“அவளோட சுபாவத்துல சில மாத்தங்க ஏற்பட்டிருக்கு. நீங்க கவனிச்சீங்களா...?”
சில நாட்களாகவே பார்வதி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
“உனக்கு அப்படி தோனுதாயிருக்கும்”. நான் அவளை சமாதானப்படுத்தினேன்.
“இப்பவே பாருங்க. அவ தனக்குன்னு ஒரு ரூம்ல போய் இருக்கா. அதுக்கு அவ ஒரு காரணத்தயும் கண்டுபிடிச்சிருக்கா”
“அது எப்படியிருந்தாலும் நல்லதுதானே? இதப் பத்தி நீ எப்பவுமே சொல்லிகிட்டுதான் இருக்க”
மகள் இதுவரைக்கும் எங்களுடந்தான் படுத்துக்கொண்டிருந்தாள்.
“இது அப்படியில்ல. பயமாயிருக்கு. சர்வ சதாகாலமும் போன்லதான் இருக்கா. எதுக்கெடுத்தாலும் கோபம்”
“நீ மைக்ராச்கோப்ப தூக்கிகிட்டு அலையாத. சுதந்திரமா இருக்கட்டும். விடு. இந்த வயசுல எல்லாப் பொம்பளப் பிள்ளைங்களும் இப்படித்தான்ன்”
“நீங்க அவகிட்ட கொஞ்சம் பேசணும். அப்பதான் என்னோட மனசுக்கு நிம்மதியா இருக்கும்”
நான் ஒப்புக்கொண்டேன். பார்வதிக்கு சமாதானமானது போலத் தோன்றியது.
அவள் ஒரு பையனோடு பைக்கில் ஊர் சுற்றுவது கவனத்திற்கு வந்தது. ஆண் நண்பர்கள் இருப்பதும் அவர்களோடு பல இடங்களுக்குச் செல்வதும் இதெல்லாம் இந்தக் காலத்தில் பெரிய விஷயமே இல்லை. நான் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. முதல்நாள் ராமகிருஷ்ணன் சார் கடைக்கு வருவதைப் பார்த்தேன். ஊரில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் அவர் ஏ.எஸ்.ஐ. நான் இந்த ஊருக்கு வந்து கடை ஆரம்பித்தது முதல் இருக்கும் நட்பு.
அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். தூரத்தில் இருந்த போதே, நான் அவர் வருவதைப் பார்த்துவிட்டேன். நெருங்கி வந்தபோது இதயம் படக் படக்கென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. பொண்ணு மேல ஒரு கண்ணு வேணும். இப்ப இருக்கற ஃப்ரெண்ட்ஷிப் அத்தன நல்லது இல்ல. அந்தப் பையன் சில கிரிமினல் கேஸ்ல மாட்டிகிட்ட பையன்”. அவர் சொன்னதைப் பாதிதான் கேட்டேன்.
அதற்குள் கண்ணில் இருட்டு படரத் தொடங்கியது.
“அவனோட கொஞ்சம் பேசணுமே சார்” அவரிடம் வேண்டினேன்.
அவர் ஒத்துக்கொண்டார். ஒப்புக்கொண்டிருக்காவிட்டால் அவருடைய காலைப் பிடிக்கவும் நான் தயாராக இருந்தேன். இது போன்றவற்றில் ஈடுபட்ட அனுபவம் எனக்கு இல்லை. இன்னொரு விஷயம் எனக்கு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள அண்ணன், தம்பிகள் என்று யாரும் இல்லை.
யாரையும் என்னுடைய வாழ்க்கையில் நெருங்கவிடவும் எனக்கு விருப்பமில்லை. இதற்குச் சில காரணங்கள் உண்டு. ராமகிருஷ்ணன் சாரும் நானும் சேர்ந்து அவனுடைய வீட்டைத் தேடிப்போனோம். அவருக்கு அந்த இடம் முன்பே நன்றாகப் பழக்கப்பட்டது போலத் தோன்றியது. வழியில் அவனைப் பார்த்தோம். போன் செய்தபோது அவன் பைக்கைத் திருப்பிக் கொண்டு வந்தான். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்குப் போனோம்.
“உன்னைத் தேடி வீட்டுக்குப் போயிருந்தோம்”
“என்ன விஷயம் சார்?” பணிவோடு கேட்பது போல அவன் பாசாங்கு செய்தான்.
நான் பைக்கில் இருந்து இறங்கினேன். எனக்குப் பின்னால் அவரும் வந்தார்.
“நீ ஒரு பொண்ணு பின்னால சுத்தறயேடா” அவரை நோக்கி ஒரு பார்வை பார்த்துவிட்டு பிறகு என்னைத் திரும்பிப் பார்த்தான்.
அவன் என்னைக் கடுமையாகப் பார்த்தான். பார்ப்பதற்கு நல்ல அழகான தோற்றம்.
“ஏண்டா. மானம் மரியாதயா வாழமாட்டியா? அந்தப் பொண்ணு இவரோட பொண்ணு. இங்க இவருக்கு நல்லாப் பழக்கமான ஆள் யாருமில்ல. அதனால என்னைக் கூட்டிகிட்டு வந்தாரு. இனிம நீங்க பேசுங்க”.
ராமகிருஷ்ணன் சார் கொஞ்ச தூரம் தள்ளிப்போய் நின்றார்.
சங்கடம் நிறைந்த தனிமையும் பரிதவிப்பும் என்னை பொதிந்து மூடின. இது போல ஒரு சூழ்நிலையை சந்திக்கக்கூடிய மன உறுதி எதுவும் எனக்கு இல்லை. வீட்டில் அம்மாவுக்கும் பெண்ணுக்கும் இடையில் கடுமையான சண்டை நடக்கும் போது கூட எனக்கு மூச்சு முட்டும். இறுக்கமான அந்தச் சூழ்நிலையை மாற்ற நினைத்த அவன் என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான்.
தாடி உரோமங்கள் வளர்ந்திருந்த அவனுடைய முகத்தைப் பார்க்க அழகாகத்தான் இருந்தது.
“என்னப் பத்தி ராமகிருஷ்ணன் சார் சொல்லியிருப்பாரே? இப்ப கொஞ்ச காலமா கேசும் வழக்கும் ஒன்னும் இல்ல. பழசுல சிலது பாக்கி இருக்கு. இனிம நல்லா வாழப்போறேன்”
“என்னோட பொண்ணு உலகம் தெரியாத குழந்த மாதிரி. எல்லாரயும் நம்பிடுவா. சரி எது தப்பு எதுன்னு ஒன்னும் தெரியாது”
“நானும் பாவம் சார். சரி தப்பு தெரியாத வயசுல சில காரியங்கள செஞ்சுட்டேன். நான் உங்க மககிட்ட எதயும் மறச்சு வைக்கல. வேணும்னா போய்க் கேட்டுப்பாருங்க”
எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்க அவன் தயாராக இல்லை என்பது புரிந்தது.
“நான் வாழறமட்டும் நீ நினைக்கற மாதிரி எதுவும் நடக்காது. அத புரிஞ்சுக்க” நான் குரலை கடுமையாக்கிக் கொண்டேன்.
“அத அவ தீர்மானிக்கட்டும்”
“அவளப் பத்தின விஷயங்கள் உனக்கு என்ன தெரியும்?”
“நீங்க கிடந்து துள்ளாதீங்க” அவன் குரலை உயர்த்தினான்.
நோட்டத்தில் கத்தியை வீசியபடி என்னைப் பார்த்தான்.
“அவளப் பத்தி எனக்குத் தெரியாம உனக்கா தெரியும்?” நான் அவனுடைய சட்டையைப் பிடித்து இறுக்கினேன்.
கையால் தட்டிவிட்டு என்னை விலக்கினான். “நீ ஒரு முடிவச் சொல்லிட்டுப் போனாப் போதும்” பெருவிரல் நுனி வரை எனக்குக் கோபம் பீறிட்டு வந்தது.
“எனக்கு வேற வேல இருக்கு. நீ போடா” அவன் என்னை தள்ளிவிட்டான். சர்வ சக்தியுடன் நான் அவனை பின்பக்கமாகப் பிடித்து இழுத்தேன். நிலை தடுமாறி நிலத்தில் விழுந்த அவன் மீது ஏறி நின்றேன்.
பக்கத்தில் இருந்த பாறைத்துண்டு ஒன்று என்னுடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது. சத்தம் கேட்டு ராமகிருஷ்ணன் சார் ஓடிவந்தார். என்னைப் பிடித்து விலக்கினார். இல்லாவிட்டால் நான் அவனைக் கொன்றிருப்பேன். சார் பயந்து போனார். அவர் என்னைப் பிடித்து பைக்கின் பின்னால் உட்கார வைத்து வேகமாக வண்டியை ஓட்டினார்.
“அவன்கிட்ட சண்ட போட்டது சரியில்ல. அவனோட வயசு அப்படி” சார் சொன்னார்.
வீட்டுக்கு வந்தபோது வாழ்க்கையைப் போலவே அங்கும் எல்லாம் குழம்பிப் போயிருந்தது. வீட்டுச் சாமான்கள் முன்பக்க அறையில் தாறுமாறாகக் கிடந்தன. பார்வதி வீட்டுக்கு முன்னால் எனக்காகக் காத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“அவகிட்ட எதுவும் பேசவேணாம்” பார்வதி என்னை அறைக்குள் இழுத்துக் கொண்டு போனாள்.
பின்னாலேயே மகள் வந்தாள். “திறங்க. இல்லாட்டா நான் கதவ உடச்சுடுவேன்”. அவள் ஆக்ரோஷமாகக் கத்தினாள்.
வேறு யாருடைய குரல் போலவோ எனக்கு அது தோன்றியது.
வேறு வழியில்லாமல் கதவைத் திறந்தேன். அவளுடைய சுண்டுவிரல் இரும்பு ஆணி போல எனக்கு நேராக நீண்டுவந்தது. என்னுடைய மகள் வேறொருவளாக மாறியிருப்பதை நான் அதிர்ச்சியோடு பார்த்தேன்.
“அவன அடிக்க உனக்கு யாரு உரிமை கொடுத்தது?” அவள் என்னிடம் ஆவேசமாகக் கத்தினாள்.
“மகளே. நீ என்ன நினைச்சுகிட்டு இப்படியெல்லாம் பேசற? உனக்கு அவனப் பத்தித் தெரியாததுனாலதான் இப்படிப் பேசற. அவன் ஒன்னாம் தரக் கிரிமினல்”
“எனக்கு என்னோட வேலயப் பாக்க நல்லாவே தெரியும். அதுக்கு உரிய பொறுப்ப நான் யாருகிட்டயும் கொடுக்கல. நீ செஞ்சத நான் மறக்கவேமாட்டேன். அத சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன். வாகனத்தின் ஹாரன் ஒலி வாசலில் கேட்டது.
அவள் பையை எடுத்துக் கொண்டு போவதை நாங்கள் எதுவும் செய்யமுடியாத கையாலாகாத நிலையில் பார்த்துக் கொண்டு நின்றோம். அடுத்தநாள் மத்தியானம்தான் எழுந்திருந்தோம். அதுவும் அழைப்பு மணி ஒலித்த சத்தம் கேட்டுதான்.. காலையில் டீ கூடப் போடவில்லை. பார்வதி அழுது அழுது தளர்ந்துபோய் கட்டிலின் ஒரு மூலையில் சுருண்டு கிடந்தாள்.
அவள் முகத்தைத் துடைத்துக்கொண்டு எனக்குப் பின்னால் வந்தாள்.
ராமகிருஷ்ணன் சார்தான். அவர் முற்றத்தில்தான் நின்றுகொண்டிருந்தார். அவருடைய முகத்தில் பரபரப்பும் பதட்டமும் நிழலாடியது. மகள் விவேகமில்லாமல் எதையாவது செய்து கொண்டு விட்டாளோ என்று பயந்தேன். அவளைப் போய்ப் பார்க்கவேண்டும் என்றும், எப்படியாவது அவளை மறுபடி வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வரவேண்டும் என்றும் தீர்மானித்திருந்தேன். அனுபவம் இல்லாத வயசு இல்லையா? குழந்தைதானே? நான் மன்னிக்காமல் அவளை வேறு யார் மன்னிப்பார்கள்?
“பிரச்சனை இன்னும் மோசமாகிவிட்டது” என்று அவர் சொன்னார்.
மகள் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருக்கிறாள். “எனக்கு எதிராவா? பரவாயில்ல”
“விஷயம் நீங்க நினைக்கற மாதிரி இல்ல. பாக்சோ கேஸ்! சின்ன வயசா இருக்கறப்ப அவள நீங்க பாலியல் வன்கொடுமை செஞ்சீங்கன்னு!”
பக்கத்தில் இருந்த மரத்தை நான் இறுகப் பற்றிக்கொண்டேன்.
புகார நான் படிச்சுப் பாத்தேன். தப்பிக்கறது கஷ்டம். அதோடு அதுல ஒரு பாயிண்ட்...” அவர் அந்த இடத்தில் நிறுத்தினார்.
குரலைத் தாழ்த்தினார். “நீங்க அவளோட அப்பா இல்லயாம். நீங்க சட்டரீதியா இல்லாம திருட்டுத்தனமா அம்மா கூட இருக்கீங்கன்னு... இது எல்லாம் அம்மாக்குத் தெரிஞ்சேதான் நடக்குதுன்னு...” நான் தரையில் உட்கார்ந்தேன். இல்லாவிட்டால் நான் கீழே விழுந்திருப்பேன்.
“நான் எஸ் ஐ கிட்டப் பேசினேன். கைது செய்ய வேண்டி வரும். அவளோடக் கையக் காலப் பிடிச்சு கேஸ்லேர்ந்து வெளிய வரப் பாருங்க”.
அப்போது பல வருடங்களுக்கு முன்னால் ஒரு ரயில் வண்டி என்னுடைய மனதில் பெருமூச்சு விட்டபடி ஓடத்தொடங்கியது.
“நண்பகல் நேரம் அது. அவன் அந்த ரயிலில் இருந்தான். எதிரில் இருந்த சிறுமி சட்டென்று அவனோடு நட்பு பாராட்ட ஆரம்பித்தாள். நர்சரியில் நடந்ததை எல்லாம் சொன்னாள். வீட்டில் இருந்து சக்கிப் பூனையை எடுக்க முடியாமல் கிளம்பி வந்ததால் ஏற்பட்ட வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டாள். பேச்சின் முடிவில் அவனுடைய மடியில் கிடந்து தூங்கியும் போனாள்.
அவளுடைய அம்மா எதிரில் உட்கார்ந்திருந்தாள். மன இறுக்கத்தால் அவதிப்படுவது போல இருந்தது. மெலிந்த உடம்பு. கவனிக்கக்கூடியதாக இருந்தது அகலமான கண்கள் மட்டுமே. அவர்கள் எதுவும் சாப்பிட்டதாகத் தோன்றவில்லை. அவன் கேட்டபோது வேண்டாம் என்று தலையை ஆட்டினாள். ரயிலுக்குள் சாயங்காலச்சூரியன் நுழைந்துவந்தது. சிறுமி தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டதுபோல அவள் சிறுமியைத் தட்டி எழுப்பினாள். அடுத்த ஸ்டேஷனில் இறங்கத் தயாராவது போல இருந்தது அது.
கிளம்பும்போது சிறுமி அவனுடைய கையில் அன்போடு முத்தமிட்டாள். யாருடைய முகத்திலும் முத்தம் கொடுக்கக்கூடாது என்று அம்மா சொல்லிக் கொடுத்திருந்தாள். ஆனால் அம்மா பார்க்காத நேரமாகப் பார்த்து, சிறுமி அவனுடைய முகத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள். அந்தப் பெண்மணி எழுந்திருந்து போனது அவனுக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவது போலத் தோன்றியது.
ரயில் ஒரு நதியைக் குறுக்காகக் கடக்க ஆரம்பித்திருந்தது. ஸ்டேஷன் இன்னும் வரவில்லை. அவன் பின்னாலேயே போனான். அவனைப் பார்த்ததும் அவள் பதட்டப்பட்டாள். அவன் அங்கேயே நின்றான்.
“நீங்க எதுக்காக இங்க நிக்கறீங்க?” கோபத்தோடு கேட்டாள்.
“விலகிப் போய் நில்லுங்க”. கட்டளையிட்டாள்.
அதுவரை பார்க்காத வேறொருவளாக அவள் மாறிப்போயிருந்தாள்.
அவள் குழந்தையைக் கையில் எடுத்து நதியில் குதிக்கப் போகிறாள் என்று மனது சொன்னது. அவளைக் கட்டாயப்படுத்தி இருக்கையில் கொண்டு போய் உட்கார வைத்தான். பலப்பிரயோகத்திற்கு இடையில் அவளுடைய கை நகங்கள் கீறி உடல் முழுவதும் காயம்.
அந்த அவன் நான்! எனக்கு முன்னால் இருப்பது அவள் பார்வதி!”
“ஒரு ஆயிரம் ரயில் ஏறி இறங்கின உடம்பு மாதிரி நான் இப்ப இருக்கேன். நான் அவளக் கொல்லுவேன்” பார்வதி அழுகையும் ஆற்றாமையுமாக சொன்னாள்.
“அவ எல்லாத்தயும் மறந்து போயிட்டாளே? அன்னிக்கு நீங்க எங்களச் சாக விட்டிருக்கக் கூடாதா? அப்படிச் செஞ்சிருந்தா உங்களுக்கு இந்தக் கதி வந்திருக்குமா...?”
நான் அவளுடைய தோள் மீது கை வைத்தேன்.
“போகட்டும் விடு. கவலப்படாம இரு” பிரச்சனைகளை சமாதானத்தோடு முடிக்க ராமகிருஷ்ணன் சார் ஆன மட்டும் முயற்சி செய்தார். ஆனால் எதுவும் பலன் தரவில்லை.
ஜெயிலில் இருந்து வெளியில் வந்த பிறகு நான் அவளுடைய இருப்பிடட்தைத் தேடிக் கொண்டு போனேன். என்னுடைய பகை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. ஜெயிலில் இருந்த ஒவ்வொரு நாளும் கூர்ப்பு போகாமல் நான் அதைத் தீட்டி வைத்திருந்தேன். அவளுடைய நடமாட்டங்களை உன்னிப்பாகக் கவனித்தேன். மத்தியானம் கம்ப்யூட்டர் க்ளாஸ். மூன்று மணியோடு அது முடிகிறது. விரிவான திட்டம் தீட்டினேன். எந்த ஒரு இடத்திலும் ஒரு சின்ன பிசகு கூட ஏற்படக்கூடாது. மூன்று மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில்தான் கம்ப்யூட்டர் சென்டர். மத்தியான நேரத்தில் அதிகம் பேர் வருவதில்லை. சென்டரில் தோழிகள் என்று அவளுக்கு யாரும் இல்லை. தனியாகத்தான் பஸ் ஸ்டாப்புக்கு வருகிறாள். எப்போதும் மனித நடமாட்டம் இருந்து கொண்டேயிருக்கும் இடம். அதை நான் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
கோழையைப் போல பின்னால் இருந்து குத்திக் கொல்ல எனக்கு விருப்பம் இல்லை. நான் அவளுக்கு எதிரில் சென்றேன். என்னைப் பார்த்ததும் முன் பின் தெரியாதவள் போல முன்னால் அவள் நடந்தாள். அன்போடு நான் பக்கத்தில் போனேன். அன்பை முகத்தில் வரவழைப்பதுதான் கஷ்டமான காரியம். இடுப்பில் இருந்து கத்தியை எடுத்தேன். கழுத்தில் அதை ஆழமாக இறக்க வேண்டும். உயிர் போய்விட்டது என்று உறுதியாகத் தெரியும் வரை அவள் பக்கத்திலேயேதான் இருக்க வேண்டும். காத்துக் கொண்டிருந்தேன்.
சுற்றிலும் நிழல் தரும் மரங்கள். ஆனால் நான் வெய்யிலில்தான் நின்றேன். மத்தியான வெய்யில் பகையோடு சேர்ந்து தீப்பிழம்பாக எரிந்தது. கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். நேரமாகிவிட்டது. நான் தயாரானேன். பகை கண்ணில் கத்தி வீசியது. பெரிய ஆக்ரோஷமான ஒரு குரல் வாயில் இருந்து வெளியில் கிளம்பி வராமல் இருக்க படாத பாடுபட்டேன். கத்தியைக் கையில் எடுத்தேன். அருகில் வந்துவிட்டாள். என்னைப் பார்த்துவிட்டாள். நல்லதுதான்.
அப்புறம்தான் கொஞ்சம் கூட எதிர்பாராமல் அது சம்பவித்தது. இதோ... என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள். “ஹோ! என்னுடைய மகள் என்னைப் பார்த்து சிரிக்கிறாள்! ஒட்டு மொத்தமாக என் உடம்பும் மனது மரத்துப் போக, அது என்னை வளையம்போட்டு இறுக்கியது. கையில் இருந்த கத்தி “ச்சிஒல்!” என்ற சத்தத்டோடு கீழே தரையில் விழுந்தது. அப்போது அவளுடைய சிரிப்பை ஏற்று தாடி உரோமங்கள் உடைய ஒரு இளைஞன் பக்கத்தில் இருந்து வந்து கொண்டிருந்தான். பின்னாலேயே நின்று கொண்டிருந்த அவனை அந்த ஆள் பார்க்கவேயில்லை!