“அடச்சே. பொந்தம்புழைக்கு போற போக்குவரத்து ஆரம்பிச்சுடுச்சு. ஆனா, நாவல் வரல. வழக்கமா போறவங்க வந்து நிக்கறப்பதான் அது வரும். ஆனா, அது வர்ற நேரம் இன்னிக்கு ரொம்பத் தாமதமாயிக்கிட்டு இருக்கு. அதுக்கு என்ன ஆச்சோ? அது வரலைன்னா எல்லா காரியமும் கெட்டுப்போயிடும்”. சாலை போடுபவர்கள் என்றைக்கோ கொண்டு வந்து போட்டிருந்த பழைய காலத்துக் கல்லில் சாய்ந்து கொண்டு குஞ்சு குட்டி சுற்றுமுற்றும் பார்த்தார்.
ஒரு மனித ஜீவியையும் சுற்றுவட்டாரத்தில் காணவில்லை. “வழக்கமா யாராச்சும் ஓட்டற ஆட்டோ மல்லப்பள்ளிக்குப் போறதா இருந்தா அதுல ஒரு ஆளு உக்காரறதுக்கு இடமும் இருந்தா அவுங்களோட நல்ல மனச வச்சு போகவேண்டிய இடத்துக்கு போய்ச் சேந்துடலாம். ஆனா அதுக்கான சாத்தியம் ரொம்ப ரொம்பக் குறைவுதான்.
அதுவும் தவிர காத்துகிட்டு இருக்கறது நான் மட்டும் இல்லயே சந்தைக்குக் கொண்டு போறதுக்காக நான் எடுத்துகிட்டு வந்திருக்கற நல்லாப் பழுத்த மூனு நேந்திரவாழக் குலைங்களும் இருக்கே? இதயெல்லாம் வைக்கறதுக்கு சவாரி ஆட்டோவுல இடம் இருக்காது. கர்த்தாவே… இன்னிக்கு இந்தப் பேருந்து வரலைன்னா எல்லாம் கெட்டுப் போயிடுமே?
பயணத்துக்கு நாவலத் தவிர இந்தப் பாதையில வேற பேருந்து எதுவும் கிடையாது. மத்தவங்க சுற்றுக்குன்னு சொல்லிகிட்டு ஒரு முறை போனா அதோட சரி. அப்புறம் சாயங்காலம் ஒரே ஒரு முறை தான் வருவாங்க. இந்த வாழப்பழக்குலைங்கள இன்னிக்குச் சந்தைக்கு எடுத்துகிட்டுப் போயி என்கிட்ட வழக்கமா வாங்கற வியாபாரி பாப்பச்சனோட கையிலேர்ந்து காசு வாங்கலைன்னா...” அப்போது தூரத்து வளைவில் இருந்து ஒரு ஒலி நீட்டி முழக்கி எழுப்பிய சத்தம் கேட்டது.
“ஓ. ஒலி சத்தத்தக் கேக்காம விட்டுட்டேனே? அவந்தான். நாவல்! எத்தனக் காலமாக் கேட்டு கேட்டு மனசுல பதிஞ்ச சத்தம்!” குஞ்சு குட்டி மறுபடி ஒரு தடவை வேட்டியை மடக்கி கட்டிக்கொண்டு நிமிர்ந்து முன்னால் தள்ளி நின்றார். பேருந்து அவருக்குப் பக்கத்தில் வந்து நின்றது. “ஓ பின்னி. என்ன ஆச்சு இன்னிக்கு?
நான் நினைச்சேன் இனிம நீங்க வரமாட்டீங்கன்னு”.
வாழைப்பழக் குலைகளைப் பேருந்திற்குள் ஏற்றி வைக்க நடத்துநர் பின்னி ஒரு கை கொடுத்து உதவுவதற்கு இடையில் குஞ்சு குட்டி உள்ளே ஏறினார். பின்னியிடம் கேட்ட கேள்விக்கு ஓட்டுநர் கோபி பிள்ளைதான் பதில் சொன்னான். “என்னத்தச் சொல்றது குஞ்சு குட்டி தாத்தா. அந்த பொன்னோயிக்காரனோடத் தோட்டத்துக்குப் பக்கத்துல வர்றப்பதான் இவன் ஓடாம நின்னான். அப்புறம் நெடுங்குன்னத்து பணிமனைக்குக் கொண்டு போய் நாளைக்குச் சரியாக்கணும்.
நிலைமையப் பாத்தப்ப இப்படி உடனே இந்த முறை நடத்தமுடியும்னு நினைக்கவேயில்ல. அப்புறம் எப்படியோ வண்டிய எடுத்தேன். ஹாங். பழைய வண்டிக் காளை ஏமாத்தாதுன்னு பெரிசுங்க சொல்றது போல எப்படியோ இழுத்துப்பிடிச்சு ஓட்டிட்டு வந்துட்டேன்”. பேருந்தில் ஆட்கள் குறைவாக இருந்தார்கள். கொஞ்ச நாளாக இப்படித்தான்.
காலையிலும் மாலையிலும் படிக்கப் போகிற பிள்ளைங்க கூட்டம் போனதுக்கப்புறம் நடுவில் பேருந்தில் கூட்டமே இருப்பதில்லை. முன்பு எந்த நேரத்து முறையாக இருந்தாலும் பேருந்து நிறையக் கூட்டம் இருக்கும். அன்றைக்கு இந்த வழியாக நாவல் மட்டும்தானே இருந்தது? நாற்பது வருடத்துக்கு முன்னால் ஓனம் கூட நுழைய முடியாத இந்த குக்கிராமத்துக்கு முதல்முதலாக வந்தப் பேருந்து இதுதானே?
மூலை முடுக்கில் எல்லாம் ஊர்க்காரங்களோட வரவேற்புகளைத் தடபுடலாக ஏற்றுக்கொண்டு வந்த அந்த கால பேருந்துப் பயணத்திட்டத்தைக் குஞ்சு குட்டி இப்போதும் நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டார். “அன்னிக்கு எனக்கும் சின்ன வயசு. வயசு முப்பத்தி அஞ்சு கிட்ட இருக்கும். இந்தப் பகுதியில அவன் வர்றப்ப பட்டாசு வெடிச்சு வரவேற்க நானும் முன் வரிசையில நின்னுகிட்டு இருந்தேன்.
அன்னிக்கேப் பேருந்தில் மல்லப்பள்ளி வரைக்கும் போயிட்டும் வந்தேன். அது வரை மூனு கிலோமீட்டருக்கு அப்புறம் இருக்கற குள்ளீலிப்படி வரை நடந்து முக்கியப் பாதை வழியா வர்ற பேருந்தில ஏறிதான் மல்லப்பள்ளிக்குப் போகணும். அப்பல்லாம் இந்த சுத்து வட்டாரத்துல நாவலப் பத்திதான் ஒரே பேச்சு. நாவல் வர்றதயும் போறதயும் வச்சு பல ஆளுங்க நேரத்த கணக்குப் போட்டாங்க. பல வேலைங்கள செய்யறதுக்கும் நேரத்த ஒதுக்கினாங்க.
அப்புறம் காலம் போகப்போக நிறய பேருந்துகள் வர ஆரம்பிச்சது. ஆனாலும், குடும்பத்துல மூத்த வாரிசுங்கற மாதிரி நாவல் எல்லாருக்கும் ப்ரியப்பட்டவனா இருந்தான். பாறக்குன்னுல தோமச்சன்ங்கற ஆளுதான் இதோட உரிமையாளன். அப்பப்ப அந்த ஆளும் பேருந்தில வருவாரு. அந்த ஆள் மனுஷங்க மேல பற்று உள்ள ஒருத்தரா இருந்தாரு. வேல பாத்தவங்களும் திறமையானவங்களா இருந்தாங்க. அதனால இதுல போய் வந்த ஊர்க்காரங்க எல்லாருக்கும் இது அவுங்களோட சொந்தப் பேருந்துங்கற ஒரு தோணல் இருந்துச்சு. ஆனா...? காலத்தோட சுழற்சியில பல மாத்தங்களும் நிகழ்ந்தது. அன்னிக்கெல்லாம் சொந்தமா வாகனங்கள வச்சிருக்கறவங்கள... ஒரு மிதிவண்டி வச்சிருக்கறவங்களக் கூட விரல விட்டு எண்ணிடலாம்.
ஆனா அதுக்கு அப்புறம் கல்ஃப்லேர்ந்தும் அமெரிக்காவிலேர்ந்தும் காசு வந்து கொட்ட ஆரம்பிச்சவுடனே சொந்தமா வாகனமில்லாதவங்கள விரலவிட்டு எண்ணிடலாம் போல இருக்கு. இந்த கூட்டத்துல நானும் ஒருத்தன். ஊர்க்காரங்க எல்லாருக்கும் சொந்தமா வாகனங்க வந்ததுனால பேருந்துங்க எல்லாம் நஷ்டத்துல ஓட ஆரம்பிச்சுது. மெல்ல மெல்ல ஒவ்வொரு பேருந்தா நின்னு போச்சு. கடைசியா இப்ப நாவல் மட்டும் பாக்கியா இருக்கு. இதுக்கு நடுவுல தோமச்சன் செத்துப் போனாரு. அவரோட பசங்க யாருக்கும் பேருந்து தொழில் நடத்தற விஷயத்துல ஆர்வமில்ல. அவுங்க இன்னொரு ஆளுகிட்ட பேருந்த வித்தாங்க. அன்னிக்கு இருந்த நடத்துநரும் ஓட்டுநரும் அதோட மாறிப்போனாங்க.
அப்புறமாதான் கோபி பிள்ளயும் பின்னியும் வந்தாங்க. கோபி பிள்ள சொன்ன மாதிரி பேருந்து ரொம்ப வயசான வண்டிக் காளயா போயிடுச்சு. இப்ப மூச்சு விடறதுக்கே கஷ்டப்பட்டுகிட்டு ஓடுது”. பேருந்து ஒரு வளைவில் திரும்பிய போது முன்னால் நகர்ந்து ஓடிப்போக ஆரம்பித்த ஒரு குலையைக் கையால் இறுக்கமாகப் பிடிக்கும்போது குஞ்சு குட்டி நினைத்துக் கொண்டார்.
“என்னோட விஷயமும் இது போலத்தானே? சுத்தமா முடியலைன்னாலும் மூச்ச இழுத்து பிடிச்சுகிட்டு பயணத்த தொடர்ந்துகிட்டு இருக்கேன். குடும்பச் சொத்தாக் கிடைச்ச முப்பது செண்ட் நிலமும் பழைய வீடுமா ஆரம்பிச்ச வாழ்க்கை அதுக்கு மேல எதயும் செய்யமுடியாம தொடர்ந்துகிட்டு இருக்கு. சொந்த மனசுல கூட அழிக்கத் தோணாத குடும்ப சங்கடங்க மாறாப்பு போட்டு மூடிகிட்டு இருக்கறப்ப வாழ்க்கை இப்படியே ஊந்துக்கிட்டு இருக்கு.
இதோட கடுமையாப் போன ஒரு கோவிடும் வந்தப்ப அப்பப்ப நெஞ்சை உடச்சு நொறுக்கற மாதிரி ஒர் இருமலும் மூச்சு முட்டலும். ஆக மொத்தத்துல பாத்தா இந்த மாதிரி தோட்டத்துலேர்ந்து இலைங்களயும் காய்ங்களயும் பழங்களயும் எடுத்துகிட்டு மல்லப்பள்ளி சந்தைக்கு நாவல்ல போறதுதான் வாழ்க்கையில இப்ப எனக்கு இருக்கற ஒரே மகிழ்ச்சின்னு சொல்லலாம்.
மொத்தம் அரை மணி நேரப் பயணம்தான்னாலும் இந்த பட்டப் பழசான பேருந்தில போய் வர்றப்ப இரண்டு பக்கமும் தெரியற நல்ல நேந்திரம் பழங்க விளைஞ்சு நிக்கற வயலுங்க. நடுவுல தென்படற பெரிய பெரிய வீடுங்க. சின்ன சின்னக் கடத்தெருங்க. கொஞ்ச தூரம் சாலையோடச் சேந்து ஓடற மணிமலயாறு. சில சின்ன வாய்க்காலுங்க. இதயெல்லாம் வேடிக்கப் பாத்துகிட்டு இருக்கறது மனசுக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியா இருக்குது.
தினமும் பாக்கற காட்சிங்கதான்னாலும் இதயெல்லாம் பாக்கறதுக்கு மனசுல ஒரு சலிப்பு தோனறது இல்ல. இது எல்லாத்துலயும் எப்பவும் ஒரு புதுமை இருக்கற மாதிரி தோனும். சின்ன வயசுலேர்ந்தே ஒரு கூட்டாளியா இருக்கறது இந்தப் பேருந்து மட்டும்தாங்கற நிலைம இப்ப. மனசு திறந்து ரெண்டு வார்த்த பேசறதுக்கு ஒரு தோழருங்கக் கூட்டமோ சொந்தம்னு சொல்லிக்கற மாதிரி யாருமோ இப்ப என்னைச்சுத்தி இல்ல.
காசு பணத்தால எனக்கும் மத்தவங்களுக்கும் இடையில இருக்கற தூரம் இப்ப ரொம்ப அதிகமாப் போயிடுச்சு. ஒருவிதத்துல கடத்தெரு தேநீர்க்கடையில பழைய ஒரு தோழர் கூட ஒரு தேநீர் குடிச்சு சும்மா பேசிகிட்டு இருக்கறப்ப கிடைக்கற சுகம்தான் இந்தப் பேருந்தில போறப்ப வர்றப்ப எனக்கு கிடைக்குது. எப்பவும் இதுல ஒரு சலிப்பு வர்றது இல்ல.
“தாத்தா. சந்தைக்குத்தானே போறீங்க? அங்கயே இறக்கி விடறேன்”. வாசற்படியில் இருந்த பின்னி சொன்னான். பேருந்து நிலையத்திற்கு வந்த பிறகும் அங்கு பேருந்தை விடாமல் பின்னி ஆட்களைச் சாலையோரத்தில் இறக்கிவிட்டுக் கொண்டிருக்கும் போது அவன் கூப்பிட்டுச் சொன்னான். “விஷயம் அது இல்ல. அங்க மேற்குப் பக்கத்துல பணிமனையில வண்டிய கொண்டு போய் மிச்சம் மீதி இருக்கற குறை வேலைங்கள எல்லாம் செஞ்சு முடிக்கணும்”.
மணி அடித்துக்கொண்டு பின்னி சொன்னான். “ரொம்ப வசதியாப் போச்சு. இல்லாட்டா பேருந்து நிலையத்தில இறங்கி சாமானுங்களோட ஆட்டோ பிடிச்சு சந்தைக்குப் போறதுதான் வழக்கம். இன்னிக்கு இதனால நிறய ரூபா லாபம்”. சிறிது ஆறுதலோடு குஞ்சு குட்டி சீட்டில் சாய்ந்து உட்கார்ந்த போது நெஞ்சுக் கூடே ஆட்டம் காண்பது போல பேரிரைச்சலோடு ஒரு பெரிய இருமல் பேரலையாக எழும்பி வந்தது.
“ஓ! நாசம் பிடிச்சது. இந்த இருமலு நினைச்சுப் பாக்காத நேரத்துல எல்லாம் நடுநடுவுல வருது”. “ஹோவ்!”
அது ஒரு மாதம் கழிந்துள்ள ஒரு சந்தை நாள். கலிங்காவுக்கு அப்பால் இருக்கும் வளைவில் இருந்து நாவலுடைய நீட்டி முழங்கும் ஒலியின் சத்தம். குஞ்சு குட்டியுடைய வீட்டில் இருந்து வரும் பாதை, முக்கியப் பாதையில் சேரும் இடத்தில் வழக்கமாக அந்த ஆள் நிற்கும் இடத்தில் நிறுத்துவதற்காக நாவலுடைய வேகம் சற்றுக் குறைந்தது.
ஆனால்... அங்கே குஞ்சு குட்டி இல்லை. வேறு எவரும் ஏறவோ இறங்கவோ இல்லாததால் பேருந்து முன்னோக்கி ஓட ஆரம்பித்தது. ஆனால், அரை கிலோமீட்டர் தூரம் போன பிறகு குஞ்சு குட்டி சாலையில் இருந்தார். அந்த ஆள் அங்கே நிற்கவோ, நடக்கவோ வேறு ஏதாவது வண்டியில் போகவோ இல்லை. நான்கைந்து பேருடைய தோளில்... மிக விலை குறைவான மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெட்டியில்... தன்னுடைய இறுதி ஓய்வுக்காக கொஞ்சம் தூரத்தில் இருந்த தேவாலயத்தின் கல்லறையை நோக்கியப் பயணத்தில் இருந்தார் குஞ்சு குட்டி!
படங்கள். வாகனங்களின் ஊர்வல அணிவகுப்பு. எந்த அகம்படியும் இல்லாத மிகச்சிறிய ஒரு இறுதி ஊர்வலமாக அது இருந்தது. எத்தனையோக் காலமாக எவ்வளவோ ஆத்மாக்களுக்கு தங்களுடைய இறுதி ஊர்வலங்களில் சாந்தி தந்த பழைய கிறித்துவப் பாடல்கள். எங்கிருந்தோ வீசும் மெல்லிய காற்றில் மிதந்துவரும் ஸ்வரங்கள். ஆத்மார்த்தமான மெட்டுகள். இதெல்லாம் அந்த கூட்டத்தில் இருந்து கேட்டது.
இறுதி ஊர்வலத்துக்கு பக்கத்தில் விரைவாக வேகத்தைக் குறைத்து பேருந்து கடந்து போகும்போது, யாரோ யாரிடமோ கேட்டார்கள். இறந்தது யாரென்று தெரிந்து கொண்ட போது கோபி பிள்ளையும் பின்னியும் திடுக்கிட்டுப் போனார்கள். முந்தின நாள் ஒரு வேலைநிறுத்தம் இருந்ததால், இந்த வழியாக வரவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அதனால் அவர்கள் இரண்டு பேருக்கும் விவரம் தெரியவில்லை.
“குஞ்சு குட்டி தாத்தா! ஒருவிதத்துல பாத்தா எங்க ரெண்டு பேரயும் விட நாவலோட அதிகமா நெருங்கிப் பழகின மனுஷன்”! அவர்கள் இருவரும் நினைத்துக் கொண்டார்கள். நடுவில் எப்போதோ நடந்த உரையாடல்களில் நாவல் முதல்முதலாக இந்த வழியாக வந்த காலம் முதல் நடந்த விஷயங்களை அவர்கள் அவரிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தார்கள்.
எவ்வளவு நிகழ்வுகள். எத்தனை வகை மனிதர்கள். இது எல்லாவற்றையும் அந்த பேச்சுக்களின் போது தாத்தாவிடம் இருந்து அவர்கள் கேட்டிருக்கிறார்கள். முடிந்தால் பேருந்தையும் கூட்டிக்கொண்டு இறுதி ஊர்வலத்தோடு தேவாலயத்துக்குப் போயிருக்கலாம். கோபி பிள்ளை நினைத்துக் கொண்டான். ஆனால் அது பேருந்து ஆயிற்றே! அது முடியாது! நாவலின் உள் மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதை அவர்கள் இருவராலும் தெரிந்து கொள்ள முடியவில்லை.
அன்றே மல்லப்பள்ளிக்குப் போய்விட்டு திரும்பி வரும் போது குஞ்சு குட்டி ஏறும் இடத்தில் பேருந்து வந்து சேர்ந்தது. திடீரென்று ஒரு பூனைக்குட்டி எங்கிருந்தோ பாய்ந்து வந்து பேருந்துக்குக் குறுக்கே ஓடியது. கோபி பிள்ளையுடைய கையும் கண்ணும் மனமும் ஒன்று சேர்ந்து செயல்பட்டபோது நாவலும் ஒத்துழைப்பு தந்தது. பூனைக்குட்டி மீது மோதாமல் பேருந்து ஒரு வெட்டு வெட்டி வழி மாறி நின்றது.
அடுத்த பக்கத்துக்குப் போய்ச் சேர்ந்த பூனைக்குட்டி, நன்றி சொல்லும் பாவத்தில் பேருந்தைப் பார்த்து “மியாவ்!” என்று குரல் கொடுத்துவிட்டு ஒரு தோட்டத்திற்குள் ஓடி மறைந்தது. ஆனால் வெட்டி மாறிய பேருந்து பெரியதொரு நடுக்கத்தோடும் இரைச்சலோடும் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றது. முதலில் அதை கவனிக்காமல் விட்ட கோபி பிள்ளை வண்டியை முன்னோக்கி ஓட்டினான்.
ஆனால் அது நகரவில்லை. மேலும் மேலும் முயற்சி செய்து பார்த்தான். பலனில்லை. கோபி பிள்ளையுடைய மனம் சொன்னது. “இது வெறும் ஒரு விளையாட்டு இல்ல. தீவிரமா ஏதோ நடந்திருக்கு”. அவன் நினைத்தது சரியாகப் போயிற்று. சிறிது நேரம் கழித்து அங்கே வந்த பேருந்தைப் பழுது பார்க்க வந்தவன், மிகக் கஷ்டமான அதிகச் செலவு பிடிக்கும். முழுசாச் சரி செய்தால் மட்டுமே இந்தப் பேருந்து இனிமேல் ஓடும் என்று தீர்ப்பு வழங்கினான்.
விவரம் அறிந்து அங்கே வந்த உரிமையாளன் அதற்கு அப்புறம் அதிகம் யோசிக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. நிறைய பணத்தைச் செலவழித்து ஓடுவதற்கு உரிய காலாவதியை புதுப்பித்துதான் வண்டி இத்தனை நாளும் ஓடிக்கொண்டிருந்தது. இதற்கும் அப்புறம் இதன் மேல் கணக்கில்லாமல் காசைச் செலவழிப்பதில் எந்தப் பயனும் இல்லை.
அதோடு பயணிகள் எண்ணிக்கையும் ரொம்ப ரொம்பக் குறைவு. எப்படியோச் சமாளித்துதான் இத்தனை நாளும் பேருந்து ஓடிக்கொண்டிருந்தது. இனி மேல் இந்தப் பேருந்தை ஓட்டவேண்டாம். பழைய இரும்பு விலைக்குப் போட்டு விடலாம். பிறகு கோபி பிள்ளை பலரிடமும் சொல்லிக் கொண்டிருப்பான். “நாவல் மனசாட்சி உள்ள வண்டி. என்னோட கையில கிடச்சதிலேர்ந்து... நான் ஓட்ட ஆரம்பிச்சதிலெர்ந்து யாருக்கும் ஒரு விபத்தும் நடக்கல.
கடைசியில கூட அப்படித்தான். கடைசியா நிக்கறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாலக்கூட ஒரு பூனைக்குட்டிய ஒரு சிராய்ப்பு கூட ஏற்படாம காப்பாத்தினான்”. கோபி பிள்ளையோ பின்னியோ வேறு யாரெல்லாமோ குஞ்சு குட்டி தாத்தாவைப் பற்றிப் பிறகு எப்போதோ சொன்னார்கள். “பாவம். நல்ல மனுஷன்!”.