பழமையான ஏதோ ஒரு துக்கம் அப்பாவுடைய மனதை முற்றிலும் வேட்டையாடுவதாகப் பல வேளைகளிலும் எனக்குத் தோன்றுவதுண்டு. சில நேரங்களில் அப்பா மலையை நோக்கிக் கண்களை நட்டு வைத்துச் சும்மா இருப்பார். இல்லாவிட்டால் நிலா வெளிச்சத்தில் அப்படியும் இப்படியுமாக ஒரு உலாத்தல். ஒரு நாள் மலை முகட்டில் நட்சத்திரங்கள் பூத்துக் குலுங்கிய ஒரு ராத்திரியில் ஆகாயத்தில் நட்டிருந்த அவருடைய கண்கள் கண்ணீரால் நிரம்பித் தளும்புவதை நான் பார்த்தேன்.
அப்புறம் ஒரு நாள் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் வெளியில் சென்ற பிறகுஅவர் மட்டும் திருப்பலி நடக்கும் மேடையை நோக்கி கைகளை நீட்டி அழுவதைப் பார்த்த போது என்னுடைய மனது சுக்குநூறாக உடைந்து சிதறியது.
“எதுக்காக அப்பா இப்படி அழற?” என்று கேட்பதற்கான துணிச்சல் அப்போது எனக்கு இல்லை.
ஒன்று துக்கக்கரமான ஏதோ நினைவுகள் அவரைத் துன்பப்பட வைக்கலாம். அப்படி இல்லையென்றால், எப்போதோ நடந்த ஏதோ காயத்தால் இந்த முகமூடி போட்ட மர்மமான துக்கமும் மனதுக்குள் வெந்து உருகும் வேதனையும் அவரைத் துரத்திக் கொண்டிருக்கலாம். நான் ஊகித்தேன். பனி மூடிய ஒரு ராத்திரியில் அப்பா வருவதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்.
வெளித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த அம்மா சொன்னாள். “உனக்குத் தெரியுமா? உன்னோட அப்பா வாழ்க்கை ஒரு நிலையில்லாத பயணம். உனக்குத் தெரியுமா? உன்னோட அப்பாவும் அம்மாவும் எப்படி இந்த மலைக்கு வந்து சேர்ந்தோம்னு? ஜில்லிட்டு விரைத்துப் போன நான் அம்மாவுடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“திட நாட்டுலதான் நானும் உன்னோட அப்பாவும் பிறந்து வளந்தோம். போட்டுகிட்டு இருந்த துணிக்கு மாத்துத் துணி இல்லாமக் கஷ்டப்பட்டுகிட்டு இருந்த காலம். மத்தியான ஒரு வேளை கஞ்சிக்குக்கூட வழியில்லாத வாழ்க்கை. பசி பட்டினியால சோந்துபோய் அலைஞ்சு திரிஞ்சப்பதான் உன்னோட அப்பாவும் நானும் கணக்கால் அவுசேப் அப்பாவும் சாக்கோச்சனும் காட்டுக்குப் போய் வாழலாம்னு தீர்மானிச்சோம்.
குலுங்கியும் ஆடிக்கிட்டும் வந்தப் பேருந்தில் எவ்வளவு நேரம் பயணம் செஞ்சோம்னு தெரியுமா? உப்பு தர கடைத்தெருவுல பேருந்து திரும்பறதுக்கு நடுவுல ஒரு தேநீர்க் கடயப் பாத்து நாங்க வண்டியிலேந்து இறங்கினோம். தேநீர்க்கடைக்காரன் வர்கீஸ் மாப்ள கையில காசு இல்லாட்டாலும் பரவாயில்லைன்னு எங்களுக்கு புட்டயும் சுடச்சுடத் தேநீரையும் கொடுத்தாரு.
பசியில அலைஞ்சு திரிஞ்சதுனால அன்னிக்கு சாப்பிட்ட அது எல்லாத்தோட ருசியும் இப்பவும் இதோ இந்த நாக்குல இருக்கு. வர்கீஸ் மாப்ளதான் இந்த இடத்த எங்களுக்கு சுலபமா கிடைக்கற மாதிரி செஞ்சாரு. ஊர்ல இருந்த மூனரை செண்ட் நிலத்த வித்து வந்த காசுல உப்புத் தரயில எல்லாருமா சேந்து மூனு ஏக்கர் நிலம் வாங்கினோம். ஒத்துமையா எல்லாரும் ஒரே மனசோட பயிர் செஞ்சோம்.
ராத்திரி பகல்னு பாக்காம முதுகெலும்பு உடயற மாதிரி வேல. மூனு குடிசைங்களப் போட்டோம். புல்லு வேஞ்சு கூரயப் போட்டோம். அப்ப... அதோ வருது ஒரு சட்டம். வனத்துறையோட எஜமானனுங்க வீட்டச் சுத்தி வளைச்சாங்க. கஞ்சிக்குக்கூட வழியில்லாம ஊர விட்டு வந்தவங்கன்னு நாங்க சொன்னாலும் அவுங்க கேக்கற மாதிரி இல்ல.
ஒரு நாள் பொழுது விடியற நேரத்துல அப்பா வெளியில இறங்கினப்ப அங்க தலயில மப்ளர சுத்திகிட்டு மூனு நாலு பேரு தோட்டத்துல வாழ எல்லாத்தயும் வெட்டிகிட்டு இருந்தாங்க. உன்னோட அப்பா மரம் வெட்டற பிச்சுவா கத்தியோட படியிறங்கினாரு. கூடவே சாக்கோச்சனும் அவுசேப் அப்பாவும் அலறிகிட்டே ஓடி வந்தாங்க.
“எவண்டா அவன்? என்னோடத் தோட்டத்துக்குள்ள புகுந்தது?”
உங்கப்பாவுக்கு அந்த அளவு ஆக்ரோஷம் வரும்னு அன்னிக்குத்தான் எனக்குத் தெரிஞ்சுச்சு. அன்னிக்கு அலறியடிச்சுகிட்டே ஓடின அந்த ஆளுஞ்க அப்புறம் இந்தப் பக்கம் தலயவச்சுக்கூடப் படுக்கல”
ஒரு மழைக்கால ராத்திரி. அலறலைக் கேட்டுதான் நான் ஓடினேன். அப்பா முற்றத்தில் ஏலச்செடிகளுக்கு நடுவில் விழுந்துகிடக்கிறார். அம்மாவும் நானும் அலறியடித்துக் கொண்டு ஓடினோம். அப்போதுதான் தெரிந்தது. அப்பா விழவில்லை. மண்ணில் காதை கூர்மையாக்கி வைத்துக் கேட்கிறார். ஓடி வந்த எங்களை உதட்டில் விரலை வைத்து அமைதியாக இருக்கச் சொல்லிய அப்பா சொன்னார்.
“பாரு. பூமிக்குள்ள ராட்சச பனிப்பாறைங்க உருகிப் பிளக்கற சத்தம் கேட்குது. மண் பிரளயம்தான். ஜோஸ். காத நீ கூர்மையாக்கிக்கிட்டு கேளு. அவன் வரான். அவன் வரான்”. நாங்கள் அப்பாவைப் பிடித்து எழுந்திருக்க வைத்தோம். உடம்பில் ஒட்டிக்கொண்டிருந்த வெள்ளை நிறக் கற்களை தட்டிவிட்டுக்கொண்டே அப்பா சொன்னார்.
இந்தக் கல்லுங்கள தூக்கிப் போட்டுடாத போஸ். நீ அன்னிக்கு செஞ்சது மாதிரி இது எல்லாத்தயும் கண்ணாடிக் குவளையில போட்டு வை”. அப்பா என்னுடைய பெயரை தவறாகத்தான் சொன்னார். அதைக் கேட்டுவிட்டு நானும் அம்மாவும் அழுதோம். “அப்பாவுக்கு என்ன ஆச்சு கர்த்தரே?”. அப்பாவை வராந்தாவில் இருந்த சாய்வு நாற்காலியில் உட்கார வைத்தேன். அம்மா தலையைத் துவட்டிவிட்டாள். எதையோ புலம்பிக்கொண்டு அவர் நாற்காலியில் சாய்ந்தபடி தூங்கிப்போனார்.
எவ்வளவு பலவீனமானவன் நான் என்று சொல்லாமல் சொல்வது போல அப்பாவுடைய நெஞ்சு உயர்ந்து தாழ்வதைப் பார்த்து எனக்கு வேதனையாக இருந்தது. நான் சத்தம் போட்டு அழுதேன். அன்று அப்பா தூங்கிய பிறகு வெளியில் பெய்து கொண்டிருந்த பேய் மழையைப் பார்த்துக் கொண்டே அம்மா எனக்குத் தெரியாத ஜோசப் சித்தப்பாவுடைய கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.
உனக்குத் தெரியுமா? உனக்கு ஒரு சித்தப்பா இருந்தாரு” அதை ஒரு நடுக்கத்துடன் நான் கேட்டேன். “அப்படின்னா அவரு இப்ப எங்க?”
“நீ பிறக்கறப்ப அவனுக்கு எட்டு வயசு. அந்த சித்தப்பாவக் கூப்பிட்டுதான் அப்பா இன்னிக்கு அழுதாரு. ஜாக்கிங்கற நாயும்அவனோடவே இருந்துச்சு. அவுங்க ரெண்டு பேரும் சேந்து இந்தக் காட்டயும் மலையையும் சலிச்சு போட்ட மாதிரி நடப்பாங்க.
முன்னால அவன் ஓடறப்ப அவனுக்குப் பின்னாலயே ஜாக்கியும் ஓடும். அவன் நல்லாப் பாடுவான். அப்பா ரப்பர வெட்டறப்ப கப்பக் கிழங்கு களை எடுக்கறப்பந ஏலத்துக்கு உரம் போடறப்ப பாடிக்கிட்டே அவன் அப்பாவோடவே இருப்பான். கூடவே ஜாக்கியும்”. இதைச் சொல்லி அம்மா திண்ணையில் இருந்த பழைய துருப்பிடித்த ராலி சைக்கிளை வெறுமையாகப் பார்த்தாள்.
பட்டென்று அம்மா விம்மி விம்மி அழுதாள். “அதோ இருக்கே அந்த சைக்கிள்லதான் மூனு பேரோட சவாரியும். சாத்தனோட திருவிழாவப் பாக்கவும் முனியறயப் பாக்கவும் அவுங்க ரெண்டு பேரு கூட ஜாக்கியும் மலயேறிப் போச்சு. அப்படி ஒரு நாள் காஞ்சியாத்துல சைக்கிள் வித்த நடக்குதுன்னு கேள்விப்பட்டு அங்கப் போனாங்க.
ஒரு வாரம் அந்த வித்த நடந்துச்சு. அதப் பாத்துட்டு வந்த நாள் முதலே ஜோசப்பு எப்பப் பாத்தாலும் சைக்கிள்லதான் சுத்தினான். சைக்கிளோட மல்லாந்து படுத்துகிட்டு சக்கரத்த உதச்சப்ப தலகுப்புற விழுந்தான். அதுக்கு அடுத்த ரெண்டு நாள்லயும் அப்பா வேலைக்குப் போனப்ப, அப்பாகிட்ட சொல்லாம எங்கிட்ட சொல்லிட்டு சைக்கிள் வித்தயப் பாக்கப் போயிட்டான்.
ஒரு நாள் அப்பா சாயங்காலச் சந்தையிலேர்ந்து திரும்பி வர்றப்ப ஜோசப் சைக்கிள் வித்த காட்டற ஆளுக்கு முன்னால நின்னுகிட்டு ஒரு கோழியத் தூக்கிப் பிடிச்சு ஏலம் விட்டுகிட்டு இருந்தான். “ஒரு தடவ.. ரெண்டு தடவ.. மூனு தடவ...” அப்பா அவனைப் இடிச்சு இழுத்துகிட்டு வீட்டுக்கு வந்தாரு. கம்பு உடயற மட்டும் அடிச்சாரு. தடுக்கப்போன எனக்கும் அடி விழுந்துச்சு.
ராத்திரி படுத்துக்கறப்ப அப்பா எங்கிட்ட கேட்டாரு. “ஏண்டி. எத்தன அடிச்சப்பவும் அவன் அழலயே? கல்லு மாடிரி மூஞ்சிய வச்சுகிட்டு நின்னுகிட்டு இருந்தானே தவிர, அவன் வேற எந்த உணர்ச்சியயும் காட்டலயே?”
அன்றைக்கு ராத்திரி ஜோசப்பும் ஜாக்கியும் எங்கே என்று தெரியாமல் மறைந்து போனார்கள். மழை இரு மடங்காகப் பெய்ய ஆரம்பித்திருந்தது.
அம்மா மழையைப் பார்த்து விதும்பினாள். மழைத்தண்ணீர் பாய்ந்து வேகமாக ஓடிப் பாறைகளுக்கு நடுவில் பாய்ந்து கொண்டிருந்தது. “விடிகாலையில ஜோசப்பக் காணலைன்னு தெரிஞ்சப்ப அப்பா அலறிகிட்டே ஓடினாரு. மலையில பள்ளத்துல எல்லா இடத்துலயும் தேடினாரு. கூடவே வர்கீசும் அவுசேப் அப்பாவும் போனாங்க. எப்பப் பாத்தாலும் பாடிகிட்டே வேல பாத்துகிட்டு இருந்த உன்னோட அப்பா அதோட மௌனமாயிட்டாரு.
அப்புறம் யார் யாரோ ஜோசப்ப சைக்கிள் வித்த நடக்கற இடத்துலப் பாத்ததா சொன்னாங்க. அவன் இப்ப பெரிய வித்தைக்காரனாயிட்டான்னும் காஞ்சியாத்துல அவன் பூமிக்கு உள்ள மூனு மணி நேரம் இருந்து ஆரவாரமான கைத்தட்டலுக்கு நடுவுல மேலே வந்தான்னும் சொன்னாங்க. அப்ப அப்பாவோட கண்ணுலேர்ந்து கண்ணீரு வழிஞ்சோடிகிட்டே இருந்துச்சு”
ஒரு மழைக்கால ராத்திரியில் அப்பா எதுக்காக மண்ணில் படுத்து பூமிக்குள்ளே காதை வைத்து கேட்டார் என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது. அப்பா அளவுக்கு வெளிக்காட்டவில்லை என்றாலும், அம்மா உள்ளுக்குள் புகைந்து புகைந்து ஒரு நாள் போய்ச் சேர்ந்தாள். அன்றைக்கு அடுத்த நாள் அப்பா திடீரென்று திடுக்கிட்டு எழுந்து யார் பெயரையும் சொல்லாமல் ஆக்ரோஷமாகக் கத்தினார்.
“யாருடா இந்த விளக்க எல்லாம் அணைச்சது? எதுக்காகடா இந்த ஜன்னல்களயெல்லாம் மூடி வச்சிருக்க?”. அப்பா பைத்தியம் பிடித்தவரைப் போல ஓடினார். எல்லா ஜன்னல்களையும் மட்ட மல்லாக்கத் திறந்துவிட்டார். எல்லா விளக்குகளையும் போட்டு வராந்தாவில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து இருட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்புறம் அவர் சொன்னார். “ஜோஸ். உனக்குத் தெரியாது இல்லயா? அவளுக்கு வீட்ட அடைச்சு வச்சிருக்கறது பிடிக்காது”
அப்பா விம்மி விம்மி அழுதார்.