கோயிலில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது. “ஹரஹர மகாதேவா... கைலாசவாசா... காப்பாத்தணும்” வேலு தாத்தா கட்டிலில் இருந்து அவசரமாக எழுந்திருந்து கோயில் இருக்கும் திசையைப் பார்த்துத் திரும்பி நின்று கை கூப்பி பிரார்த்தித்தான்.
சரவெடியோசை.
கட்டிலில் இருந்து சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்டான். “நமச்சிவாயா... நமச்சிவாயா...” கொடியேறியதைப் பார்த்துவிட்டு திரும்பி வந்த கோபாலன் மேள தாளத்திற்கேற்ப நடந்து தாத்தாவுக்குப் பக்கத்தில் வந்தான்.
“கொடியேறினதப் பாத்தியா? உண்டியல்ல காசு போட்டியா? கூட்டம் வந்துச்சா?” வயதான வேலு ஒவ்வொன்றாக கேட்டான்.
“லம்போதரந்தான் வந்திருந்தான். பாபு யானை கிட்ட போனான். கீதா வழியெல்லாம் அழுதுக்கிட்டே வந்தா. அவளோட பலூன ஊதிப் பெரிசாக்கலைன்னு ஒரே அழுகை. அதுல ஒரு ஓட்டை”
- இப்படி நடந்ததை ஒன்றுவிடாமல் குழந்தைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
கோயிலில் இருந்து கொண்டு வந்த புனித நீரையும், பிரசாதத்தையும் ஈஸ்வரி அப்பாவுக்குக் கொடுத்தாள்.
“கொடியேறறதுக்கு முன்னால வீட்ட புதுப்பிக்கலயே?” வேலு சோகத்தோடு சொன்னான்.
மகள், ‘அப்பா கஞ்சி குடிக்க வர்றியா? வேணும்னே செய்யல”
“நான் சும்மா சொன்னேன். அவ்வளவுதான்”, அவன் சமையலறை வாசலை நோக்கி நடந்தான்.
“யாரயும் குத்தம் சொல்றதுக்காக நான் சொல்லல”
வேலு கஞ்சி குடிப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த ஈஸ்வரி கேட்டாள். “இன்னும் கொஞ்சம் உப்பு வேணுமா?”
“வேணாம்”
அவள் தொடர்ந்தாள். “சட்னிக்கு காரம் கொஞ்சம் கூட ஆயிடுச்சா?”
“இல்ல”
“மணி பதினொன்னு ஆயிடுச்சில்லயா? இவ்வளவு நேரம் எதுவும் சாப்பிடாம இருந்ததுனால பசி அதிகமாயிருக்கும்”
“அதெல்லாம் ஒன்னுமில்ல” என்று சொல்லிக் கொண்டே அவன் நிதானமாக கஞ்சி முழுவதையும் குடித்தான்.
தினமும் ஒன்பது மணிக்கு முன்பே அவன் கஞ்சி குடித்து விடுவான். இன்றைக்குக் கோயில் கொடியேற்றம் முடிந்த பிறகு அதைச் செய்யலாம் என்று இருந்தான். அவனுடைய பல செயல்களும் கோயில் காரியங்களோடு பின்னிப் பிணைந்திருந்தன. கோயிலுக்குப் போய் கும்பிட்டுப் புனித நீரை வாஞ்கிக் குடித்துவிட்டுத்தான் அவன் தண்ணீர் கூட குடிப்பான்.
ஒரு வருடமாக அது முடங்கிப் போயிருக்கிறது. கோயில் குளத்தில் தலையை அமிழ்த்தி மூழ்கி குளிக்கவும் கோயிலுக்கு நடந்து போகவும் இனி மேல் அவனால் முடியாது.
கொடியேறினால் அது இறங்குவது வரை குளத்தில் தூண்டில் போட அவன் ஒத்துக்கொள்ள மாட்டான். பசு கன்று ஈன்று சுரக்கும் முதல் பாலை சாமிக்கு அபிஷேகம் செய்யக் கொடுக்க வேண்டும்.
தென்னை மரத்தில் காய் வந்தால், முதல் குலையை கொப்பரையாக மாற்றி எண்ணை எடுக்கக் கொடுத்து, கிடைக்கும் எண்ணை மொத்தத்தையும் கோயிலுக்குக் கொடுத்து விடுவான். இதையெல்லாம் அவன் மட்டும் செய்ய மாட்டான். இதே மாதிரி செய்யவேண்டும் என்று மற்றவர்களையும் செய்யச் சொல்லுவான்.
மாதவன் பிள்ளை சாப்பிட வந்தான். அவன் அந்த ஊரில் இருந்த ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர். வேலுவுடைய மருமகன்.
சாப்பாட்டை போட்டுவிட்டு ஈஸ்வரி வீட்டுக்காரனிடம் சொன்னாள். “கொடியேறறதுக்கு முன்னாலயே வீட்டக் கொஞ்சம் புதுப்பிச்சிருக்கணும்னு அப்பாவுக்கு மனசுல வருத்தம்”.
“மழைக்காலம் இப்பதானே வருது. அதுக்கு முன்னால செஞ்சுடலாம்”
“மழை வர்றதுக்காக இல்ல. கோயில் திருவிழாவுக்கு முன்னால இதயெல்லாம் செஞ்சிடுவாங்க இல்லயா?”
“விழா கோயில்லதானே? நான் சின்னப்பையனா இருந்தப்ப இப்படியெதுவும் செய்யலயே?”
வேலு அவன் அருகில் சென்றான்.
“நீங்க இதப் பத்திப் பேசி சர்ச்சை செய்ய வேணாம். நான் சும்மாதான் சொன்னேன். எப்பவாயிருந்தாலும் கட்டணும். முன்னால செஞ்சிருந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன்.
கொடியேறறதுக்கு முன்னால வீட்டயும், தோட்டத்தயும் சுத்தப்படுத்தி வைக்கறத நான் நினைச்சுப் பாத்தேன். அவ்வளவுதான்”
“அது நடுவுல வந்த பழக்கம்தானே? இங்க முன்னால திருவிழாவெல்லாம் நடந்தது இல்லயே?” மாதவன் பிள்ளை சொன்னான்.
“முன்னால நடக்காமதான் இருந்திச்சுதான். இது பதிமூனாவது திருவிழா. உங்களுக்கு எல்லாம் அது தெரியும்தானே?”
மாதவன் பிள்ளைக்குத் தெரியும். ஈஸ்வரிக்குத் தெரியும். ஊர்க்காரர்கள் எல்லோருக்கும் தெரியும். அது ஆத்தங்கரையை ஒட்டி இருந்தவங்களோட கோயில். வேலுப்பிள்ளையின் சிறுவயதில் ஐந்து ஏக்கர் அளவு இருந்த இடத்தில் நடுவில் திருக்கோயிலும் சுற்றிலும் கட்டுமானங்களும் உண்டாயின. தினம் ஒரு நேரம் பூசை. கோயில் தோட்டத்தில் பத்து பதினைந்து தென்னை மரங்கள். ஒரு குளம். நிறைய இடம் புதர் மண்டி காடு போல கிடந்தது. அங்கே ஒரு இலுப்பையும் காஞ்சரமும் நீயோ நானோ என்பது போல போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்து நின்றன. அந்த மரங்களும் காடும் குரங்குகளின் வசம் இருந்தது. வெளியில் கோயிலுக்கு என்று சொந்தமாக ஏழு ஏக்கருக்கும் அதிகமான இடம் இருந்தது. அங்கே தென்னையும் குடப்பனையும் பலாவும் மாமரங்களும். கோயில் சொத்துக்களை மூன்று வருடக் குத்தகைக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்தது. வரும் லாபத்தின் அடிப்படையில்தான் குத்தகைக்கான தொகை நிச்சயிக்கப்படும். அப்புறம் எட்டு ஏக்கர் அளவுக்கு நிலமும் இருந்தது. அதெல்லாமும் கோயில் சொத்துதான்.
அதெல்லாம் குத்தகைக்காரர்கள் வசம் இருந்தது. ஆத்தங்கரைக்காரர்களுடைய நிர்வாகக் கமிட்டிதான் கோயில் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டது. மூன்று வருடத்துக்கு ஒரு தடவை மேலாளரைத் தேர்ந்தெடுப்பார்கள். அவருக்குச் சம்பளம் கிடையாது. வேறெந்த ஆதாயமும் அனுமதிப்பதில்லை. வேலுப்பிள்ளை ஒரு தடவை மேலாளரானான். முப்பது வருடம் அதே பதவியில் இருந்த பிறகு அவன் தானே விலகினான். தொடர்ந்து அந்தப் பதவிக்குப் போட்டி போட்டுக் கொண்டு சிலர் வந்தார்கள். பதவியின் பெயர் மாற்றப்பட்டது. வேலுப்பிள்ளை ஆரம்பத்தில் இருந்தே எல்லோரையும் கோயில் பக்கம் வரச்செய்யும் அளவுக்கு கவனத்தை ஈர்க்கும் வேலைகளைச் செய்தான். ஓசையும் அசைவுகளும் ஏற்பட்டபோது அடுத்த ஊரில் இருந்துஆட்கள் சாமியைப் பார்க்கக் கோயிலுக்கு வந்தார்கள். வரும்போது அவர்கள் அர்ச்சனை அபிஷேகம் என்று ஏதாவது செய்தார்கள். உண்டியலில் ஒரு நாணயத்தைப் போடுவார்கள். விளக்குக்கு ஊற்ற எண்ணை வாங்கிக் கொடுப்பார்கள்.
வேலுப்பிள்ளை கோயிலைச் சுற்றி மதில் சுவர் கட்டினான். முன்பக்கச் சாலைக்குப் பக்கத்தில் கடைகளைக் கொண்டு வந்தான். வாடகைக்கு விட்டான். கோயில் தோட்டங்களில் பழ மரங்களை நட்டு வளர்த்தான். குத்தகைக்காரர்களிடம் இடைத்தரகர்கள் இல்லாமல், நேராகக் குத்தகைப் பணத்தை வாங்கினான். ஊர்க்காரர்களுக்கு உற்சாகம் பீரிட்டது. அவர்கள் சிறு சிறு நன்கொடைகளைத் தந்தார்கள். ஒரு நேரப்பூசை இரண்டு நேரமானது. சிவராத்திரிக்கு விசேஷ பூசைகள் காவடி ஆட்டம். நித்ய பூசை ஐந்து தடவையானது. கோயிலின் புகழ் அதிகமானது, வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. மாதத்தில் ஒரு தடவை ஊர்க்காரர்கள் கோயிலில் கூடிப் பேசினார்கள். செய்யவேண்டிய வேலைகளையும் செய்தவற்றையும் பற்றிக் கலந்து பேசினார்கள். கூட்டம் நடத்த ஒரு நீண்ட அறையும் கட்டப்பட்டது. சொல்வதற்கு எல்லாம் சுலபம்தான் வேலுப்பிள்ளை கோயிலே கதியென்று முழு நேரமும் கோயிலுக்கு நடையா நடந்தான். துன்பமடைந்தான். வெய்யிலில் அலைந்தான். தூக்கத்தைத் தியாகம் செய்தான். பலருக்கு முன்னால் கை கூப்பி கும்பிட்டு கை நீட்டினான். கடன் தொகை அதிகமானபோது அடுத்தவர்களுடைய முணுமுணுப்புகளைச் சகித்தான்.
“சும்மா சும்மா காசு கேட்டா எங்கேர்ந்து கொடுப்பாங்க” அடிக்கடி அவன் சொல்லுவான். கோயில் ஊருக்கேச் சொந்தமானது. “மதிலுக்கு உள்ளாற ஒரு புல்லப் பறிச்சா கையில இருக்கற தங்க வளையல் ஒன்னும் காணாமப் போயிடாது. விளக்க தேச்சு வச்சா குறைஞ்சு போயிடாது. குளத்த சுத்தப்படுத்தணும்னா எல்லாருக்கும் துன்பமாத்தான் இருக்கும். ஆனால், ரெண்டு நாளைக்குத் துன்பமடைந்தால் அப்புறம் எப்பவும் தண்ணி இருந்துகிட்டே இருக்கும்.” இந்த வேலையில் வேலுப்பிள்ளை முதலில் இறக்கியது அவனுடைய அக்கா பையன் மாதவனைத்தான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாதவனுக்கு சும்மாயிருக்கும் போது கோயில் எடுபிடி வேலை. கூலியில்லாத வேலை. வேலுப்பிள்ளைக்கு வீட்டு விஷயங்களில் அக்கறையில்லாமல் போனது. மற்றவர்கள் வேலை செய்ய அனுமதிப்பதும் இல்லை. வேலுப்பிள்ளைக்கு அண்ணன், தம்பி இல்லை. அப்பா கொடுத்த நிலம் குத்தகையில் இருந்தது. குடும்பச் சொத்து குறைவாகத்தான் இருந்தது. சின்னம்மாவும் அடுத்தடுத்த தலைமுறைகளும் வீட்டில் கூடவே இருந்தார்கள்.
வேலுப்பிள்ளைக்கு அடுத்தபடியாக குடும்பத்தில் பெரிய ஆண் மகன் மாதவன். வேலுப்பிள்ளை செயலாளரான போது மாதவனுக்கு பன்னிரண்டு வயதிருக்கும். கூடப் படித்த பையன்கள் கோயில் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது விளக்கு துடைக்க, புல்லைப் பறிக்க மாதவனுக்கு எப்படி மனது வரும்? மாமாவைப் பார்த்துப் பயந்து அவன் எல்லா வேலைகளையும் செய்தான். ஒரு தடவை அவன் மாமாவிடம் மாட்டிக் கொண்டான். புல் பிடுங்கும் போது அவன் கொஞ்ச நேரம் மற்ற பையன்களுடன் விளையாடினான். வீட்டுக்குப் போன போது மாமா அவனுக்கு கடும் தண்டனையைக் கொடுத்தார். கால் இரண்டையும் சேர்த்து வைத்து, இடது கையை மடக்கி முதுகில் வைத்து, குனிந்து வலது கையுடைய சுண்டு விரலால் தரையைத் தொட்டபடி நிற்க வேண்டும். தண்டனை இதுதான்.
மாதவன் குனிந்து நின்றான். வெளியில் நரம்புகள் உடைவது போல வலி எடுக்க ஆரம்பித்தது. லைல் தசை நார்கள் இழுத்து முறுக்கின கடுகடுவென்று வலி. அவன் அழவில்லை. தன்னையும் ஆயாவையும் பார்த்தபடி நின்றான். எல்லோருக்கும் பெரியவரைப் பார்த்தால் பயம். வேலுப்பிள்ளை அவர்களுடைய ஒரே பாதுகாவலன். வருடத்துக்கு இரண்டு தடவை இருநூறு களம் நெல் வீட்டுக்கு வரும். வீட்டில் சாப்பாட்டுக்கு அது மட்டும்தான் ஒரே ஆதாரம். சின்னம்மாவுக்கு மூச்சு அடைத்தது. “என்ன ஒரு கல்லு மனசு இவனுக்கு! இவனோட மனது கருங்கல்லு போல இருக்கே! இவனோட பையனா இருந்தா இப்படி குஞ்சு நிக்கச் சொல்வானா?” அது எப்படி நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? வேலுப்பிள்ளைக்கு ஆண் குழந்தைகள் இல்லை. மனைவியும் குழந்தைகளும், அவனுடைய மனைவியுடைய அப்பா வீட்டில் இருந்தார்கள். அவர்களுக்கும் கொஞ்சம் நெல் போகும்.
மாதவனுக்குத் தண்டனை கொடுத்துவிட்டு அவன் சாப்பிட ஆரம்பித்தான். மாதவன் ஆயாவை நினைத்துக்கொண்டான். “நீ நேரா நில்லு. அவன் கை கழுவற சத்தம் கேக்கறப்ப நீ குனிஞ்சுக்க... போதும்”. அது நடக்கவில்லை. “ம். போதும் போ சாப்பிடு. இனி மேல சொன்ன பேச்சக் கேளு”. அவன் சொன்னபோது மாதவனால் நிமிர முடியவில்லை. முட்டியை மடக்கி அப்படியே தரையில் உட்கார்ந்தான். கஷ்டப்பட்டு தாங்கிப் பிடித்து எழுந்திருந்தான். ஆரம்பத்தில் வேலுப்பிள்ளை மட்டும்தான் வேலைகளைச் செய்தான். அது அதிகமானபோது கணக்கு எழுதும் வேலை மாதவனுக்கு வந்தது. அவனுடைய படிப்புக்கு அப்புறம் இந்த வேலையும்... கஷ்டப்பட்டான். ஏழாவது வகுப்பில் அவன் இரண்டு தடவை தோற்றுப் போனான். படிக்க நேரம் கிடைக்க வேண்டாமா? கணக்கு எழுத ஒரு ஆளைப் போடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. வேலை அதிகமானதால் சம்பளம் அதிகமாகக் கொடுக்க வேண்டியிருந்தது. மாதவன் சிறிதுசிறிதாக அந்தச் சுமையில் இருந்து விடுதலை அடைந்தான்.
கோயிலில் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. யானைகள் நிற்கப் புது இடம். எல்லாம் நன்றாக இருக்கிறது என்று பார்த்தவர்கள் எல்லோரும் சொன்னார்கள். எதிர்பார்த்ததை விட அதிகப் பணம் செலவானது. நிறைய கடன் வந்தது. தன்னுடைய நிர்வாகத்தால் கோயிலுக்குக் கடன் ஏற்படுவது சரியில்லை என்று வேலுப்பிள்ளை நினைத்தான். கடனைத் தானே ஏற்றுக் கொண்டான். தன் நிலத்தை விற்றுக் கடனை அடைத்தான். குத்தகை வருவாயில் குறைவு ஏற்பட்டது. “பரவாயில்ல. மாதவனுக்கு மாசம் நூத்தி இருபது ரூபா சம்பளம் கிடச்சா? வேலுப்பிள்ளையுடைய நிர்வாகத்தில் எல்லோருக்கும் திருப்தி. அவனுக்கு உற்சாகம் அதிகமானது.
குளத்துக்கு நான்கு பக்கமும் கல் சுவர் கட்டப்பட்டது. கோயில் விழாவின் போது நடக்கும் கச்சேரிக்காக ஒரு சிறிய கட்டிடம். பஜனை செய்யத் தனி மடம். இருபத்தைந்து வருடத்தில் கோயில் முழு நிறைவு பெற்றது. செல்வச் செழுப்புடையதானது. பத்து நாள் திருவிழா ஏற்பாடானது. வேலுப்பிள்ளை முப்பது வருடம் நிர்வகித்தான். கோயிலின் வேர்கள் குடும்பங்களில் உறுதியுடன் ஆழமாக வேரூன்றியது. ஊர்க்காரர்களுக்கு கோயில் காரியம் வீட்டுக்காரியம் போல ஆனது. பலரும் நன்கொடையாகவும் வழிபாட்டுக்காகவும் கோயில் அறக்கட்டளைக்கு நிறையப் பணம் கொடுத்தார்கள்.
வேலுப்பிள்ளைக்கு அவனுடைய அப்பா கொடுத்த சொத்தில் பெரும் பகுதி நிலமும் விற்கப்பட்டுவிட்டது. “ஆனா? இதெல்லாம் ஊதாரித்தனமா செலவழிக்கலயே? இதோட முதல் எல்லாம் கோயில்ல இருக்கு. கோயில் நல்லாயிருந்தா கடவுள் ஆசீர்வதிப்பாரு. கடவுள் ஆசீர்வதிச்சா ஊருக்கே நல்லது நடக்கும். இதோட பலன் என்னோட குழந்தைங்களுக்கும் கிடைக்கும்” - இதுதான் அவனுடைய நம்பிக்கை.
வேலுப்பிள்ளை வீட்டில் இருந்து தன் சொத்துக்களைப் பிரித்து கேட்கவில்லை. “பொண்ணோட வீட்டுக்காரன் இல்லயா மாதவன் பிள்ளை?”, “மாமா. நீங்க எங்க கூடயே தங்கிடுங்க” மாதவன் சொன்னான். அவன் சிறிதாக ஒரு வீட்டைக் கட்டினான். அதை முடிக்க அவனிடம் பணம் இல்லை. வேலுப்பிள்ளையின் வகையாக இருந்த நிலம் விற்று வீடு கட்டுவதில் முடக்கப்பட்டது. தலை சாய்க்க ஒரு இடம் என்ற நிலையில் அந்த இடம் வீடாக மாறியது. சீலிங் போடவில்லை. சுண்ணாம்பு அடிக்கவில்லை. தரை போடப்படவில்லை. சாணம் போட்டு மெழுகிய தரை. ஓலைகளுக்கு நடுவில் இருந்த ஓட்டைகளின் வழியாக மார்கழி மாதத்து பனித்துளிகள் வீட்டுக்குள் வந்து விழும்போது படுத்துக் கிடக்கும் வேலுப்பிள்ளை வீட்டை முழுவதாக கட்டாமல் இருக்கும் மாதவனை நினைத்துக் கொள்வான்.
பக்கத்து வீட்டுக்காரனிடம் ஒரு தடவை சொன்னான். “அந்த பஜனை மடத்துக்கு சீலிங் கட்டணும். பனிக்காலத்துல பனி பெய்யறப்ப அதுக்குள்ள எப்படி எல்லாரும் இருக்க முடியும்?”. கஞ்சியைக் குடிக்கும்போது அந்த முகத்தில் கொஞ்சமும் அதிருப்தி ஏற்படவில்லை. வேலுப்பிள்ளை கோயில் நிர்வாகத்தை விட்டுவிட்டு வந்து எட்டு ஆண்டுகள் ஓடிப் போய்விட்டன. மாதவன் பிள்ளை சாப்பிட்டு முடித்து ஸ்கூலை நோக்கி நடந்தான்.
மகள் அப்பாவுக்கு சாப்பாடு போட்டாள். சாப்பிடுவதற்கு நடுவில் வேலுப்பிள்ளை சொன்னான். “கோயில்ல விழா ஆரம்பிக்கணும்னு முடிவு செஞ்சப்ப வீட்டக் கொஞ்சம் மாத்திக் கட்டணும்னு தோணிச்சு. சாமி வர்ற சமயத்துல வீட்டயும் தோட்டத்தயும் புதுசு போல ஆக்கணும்னு சொன்னேன். சாமியே வராருன்னு நினைச்சு அப்படிச் செய்யணும். வீட்டுக்கு வெள்ளையடிக்கணும். ஓலைய எல்லாம் புதுசா மாத்தி சுத்தமாக்கணும். எல்லாராலும் இதயெல்லாம் செய்ய முடியும். அப்படித்தான் அன்னிக்கு தீர்மானம் போட்டோம். அதெல்லாம் என்னோட ஞாபகத்துக்கு வந்துச்சு. அவ்வளவுதானே தவிர நான் உங்களக் குத்தம் சொல்லணும்னு இதயெல்லாம் சொல்லல...”
“வர்ற வருஷத்துலேந்து குறை வைக்காம எல்லாம் செய்யலாம் அப்பா” “சாமி ஊர்வலமா வர்றப்ப நெல்லு பருப்பு வெத்தல பாக்கு பழம் எல்லாம் வச்சு வரவேக்கணும். அதுக்கெல்லாம் நெல்லு இருக்கா? நெல்லு உண்டாகணும். எல்லாம் உண்டாகும். எல்லாம் நல்லபடியா நடக்கும். நடக்கும். மகாதேவா...!”