கதை எழுதும் போட்டி ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே இருந்தன. போட்டி நடைபெறும் ஹாலுக்குள் நான் நுழைந்தேன். நரைத்துப் போயிருந்த முடியுடன் இருந்த என்னைப் பார்த்துப் போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள் கூட முகம் சுளித்தார்கள்.
முதுமைக்கு அவ்வளவு ஒரு மரியாதை! வேறென்ன சொல்வது? அலட்சியத்துடன் யாரோ ஒரு ஆள் மெதுவாகச் சொன்னான். நான் அதைக் கேட்டாலும், கேட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. கதை எழுதக் காகிதமும் பேனாவையும் போட்டி ஏற்பாட்டாளர்கள் எல்லோருக்கும் கொடுத்தார்கள்.
கதை எழுதவேண்டிய தலைப்புக்காக, போட்டிக்கு வந்திருந்தவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். “கொடுக்கப்போற தலைப்பு இந்தக் காலத்தோட பொருந்தற ஏதாவது ஒரு தலைப்பாகத்தான் இருக்கும்” என்னுடைய மனது சொன்னது. அதிகரித்து வரும் போதைப்பொருட்களின் பயன்பாடு, சீதனக் கொடுமைகள், சாதி மத இனப் பாகுபாடு, தீவிரவாதம், தெரு நாய்களின் தாக்குதல் போல பல விஷயங்கள் என்னுடைய மனதிற்குள் ஓடி வந்தன.
கதை எழுதவேண்டிய தலைப்பு அறிவிக்கப்பட்டது. “வாழ்க்கை அனுபவங்கள்” - இதைப் பற்றிதான் எழுதவேண்டும். பரவாயில்லை. இதுவும் நல்ல தலைப்புதான். என்னுடைய எண்பது வருட கால வாழ்க்கை அனுபவங்களைக் காகிதத்திற்குள் கொண்டு வரவேண்டும். ஆனால், எங்கேயிருந்து ஆரம்பிப்பது? வேதனைகளை அள்ளித்தரும் நினைவுகள் மனதிற்குள் ஒவ்வொன்றாக ஓடி வந்தன.
வாழ்வின் கடைசி நாட்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அனுபவங்களை மட்டும் எழுதினால் அதுவே நல்ல ஒரு கதையாக மாறும். முதுமையின் அனுபவங்கள் எல்லாவற்றையும் எழுத வேண்டும் என்றால் அதற்கே ஒரு நாள் வேண்டிவரும். அதைப் பற்றி நினைத்த போது மனதிற்குள் தாங்கமுடியாத ஒரு வலி.
சின்ன வயதின் வாழ்க்கை அனுபவங்கள் மட்டும் எழுதினால் அது ஒரு சிறுகதையாக மாறும். அதைப் பற்றி ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சி செய்தேன். தரித்திரத்தின் படுகுழியில் இருந்து உயர்த்தப்பட்டதுதான் என்னுடைய வாழ்க்கை. குழந்தையாக இருக்கும்போதே அப்பா இறந்துபோனார். கூலி வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்த அப்பாவின் மரணம் இடி போல வந்து விழுந்தது.
அப்பா போன பிறகு, அம்மா கூலி வேலை பார்த்துத்தான் வீட்டில் அடுப்பெரிய வைத்தாள். அப்போது ஒரே வேலையைச் செய்தாலும், ஆணுக்குக் கிடைக்கும் கூலியில் பாதி கூட ஒரு பெண்ணுக்குக் கிடைக்கவில்லை. எலும்பு உடைய வேலை செய்தாவது மகனை ஒரு பத்தாவது வரை மட்டுமாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்று அம்மா ஆசைப்பட்டாள்.
ஆனால் ஏழாவது வரை படிக்கவைக்கவே அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டாள். “எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என்னோட மகனை பத்தாவது வரையாச்சும் படிக்க வைப்பேன். அப்பா செத்த்துப் போனதோட துக்கத்த அவன் அனுபவிக்கக்கூடாது” கூட வேலை பார்த்தவர்களிடம் அம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள்.
“அட முட்டாப் பொண்ணே. வேண்டாத ஆசய எல்லாம் மனசுல வளத்துக்காத. அப்பறம் கடைசியில கண்ணீர் விடவேண்டியிருக்கும்” அவர்களில் பலரும் அம்மாவுக்கு இப்படித்தான் அறிவுரை சொன்னார்கள். நான் உயர்நிலைப் பள்ளி வகுப்புக்கு போன போது அம்மாவுக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒவ்வொரு மாதமும் ஸ்கூல் பீஸ் கொடுக்கவேண்டியது எப்போது என்பது என்னை விட அம்மாவுக்குத்தான் நன்றாகத் தெரியும்.
குறிப்பிட்ட தேதிக்குள் பீஸைக் கொடுக்க அம்மா கூடிய மட்டும் பாடுபட்டாள். சில சமயம் சரியான தேதியில் கொடுக்க முடியாததால் அபராதம் கட்டவேண்டி வந்தது. அது நாலனா. எங்களைப் பொறுத்தவரை அதுவும் சிறிய ஒரு தொகையில்லை. ஆனால் என்ன செய்வது? வேட்டியை எவ்வளவு முறுக்கிக் கட்டினாலும், செய்யவேண்டியதைச் செய்ய முடியாமல் போனால் அப்புறம் என்னதான் செய்வது?
அம்மா கஷ்டப்படுவதைப் பார்த்து என்னுடைய மனது வேதனைப்பட்டது. ஒரு நாள் நான் அம்மாவிடம் கேட்டேன். “அம்மா. நானும் ஏதாச்சும் வேலைக்குப் போகட்டுமா?”. அந்தக் கேள்வி அம்மாவை வெகுவாகப் பாதித்தது. அம்மா என்னைக் கட்டிப்பிடித்து அழுதாள்.
“அம்மா. ஏதாச்சும் சின்னதா ஒரு வேலை செஞ்சா அதனால ஒரு பிரச்சனையும் வராது. படிக்கறதுக்கு உரிய நேரம் பாழாப் போயிடும்னு நினைச்சு நீ கவலப்படாத. என்னால முடியற மட்டும் நான் கஷ்டப்பட்டு நல்லாப் படிப்பேன்”. அம்மா எதிர்ப்பு எதுவும் சொல்லவில்லை. மனதில்லாவிட்டாலும் அம்மா சம்மதம் தெரிவித்தாள்.
எள்ளைப் பொரித்தால் எள் அளவிற்காவது ஆகுமே என்று அம்மா நினைத்திருப்பாள். சாதாரண கூட்டம் வரும் ஒரு ஹோட்டலில் எனக்குச் சிறிய ஒரு வேலை கிடைத்தது. மேசையைச் சுத்தம் செய்வது, எச்சில் பாத்திரங்களைக் கழுவி வைப்பது. காலையில் ஒன்பது மணி வரை வேலை. மாலையில் ஸ்கூல் விட்டு வந்தால் இருட்டும் வரை வேலை.
இரண்டு வேளையும் அங்கே இருந்து சாப்பிடலாம். பல சமயங்களில் அதை நான் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வந்துதான் சாப்பிடுவேன். அதில் இருந்து கொஞ்சமாவது அம்மா எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய நிபந்தனை. “ஏம்ப்பா. ஹோட்டல் வேலை உனக்கு கஷ்டமாயிருக்கா?” அம்மா அடிக்கடி அன்போடு கேட்பாள்.
“இல்ல அம்மா. ஒரு கஷ்டமும் இல்ல” நான் சொல்வேன்.
“ஹோட்டல் முதலாளிக்கு உன்னப் பிடிச்சுருக்கா?” அம்மா விசாரித்தாள்.
அந்தக் கேள்வி என்னைத் தரும சங்கடத்தில் ஆழ்த்தியது. ஹோட்டலுடைய பின்பக்கம் வந்து விழும் எச்சில் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவக் கொஞ்ச நேரம் தாமதமானால் கூட கேட்க சகிக்கமுடியாத மோசமான வார்த்தைகளை அந்த ஆள் சொல்வதுண்டு.
எனக்காக அம்மா வேலை பார்த்துக் கஷ்டப்படும்போது, அந்தக் கெட்ட வார்த்தைகளையும் வசவுகளையும் நான் சகித்துக் கொண்டேன். இந்த உண்மையை மனம் திறந்து சொன்னால் அம்மாவுடைய மனது கஷ்டப்படும். ஆனால் அம்மாவுடைய முகத்துக்கு நேராக எப்படிப் பொய் சொல்வது? கேள்விக்கு பதில் கிடைப்பதற்காக அம்மா என்னுடைய முகத்தைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“பிடிக்கலைன்னா அந்த ஆள் என்ன வேலய விட்டு போன்னு சொல்லியிருக்க மாட்டாரா?”. அந்த பதில் அம்மாவைத் திருப்திப்படுத்தியது. ஒரு நாள் வழியில் வைத்து அம்மா என்னுடைய கணக்கு டீச்சரைப் பார்த்தாள். “டீச்சர். என்னோட மகன் எப்படிப் படிக்கறான்? நல்லா படிக்கறானா?” அம்மா கேட்டாள்.
“ஹும். நானே உங்களப் பாக்கணும்னு நினைச்சுகிட்டிருந்தேன். நல்லா படிக்கற பையந்தான் அவன். ஆனா இப்ப எதனாலயோ படிப்புல கொஞ்சம் பின்னாலதான். பல சமயமும் ஹோம் வொர்க் செய்யாம க்ளாஸுக்கு வரான். இப்படியேப் போனா…?” டீச்சர் அதோடு நிறுத்திக்கொண்டார்.
உறுதியான சில தீர்மானங்களோடுதான் அன்று அம்மா வீட்டுக்கு வந்தாள்.
இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அம்மா இதைப் பற்றிப் பேசினாள். “மகனே. நாளைக்கு ஹோட்டலுக்குப் போறப்ப முதலாளிகிட்ட ஒரு விஷயத்தச் சொல்லணும்”.
“என்ன அம்மா?”
“படிக்கறதுக்கும் எழுதறதுக்கும் நிறய இருக்கறதுனால நாளைலேர்ந்து வேலைக்கு வரலைன்னு சொல்லணும். பத்தாம் க்ளாஸ் முடிச்சதுக்கு அப்புறம் நீ வேலைக்குப் போனாப் போதும்”
அம்மா சொன்னதைக் கேட்டு நான் அசைவற்றிருந்தேன். அம்மா சொல்வதும் சரிதான். சாயங்காலம் ஹோட்டல் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது தளர்ந்து போய்விடுவேன். காலையில் வகுப்பிலும் கவனம் செலுத்த முடியவில்லை. டீச்சர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய கண்கள் என்னையும் அறியாமல் மூடிக்கொள்ளும்.
அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்பட்டன. இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது அம்மா சொல்வதைக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்றே எனக்குத் தோன்றியது. இப்படி ஹோட்டல் வேலை நின்று போனது. இதோடு அம்மாவுடைய வேலைப்பளு மறுபடி அதிகமானது. நாட்கள் ஓடின.
பீஸ் கொடுக்கவேண்டிய நாள் வந்தது. “மகனே. நாளைக்குப் பீஸ் கொடுக்க வேண்டியக் கடைசி நாள். என்னோட கையில நாலு ரூபாதான் இருக்கு. எவ்வளவு முயற்சி செஞ்சாலும் ஆறு ரூபா சம்பாதிக்க முடியல. நாளைக்கு கொடுத்துடறேன்னு டீச்சர்கிட்ட சொல்லு” அம்மா கஷ்டத்தோடு இதை சொன்னாள்.
“டீச்சர்கிட்ட நான் சொல்றேம்மா. நீ சங்கடப்படாத. டீச்சர் ஒத்துப்பாங்க” தெரிந்துகொண்டே அம்மாவிடம் பொய் சொல்ல வேண்டியிருந்தது.
என்னை வகுப்பிற்குள் நுழைய விடமாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், உண்மையைச் சொன்னால் அம்மா கஷ்டப்படுவாள். அம்மாவுடைய கண்ணீரைப் பார்க்க எனக்கு சக்தி இல்லை. அதனால் வகுப்பிற்குள் நுழைய விடுவார்கள் என்று பொய் சொன்னேன்.
எதிர்பார்த்தது போலவேதான் நடந்தது. என்னை வகுப்பில் இருந்து வெளியே போகச் சொல்லி விட்டார்கள். அழுது கொண்டே நான் வகுப்பில் இருந்து வெளியில் வந்தேன். வராந்தாவில் நடக்கும்போது பின்னால் டீச்சருடைய குரல். வசவு வார்த்தைகள் என்னுடைய காதில் வந்து விழுந்தன. “பெத்தவங்களுக்கு கள்ளயும் சாராயத்தயும் குடிக்க காசு இருக்கு. பீஸ் கொடுக்க மட்டும் காசு இல்ல”
கஷ்டம் எதுவும் தெரியாமல் ஒரு குற்றச்சாட்டு. என்னைப் பற்றி டீச்சருக்கு ஒன்றும் தெரியாது. சொல்லிக் கொடுக்கும் மாணவர்களுடைய வாழ்க்கை நிலையைப் பற்றி தெரிந்து கொள்ள அதையெல்லாம் புரிந்து கொள்ள முயற்சி செய்யாத டீச்சர். அவர்களை நினைத்து எனக்கு அவமானமாக இருந்தது. காலையிலேயே வீட்டுக்குத் திரும்பிப் போனால் அம்மா கஷ்டப்படுவாள்.
நேரத்தைக் கடத்த என்ன வழி? பக்கத்திலேயே ஒரு வாசகர் சாலை. சாதாரணமான ஒரு வாசகர் சாலை. அங்கேப் போனால் செய்தித்தாள்களைப் படிக்கலாம். நான் அங்கே நடந்தேன். மேசையின் மீது செய்தித்தாள்களும் சஞ்சிகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சமயம் வாசகர்கள் யாரும் அங்கே இல்லை.
அது நல்லதாகப் போயிற்று. இல்லாவிட்டால் ஸ்கூலுக்குப் போகாமல் வாசகர் சாலையில் இருப்பதைப் பற்றி யாராவது கேட்டால் என்ன செய்வது? எப்படியிருந்தாலும் நிம்மதியாக உட்கார்ந்து படிக்கலாம். “பீஸுக்கு உள்ள காசை அம்மா தர்ற வரைக்கும் என்னோட பள்ளிக்கூடம் வாசகர் சாலையாக இருக்கட்டும்” என்று நான் முடிவு செய்தேன்.
கொஞ்ச நாட்கள் தொடர்ந்து அங்கே போனதால் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது. அது ஒரு பல்கலைக்கழகம். ஆம். சர்வ கலைக்கூடம். நல்ல மனிதனை உருவாக்க உதவும் ஆசான்கள் அங்கே இருந்த அலமாரிகளில். நாட்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போய்க் கொண்டிருந்தது.
கடின உழைப்பால் அம்மாவுடைய உடல் நலம் மோசமானது. ஒவ்வொரு நோயாக அம்மாவைத் தாக்கியது. கூலி வேலைக்கும் போக முடியாத நிலை ஏற்பட்டது. அம்மாவுடைய நிலைமை மோசமானது. அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். மரணத்தோடு மல்லு கட்டிய நாட்கள்.
துரதிர்ஷ்டம்! என்னுடைய எல்லாமுமாக இருந்த அம்மாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவத்தால் முடியவில்லை. அப்படி நான் முழுக்க முழுக்க அனாதையானேன். என்னுடைய படிப்பு நின்றது. குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துத்தான் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருந்தேன். கஷ்டங்களுக்கு நடுவிலும் நான் வாசகர் சாலைக்குப் போவதை நிறுத்தவில்லை.
அங்கே இருந்து கிடைத்த அறிவு என்னை ஒரு எழுத்தாளனாக்கியது. புனைப்பெயர்களில் கதைகள் எழுதிய என்னைக் கிராமவாசிகள் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை. பிரபலமாவதைக் காட்டிலும் எழுத்தில் இருந்து கிடைத்த துச்சமான வருமானமே அன்று எனக்குப் பெரிதாகப்பட்டது. சில வருடங்களுக்குப் பிறகு திருமணம். இல்லற வாழ்க்கையில் நுழைந்தேன்.
புத்தகங்கள் படிப்பதும் எழுதுவதும் எங்களுடைய இல்லற வாழ்க்கையைப் பாதித்தது. குடும்பச்சண்டைகள் வாடிக்கையாயின. வாழ்வில் ஒரு தடவை கூட வாசகர் சாலைக்குப் போகாத மனைவியிடம் வாசிப்பைப் பற்றிச் சொல்வதால் என்ன புண்ணியம்?
நடு ராத்திரியிலும் விடிகாலையிலும் தூக்கத்தில் இருந்து எழுந்து எழுத முயற்சி செய்தாலும் சண்டை. மனதில் நிம்மதி குலைந்தது. என்னுடைய எழுதுகோல் இயங்காமல் நின்று போனது. இப்படி இருக்கும்போதுதான் ஊரில் வாசகர்சாலையின் ஆண்டு நிறைவு விழா பற்றிய செய்தி என் காதுகளுக்கு எட்டியது.
என்னை அறிவின் உலகத்திற்கு கை பிடித்துக் கூட்டிக்கொண்டு போன வாசகர்சாலையுடைய ஆண்டு நிறைவில் பங்கேற்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இப்படி இங்கே வந்தேன். உடலில் காலம் ஏற்படுத்திய மாற்றங்களால் யாரும் என்னை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. இந்த இடத்தில் உட்கார்ந்திருக்கும் போது அம்மாவைப் பற்றி அம்மா பட்ட கஷ்டங்களைப் பற்றி நினைத்து என்னுடைய கண்கள் நிறைந்தன.
“தாத்தா. நேரம் முடியப்போகுது. ஒன்னும் எழுதலயா?”. ஒரு இளம் வயதுப் பையனுடைய குரல் கேட்டுதான் நான் என்னுடைய நினைவுகளில் இருந்து மீண்டு நிஜ உலகிற்கு வந்தேன்.
“இல்லப்பா. நான் எழுதல. என்னால எழுத முடியல” சொல்லியபடி நான் எழுந்திருந்தேன்.
எழுதுவதற்கு ஏராளமான அனுபவங்கள் இருந்தாலும் எதுவும் எழுதாமல் காகிதங்களைத் திருப்பிக் கொடுக்கும் போது அதில் இரண்டு கண்ணீர்த்துளிகள் விழுந்தன.
என்னை நானாக்கிய அம்மாவுடைய நினைவுகளுக்கு முன்னால் அர்ப்பணம் செய்த எழுத்தின் வடிவங்கள்!