பக்கவாதத்தால் சங்கரன் மாஸ்டருடைய ஒரு பக்கம் செயல்படாமல் போய்விட்டது. தாமதம் இல்லாமல் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போனதால் மரணத்தின் பிடியில் இருந்து அவர் உயிர் பிழைத்தார். முப்பத்தைந்து வருடம் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்த பிறகு சமூகச் செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தார். பஞ்சாயத்து பிரசிடெண்ட்டாக ஆனார். இறந்த பிறகும் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் என்ற பெயரைப் பெறத் தன்னைத் தகுதியுடையவராக்கிக் கொண்டார்.
கதர் ஆடை, வளைந்து போன பிடியுடன் இருக்கும் பழைய குடை. இவை மட்டுமே சொத்து வகையறாக்களாக பெற்று கடந்த காலத்தின் அடையாளங்களாக கிராமத்தின் செம்மண் பாதைகள் வழியாக நடந்தவர் அவர். ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகு ஒரு மாதம் பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டார். அது முடிந்த பின் குஞ்சு ராமன் வைத்தியருடைய மருந்துகளைத் தொடர்ந்தார். வீட்டுக்குள்ளேயும் முற்றத்திலும் கை பிடித்து யாராவது கூட்டிக் கொண்டு வந்தால் நடக்க முடியும் என்ற நிலையை அடைந்தார்.
ஆறு மாதத்தில் கைத்தடியின் உதவியுடன் வெளியில் இறங்கி நடக்கக் கூடிய அளவுக்குக் கொண்டு வரலாம் என்று குஞ்சு ராமன் வைத்தியர் வாக்குறுதி கொடுத்தார். அதுவரைக்கும் உதவிக்காக ஹோம் நர்ஸை ஏற்பாடு செய்யும் விஷயத்தைச் சொன்னபோது, அவர் முதலில் அதற்குச் சம்மதம் தரவில்லை என்றாலும், பிறகு எல்லோருடைய வற்புறுத்தலால் ஒப்புக்கொண்டார்.
உதவிக்கு ஆள் வேண்டும் என்று வீட்டில் இருந்தவர்கள் சொன்னதன் அர்த்தம் அப்புறம்தான் அவருக்குப் புரிந்தது. குழந்தைகள்... அவர்களுடைய மனைவிகள் என்றெல்லாம் சொல்லி ஒன்றும் பயனில்லை. ஒரு பக்கம் செயல்படாமல் தளர்ந்து போய்விட்ட ஒருவரை அவர் உயிரோடு இருக்கும் வரை பணிவிடை செய்வது என்பது கடினமான செயல். முன்பு போல அல்லவே இப்போது...? எல்லோரும் அவசரக்கதியில் ஓடிக் கொண்டிருப்பவர்கள்தானே? எல்லோருக்கும் எதற்கும் நேரம் கிடையாது.
வேலை, படிப்பு, சீரியல்கள், விவாதங்கள் என்று இப்படி பல பல வேலை நெருக்கடிகள்... ஹோம் நர்சாக வந்த ஷீலாவை எல்லோருக்கும் பிடித்திருந்தது. முகத்தில் எப்போதும் விரிந்து நிற்கும் ஒரு பூ போன்ற மலர்ச்சி. மென்மையான பேச்சு. அவள் எப்போதும் சங்கரன் மாஸ்டருக்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதால் எல்லோருக்கும் அது பெரிய ஆறுதலாக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் மட்டும் வீட்டில் இருப்பவர்கள் அவரைக் கவனித்துக் கொண்டால் போதும். படகுத்துறைக்குப் பக்கத்தில் இருக்கும் ஆர்த்தோமா தேவாலயத்தில் திருப்பலியைப் பார்க்கவும் பைபிளைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வரவும் ஷீலா ஞாயிற்றுக்கிழமை காலையில் கிளம்பி விடுவாள். அவள் வீட்டுக்கு வர மத்தியானமாகிவிடும். அன்று எல்லோரும் வீட்டில் இருப்பார்கள் என்பதால், அந்தப் பொழுதில் ஷீலா இல்லாததால் சங்கரன் மாஸ்டரைக் கவனிப்பதில் எந்தக் குறையும் ஏற்படவில்லை.
ஷீலாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. அதைப் பற்றிப் பேசும்போது அவள் குரல் மாறிப்போய்விடும். “அந்த ஆள் குடிச்சுட்டு வந்து என்னை அடிப்பாரு, உதைப்பாரு. அதனால நான் அந்த ஆளை விட்டு விலகிட்டேன். நாம எதுக்காக அந்த ஆளுகிட்ட அடி உதய வாங்கிகிட்டு சாகணும்? அந்த ஆளை விட்டு விலகியதுக்கு அப்புறம்தான் நான் ஹோம் நர்ஸ் படிச்சேன். வேலையும் கிடைச்சுடுச்சு. இன்னிக்கு என்னோட வாழ்க்கை என்னோடக் கையில இருக்கு”.
சங்கரன் மாஸ்டர் சொன்னார். “அவனை விட்டுவிட்டு வந்ததுனால அதோட உன்னோட வாழ்க்கை முடிஞ்சுபோச்சுன்னு நினைக்காத. நல்ல ஒரு பையன் கிடைச்சான்னா நீ மறுபடி கல்யாணம் செஞ்சுக்கணும்”
உண்மையைச் சொன்னால் ஒரு குடும்பம் முழுவதும் கடந்த சில மாதங்களாக ஷீலாவுடைய அன்பாலும் அரவணைப்பாலும் நிம்மதியான சூழலில் இருந்தது.
இதற்குப் பிரதிபலனாக எதைத் தருவது? எதைத் தந்தாலும் அது அவள் செய்து வரும் வேலைக்கு ஈடாகாது என்று சங்கரன் மாஸ்டர் என்னிடம் பல தடவை சொல்லியிருக்கிறார். ஒருநாள் நானும் அவருடைய மகன் ராமன் குட்டியும் குஞ்சு ராமன் வைத்தியருடைய மருத்துவ சிகிச்சையின் முன்னேற்றத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். “வைத்தியரு சொன்ன மாதிரி அப்பாவால வெளியில இறங்கி நடக்க முடியுமா?” சந்தேகத்துடன் மாஸ்டருடைய மகன் கேட்டார்.
அப்போது ஒரு ஆள் காரில் வந்து இறங்கி எங்களிடம் “சங்கரன் மாஸ்டரோட பையன் மிஸ்டர் ராமன் குட்டி இருக்காரா?” வந்தவர் கேட்டார்.
“ஆமாம். நாந்தான் அது”.
“நான் தாமஸ் கோசி எடவயலில். திருவல்லா ஹாஸ்பிட்டல். உங்க அப்பாக்கு ஒரு பக்கம் ஸ்ட்ரோக் வந்து படுத்த படுக்கையா இருக்காரு இல்லயா? பெட் ரிடன்?”.
ராமன் குட்டி ஆச்சரியத்தோடு கேட்டார்.
“இத உங்ககிட்ட யாரு சொன்னாங்க?”
“எங்களுக்கு எல்லா முக்கியமான ஆஸ்பத்திரிகளோடயும் தொடர்பு இருக்கு. உங்கப்பாவோட பக்கவாதத்துக்குச் சிகிச்சை கொடுத்த ஆஸ்பத்திரியிலேர்ந்து எல்லா விவரமும் கிடைச்சுச்சு.”
ஆடு துளிர் இலைகளை தின்னும் சாதுரியத்தோடு அவர் தன் சொந்த ஆஸ்பத்திரியுடைய பெருமைகளை விவரித்தார்.
“அமெரிக்கக் குடியுரிமையோட இருக்கற மலையாளி சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டருங்களும், இங்க இருக்கற ஸ்பெஷலிஸ்ட்டுங்களும் சேந்து கோடி ரூபா மூலதனம் போட்டு ஆரம்பிச்ச ஹைடெக் ஆஸ்பத்திரிதான் எங்களோடது. ஸ்டேட்ஸ்ல ஹைப்பர் கன்சல்டன்ஸி இன்டர்நெட் வழியா லைவா ஆன் லைன்ல ஆலோசனைங்கள வழங்கி ஆபரேஷன்களயும் மத்த சிகிச்சைங்களயும் செய்யறோம்.
பக்கவாதத்துக்கு எங்க ஆஸ்பத்திரியில புதிய சிகிச்சை இருக்கு. என் டி ங்கறதுதான் அதோட சுருக்கமான பேரு. கம்ப்யூட்டர் டெக்னாலஜியில என் டின்னா நியூ டெக்னாலஜின்னு அர்த்தம். இங்க என் டி நியூ ட்ரீட்மெண்ட். மூளையில செயல்படாம போன ஒரு செல்லை ஒன்னுங்கற கணக்குல மூளை செல் அளவுக்கு இருக்கற மைக்ரோசிப்சை மூளையில பொருத்தி செய்யற மைக்ரோசிப் தெராபி அதாவது எம் சி டிதான் என் டிங்கற புதிய சிகிச்சை.
ஆபரேஷன் ஒன்னும் இதுக்கு அவசியமில்ல. மைக்ரோசிப்போட கரைசல டிரிப் வழியா கொடுத்துடுவோம். மைக்ரோசிப் ஒவ்வொன்னும் மருந்துங்களை செல்கள்ல கொண்டுபோய் சேர்க்குது. மூளையில் இருக்கற செல்லோட இடத்துல தானே போய் அது பொருந்தி செல்களை இயக்க வைக்குது. ஸ்ட்ரெச்சர்ல என் டி அறைக்குக் கூட்டிகிட்டுப் போகற நோயாளி யாரோட உதவியும் இல்லாமல் சிகிச்சை முடிஞ்சதுக்கு அப்புறம், தானே ஆபரேஷன் ரூம்லேர்ந்து நடந்து வருவாரு”.
சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு அவர் தொடர்ந்தார்.
“மைக்ரோசிப்புக்கு மரணம் இல்ல” இந்தச் சிறிய வாசகத்தை பிரச்சாரத்தின் முழக்க வாசகம் போல அவர் பல தடவை உச்சரித்தார்.
“சிகிச்சைக்கு ஆயுட்கால உத்தரவாதம் கொடுக்கறோம். ஒரே ஒரு நாளைக்கு மட்டும் ஆஸ்பத்திரியில இருந்தாப் போதும்”.
“செலவு?”
“அது...” அவர் கொஞ்சம் நிறுத்திவிட்டுச் சொன்னார்.
“ஒன்னரை லட்சம் ரூபாதான் ஆகும். இதுல ஒன்னே கால் லட்சமும் மைக்ரோசிப்போட வில. அமெரிக்காவ்லேர்ந்து இம்போர்ட் செய்யறோம்”
அவர் சொன்னதையெல்லாம் கேட்டு முடித்த போது ராமன் குட்டியோட முகத்தில் உற்சாகம் அலையடிப்பதை என்னால் பார்க்க முடிந்தது.
“நல்லா யோசிச்சதுக்கு அப்புறம்தான் முடிவு செய்யணும்” என்று சொல்ல நினைத்தேன்.
ஆனால் ராமன் குட்டி என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அவரிடம் சொன்னார். “என்னோட அப்பாவ அங்க நாளைக்கு அட்மிட் செய்யறேன்”.
இப்போது சொல்லலாம் என்ற பாவத்தில் அந்த ஆள் மொபைல் போனை பாக்கெட்டில் இருந்து எடுத்து கொஞ்ச தூரம் தள்ளிப் போய் நின்று யாருடனோ பேசினார்.
சிறிதுநேரப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு அந்த ஆள் நாட்டியமாடும் தோரணையில் ராமன் குட்டிக்கு அருகில் வந்து சொன்னார். “உங்கப்பா அதிர்ஷ்டம் செஞ்சிருக்காரு. நீங்களும் அதிர்ஷ்டசாலி. நாளைக்கு ஒரு இடம் காலியா இருக்கு”.
புதிய சிகிச்சையைப் பற்றி சங்கரன் மாஸ்டரிடம் விவரம் சொல்லி அவரை ஒத்துக்கொள்ள வைக்க ராமன் குட்டி பாடுபட்டார்.
“இந்தச் சிகிச்சையை எடுத்து முடிச்சவங்க யாரையாச்சும் பாத்திருக்கியா?” இதுதான் மாஸ்டரோட முதல் கேள்வி.
குஞ்சு ராமன் வைத்தியரோட சிகிச்சை இப்ப நல்லா கேக்குது” என்று அடுத்த தடைக்கல்லை மாஸ்டர் வீசினார்.
தடைகளை தள்ளிவிட்டு ராமன் குட்டி அப்பாவை புதிய சிகிச்சைக்குக் கூட்டிக்கொண்டு போகத் தீர்மானித்தார்.
சிகிச்சையுடைய பலனைப் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை என்பதால், வீட்டில் இருந்து போக ஷீலா அனுமதி கேட்ட போதும் சங்கரன் மாஸ்டர் அதற்குச் சம்மதிக்கவில்லை. “நீ போகவேணாம். நான் திரும்பி வந்ததுக்கு அப்புறம் முடிவு செஞ்சுக்கலாம்”.
அடுத்த நாள் எம் டி சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பிய மாஸ்டர் யாரும் பிடித்துக் கொள்ளாமல் காரில் இருந்து இறங்கி நடந்து வந்து வீட்டுப் படிகளில் ஏறுவதைப் பார்த்த போது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
ஆச்சரியத்தில் விரிந்த முகத்தோடு ஷீலா அவருக்கு அருகில் சென்றபோது முன் பின் தெரியாதவர் போல அவர் உள்ளே போனார். அவருக்கு என்ன ஆயிற்று என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரம் கழித்து ராமன் குட்டியைப் பக்கத்தில் கூப்பிட்டு அவர் சீரியஸாக சொன்னார். “அந்தப் பொண்ணோட கணக்கத் தீத்து வெளிய அனுப்பு”.
வார்த்தைகள் காரம் பூசிய நஞ்சு முட்களாக ஷீலாவின் மீது தைத்தன. அவர் சொன்னதைக் கேட்டபோது, சுயமரியாதையுடைய அவள் வராந்தாவுக்குப் போய் நின்று கொண்டு சொன்னாள்.
“தீக்கறதுக்கு கணக்கு எதுவும் இல்ல. எனக்குச் சம்பளம் தர்றது கம்பெனிதானே? அத அவுங்ககிட்ட வாங்கிக்கறேன். நான் போறேன்”.
மாஸ்டர் எதுவுமே நடக்காதது போல செய்தித்தாளை வாசிக்கும் மும்முரத்தில் இருந்தார். பஞ்சாயத்து பிரசிடென்ட் மாறவனை பிரேமானந்தனும் வார்டு மெம்பர் சிராய் முஸ்தபாவும் சேர்ந்து முன்னாள் பஞ்சாயத்து பிரெசிடெண்ட் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்ததை விசாரிக்க வந்தார்கள். மாஸ்டர் வாசித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை டீபாயின் மீது வீசியெறிந்துவிட்டு கோபத்துடன் முரட்டுத்தனமாக அவர்களிடம் சொன்னார்.
எனக்கு இனிம பஞ்சாயத்தும் கிடையாது ஒரு செயல்பாடும் கிடையாது. அன்பளிப்பு கேக்கறதுக்கு வந்திருக்கீங்கன்னா நீங்க இருக்க வேணாம். கிளம்புங்க” வந்தவர்கள் பேசுவதைக் கேட்கக்கூட நிற்காமல் மாஸ்டர் உள்ளே போனார்.
அவர்கள் ஆச்சரியத்தில் சிறிது நேரம் வாயடைத்து நின்ற பிறகு, விடைபெற்றுச் சென்றார்கள்.
மாஸ்டருக்கு என்ன ஆயிற்று என்ற எண்ணம் எல்லோரையும் வாட்டியெடுத்தது.
ஒரு சாயங்காலநேரம் நான் அவரைப் பார்க்கப் போனபோது, அவர் டி வியில் சி என் என் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்த பிறகும் பார்த்த மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. ராமன் குட்டி என்னை உள்ளே கூட்டிக் கொண்டு போய் இரகசியமாகச் சொன்னார். “அப்பாகிட்ட ஏதோ பெரிசா ஒரு மாத்தம் ஏற்பட்டிருக்கு”. அவர் என்னைக் குளியலறைக்குக் கூட்டிக் கொண்டு போனார்.
அங்கு இருந்த தட்டுகளில் டூத் பேஸ்ட், க்ரீம், ஆஃப்டர் ஷேவ் லோஷன், ஷேவிங் க்ரீம், க்ளிசரின் டிரேன்ஸ்பேரண்ட் சோப், எல்லாம் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளுடையது. இராக் போர் ஆரம்பித்த காலத்தில் அவருடைய வற்புறுத்தலால்தான் நான் வெளிநாட்டு பொருட்கள் எதையும் வாங்குவதில்லை என்று சபதம் செய்து கொண்டேன். வயதான காலத்தில் சிலருக்கு ஏற்படும் மன இறுக்கம் அவரைப் பாதித்திருக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
அதை ராமன் குட்டியிடம் ரகசியமாகச் சொன்னேன். தற்செயலாகப் பின்னால் திரும்பிப் பார்த்த போது மாஸ்டர் அங்கே நின்று கொண்டிருந்தார். என்னுடைய சங்கடத்தை மறைக்க நான் படாத பாடுபட்டேன். அடுத்த நாள் காலையில் ராமன் குட்டி என்னிடம் சொன்னார். “அப்பாவ ஒரு மன நல மருத்துவரு கிட்ட காட்டணும். இந்தப் பெரிய வீட்ட வித்து, அதுல கிடைக்கற காச வச்சு சிட்டியில போய் ஒரு ப்ளாட் வாங்கியே தீரணும்னு பிடிவாதம் பிடிக்கறாரு”.
“மாஸ்டர் அதுக்கு என்ன காரணம் சொல்றாரு?”.
“காலம் மாறிப்போச்சுன்னு சொல்றாரு”.
நாங்கள் மாஸ்டரை ஒருவிதமாக ஒப்புக் கொள்ள வைத்து நகரத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் ஒரு உளவியல் டாக்டரிடம் காட்டினோம். நீண்ட நேரப் பரிசோதனைக்கு பிறகு டாக்டர் ஒரு புன்முறுவலோடு ராமன் குட்டியிடம் சொன்னார்.
“உங்க அப்பா அப்ஸயூட்டிலி நார்மல். நீங்கதான் பழைய மைண்ட் செட்ட மாத்திக்கணும். அப்ப எல்லா பிரச்சனைங்களும் தீந்துபோயிடும்”.
“இப்ப என்ன சொல்றீங்க?” என்ற பாவனையில் மாஸ்டர் எங்களை உற்றுப் பார்த்தார்.
நான் என்னுடைய கருத்தை ராமன் குட்டியிடம் மனம் திறந்து சொன்னேன்.
“மாஸ்டர குஞ்சு ராமன் வைத்தியரு கிட்டக் கூட்டிகிட்டு போய் காட்டணும்”.
அவருடைய சிகிச்சையை நிறுத்திவிட்டு மாஸ்டரை புதிய சிகிச்சைக்குக் கூட்டிக் கொண்டு போன விஷயம் வைத்தியருக்குத் தெரிந்திருந்தது. சிகிச்சையுடைய தீய விளைவால் மாஸ்டருடைய சுபாவத்தில் ஏற்பட்ட மாற்றத்தை சரியாக்க வைத்தியரிடம் கூட்டிக்கொண்டு போக ராமன் குட்டிக்குத் தயக்கமாக இருந்தது.
மாஸ்டரையும் கூட்டிக்கொண்டு போவதற்கு முன்னால் வைத்தியரைப் போய்ப் பார்த்து விவரத்தை சொல்லவேண்டும் என்று நான் ஆலோசனை சொன்னேன்.
வைத்தியரிடம் நானும் வரவேண்டும் என்று ராமன் குட்டி சொன்னார்.
நாங்கள் தயக்கத்தோடு வைத்தியரிடம் போனோம்.
நோயாளிகள் எல்லோரையும் பார்த்து முடித்த பிறகு வைத்தியர் ராமாயணம் வாசித்துக்கொண்டிருந்தார்.
இசையோடு அவர் பாராயணம் செய்ததை நாங்கள் ஒரு நிமிடம் கவனித்தோம். புராணத்தின் வரிகள் ராமன் குட்டியை பரிகசிப்பது போல இருந்தது. எங்களைப் பார்த்தபோது அவர் வாசிப்பதை நிறுத்தினார். எல்லா விஷயத்தையும் சொன்னோம். கவனமாகக் கேட்டார். பிறகு, அவர் ராமன் குட்டியை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒரு பார்வை பார்த்தார்.
முதுமை நெளிவுசுளிவுகளை ஏற்படுத்தி இருந்த அந்த முகத்தில் கருணையின் நிலா வெளிச்சம் வீசுவதை நான் பார்த்தேன். எரிந்து கொண்டிருந்த சந்தன ஊதுவத்தியின் தூபத்தில் இருந்து வரும் புகை நூல்கள் போல அந்த வார்த்தைகள் மிருதுவாக இருந்தன.
“இங்க பாருங்க. பக்கவாதத்தால ஒரு பக்கம் இயங்காமப் போனத மைக்ரோசிப் வச்சு சரி செஞ்சுடலாம்னு நினைச்சுகிட்டுப் போனதுனால சுபாவத்துல மாறிப்போன ஒரு ஆளை இதுக்கு முன்னால இங்க கூட்டிகிட்டு வந்திருக்காங்க. ஒரு மாசத்து சிகிச்சையில பழையபடி அவரு ஆயிட்டாரு. எல்லா விஷயத்துலயும் பழைய ஆளா அவரு மாறிட்டாரு. நான் சொல்றது புரியுது இல்லயா? பக்கவாதத்தோடு கூடிய பழைய ஆளு. நான் முன்னால சொன்னது மாதிரி ஆறு மாசத்துல மாஸ்டரால ஊன்றுகோல் உதவியோட நடக்க முடியும்”.
வைத்தியர் சிறிது நேரம் யோசித்துவிட்டு பிறகு தொடர்ந்தார்.
“உண்மையில இயற்கைதான் மருத்துவன். அவன்தான் சிகிச்சை செய்யறான். வைத்தியன் இயற்கைங்கற மகா வைத்தியனோட எடுபிடி ஆள் மட்டும்தாங்கறது என்னோட நம்பிக்கை. முன்ன மாதிரி எல்லா மருந்துங்களயும் பரிசோதிச்சு பாக்கலாம்”.
அடுத்த நாள் காலையில் நான் மாஸ்டரைப் பார்க்க போன போது, அவர் சி என் என் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் ஒரு இளம் வயதுப் பையனைப் போலத் துள்ளி எழுந்து மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.
“அவுங்க அந்த ஆளப் பிடிச்சிட்டாங்க”
“யாரை?”
“சதாம. ஹி ஈஸ் எ ப்ரூட்டல் டிக்டேட்டர். உலகம் இனிம நிம்மதியா வாழமுடியும்”.
வைத்தியருடைய சிகிச்சையை மறுபடி ஆரம்பிக்க மாஸ்டர் தயாராவாரா என்பது எங்களுடைய அடுத்த சந்தேகமாக இருந்தது. கட்டாயப்படுத்தியதால் அவர் ஒப்புக் கொண்டார். வைத்தியருடைய சிகிச்சை மறுபடியும் ஆரம்பித்தது. வைத்தியர் சொன்ன மாதிரி நாலைந்து மாதங்கள் ஆனபோது ஒரு பக்கம் செயல்படாமல் போன சங்கரன் மாஸ்டர் கைத்தடி உதவியுடன் வெளியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.
வீட்டில் இருந்து தினமும் வாசகர் சாலைக்கு செம்மண் பாதை வழியாக, காலை இழுத்து இழுத்து நடக்கும் கதராடை சங்கரன் மாஸ்டர் மறுபடியும் எங்களுடைய கிராமத்தின் அடையாளச் சின்னமாக மாறினார்.