக்கு சஞ்சிகை எல்லாம் நடத்துகிறார்.
“சார் இப்படிப் பேசாம உக்காந்திருந்தா என்ன அர்த்தம்? அமைதி ஊர்வலத்துக்கு ஸ்டூடன்ட்ஸை அனுப்ப வேணாமா? இங்க நடக்கற மீட்டிங்குல கலந்துக்க நா அவசரஅவசரமா வந்தேன். எல்லாரயும் கட்டாயமா கதர் டிரஸ்தான் போட்டுக்கச் சொன்ன்னதும் அதனாலதான்”. அதிருப்தியும் அருவருப்பும் கலந்த நோட்டத்துடன் ஹெட்மாஸ்டர் அவரைப் பார்த்தார்.
அதைப் பார்த்து தன்னைத்தானே புகழ்த்திக் கொள்ளும் பாணியில் அவர் சொன்னார். “இந்த மாதிரி சமயங்களுக்காக நான் ஒன்னு ரெண்டு வேலைங்கள எப்பவும் ஒதுக்கி வச்சுடுவேன். முன்னெச்சரிக்கை இல்லாம கடைசி நேரத்துல ஓடறவங்க பல பேர நான் பாத்திருக்கேன். ஆனா அந்த மாதிரி ஒன்னு எனக்கு இதுவரை நடந்தது இல்ல”.
ஹெட்மாஸ்டர் எதுவும் பேசவில்லை. சிறிது நேர அமைதிக்குப் பிறகு ஆகதன் சொன்னார். “நல்லாப் பேசற ஒன்னு ரெண்டு பேர கூட்டிட்டு வர நான் முயற்சி செஞ்சேன். அவுங்க எல்லாரும் துக்கத்தால துவண்டு போயிருப்பாங்கன்னு நான் நினைச்சேன். அப்படி இல்ல. போய்ப் பாத்தப்ப அவுங்க எல்லாரும் ரொம்ப பிசியா இருந்தாங்க. ஒரு ஆள் கட்டுரை தயார் செய்யறாரு. இன்னொரு ஆள் கவிதை. மூனாவது ஆள் ரேடியோ சொற்பொழிவு.
அந்த அளவுக்கு முக்கியமான சேதி இல்லயா இது? இருந்தும் கிடந்தும் துக்கிக்க யாருக்கும் நேரமில்ல. நடந்தும் பேசியும் துக்கிக்கற பிசியில இருக்காங்க எல்லாரும்”. அர்த்தம் இல்லாத பேச்சுகளை எதிர்ப்பது போல அவர் குரல் இருந்தது. ஹெட்மாஸ்டர் தன்னைத்தானே குற்றப்படுத்திக் கொள்ளும் தொணியில் சொன்னார். “துக்கத்தால செய்யற செயலுங்க எதுவுமே இருக்கக்கூடாது. அப்படி செய்யறது ஒரு விதத்துல கோழைத்தனம். பலவீனம்.
எல்லாருக்கும் இப்படியெல்லாம் செய்யறதுனால மன அமைதி கிடைக்கும்னு சொல்ல முடியாது. இருந்தாலும் நாம முயற்சி செய்யாம இருக்கக் கூடாது”. “ஆமாம்”. ஆகதனுடைய குரல் மாறியது. “இன்னிக்கு நானும் பேசணும்னு நினைக்கறேன். என்னிக்காச்சும் ஒரு நாள் அதச் செய்ய தைரியம் வர வேணாமா? துக்கம்ங்கறதுஆல பேசறத யாரும் விமரிசனம் செய்யமாட்டாங்கங்கற ஒரு அசட்டு நம்பிக்கைதான்.
இன்னொரு விஷயமும் இருக்கு. வெளியிலேர்ந்து பேசறவங்களக் கூட்டிகிட்டு வந்தா ஸ்கூலுக்கும் அது பெருமை. பேப்பர்ல ரிப்போர்ட் வரும். அதுக்கு இன்னிக்கு நான் ஏற்பாடு செய்யறேன். விளம்பரத்தில் ஒரு பெருமையும் இல்லை என்பது போல ஹெட்மாஸ்டர் பேசாமல் இருந்தார். ஆகதன் சொன்னார். “விளம்பரக்காரங்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். புது விளம்பரங்களை வாங்கலாம். நியூஸ் பேப்பர்களோட விலை இன்னிலேந்து எவ்வளவு கூடியிருக்கு தெரியுமா?”.
ஆகதன் தொடர்ந்தார். “இன்னும் கொஞ்ச நாளைக்கு இதே விஷயம்தான். அதுலயும் ஸ்பெஷல் எடிஷன் போடறப்ப அவுங்களுக்குக் கிடைக்கற லாபம்! “செத்துப் போனவங்ககிட்ட இருக்கற மதிப்பாலதான் இதெல்லாம் நடக்குதான்னும் நாம கவனிக்கணும்”. ஹெட் மாஸ்டர் கேட்டார். “காசு பணத்துக்குதான் இதெல்லாம்”. ஆகதன் சட்டென்று குரலை மாற்றிக்கொண்டார். “அவரப் பத்தி ஒரு வாழ்க்கை வரலாறு எழுதணும்னு எனக்கும் ஒரு ஆசை இருக்கு. உடனே வெளியிடணும்.
வேற யாருக்கும் இடம் கொடுக்காம அத செஞ்சு முடிக்கணும். தேவையான போட்டோகளையும் மத்த விவரங்களையும் அனுப்பித் தரச்சொல்லி என்னோட தம்பிக்கு தந்தி அடிச்சிருக்கேன். இதெல்லாம் நல்லதுதானே?”. “ஒரு செயலோட பலன் நல்லதுன்னா அதுக்குக் காரணமா இருக்கற யோசனையோட பரிசுத்தம் குறைஞ்சிருந்தாலும் பரவாயில்ல. ஹெட்மாஸ்டர் சாதகமான விதத்தில் தலையை ஆட்டினார்.
ஆகதன் பிறகும் தொடர்ந்தார். “இனிம வீட்டுக்கு ரோடுக்கும் ஊருக்கும் எல்லாம் பேர மாத்தற ஆர்பாட்டமா இருக்கும். சிலைகளால ஊரெல்லாம் நிரம்பி வழியும்”. “ஆமாம்”. ஹெட் மாஸ்டர் மெல்லிய குரலில் சொன்னார். “விக்ரக ஆராதனையே வேணாம்னு சொன்ன புத்தரோட காலத்துக்கு அப்புறம் அவரோட சிலைகளால நாட்டயே நிரப்பின ஆளுங்கதானே இவங்க எல்லாரும்?. சமூகத்தோட முன்னேத்தத்துக்காகதான் மகானுங்க பாடுபடறாங்க. இந்த மாதிரி எல்லாம் செய்யறதுனால சமுதாயத்தோட ஆவேசம்தான் அடங்கும். இல்லாட்டா எல்லாரும் அவதாரப் புருஷனுங்களா மாறனும்.
அப்போது யாரோ மாடிப்படியில் ஓடி வந்து ஏறும் சத்தம் கேட்டது. கொஞ்சநேரம் கழித்து சத்தம் மறைந்தது. நடுநடுவே உரத்த குரலில் வாதப் பிரதிவாதங்கள் கேட்க ஆரம்பித்தது. ஆகதன் எழுந்து மாடிப்படியின் நுனியில் சென்று நின்றார். விஷயம் என்ன என்று அவருக்குப் புரிந்தது. அவர்களுடன் போகச்சொல்லி சைகை காட்டிவிட்டு நாற்காலியில் வந்து உட்கார்ந்து கொண்டார்.
ஹெட்மாஸ்டர் கேட்டார். “யாரது?”. “நம்ம ஸ்டூடண்ட்ஸ்தான். அதுல ஒரு பையன் ஒரு தப்பு பண்ணிட்டான். அதை உங்ககிட்ட சொல்லி அவனுக்குத் தண்டனை வாங்கித்தர மத்தவங்க முயற்சி செய்யறாங்க. அவுங்களுக்கு நடுவுல சண்டையும் சச்சரவும் அதிகமாயிடுச்சு”. “வயசும் அறிவும் அதிகமா இருக்கற மனுஷங்க ஒருத்தர ஒருத்தர் கொல்றப்ப இவுங்க ஒருத்தரோட ஒருத்தரு அடிச்சுக்கவாச்சும் வேணாமா?”. “ப்ரென்ஷிப் பதிகமானதுதான் காரணம்”. அவர்களுக்காக மன்னிப்பு கோரும் விதத்தில் ஆகதன் சொன்னார்.
“விஷயம் இதுதான். நான் ஸ்கூல் கேட்டுக்கு வந்தப்ப ஒரு சாதுவான கிழவன் உக்காந்து பசங்களத் திட்டிகிட்டு இருந்தான். அந்த ஆளுக்குப் பக்கத்துல துணி இல்லாம கம்பியும் காலும் மட்டும் இருக்கற ஒரு குடை இருந்துச்சு”. ஹெட்மாஸ்டருக்கு எதுவும் புரியவில்லை. அவருடைய மூளையின் மந்தத்தனம் அப்போது சரியாகவில்லை. “கிழவன் என்னைப் பாத்தவுடனேயே எழுந்திருந்து புகார் சொல்ல ஆரம்பிச்சுட்டான்”. ஆகதன் விவரித்தார்.
“அவரோட நல்ல ஒரு குடையை பசங்க நாசமாக்கிட்டாங்கன்னுதான் புகார்”. “இங்க இருக்கற பசங்க வழிபோக்கருங்கள தொந்தரவு செய்யற குணம் உள்ளவஞ்க இல்ல”. “இப்ப ஏன் செஞ்சாங்கன்னா அவுங்களுக்கு கொஞ்சம் கறுப்புத்துணி வேணுமாயிருந்துச்சு. அதெல்லாம் கடையிலேர்ந்து வாங்கிக்கலாம்னு தெரியாம கிழவனோட குடையைக் கிழிச்சு எடுத்துகிட்டாங்க”. பட்டென்று ஹெட் மாஸ்டருக்கு கருப்புப் புடவை அணிந்துகொண்டு வந்த சிறுமியுடைய ஞாபகம் வந்தது.
அவர் வேகமாக எழுந்து கேட்டார். “கிழவங் எங்க?”. “நான் அவனை சமாதானப்படுத்தி அனுப்பிட்டேன். “ஒன்னும் கொடுக்கலயா?”. “இல்ல. பசங்க எல்லாரும் அவுங்கவுங்க கையில இருந்த சில்லறை எல்லாத்தயும் பொறுக்கியெடுத்துக் கொடுத்தாங்க. திட்டறத நிறுத்திட்டு சங்கடம் தீந்த மாதிரிதான் அந்த ஆளு போனான்”. ஹெட்மாஸ்டர் அப்போது உணர்ச்சிகள் எதுவும் இல்லாமல் நின்றார்.
இந்த அநியாயம் செய்த மாணவர்களைத் தண்டிக்க வேண்டுமா என்பதுதான் அப்போது அவருக்கு முன் எழுந்த பெரிய கேள்வி. கடைசியில் வேண்டாம் என்று முடிவு செய்தார். ஆமாம். அவர்கள் செய்த தவறுக்கு அவர்களேப் பரிகாரம் செய்திருக்கிறார்கள். துக்கத்தால் பைத்தியம் பிடித்தவர்கள் போல ஆகிவிட்டார்கள். தன்னுடைய மாணவர்களில் மோசமானவன் கூட இப்படி ஒரு அநியாயம் செய்யமாட்டான் என்று அவர் முழுமையாக நம்பினார்.
மறுபடியும் ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்று கேட் பக்கம் பார்த்தார். அங்கே முன்பை விட ஆள் கூட்டம் அதிகமாக இருந்தது அவரை ஆச்சரியப்படுத்தவில்லை. அவர்களுக்கு நடுவில் பட்டிக்காடு போலத் தோற்றமளித்த ஒரு பெண் நிற்பது போல அவருக்குத் தோன்றியது. மாணவர்கள் மறுபடியும் ஏதோ குழப்பத்தை உண்டாக்குகிறார்கள் என்ற பீதியுடன் அவர் அவசரமாக மேசை மேல் இருந்த மணியை அடித்து ப்யூனை அழைத்தார்.
“அங்க நிக்கற பசங்கள கேட்டுக்குள்ள வரச்சொல்லுங்க. அங்க என்ன நடக்குதுன்னு பாத்துட்டு வாங்க”. பத்து நிமிடத்துக்கு அப்புறம் ப்யூன் வந்து சொன்னார். “பசங்க எல்லாரும் உள்ள வந்துட்டாங்க”. ஜன்னல் வழியாக அதைப் பார்த்த ஹெட்மாஸ்டர் திரும்பவும் கேட்டார். “அந்தப் பொம்பளை யாரு?”. “அரிசி விக்கறவ. பசங்க விக்கக்கூடாதுன்னு தடுத்தாங்க. இன்னிக்கும் வந்து விக்கக்கூடாதுன்னு பசங்க சொன்னாங்க”.
“இன்னிக்கும் வேலைக்கு வந்ததுதானே?”. ஆகதன் கேட்டார்.
“ஹர்த்தால் அனுஷ்டிக்காம...”
“அது இல்ல. வெறுங்கையோட நிக்கறததான் நான் பாத்தேன்”. ஹெட் மாஸ்டர் சொன்னார்.
“பசங்க அரிசிப்பெட்டிய எடுத்து ஓடையில எறிஞ்சுட்டாங்க”.
ப்யூன் சொன்னார். “கொள்ளைக்காரி. அநியாயமா விலை விக்கறவ. கள்ளச்சந்தையில வாங்கிட்டு வந்து இங்க இந்த வேலையை செஞ்சுகிட்டு இருக்கறா.
அத்தனையும் ஈரமான அரிசி”. ஆகதன் கேட்டார்.
“அந்தப் பொம்பள சண்டை போடாமத் திரும்பப் போயிட்டாளா?”. “ஓ. இல்ல இல்ல. கொஞ்சநேரம் அழுதுகிட்டு சண்டையும் போட்டா. பெரிய பொண்ணு இன்னிக்கு சந்தைக்கும் போகலை. அரிசி பறி போனதுனால இன்னிக்கு அவளும் பட்டினி கிடக்கணும்னு சொல்லி அழுதா. எல்லாம் பொய்யா இருக்கும்”. ப்யூன் சொன்னார்.
ஹெட் மாஸ்டர் பலவீனமான குரலில் கேட்டார். “அவ சொல்றது ஒரு வேளை சத்தியமா இருந்தா?. “மகானுக்காக அம்மாவும் பொண்ணும் ஒரு நாள் பட்டினி கிடக்கட்டும்னு பசங்க சொன்னாங்க”.
ப்யூன் சொன்னார். “நான் போகலைன்னா அந்தப் பொம்பள அழுது ஆர்பாட்டம் செஞ்சு விஷயத்தப் பெரிசாக்கியிருப்பா”.
ஹெட் மாஸ்டர் நெஞ்சில் கைகளைக் கட்டினார். தலையை குனிந்துகொண்டு நான்கைந்து நிமிடம் நிசப்தமாக நின்றார்.
“செத்துப்போனது யாரு? அடித்து ஒடுக்கப்பட்டவங்களோடயும் பலவீனமானவங்களோடயும் சொந்தம். இப்படியா அவருக்காக துக்கம் கொண்டாடறது?”. அவர் தலையை நிமிர்த்தி ப்யூனிடம் சொன்னார்.
“பசங்ககிட்ட வீட்டுக்குப் போகச்சொல்லுங்க. அவுங்க துக்கம் கொண்டாடறது அதிகமாயிடுச்சு. இனிம மீட்டிங்குக்கு அவசியம் இல்ல. மத்தவங்களோட நல்லதக் கொண்டாட... அதுக்கு ஏத்த மாதிரி நல்ல புத்தி உண்டாக.. அவுங்க வீட்டுக்குப் போய் பிரார்த்தனை செய்யட்டும்”