தூக்கம் இல்லாத ஒரு ராத்திரியும் கூட வாழ்க்கையில் இருந்து உதிர்ந்து விழுந்தது.
“இன்னும் ஒரு ராத்திரி கூட கடந்தால் நானும் அறுபது வயதான இளம் பெண்களின் பட்டியலில் சேர்க்கப்படுவேன்” தனுஜா எழுந்திருந்து மொபைல் போனை ஆன் செய்தாள்.
“ரெண்டு வாரத்துக்குள்ள வேலையில ஜாயின் செய்யலைன்னா இத்தன நாளா காத்துகிட்டிருந்த வாய்ப்பு கை நழுவிப் போயிடும். அதனாலதான் வரல. தப்பா நினைக்காத. அடுத்த பிறந்த நாள நாம ஒன்னாச் சேந்து கொண்டாடலாம்” மன்னிப்பு கேட்கும் தோரணையில் வந்த மகனுடைய செய்தி.
“மகனே. உனக்கும் உன்னோட குடும்பத்துக்கும் நீங்க ஆசைப்படறத காட்டிலும் உயர உயர முன்னேற என்னோட வாழ்த்துகள். அம்மாவோட அன்பு கலந்த நல்லாசி” பேரன் ஆகர்ஷின் உதட்டில் இருந்து பறந்து வந்த பிறந்தநாள் முத்தத்துக்குப் பதில் அன்பும் பாசமும் கலந்த ஒரு முத்தத்தைப் பறக்கவிட்டு தனுஜா வீடியோ அழைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
“மகனுக்கும்அவனோட மனைவிக்கும் வளைகுடாவுல வாழ்க்கை அலுக்க ஆரம்பிச்சிருக்கு. குடும்பத்தோட அமெரிக்காவுக்குப் போய் குடியேறுகிற அவசரத்துல அவுங்க இருக்காங்க. டாக்டருக்கும் நர்சுக்கும் கல்ஃப்ப விட நல்ல சம்பளமும் வொர்க்கிங்க் கண்டிஷனும் அமெரிக்காவுல கிடைக்கும். மகளோட குடும்பம் அமெரிக்காவுக்குப் போய் அங்க நிரந்தரமா குடியேறி வருஷக்கணக்காச்சு. அங்க ஒரு முன்னனி ஆஸ்பத்திரியில அவளுக்கும் அவளோட புருஷனுக்கும் நல்ல வேல கிடைச்ச சந்தோஷத்தில அவுங்க இருக்காங்க”
முகநூலில் தெரிந்த பக்கங்களில் வெறுமனே கண்களை ஓடவிட்ட போது ஒரு வீடியோ காட்சி தனுஜாவோட கவனத்தில் பட்டது. அனாதைகள் இல்லத்தில் வயதானவர்களின் முகங்களின் வழியாக அவள் கண்களை ஓடவிட்டாள். சிரிப்பையும் அழுகையையும் மறந்து போன முகங்கள். அந்த முகங்களில் முதுமையின் கையாலாகாத்தனமும் அனாதையான தன் மரத்துப்போன உணர்ச்சிகளற்ற எண்ணங்களுமே மேலோங்கியிருந்தன.
நெஞ்சில் குத்துவது போல அமைந்த இரண்டு கேள்விகளுடன்தான் அந்தக் காணொளி முடிந்தது. “நரை பாதித்த நாங்கள் யாருக்கும் வேண்டாதவர்களா? நீங்கள் இந்த நிலையை அடைந்தால் என்ன செய்வீர்கள்?” உள்ளுக்குள்பட்டு எதிரொலித்த அந்தக் கேள்விகள் தனுஜாவுடைய காதுகளில் மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டேயிருந்தன. அவள் வீடியோவின் கடைசியில் கொடுக்கப்பட்டிருந்த மொபைல் நம்பரில் அழைத்தாள்.
நட்புடன் கூடிய ஒர் ஆணின் குரல் அன்பின் மழையாகக் காதில் கேட்டது.
“ஸ்நேகா முதியோர் இல்லம். யார் பேசறது?”
“வணக்கம். ஃபாதர். என்னோட பேரு தனுஜா. நாளைக்கு என்னோடப் பிறந்தநாள். கொஞ்ச நேரம் அங்க இருக்கற பெரியவங்களோட செலவழிக்க ஆசப்படறேன்”
“ வாங்க. எங்களுக்கு சந்தோஷம்தான்”
“நாளைக்கு பகல் சாப்பாடு எல்லோருக்கும் நான் தரேன்”
“கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்து ஆசீர்வதிக்கட்டும்”
அவளுக்கு உற்சாகம் ஏற்பட்டது.
“அம்மா” கேட்டரிங் சர்வீஸ் மேனேஜரைக் கூப்பிட்டாள்.
“பிந்து. நாளைக்கு இருபத்தி அஞ்சு பேருக்கு சாப்பிடற மாதிரி பகல் சாப்பாடு வேணும்”
“செஞ்சுடலாமே அக்கா. என்ன விசேஷம்?”
“விசேஷம்னு ஒன்னுமில்ல. ஸ்நேகா முதியோர் இல்லத்துல இருக்கற மூத்தவங்களோட கொஞ்ச நேரத்த செலவழிக்கணும்னு ஆசைப்படறேன்”
“சரியா பன்னிரண்டு மணிக்கு சாப்பாடு அங்க வந்து சேந்துடும் அக்கா”
“ஏதாச்சும் ஒரு பாயசமும் இருக்கட்டும்”
“வாழை இலையோட எல்லாத்தயும் கச்சிதமாக் கொடுத்துடறேன் அக்கா. அப்படி செய்யறப்ப விருந்து சூப்பரா ஆயிடும்”
“பிந்து. நீ என்னோட பிறந்த நாள மறக்கல இல்லயா?”
“மார்கழி மாசத்து கார்த்திகைய எப்படி மறக்கறது அக்கா? அம்மா இருந்தப்ப நானும் உங்ககூடச் சேந்து ஆர்பாட்டமா எல்லாத்தயும் கொண்டாடினோம் இல்லயா?”
“அப்படின்னா சரி. நீயும் கூட அங்க வா”
“முடியாது அக்கா. இங்க நிக்கக்கூட முடியாத அளவுக்கு வேலை எக்கச்சக்கமா இருக்கு”
“சரி பிந்து. சரி. சொன்ன மாதிரியே எல்லாத்தயும் செஞ்சுடு. காசு எவ்வளவுன்னு வாட்ஸ் ஆப்புல போட்டுடு. கூகுள் பே செய்யறேன்”
“எல்லாருக்கும் எதுக்கும் நேரமில்ல. எனக்கு மட்டும் எந்த ஒரு பிசியும் இல்லயா?” தனக்குத்தானேக் கேட்டுக்கொண்டாள். மனது பதில் சொன்னது. “தனியா இருந்தாலும் எப்பவும் பிசியா இருக்கணும். எங்கூட பேசி அலுத்துப் போயிடுச்சுன்னா இயற்கையோட பேசணும். பனியோடயும் மழையோடயும் வெய்யிலோடயும் எல்லாத்தோடயும் பேசணும்” அவள் உற்சாகம் பீறிடத் தோட்டத்திற்குள் நுழைந்தாள்.
பூக்களுக்கு முத்தம் கொடுத்தாள். செடிகளுக்கு நீரூற்றினாள். உரம் போட்டாள். அன்போடு தழுவி அவற்றின் தலைவருடி அவற்றிடம் சொன்னாள். “நிறய பூத்து அன்போட நறுமணத்த சுத்திலும் எல்லா இடத்துலயும் பரப்பணும்” அவள் சந்தோஷத்தோடு செடிகளின் இலைகளைப் பார்த்தாள். அவை அசைந்து ஆடி சிரிப்பதைப் பார்த்த போது தாவரங்களுக்கும் உயிருண்டு என்று சொன்ன ஜகதீஷ் சந்திரபோசை ஞாபகப்படுத்திக் கொண்டாள்.
“அன்பே அகிலம் முழுவதற்குமான மொழி” என்ற கவி ஒருவரின் வசனத்தைப் பிரார்த்தனை மந்திரமாக அவள் மனது உச்சரித்தது. அழுத்திக் கொண்டிருந்த சிந்தனைகளை மனதில் இருந்து இறக்கிவிட்ட போது சுகமான தூக்கம் ஆரத்தழுவியது.
காலையில் எழுந்து பர்த் டே பேபி போல குளித்து புது ஆடையணிந்து சமையலறைக்குப் போனாள். பிரிட்ஜில் குளிர்ச்சியோடு இருந்த தோசை மாவை ஒரு சிறிய கோப்பை நிறைய ஊற்றி எடுத்து ஜில்லிப்பு மாறுவதற்காக மேடையின் மீது வைத்தாள். பெரிய வெங்காயம் ஒன்றை எடுத்து வெட்டி, துண்டாக்கி தேவையான அளவுக்கு உப்பையும் ஒரு புழுங்கிய முட்டையையும் சேர்த்துக் கலந்து தோசையை நெய்யில் வார்த்தாள். அதோடு பாலுடன் தண்ணீரைச் சேர்த்து ஒரு தேநீரைப் போட்டுச் சாப்பிட உட்கார்ந்த போது காலையுணவு தயாரிக்கும் வேலை சுகமாக முடிந்தது.
இன்று அவள் பயங்கர பிசி. நகரில் புகழ்பெற்ற பேக்கரிக்குப் போனாள். கேக், லட்டு, சாக்லேட்டுகள் வாங்கினாள். சரியாகப் பதினொரு மணிக்கு முதியோர் இல்லத்தை அடைந்தாள். செகரட்டரி பீட்டர் ஃபாதரும் கேர் டேக்கர் ஜோசியும் அவளை அன்போடு வரவேற்றார்கள். படுக்கைகளில் விரக்தியோடும் சோம்பேறித்தனத்தோடும் இருந்த வயதானவர்கள் ஹாலுக்கு வந்தார்கள். பிறந்தநாள் கொண்டாட வந்திருப்பவளை வியப்போடு பார்த்தார்கள்.
அப்புறம் எல்லோரும் அவளைச் சுற்றி நின்று பீட்டர் ஃபாதரோடு சேர்ந்து அவளுடைய ஆயுள் ஆரோக்கியத்துக்காகப் பிராத்தனை செய்தார்கள். “ஹேப்பி பர்த்டே டு யூ” என்ற வாழ்த்துப் பாடல் சுற்றிலும் ஒலிக்க அவள் கேக்கை வெட்டினாள். சிரிக்க மறந்து போன உதடுகளில் அவள் ஜில்லென்று இருந்த இனிக்கும் க்ரீமைத் தடவினாள்.
இரண்டாம் குழந்தைப் பருவத்தின் கலங்கமற்ற மனதோடு இனிப்பைச் சாப்பிட்டு, சிரித்துக் கொண்டே அவர்கள் தனுஜாவுடைய அழகான முகத்தை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அறுபதிலும் நாற்பதுடைய சுறுசுறுப்பும் அழகும் அவளுக்கு இருந்தது. ஒவ்வொருவருக்கு அருகில் போய் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
இப்போது அந்த இதயங்கள் எதை நினைத்துக் கொண்டிருக்கும்? யோசித்தாள்.
“வேலை செய்ய முடியாத நாங்கள் யாருக்கும் உபயோகம் இல்லாதவர்கள். சின்ன வயதில் சீராட்டி பாராட்டி வளர்த்த குழந்தைகள் எங்களைக் கைவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள். பிச்சையெடுத்தும் பொறுக்கியும் கடன் வாங்கியும் படிக்க வைத்து பெரிய ஆளாக்கி விட்ட போது, அவர்கள் அதிகச் சம்பளம் கிடைக்கும் வேலையையும் சொகுசான வாழ்க்கையையும் சந்தோஷத்தையும் தேடி அயல்நாடுகளுக்குப் போய்க் குடியேறுகிறார்கள்.
கடவுளின் தேசம் இப்போது வயோதிகர்களுடைய நாடாக மாறிவிட்டது. இணையும் ஆரோக்கியமும் இழந்த வயதானவர்கள் சொந்த வீட்டைக் கைவிட்டுவிட்டு அனாதை இல்லங்களில் அடைக்கலம் தேடுகிறார்கள். அவர்களுடைய வீடுகள் காற்றும் வெளிச்சமும் புகாமல் அடைந்து கிடக்கின்றன. நாட்டில் நடக்கும் மாற்றங்களை நினைத்து அவள் பெருமூச்சு விட்டாள்.
வயதாகிக் கொண்டிருக்கும் தானும் இது போல ஒரு நாள் சொந்த வீட்டை விட்டுவிட்டு ஏதாவது ஒரு அனாதௌ இல்லத்தில்.. கண்களில் நீர் தளும்பி நின்றது. ஈரம் நனைந்த கண்களோடு அவள் ஒவ்வொருவரையும் கட்டியணைத்துக் கொண்டாள். நெற்றியிலும் கன்னத்திலும் முத்தம் கொடுத்தாள். அன்புக்காக ஏங்கித் தவிக்கும் குழந்தையைப் போல அவர்கள் அவளுடைய கர வளையத்தில் சிறைபட்டுக் கிடந்தார்கள். இதயத்தின் பாஷையில் அன்பை வெளிப்படுத்திய போது, அந்த முதியோர் இல்லத்தின் சுவர்களுக்குள் சிரிப்பும் கண்ணீரும் மழையாகப் பொழிந்தன.
ஆனால், ஒரு ஆள் மட்டும் இதிலெல்லாம் கலந்து கொள்ளாமல் தனியாக விலகி நிற்பதைக் கவனித்தாள். “யாருக்கும் வேண்டாதவர்களுக்கு முத்தம் கொடுக்க இவ யாரு?” என்ற தோரணையில் அந்த வயதான பெண் தனுஜாவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா ஏன் இப்படிப் பாக்கறீங்க?” தனுஜா வாய் நிறையச் சிரிப்போடு அவளுக்கு அருகில் போனாள்.
“காக்கா மாதிரி கறுப்பா இருக்கற எனக்கு முத்தம் கொடுக்க வேணாம்” பிடிவாதமும் விரக்தியும் கலந்த பாவத்தில் தலையை ஆட்டிக்கொண்டு அவள் பெஞ்சின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்தாள்.
எதிர்பாராத அந்த நடத்தையைப் பார்த்த பிறகும், சிரிப்பு மங்காமல் தனுஜா கேட்டாள். “அம்மா உங்க பேரு என்ன?”
“லிசாம்மா”
“எந்த ஊரு?”
“நெய்யாற்றங்கரா”
மற்றவர்கள் போல சுமூகமாகப் பழகும் குணம் லிசாம்மாவுக்கு இல்லை என்றாலும் “எனக்கும் வேணும் அன்போட ஒரு முத்தம்” என்ற ஒரு பெரிய ஆசை லிசாம்மாவுடைய விரக்தியில் ஒளிந்து கொண்டிருப்பதாகத் தனுஜாவுக்குத் தோன்றியது.
அவள் அந்தப் பிடிவாதக்காரியைக் கட்டிப்பிடித்து ஒவ்வொரு கன்னத்திலும் முத்தம் கொடுத்தாள். அன்பையும் சந்தோஷத்தையும் வெளியில் காட்டாத லிசாம்மா சிரித்தாள். பலதையும் சொல்லாமல் சொல்லும் சிரிப்பாக அது இருந்தது. லிசாம்மாவைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் உளவியல் தெரிந்திருக்க வேண்டும்.
தனுஜா தனக்குள் சொல்லிக் கொண்டாள். கறுப்பாக இருந்த ஒரே காரணத்தால் அவமானங்களையும் அவப்பெயரையும் ஏற்று வாங்கி மரத்துப் போயிருக்கலாம் அந்த வயதானவளுடைய மனது.
“அம்மா காக்கா மாதிரி கறுப்புன்னு யாரு சொன்னாங்க?”
“யாருக்குதான் தெரியாது?”
“மடக்கிப் பேசறதுல சாமர்த்தியசாலியா இருக்கீங்களே?” லிசாம்மாவுடைய தோளைத் தட்டிப் பாராட்டும் வகையில் தனுஜா சொன்னாள்.
“காக்காவோட கறுப்புக்கு தூய்மையோட அழகு” தனுஜாவுக்கு அந்த இல்லத்தில் இருக்கும் மனிதர்களைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவள் பீட்டர் ஃபாதரோட ஆபீசுக்குப் போனாள்.
“இங்க இருக்கறவங்க எல்லாரும் ஏராளமான காசு பணம் இருக்கறவங்கதான். ஆகற காலத்துல நாம யாரையெல்லாம் எல்லையில்லா அன்பைக் காட்டி பாசத்த மழை மாதிரி பொழியறோமோ அவுங்கதான் ஒன்னும் இல்லாத காலத்துல நம்பளை வேதனைப்படுத்துவாங்க. சொந்த பந்தம் இல்லாத ஒருத்தரோட கொஞ்ச நேரத்து பாசத்தால அவுங்க வேதனைய எல்லாம் அப்படியே மாத்திட முடியாது”
பீட்டர் ஃபாதர் பெரிய ஒரு உண்மையை தனுஜாவுக்குப் புரிய வைத்தார்.
“இவுங்களோட வேதனை எல்லாத்தயும் என்னால மாத்திட முடியாதுன்னு எனக்கும் தெரியும் ஃபாதர். நான் இங்க வந்தது என்னோட வேதனைங்கள மறந்து கொஞ்ச நேரம் இவங்களோட இருந்து சந்தோஷப்படத்தான்”
அவள் பாட்டு பாடி நாட்டியமாடி எல்லாரையும் சந்தோஷப்படுத்த முயற்சி செய்தாள். லிசாம்மாவைத் தவிர, மற்ற எல்லோரும் அவளுடன் ஆடியும் பாடியும் சந்தோஷப்பட்டார்கள். மத்தியானம் ஆனது. சாப்பாடு வந்தது. ஐட்டங்கள் எல்லாவற்றையும் தனுஜாவும் ஜோசியும் சேர்ந்து பரிமாறினார்கள். விருந்து முடிந்தது.
அவர்களுடன் சேர்ந்து மொபைல் கேமராவில் படங்கள் எடுத்தாள். தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஒரு போதும் மறக்கமுடியாத ஒரு அனுபவமாக மாற்றினாள். “திரும்பவும் வரணும் மகளே” அன்போடு அவர்கள் எல்லோரும் விடை கொடுத்தார்கள். உற்றாரும் உறவினர்களும் கை விட்ட அந்த வயதான மனிதர்களின் அன்பை மனது நிறைய நிறைத்து தனிமை குடிகொண்டிருந்த தன் இருப்பிடத்தை நோக்கி தனூஜா பயணம் தொடங்கினாள்.
சிறிதுநேரம் கழிந்த போது பீட்டர் ஃபாதர் தனுஜாவை அழைத்தார். “மேடம். லிசாம்மாவுக்கு பெரிசா ஒரு ஆசை. பிடிவாதம். ரெண்டு நாளைக்கு உங்களோட சேந்து இருக்கணும்னு ஆசை. நான் அவங்ககிட்ட என்ன சொல்றது?”
“உங்களுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லைன்னா எனக்கு மகிழ்ச்சிதான். என்னோட வீடு லிசாம்மாவுக்கு மட்டும் இல்ல. அங்க இருக்கற எல்லாருக்கும் எப்பவும் திறந்தே இருக்கும். அப்பப்ப வந்தும் போயும் நாம பாசத்தயும் நேசத்தயும் பகிர்ந்துக்கலாம்”
“சந்தோஷம். நாளைக்கு காலையில ஜோசி, லிசாம்மாவ அங்க கூட்டிகிட்டு வந்து விட்டுட்டுப் போவாங்க. ரெண்டு நாள் கழிச்சு கூட்டிகிட்டுப் போவாங்க” பீட்டர் ஃபாதர் சொன்னார்.
அடுத்த நாள் காலை. காலிங் பெல்லின் சத்தம் கேட்டு வாசலைத் திறந்த போது தனூஜா லிசாம்மாவுடைய புன்னகை தவழும் முகத்தைப் பார்த்தாள்.