தனக்கு முன்னால் ஒரு பழைய பனை ஓலைப் பாயில் கண்கள் மூடியபடி இருந்த அந்தப் பெண்ணை விக்ரமன் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். விலை மதிப்பு மிக்க வேடங்களுடன் இருந்த அவள் தன் கூரை வீட்டில் ஒரு பாயில் இப்படிப் படுத்துக் கிடக்க நேர்ந்ததை நினைத்து அவன் ஆச்சரியப்பட்டான்.
“முன்பொரு காலத்தில், தான் கண்ட நீண்ட கனவுகளுடைய பசுமை மாறா நினைவுகளின் பலனாகவே இந்த நிலைமை” என்று அவன் கருதினான். முகத்தை நேராகப் பார்க்காமல் அவளைத் தொட்டபோதே அது யாரென்பது அவனுக்குத் தெரிந்துவிட்டது. “என்னோட வாழ்க்கையில எவ்வளவு பெரிய பங்கு இவளுக்கு இருக்கு?”. அதை அவன்தான் அவளுக்குக் கொடுத்தான்.
அதில் நஷ்டம் எதுவும் அவளுக்கு ஏற்படவில்லை. ஆனால் அவனுக்கோ அனைத்தும் நஷ்டமானது. அலங்காரத்திற்கு ஒரு குறையும் இல்லை. இன்றும் அன்று போலவே ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கிறாள். அவளுடைய தாடையில் ஒரு சிறிய தழும்பு இருப்பதை அவன் உற்றுப் பார்த்தான். “என்னால்தான் அவளுக்கு அந்தக் காயம்.
அவன் நினைத்துப் பார்த்தான்.
வீட்டுக்குப் பின்பக்கம் இருந்த மாந்தோப்பில், தென்னை மரத்தின் மேல் ஏறி மதில் சுவரைப் பிடித்துக் கிடந்து மகள் அந்தப்பக்கம் சாலையில் மதில் சுவர் மீது சாய்ந்து சைக்கிளில் இருக்கும் காதலனைப் பார்ப்பதுண்டு என்று அவளுடைய அப்பாவுக்குத் தெரிந்துவிட்டது. அடுத்த நாளே அவள் தண்டிக்கப்பட்டாள். அவளுடைய அப்பா வெளியில் போனவுடன் வேறு ஒரு வழியில் திரும்பிப்போய் அவன் அவளைப் பார்க்கப் பாய்ந்தோடினான்.
சல்லாபத்தில் லயித்துப்போய் நின்ற அவளை காலால் எட்டி உதைத்து அவளுடைய அப்பா இழுத்து தரையில் விழச்செய்தார். அரை மயக்கத்தோடு அவள் கீழே விழுந்தபோது ஆபத்தை உணர்ந்த விக்ரமன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பி ஓடினான் என்றாலும் மதிலில் இடித்ததால் அவளுடைய தாடை எலும்பு உடைந்த விஷயத்தை விஜயராகவன் அடுத்த நாள் சொன்னபோது அவன் பிரமை பிடித்தவன் போல ஆனான். வெகுநேரம் உட்கார்ந்து துக்கப்பட்டான்.
அன்று பலரும் அவனுக்கு அறிவுரை சொன்னார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்த அவன் பலருடைய வயிற்றுப் பிழைப்பின் மையமாக இருந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பட்டணத்தில் படிக்கப் போகும் அவளைக் காதலிப்பது ஒரு அபத்தம் என்று அவர்கள் சொன்னார்கள். அபத்தம் மட்டுமில்லை, ஆபத்தானதும் கூட என்பதை அனுபவித்து அறிந்து கொண்டான்.
போதாக்குறைக்கு அந்தக் காதல் மிகத் தனித்தன்மையுடைய காதலாக இருந்தது. அது மூன்று பேர் அடங்கிய காதல். இரண்டு நண்பர்கள் ஒரே பெண்ணைக் காதலித்தார்கள். அவள் இரண்டு பேரையும் தீவிரமாக காதலித்தாள். ஆனால், காதலர்களிடம் போட்டி ஏற்படுவதற்கு பதில் தோழமை அதிகமானது என்றாலும் எதிர்காலத்தைப் பொறுத்தவரை விக்ரமனும் விஜயராகவனும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
ஒரு இளம் பெண்ணுக்கு ஒரேசமயம் இரண்டு காதலர்கள் இருக்கலாம். இதை உளவியலும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஒரேசமயம் இரண்டு பேர் கணவனாக இருக்க முடியாது. சமூக அறிவியல் இதை ஏற்றுக்கொள்வது இல்லை. அதனால், அவர்கள் இரண்டு பேரும் தங்களுக்கு இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
இப்படியே காலம் கடந்து இளமையும் அதன் துடிப்பும் மாறும்போது உரிமைக்குரியவளாக ஒருவருக்கு மட்டும் என்று சட்டப்படியும் திறந்த மனதுடனும் சொந்தமாக்கும்போது இன்னொரு ஆள் சந்நியாசியாக வாழ உறுதி பூண்டு ஊரை விட்டேப் போகவேண்டும். இது உடன்படிக்கையின் சாரம். சந்நியாசியாகப் போகும் யோகம் யாருக்கு ஏற்படப்போகிறது என்று அவர்கள் மூவருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.
அழகான உடற்கட்டையும் குணத்தையும் பெற்றிருந்த விக்கிரமனுக்கு நல்ல ஒரு எதிர்காலம் ஏற்படும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள் என்றால் காசு பணமும் குடும்பப் பெருமையும் கொண்டிருந்த விஜயராகவனுக்கு இவையிரண்டும் சாதகமாகஇருந்தது. ஒரு நாள், மூவரும் ஒன்றுசேர்ந்து பார்க்க நேர்ந்த ஒரு வேளையில், தங்களுடைய உடன்படிக்கையைப் பற்றி விக்கிரமன் விலாசினியிடம் சொன்னபோது, அவள் காதுகளைப் பொத்திக் கேட்கக்கூடாததை கேட்டுவிட்ட வேதனையோடு பேசினாள்.
“இத ஒன்னும் எங்கிட்ட சொல்ல வேணாம். நாம இப்படியே இருந்தாலே போதும். யாரும் கல்யாணமே செஞ்சுக்க வேணாம். ஒரு ஆள துக்கத்தோட அலையவிட்டுட்டு மீதி ரெண்டு பேரு எப்படி, இன்பமா இருக்கமுடியும்?”. இந்த விசித்திரமான காதல் கதை மெல்ல மெல்ல வெளியில் வந்தது. அவள் தன் ஆத்மார்த்தமான தோழிகளிடம் இதைப் பற்றி லேசாகக் கோடிட்டுக் காட்டினாள்.
தங்களுடைய கல்விக்கூடத்துக்கு எதிரில் இருந்த பெண்கள் பள்ளிக்கூடத்தில் காரில் இருந்து இறங்கும் அந்த அழகு சுந்தரியை பெருமையோடு இளைஞர்கள் தங்கள் தோழர்களுக்கு அடையாளம் காட்டினார்கள். கரடுமுரடான ஆள் என்று பெயரெடுத்த ஒரு உயர் அதிகாரியாக அவளுடைய அப்பா இருந்தார். அதை விடப் பெரிய அதிகாரியும் பரம்பரைப் பணக்காரக் குடும்பத்தில் இருந்து வந்தவருமாக விஜயராகவனுடைய அப்பா இருந்தார்.
அவர்கள் இருவருக்கும் வெளிப்படையாகச் சண்டைகள் உருவாயின. பெற்ற குழந்தைகளுக்கு இரண்டு பேரும் பல விதமான தண்டனைகளைக் கொடுத்தார்கள். பட்டினி, பழி வாங்குவது, அடைத்து வைப்பது என்று இப்படி பல தண்டனைகள். தூரத்தில் இருந்த விக்கிரமனுடைய வீட்டுக்காரர்கள் மட்டும் இதைப் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தார்கள்.
அவனைப் பற்றி யோசிப்பதற்கே விலாசினியுடைய அப்பாவின் அந்தஸ்து இடம் கொடுக்கவில்லை. ஆனால், கடைசியில் மிகப்பெரிய தண்டனை அவனுக்குத்தான் கிடைத்தது. ஒருநாள் சைக்கிளில் போய்க் கொண்டிருக்கும் போது அவளுடைய கார் ஒலியின் சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்த அவனுக்குப் பின்னால் வந்த அந்த கார் அவன் மீது ஏறியது.
ஆஸ்பத்திரியில் இருந்து பல நாட்களுக்கு அப்புறம் நிரந்தரமாகக் குணமானபோது விக்கிரமனுக்குப் புரிந்தது. உற்றவர்களாக அதுவரை இருந்தவர்கள் அவனுடைய சொந்தக்காரர்கள் எல்லோரும் அவனைக் கைவிட்டிருந்தார்கள். இடது காலில் கொஞ்சம் பகுதியும் அவனைக் கைவிட்டிருந்தது. பெண் பிள்ளைகளுக்குப் பின்னால் சுற்றிக்கொண்டு காருக்கு அடியில் போய் விழுந்த அவனோடு அனுதாபம் ஏற்படவில்லை. மாறாக, எல்லோருக்கும் அருவருப்புதான் ஏற்பட்டது.
ஆபத்தைத் தெரிந்து கொண்டு வந்த வீட்டுக்காரர்கள் உடனேத் திரும்பிப் போய்விட்டார்கள். அவனுடைய தாந்தோன்றித்தனத்தைப் பற்றிக் கேட்டு வெறுப்பு ஏற்பட்டதாலும் அவளுடைய அப்பா மீது இருந்த பயத்தாலும் அவர்கள் அப்படி நடந்து கொண்டிருக்கலாம். கையில் ஊன்றுகோலை ஊன்றியபடி ஆஸ்பத்திரியில் இருந்து இறங்கி வந்த விக்கிரமன் தூரத்தில் இருந்தாவது விலாசினியைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
ஆனால், படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி முன்பின் தெரியாத அந்நியமான ஏதோ ஒரு வீட்டுக்கு அவள் அகற்றப்பட்டிருந்தாள். விஜயராகவனைப் பார்ப்பது அவனுடைய அடுத்த முயற்சியாக இருந்தது. அதுவும் நடக்கவில்லை. சில நாட்கள் வீட்டுக்குள்ளேயே அவன் சிறைபட்ட நிலையில் இருந்தான். அப்புறம் பல நாட்கள் அலைந்து திரிந்து நடந்தான்.
அவனுக்கு நிராசை ஏற்பட்டது. பெருமையும் சூழ்நிலைக்கேற்றபடி செயல்படும் புத்தியும் வழிகாட்டியதற்கு ஏற்ப புத்தகங்கள் விற்று கிடைத்த சிறிய தொகையோடு அவன் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினான். லட்சியம் இல்லாமல் பல இடங்களிலும் அலைந்து திரிந்தான். அந்த அலைச்சல் ஒரு சாதுவான விவசாயியுடைய வீட்டில் சென்று முடிந்தபோது விக்கிரமனுடைய சாதியும் மதமும் பெயரும் தேசமும் எல்லாம் அழிந்து போயிருந்தன.
அந்த வீட்டில் சாணம் மெழுகிய தரையில் உட்கார்ந்து, மணி மாளிகைகளை கனவு கண்ட காலங்களைப் பற்றி அவன் நினைத்துப் பார்த்தான். முதல்முறையாக வாழ்க்கையில் மீளமுடியாத துக்கத்தில் ஆழ்ந்தான். மெலிதான வளையல்கள் இட்ட பூ போல மென்மையான கைகளைப் பிடிக்க அதிர்ஷ்டம் இருந்தும் அவனுக்கு வேலை செய்து செய்து கரடுமுரடான சொரசொரப்பான கைகளோடு கூடிய ஒரு பெண்ணை வாழ்க்கைத்துணையாக ஏற்க வேண்டியதானது.
இருந்தாலும் அவனுடைய இதயம் அவனுடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக ஆபத்தில் ஆழ்த்திய பெண்ணின் அருகில் எப்போது பார்த்தாலும் துள்ளிக்குதித்துப் போய்க் கொண்டிருந்தது. அந்த நினைப்பின் தீவிரத்தால் கூட இப்படி நடந்திருக்கலாம். அதனால்தான் இன்று தன்னுடைய வீட்டுக்கு முன்னால் அவளுடைய கார் கவிழ்ந்து சரியான நேரத்தில் தானே உதவ நேரிட்டது என்று அவன் நினைத்தான்.
விலாசினியில் இருந்து நிமிர்த்தி வழுக்கை விழுந்த தலையைத் தடவியபடி விக்கிரமன் நான்கு பக்கமும் பார்த்தான். பயனற்றுப் போயிருந்த கார் சாலையில் கிடப்பதை அங்கிருந்தே பார்க்க முடிந்தது. காருக்குப் பக்கத்தில் கறுப்பு கோவணத்தை போட்டுக் கொண்டிருந்த மூன்று பையன்கள். விக்கிரமனுடைய குழந்தைகள். அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.
கொஞ்சம் தூரம் தள்ளி தென்னை மர நிழலில் ஓட்டுநர் உட்கார்ந்திருந்தான். விலாசினியுடைய புருஷன் அடிக்கடி சாலையைப் பார்த்துக் கொண்டு வீட்டின் முற்றத்தில் தவிப்பை விட அதிருப்தியை வெளிப்படுத்தும் முகத்தோடு நடந்து கொண்டிருந்தான். சமையலறைத் திண்ணையில் கால்களை நீட்டிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்த விக்கிரமனுடைய மனைவியின் மார்பில் முகம் சேர்த்து விலாசினியுடைய குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.
விலாசினியுடைய புருஷன் ஒரு நிமிடம் நடையை நிறுத்திவிட்டுச் சொன்னான். “தந்தி ஆபீஸ் வரை போகறதுக்கு சைக்கிள் ஓட்டத் தெரிஞ்ச ஆளு யாராவது கிடைப்பாங்களா?”. அந்தக் கேள்வி விக்கிரமனுடைய மனதை மீண்டும் பழைய காலத்தை நோக்கித் தள்ளிவிட்டது. தெளிவில்லாமல் வடக்கில் இருந்து ஒரு மோட்டார் வண்டியுடைய சத்தம் கேட்க ஆரம்பித்தது.
முற்றத்தில் நின்ற ஆள் அவசரமாக சாலையை நோக்கி நடந்தான். முன்பக்கம் யாருமில்லை என்பதைத் தெரிந்து கொண்ட விக்கிரமனுடைய மனைவி பக்கத்தில் வந்து குழந்தையை அவனிடம் கொடுத்தாள். விலாசினியுடைய மிருதுவான இருப்பை அனுபவித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மனைவியுடைய கரடுமுரடான தொடுதலில் அவனுக்கு வெறுப்பும் அருவருப்பும் ஏற்பட்டது.
விலாசினியுடைய புருஷன் வேறொரு ஆளோடு திரும்பி வந்தான். குழந்தையுடைய முகத்தைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்த விக்கிரமன் புது ஆள் வந்த சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டு தலை நிமிர்ந்து பார்த்தான். “விதி இப்படியெல்லாம் கூட விளையாடுமா? வந்து நின்ற விஜயராகவனை விக்கிரமன் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான். விலாசினியுடைய புருஷன் குழந்தையை விக்கிரமனுடைய கையில் இருந்து வாங்கிக் கொண்டான்.
“குழந்தைய அங்க கொடுங்க. அங்க இருக்கறது என்னோட மனைவிதான் இவங்களப் பரிசோதிக்கறேன்” என்று சொல்லி விஜயராகவன் விலாசினிக்கு பக்கத்தில் முட்டி போட்டு உட்கார்ந்தான். இன்னொரு ஆள் குழந்தையை எடுத்துக் கொண்டு காருக்கு அருகில் போனான். சந்தர்ப்பத்தின் சக்தியால் மீண்டும் இளமைக்கு வழி மாறிச்சென்ற விக்கிரமன் அவனுடைய தோளில் கை வைத்து மெல்லக் கேட்டான். “இங்க கிடக்கறது யாருன்னு புரியுதா?”.
அந்தக் கை தட்டிவிடப்பட்டது. கை பட்ட இடத்தை தடவி சுத்தப்படுத்திய பிறகு டாக்டர் விஜயராகவன் மறுபடியும் தளர்ந்துபோனான். அப்பா அம்மா நிர்ப்பந்தத்தால் விலக்கப்பட்ட மூன்று நிர்மலமான இதயங்கள். இருபது வருடங்களுக்குப் பிறகு… முகூர்த்தநேரத்துக்கு மட்டுமாவது அதிர்ஷ்டத்தால் பிணைக்கப்பட்டிருக்க வேண்டிய அந்த அதி அபூர்வமான பாக்கியம் அறியப்படாமலும் கொண்டாடப்படாமலும் போய்விட்டதே என்று விக்கிரமன் துக்கப்பட்டான்.
அவன் இன்னும் கொஞ்சதூரம் தள்ளிப்போய் நின்றுகொண்டு, முன்பை விட மெல்லிய குரலில் பக்கத்தில் எங்காவது நின்றுகொண்டிருக்கக்கூடிய மனைவி கேட்காதவண்ணம் சொன்னான். “நான் விக்கிரமன்… பார்த்தா தெரியல இல்லயா?”. டாக்டர் விஜயராகவன் நிமிர்ந்து உட்கார்ந்து விக்கிரமனை அலட்சியமாகப் பார்த்தான். அந்தக் கண்களில் விக்கிரமன் எதிர்பார்த்த கண்ணீருக்கு பதில் முன்பின் தெரியாதது போன்ற பாவமே மேலோங்கியிருந்தது.
வியப்பும் வெறுப்பும் பளிச்சிட்டன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் உலகப் பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டங்களையும் படிப்பையும் பெற்று பிரம்மாண்டமான சம்பளம் வாங்கும் பொதுமக்கள் எல்லோராலும் அறியப்படும் விஜயராகவன் விக்கிரமனை அருவருப்போடும் வெறுப்போடும் பார்த்தான்.
“கிழிந்துபோன ஒற்றை வேட்டியோடும் ஒற்றைக் காலோடும் இருந்த காட்டுப்பயல் பழைய கதையை சொல்லி தன்னுடைய உரிமையைக் கோருகிறானா? அதுவும் சமுதாயம் மதிப்பு மிகுந்தவள் என்று நினைக்கும் ஒரு பெண்ணுடைய பதினேழாவது வயதில் நடந்த காதல் கதையை ஞாபகப்படுத்துகிறானா…? விக்கிரமன் மறுபடியும் ஏதோ சொல்ல ஆரம்பித்த போதே விலாசினி கண் திறந்தாள்.
விக்கிரமன் மூச்சை இழுத்துப் பிடித்து அவளுடைய முகத்தைப் பார்த்தான். தன்னுடைய சுய அழிவுக்கு பெரும்பாலும் காரணமான அவள் தன்னை யாரென்று புரிந்து கொள்வாளா? கண்ணீரால் நிரம்பி வழியும் கண்களால் பார்க்கக்கூட முடியாதவளாக அவள் இருப்பாள் என்று அவன் நம்பினான். ஆனால், அவளுடைய கண்கள் அந்த பழங்கால மனிதனுடைய முகத்தில் நிமிட நேரத்திற்கு மேல் தங்கி நிற்கவில்லை.
விஜயராகவனிடம் அவள் கேட்டாள். “குழந்தையோட அப்பா?”.
“இதோ இங்க”. சொல்லியபடி விஜயராகவன் எழுந்தான்.
முற்றிலும் அந்நியனைப் போல இருந்தது அவனுடைய குரலும் பாவமும்.
விக்கிரமனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருகாலத்தில் இதயராணியோடு வாழவேண்டிய அன்பு நிறைந்த வாழ்க்கை இப்போது ஆபத்தில் சிக்கிய ஒரு பெண்ணிடம் காட்டும் பரிதாபம் கூட விஜயராகவனுக்கு அவள் மீது தோன்றவில்லை.
விஜயராகவன் முற்றத்திள் இறங்கினான். அவளுடைய கணவனிடம் சொன்னான்.
“நீங்க தாங்கிப் பிடிச்சுகிட்டா போதும், அவுங்கள காருக்குக் கூட்டிட்டுப் போலாம். காயம் ஒன்னும் ரொம்ப மோசமானதா இல்ல”.
விக்கிரமன் அசையாமல் இருந்தான். ஆனால் அவனுடைய கைகள் துடிதுடித்தது.
“அவள கொஞ்சம் தாங்கிப்பிடிச்சு எந்திரிக்கவாச்சும் உதவி செய்யலாம். முன்பொரு காலத்தில் தன்னுடைய கைகளில் இட்டு தாலாட்டு பாடியிருந்த அந்த கல்லூரிப் பெண்ணின் தலையைக் கொஞ்சம் வருடி விடலாம்”. விக்கிரமன் நினைத்துக்கொண்டான்.
வீட்டுக்காரனிடம் நன்றி கூட சொல்லாமல் அவளும் அவளுடைய புருஷனும் கிளம்பிப் போனார்கள்.
அவர்களுக்கு பின்னால் நடக்க ஆரம்பித்த விஜயராகவனைப் பிடித்து நிறுத்தி விக்கிரமன் கேட்டான். “இதுக்கு அப்புறமும் என்னோட தேவை ஏதாச்சும் இருக்கா?”.
“ஒன்னும் வேணாம்”. விஜயராகவன் சொன்னான்.
“முன்னால எங்கேயோ படிச்சுகிட்டு இருந்த காலத்துல விளையாட்டா நடந்ததயெல்லாம் சீரியஸா எடுத்துகிட்டு அதப் பத்தியே நினைச்சுகிட்டிருக்கற முட்டாள்!
சின்ன வயசுல விளயாட உபயோகிச்ச பொம்மையப் பாத்தாக்கூட உங்களுக்கு பைத்தியம் பிடிக்கும் இல்லயா?”.
விக்கிரமன் எதுவும் பேசாமல் பேசவும் முடியாமல் எழுந்திருக்கக்கூட திராணி இல்லாமல் தளர்ந்துபோய் அப்படியே உட்கார்ந்திருந்தான்.