மிகச் சின்ன வயதிலேயே அவளுக்கு “லொட லொட” என்று பெயர் ஏற்படக் காரணம் அவளுடைய நிறுத்தாத பேச்சுதான். பிறந்த போதே தெய்வம் அவளுக்குள் ஏராளமான வார்த்தைகளை நிறைத்திருந்தது. பேச வாயைத் திறக்கும் போதெல்லாம் அவளிடம் இருந்து அவை வெளியில் வர போட்டி போட்டன. நிறைய கேள்விகள். வயதுக்கு ஒவ்வாத ஆராய்ச்சிகள். சந்தேகங்கள். அபிப்ராயங்கள்.
ஆரம்பத்தில் அதி புத்திசாலி என்று சொன்னவர்கள் அப்புறம் அவள் பேச ஆரம்பிக்கும் போது இடத்தைக் காலி செய்து கொண்டு ஓடினர்.
“காக்கைங்க பேசறது போலத்தான் உன்னோட பேச்சும்” அம்மா சொன்னாள்.
”அதுங்க ஆரம்பிச்சா நிறுத்தவே நிறுத்தாது. நல்ல பொண்ணுங்க குருவிங்க போல இருக்கணும். எப்பவாச்சும் முனகும். ஆனா அப்பக்கூட ரொம்ப மெதுவாத்தான் பேசும்”
ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் அவள் தோழிகளுடன் ஆசை தீரப் பேசிச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். அவர்கள் பிரிந்து போய்விட்டால் வீட்டுக்குப் போக இரண்டு மணி நேரம் நடக்க வேண்டும். அப்படி ஒரு நாள் சாயங்காலம் தாழம்பூ பொதிந்த ஒரு காகிதத்தைப் புத்தகப்பையின் மீது எறிந்த சைக்கிள் பையன் ஒருவன் ஓடி மறைந்து போனான். “என்ன அழகு உனக்கு?” தாழம்பூ வாசனையுள்ள எழுத்துக்கள் பேசின.
“உன்னோட சிரிப்பில் என்னோட வார்த்தைங்கள நான் பிரதிஷ்டை செய்யறேன்”. அவள் படித்த ஸ்கூலுக்குப் பக்கத்தில் இருந்த ஆண்கள் பள்ளிக்கூடத்தில் அவன் படித்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் அரசியலும், கொஞ்சம் கவிதையும் கலந்த நிறைய லீடர்ஷிப் திமிர் உடையவன். அவளுடைய அலமாரியில் நிறைய தாழம்பூக்கள் குவிந்தன. அவள் அவனுடன் நேரடியாகப் பேசியது இல்லை. ஆனால் அவனுடைய உறுதியான பார்வை அவளுக்குள் தங்கியது.
ஏ ப்ளஸ் வாங்குவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால், அவன் பரீட்சையில் ஜெயித்தோ தோற்றோ எங்கோ மறைந்து போனான். “ரொம்ப பேசாத”. கல்லூரி ஆசிரியை சொன்னாள். “இப்படி எப்பப் பாத்தாலும் பேசிகிட்டே இருக்கறதுனாலதான் உன்னால வேற எதிலயும் உன்னோட திறமையக் காட்ட முடியாமப் போகுது. வாரத்துல ஒரு நாள் மௌனவிரதம் இரு”
ஆனால் அதை அவளால் பின்பற்ற முடியவில்லை.
“உன்னை விட அதிகமாப் பேசற ஆளதான் உனக்குக் கட்டி வைக்கணும். அதான் உனக்குக் கிடைக்கற தண்டனை”ஆயா சொன்னாள்.
ஆனால் தண்டனை வந்தது வேறுவிதத்தில். பேசுவதையேக் கொஞ்சமும் விரும்பாத ஒரு ஆள்தான் அவளுக்குப் புருஷனாக வாய்த்தான். “சீரியஸான விஷயத்த மட்டும் பேசினாப் போதும்” முதலிரவில் அவன் சொன்னான்.
“சாக்ரடீஸின் சட்டம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏதாச்சும் சொல்றதா இருந்தா அதுக்கு முன்னால மூணு விஷயங்களப் பத்தி யோசிக்கணும். சொல்றது சத்தியமானதுதானா என்று உத்தரவாதம் இருக்கா? சொல்றது நல்ல விஷயமா? அதக் கேட்கற ஆளுக்கு ஏதாச்சும் அதனால நன்மை இருக்கா?” அவன் தொடர்ந்தான். இந்த மூன்று வடிகட்டிகளின் வழியாக அரித்து எடுக்கும் போது வார்த்தைகள் காணாமல் போவதை அவள் உணர்ந்தாள்.
இதனால் இரண்டு படுக்கையறைகள் உடைய ப்ளாட்டில் அவன் வேலைக்குப் போன பிறகு அவள் வடிகட்டிகளை எறிந்துவிட்டு தனக்குத்தானே பேச ஆரம்பித்தாள். ஆனால், இது அவளுக்கு சீக்கிரமே அலுத்துப்போனது. வார்த்தைகள் அவளையேச் சுற்றிக் கொண்டிருந்தன. அவள் பேச்சைக் கேட்கப் பறவைகள் இல்லை. செடிகள் இல்லை. எதுவுமேயில்லை. புருஷனும், எப்போதாவது வரும் அவனுடைய அம்மாவும் நண்டுகள் போல அவளுக்குத் தோன்றினர்.
மரத்தடியில் செடித்தண்டில், தரையில் கெட்டியாகப் பிடித்து உட்கார்ந்திருப்பதுதான் அவற்றின் வேலை. அவை மற்றவற்றை எதுவும் செய்யாது. திடீரென்று நீளமான நாக்கு வெடிகுண்டு போல பாயும். வண்ணத்துப் பூச்சிகள், சிறிய பிராணிகளை பிடித்து உள்ளேத் தள்ளும். இது மாதிரி ஆட்கள் எல்லோரும் சேர்ந்து அவளுடைய வார்த்தைகளைப் பிடித்து அடுக்கத் தொடங்கினார்கள்.
கர்ப்பிணியான மகளைப் பார்க்க வந்த அம்மா, அவளுடைய அசாதாரணமான மௌனத்தை சகிக்க முடியாமல் அழுதாள். ஆனால் அப்பா மருமகனுடைய கையைப் பிடித்து “வெல்டன் மாப்பிள்ளை. நான் தோத்துப் போன விஷயத்துல நீங்க ஜெயிச்சுட்டீங்க. இவ ஓயாமப் பேசறத நிறுத்திட்டீங்களே!” அப்பா சொன்னார்.
சிகிச்சை நேரத்தில் அவளுக்குள் கடவுள் நிரப்பிய வார்த்தைகள் ஒன்று சேர்ந்து அழுகிய வாசனை அடித்ததால் ஏற்பட்ட துர்நாற்றம் அடக்க முடியாமல் போனபோது அவள் வாந்தி எடுக்கத் தொடங்கினாள். அப்போது அது சாதாரணமானது. “இந்த நேரத்துல மருந்து சாப்பிடாம இருக்கறதுதான் நல்லது. தானா எல்லாம் சரியாயிடும். அம்மாவாப் போறதுல கிடைக்கற ஒரு தனி அனுபவம் என்ன?” கவுன்சிலர் கேட்டாள்.
“இதென்ன நீங்க இப்படி உற்சாகம் இல்லாம இருக்கீங்க? நிறய பேசற ஆளுன்னு உங்க புருஷன் சொன்னாரே? இப்ப என்ன ஆச்சு? வார்த்தைங்களுக்கு இப்ப என்ன ஓய்வு? இந்த வித்தியாசத்துக்குக் காரணம் என்ன? மனம் விட்டுச் சொல்லுங்க”
“நான் பேசறத கேக்கறதுக்கு யாருக்கும் இஷ்டமில்ல. அதான் நான் எதுவும் பேசறது இல்ல. அவ்வளவுதான்”. கவுன்சிலர் சிரித்தாள்.
“நீங்க சொல்றத கேக்க ரொம்பவும் ஆசப்படற ஒரு ஆள் இங்க இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? உங்க வயித்துல வளர்ற குழந்தைதான் அந்த ஆள். அதோடப் பேசுங்க. நல்லத எல்லாம் சொல்லிக் கொடுக்க மறந்துடாதீங்க. அது சொல்றத எல்லாம் அப்படியே கேட்டுக்கும். செய்யும்”
அன்று முதல் அவள் குழந்தையுடன் பேச ஆரம்பித்தாள். நிறைய பேசியவுடன் சலனங்கள் வழியாக குழந்தை பேசுவதை உணர்ந்தாள். “உன்னை எல்லாரும் குத்தம் சொல்றது எதுக்காக? பேசினாத் தப்பு. பேசலைன்னா தப்பு”
“குழந்தையா இருந்தப்ப நான் நிறைய திட்டு வாங்கியிருக்கேன் மகனே. அதனாலதான் நான் மனசுக்குப் பிடிச்ச செடிங்களோடயும், பூனைங்களோடயும், காக்கைகளோடயும் பேச ஆரம்பிச்சேன்”
“உங்ககிட்ட ஒரு இரகசியம் சொல்லட்டுமா? நீங்க நிறயப் பேசப்பேச அதல்லாம் எனக்குப் புரிய ஆரம்பிச்சுது” குழந்தை சொன்னது.
“சில பேருக்கு காத்துதான் மூச்சுன்னா எனக்கு வார்த்தங்க தான் உயிர்மூச்சு. அவ்வளவுதாண்டா. ஆனா இது யாருக்கும் புரியறதில்ல. அவங்க எல்லாரும் என்னைப் பைத்தியக்காரின்னு சொல்றாங்க. அப்படி சொல்றவங்கள எனக்கு கோபம் வர்றப்ப ஒரே உதை உதைக்கணும்னு தோணும்” அவள் மனது வேதனைப்பட்டது.
“இத்தனயயும் சகிச்சுகிட்டு இருக்கியே அம்மா. வெளியில வந்து உங்கள அப்படிச் சொன்னவங்க எல்லாத்தயும் நான் உதச்சு நொறுக்கறேன்”.
அவள் தனக்குத்தானேப் பேசுவது அவளுடைய புருஷனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவன் அவளுடைய அம்மாவை அழைத்தான். “இருபத்தி நாலு மணி நேரமும் தனியா இருந்து பேசறா. இப்படியேப் போனா சரிப்படாது. அம்மா கொஞ்ச நாளைக்கு வந்து இருக்கணும்”
அம்மா அவளுடைய கையில் மகா பாகவதத்தை வைத்துவிட்டு சொன்னாள். “கிருஷ்ணலீலாவ வாசிச்சுகிட்டே இரு. வயித்துல வளர்ற குழந்தை கேட்டுக் கத்துக்கும். கிருஷ்ணன் மாதிரி வளரட்டும். சும்மா அதும் இதும் பேசி குழந்தையைக் கெடுத்துடாத”
அவள் அதைப் படிக்க முயற்சி செய்தாள். “குடனாவதம். சகடாசுரவதம். பிரகாசுரவதம். அகாசுரவதம்” அவள் படிப்பதை நிறுத்தினாள்.
“கிருஷ்ணன் கிருஷ்ணந்தான். ஆனா இதெல்லாம் யாரைக் கொல்றதுக்கு? உன்னை யாரும் கொல்லாம நான் பாத்துக்கறேன்” குழந்தை சொல்லிக் கொண்டே நிம்மதியில்லாமல் புரண்டு படுத்தது.
“சந்தோஷமா வா பாப்பா. நீ வந்தப்புறம் நாம ஒன்னா சேந்து பட்டாம்பூச்சிகளோடப் பின்னால ஓடணும். எனக்கு வானவில்லப் பாக்கணும். நீ பாத்ததில்லியே. கடல் அலய நீ பாத்தது இல்லியே. அது மேல ஏறி நாம விளயாடணும்”
“மேடம்” கவுன்சிலர் கூப்பிட்டாள்.
“நீங்க கற்பனயான ஒரு உலகத்துல வாழறீங்க. காத்துல ஏறி வானவில்லப் பிடிக்கமுடியுமா? இதுக்கு பதிலா நீங்க குழந்தையை எந்த ஸ்கூல்ல சேக்கணும்னு யோசிங்க. நீங்க அவனை ஒரு நல்ல குடிமகன வளக்கறேன்னு சொல்லுங்க. நிஜ வாழ்க்கைக்குத் திரும்பி வாங்க”
“நிஜ உலகத்துல யாருக்கும் என்னைப் பிடிக்காது” அவள் சொன்னாள்.
“நம்ம தேவைங்க என்ன? சமைக்கற, துணி துவைக்கற, டிவி பாக்கற யந்திரமா நாம? யந்திரங்களுக்கு மொழி இல்ல”
“மேடம்” கவுன்சிலர் கனிவுடன் அழைத்தாள்.
“யதாத்தமான உலகத்துலதான் உங்க குழந்தை பிறக்கப் போகுது. வளந்தா உங்க குழந்தை இங்கதான் வளரணும்”
“ஓஹோ. நீங்கதானே என்னை குழந்தையோடப் பேசச் சொன்னீங்க?” அவள் கோபப்பட்டாள்.
“ஆமாம். இப்படி சதாசர்வகாலமும் பேசவா நான் சொன்னேன்? நல்லதச் சொல்லிக் கொடுக்கத்தானே நான் சொன்னேன்? மேடம் இப்பப் பாருங்க. உங்களுக்கு உங்க மேலயே அக்கறை இல்ல. உங்க பேச்சால நீங்க எப்படி இருக்கீங்க பாருங்க? முடிய சீவிக்கக்கூட இல்ல. படுத்த படுக்கையிலேர்ந்து எழுந்து வந்தது மாதிரி இருக்கு. நல்லா டிரஸ் செஞ்சு உங்க சார் முன்னால வந்து நில்லுங்க. சாருக்கு உங்களப் பிடிக்கும். சொல்றத சுருக்கமாச் சொல்லப் பழகிக்கங்க. அவருக்கு நிச்சயமா உங்களப் பிடிக்கும்”
“இதெல்லாம் நடக்காது மேடம்” அவள் சொன்னாள்.
“இனிம நான் பேசாம இருக்கறேன். ஆனா ஒன்னு. அவுங்க மறுபடியும் உங்களை இங்க உபதேசம் சொல்ல அனுப்பினாங்கன்னா எனக்குப் புத்திமதி சொல்ல வராதீங்க” அவள் வழக்கத்திற்கு மாறாக கோபப்பட்டதைப் பார்த்து கவுன்சிலர் பயந்து போனாள்.
தெய்வம் எப்போதும் சேராதவர்களையேச் சேர்க்கும். அவள் நினைத்துக்கொண்டாள். இசையில் நாட்டமுள்ள தனக்கு, பாட்டு என்றாலே வன்முறையில் இறங்கும் புருஷனையல்லவா தெய்வம் தந்திருக்கிறது? கல்யாணம் நடப்பதற்கு முன்பு வரை ஒரு ப்லிம் பெஸ்ட்டிவலையும் பார்க்காமல் விட்டதில்லை. இப்போது சினிமா தியேட்டர் முன்னால் கூட நடக்க முடியவில்லை.
ஒருவேளை அந்த ஆளுடன் அனுசரித்து, தான் போவதால்தான் அடுத்தவர்களுக்கு உபதேசம் கொடுக்கும் இந்த வேலைக்கு தான் வந்ததோ? அவள் நினைத்தாள்.
பாப்பா கேட்டது. “அம்மா. நீ ஏன் ரெண்டு நாளா எங்கிட்டப் பேசல?”
அவள் திடுக்கிட்டாள். “நீ பேச ஆரம்பிச்சிட்டியா பாப்பா?”
“ஆமா. அப்பதானே நான் தினம் வளரமுடியும்? ஆனா நான் பேசறத உன்னால மட்டும்தான் கேக்கமுடியும். இது வார்த்தைங்க இல்லாத மொழி. பாப்பா மொழி. நான் உனக்கு இதச் சொல்லித் தரேன். இனிமே மத்தவங்க பேசறத எல்லாம் நீ கேட்டுகிட்டு இருக்க வேணாம். நாம ரெண்டு பேரும் பாப்பா மொழியில பேசலாம்”
மற்றவர்களின் பச்சோந்தி நாக்குகளைப் பிடித்து வீட்டின் மூலையில் எறிந்த வார்த்தைகளின் கூட்டத்தில் அவள் தன் வார்த்தைகளையும் போட்டாள். எல்லோருக்கும் திருப்தியாகட்டும். அவள் வெகுசீக்கிரம் பாப்பா மொழியைக் கற்றுக்கொண்டாள். பிறகு மனிதர்களின் வார்த்தைகளை அவள் பயன்படுத்தவேயில்லை.
“அம்மா நீங்க உடனே வந்தாத்தான் சரியாகும். ஒன்னும் பேசறது இல்ல. தனியா இருந்து சிரிக்கறா. சைகை காட்டறா. சில சமயத்த்துல அழறா. நிலமை ரொம்ப மோசமாப் போச்சே. இனிம ஒரு கவுன்சிலர் மண்ணாங்கட்டியும் வேணாம்” அவன் அவள் அம்மாவிடம் சொன்னான்.
“மூணு மாசம்தானெ இருக்கு. குழந்த வெளிய வர்ற மட்டும் பொறுமயா இருக்கலாம்”
“அப்புறம் என்ன செய்யறதுன்னு எனக்குத் தெரியும்” அம்மா சொன்னாள்.
“அம்மா?”. குழந்தை அவளிடம் சொன்னது. “இப்ப நீ பேசறதேயில்லைன்னும் சொல்றாங்க பாத்தியா?”. நீ எங்கூட சிரிக்கறது, சைகை காட்டறது எதுவும் அவுங்களுக்குப் பிடிக்கறதில்ல.
“பரவாயில்ல பாப்பா. அவள் பாசத்தோடு சொல்லியபடி தன் வயிற்றைத் வருடிவிட்டாள். அன்றிரவு. அவள் கணவன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கட்டிலில் இருந்து எழுந்து வயிற்றையும் தாங்கிப் பிடித்துக்கொண்டு டாய்லெட்டை நோக்கி நடந்தாள். அப்போது பாப்பா பேசியது.
“அம்மா வேணாம். போகவேணாம். அங்க ஒரு திருடன் இருக்கான். எக்சாஸ்ட் ஃபேன் வழியா உள்ள புகுந்திருக்கான். வெளியில வர்றதுக்கு இருக்கற வாசல அவனால திறக்கமுடியாது. நீ திறந்து விடாம இருந்தா கொஞ்சநேரம் பாத்துட்டு அவன் வந்த வழியில திரும்பிப் போயிடுவான்”
அவள் ஒரு நிமிடம் சந்தேகத்துடன் நின்றுவிட்டு டாய்லெட் வாசலை நோக்கி நடந்தாள்.
“வேணாம்மா. அவனோட கையில கத்தி இருக்கு. நம்பளக் கொன்னுடுவான். உலகத்தப் பாக்காமயே நான் போறது ரொம்ப சங்கடமா உனக்கும் எனக்கும் இருக்கும் இல்லயா?”
“கத்திய வச்சா முதல்ல நாக்க அறுப்பானா கழுத்த அறுப்பானா?” என்று தனக்குத்தானே யோசித்தபடி டாய்லெட் கதவைத் திறந்தாள். உள்ளே நுழைந்தாள். வாசலுக்குப் பின்னால் இருந்த திருடன் சட்டென்று கதவை மூடினான். திடீரென்று அங்கு தாழம்பூவின் வாசனை வீசியது. திருடன் முகத்தை மறைக்கப் போட்டுக்கொண்டிருந்த முகமூடிக்குப் பின்னால் கூர்மையான பார்வையுடன் இரண்டு கண்கள்.
அவள் காதுகளில் ஒரு சைக்கிள் பெல் ஒலித்தது. “சத்தம் போட்டா கொன்னுடுவேன்” திருடன் மெல்லிய குரலில் சொன்னான்.
“சீக்கிரமா கம்மலயும் மணியயும் மாலையயும் கழட்டு. கர்ப்பிணியா இருக்கறதுனால உன்னை நான் ஒன்னும் செய்யப் போறதில்ல”
அவள் அந்தக் கண்களை உற்று நோக்கினாள். அதே கண்கள். சைக்கிள் பெல்லின் சத்தம். தாழம்பூவின் மணம். பூவை உள்ளே வைத்துப் பொதிந்த நாசிகள். “உனக்கு என்னை அடையாளம் தெரியலயா?” அவள் கேட்டாள்.
ஆனால் வார்த்தைகள் இல்லாத குழந்தை மொழி அவனுக்குப் புரியவில்லை. “இங்க பாரு. நீ கவர்மெண்ட் பாய்ஸ் ஸ்கூல்லதானே படிச்ச? தாழம்பூ பொதிஞ்சு தந்த கடிதங்கள உனக்கு ஞாபகமிருக்கா?”
“வேகமா எல்லாத்தயும் கழட்டு”. அவன் முன்னால் வந்து அவள் கழுத்தில் கத்தியை அழுத்தினான். அந்த விநாடி அவனுடைய கண்கள் அவள் கண்களுடன் கலந்தன. புயலோ சுனாமி பேரலையோ ஏதோ ஒன்று அவனைப் பின்னோக்கித் தள்ளியது. “சைக்கிள் மேல் இருக்கும் இளம்பெண். நிறுத்தாமல் சிரித்து சிரித்துப் பேசும் அழகான இளம்பெண். எழுத்தே தெரியாதவனை கவிதை எழுதவைத்தவள். “தெய்வமே. நான் உன் முன்னால எப்படி வந்தேன்!”
அவன் திடுக்கிட்டான். “நான் இன்னும் மறக்கவேயில்ல” அவள் சொன்னாள்.
“உன்னோட கண்ணுங்க. எப்படி எரியற கண்ணுங்களா இருந்திச்சு!”
“அம்மா. அந்த ஆளுக்கு பாப்பா பாஷை தெரியாது. அம்மா. எல்லாரும் பேசற வார்த்தைங்கள பேசு. இல்லாட்டா அவன் நம்பளக் கொன்னுடுவான்”
“உன்னோட எழுத்துலயும் தீ இருந்தது. அத எல்லாம் மறுபடி மறுபடி வாசிக்கறப்ப அந்த நெருப்பு என்னை எரிச்சு சாம்பலாக்கினது உண்டு. தீ படர்ந்து.. படர்ந்து.. படர்ந்து.. அப்படி” அவளுடைய கண்கள் மெல்ல மூட ஆரம்பித்தன.
“இவ ஏன் இப்படி ஆயிட்டா?” திருடன் நினைத்தான்.
“ஏன் ஒன்னும் பேசாம வெறுமனே உதட்ட மட்டும் அசைக்கறா. என்னைப் புரிஞ்சுகிட்டு இருப்பாளோ?” சைக்கிள் ஓட்டும் இளம் பையனாக அவன் மாறினான்.
தோழிகளுடன் சிரித்து பேசும்போது, அவள் அவனை நோக்கி பூமழைப் பார்வையைப் பொழிந்தாள். “நீ எங்கப் போயி மறஞ்ச? உன்னைக் காப்பாத்த முடிஞ்சிருக்குமே” சொல்லிக்கொண்டே திருடனின் மீது அவள் குழைந்து விழுந்தாள்.
இருட்டில் ஒரு குழந்தையுன் உயிர்ப் பிச்சை வேண்டி அழுகை பெரிதாகக் கேட்டது போல அவனுக்குத் தோன்றியது. திக்பிரமையுடன் திருடன் அவளைத் தாங்கிப் பிடித்தான். சலனம் இல்லாத உடலுக்கு எடை அதிகமாவதை அவன் உணர்ந்தான்.
அவளுடைய அடைந்து போன கண்களிள் நிறம் மங்கிய உதடுகளில் ஜில்லிப்பு படர்வதை அவன் உணர்ந்தான். ஆபத்தைப் புரிந்துகொண்ட அவன் அவள் உடலைத் தரையில் கிடத்தினான். வந்த வழியே பாய்ந்து ஓடி மறைந்தான். காதலானாலும் கள்ளனானாலும் சொந்தப் பிரச்சனைதானே முக்கியம்?
அடுத்த நாள் காலையில்தான் அவளுடைய உயிர் இல்லாத உடலை கணவன் பார்த்தான். ஜில்லிட்டு மரத்துப்போய் அது தரையில் சரிந்து கிடந்தது. ஏதோ ஒரு பூவின் வாசனை அங்கு வீசுவது போல அவனுக்குத் தோன்றியது. முகத்தை மறைக்கும் துண்டு இல்லாமல் கையில் கத்தியும் இல்லாமல் திருடன் சாதாரணமானவர்களில் ஒருவனாக கூட்டத்தோடு கலந்து நடந்து வந்தான். தையல்கள் போட்டுக் கட்டப்பட்டிருந்த அவளுடைய உடல் நிலவிளக்குகளுக்கு நடுவில் கிடத்தப்பட்டிருந்தது. ஒரு நிமிடம் அவன் அந்த உடலைப் பார்த்தான். பிறகு கைக்குள் மறைத்து வைத்திருந்த தாழம்பூவை அந்த உடலின் மீது சமர்ப்பித்தான்.
வெளிறிய அவளுடைய முகத்தை நோக்கி அவன் மௌனமாக சொன்னான். “ஒரு வார்த்தை. குடத்திலேந்து தண்ணீர் வழியறது போல நீ கிளறிவிட்ட சிவந்த நட்சத்திர வார்த்தைங்கள்ல ஒன்னு. எனக்குத் தராதது ஏன்? நான் ஊமையாகாம இருப்பேன் இல்லயா? என்னோடக் கவிதை உதிந்து போகாம இருக்குமில்லயா?”
நாற்காலியில் சாய்ந்திருந்த அவளுடைய புருஷன் முன்பின் அறிமுகமில்லாத அந்த அந்நியனை வெறுமனே ஒரு பார்வை பார்த்தான்.
பிறகு அவன் மனைவியின் பக்கம் திரும்பி மனதிற்குள் சொன்னான். “ஒரு வார்த்தையாச்சும் எங்கிட்டப் பேசிட்டுப் போ பெண்ணே”. அவள் பிடித்து எடுத்ததும் தனக்குத்தானே சொல்லிக் கொண்டதுமான வார்த்தைகள் தூசுகள் படர்ந்த மூலையில் கிடந்து பல்லைக் காட்டி இளித்தன.