ராகுல் மத்தாய் ஒரு பீடியை எடுத்து உதட்டில் வைத்தான். அது அந்த ஆளின் ஒரு பழக்கம். அது கொஞ்ச நேரம் அஞ்கே இருந்து எரிய ஆரம்பித்த பிறகு நெருப்பைப் பற்ற வைப்பான். சில சமயம் அப்படி நடப்பதேயில்லை. பேசிய பிறகு அல்லது அடுத்தவர் சொல்வதைக் கேட்ட பிறகு அதைத் துப்பிவிடுவான். மறுபடியும் வேறொன்றை எடுத்து அந்த இடத்தில் வைத்துக் கொள்வான்.
தீப்பெட்டியை கையில் அழுத்திப் பிடித்துக் கொண்டிருப்பான். நகரத்தில் குப்பைக்கிடங்குதான் அவனுக்கு இப்போது தலை போகிற பிரச்சனை. கேலுகுட்டேயில் குப்பைக்கூளம் அவனைக் கொஞ்சம் நஞ்சம் கவலைப்பட வைக்கவில்லை. அது அவனுடைய தலைக்குள் புகுந்து மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது.
அடுக்கு மாடிக்குடியிருப்புகள் அதிகமான பிறகுதான் அஞ்கே இவ்வளவு குப்பைகள். அவன் லாலிடம் இதையெல்லாம் ஒரு உரிமையோடு சொன்னான். லால் ராகுல் மத்தாயுடைய ஒரு நண்பண் மட்டுமில்லை, அவனுடைய மனசாட்சியின் பாதுகாவலனும் கூட. “இந்த ப்ராஜெக்டை நம்மால சுலபமா முடிக்க முடியும்னு எனக்குத் தோணல ராகுல்ஜி”
ராகுல் தொண்டையைக் கணைத்துக் கொண்டு சொன்னான். அவனுக்கு யார் மீதோ பகை இருப்பது போலத் தோன்றியது. கேலுகுட்டையில் கொஞ்சம் கூடச் சுத்தம் இல்லாத வழிகளின் ஊடே நடக்கும் போது லால் அவனுடைய கிராமப்புறத்து வீட்டைப் பற்றியும் ஆஸ்த்துமாவின் வலையில் சிக்கி இருமியும் பெரிய சத்தத்துடன் மூச்சு விட்டுக் கொண்டும் வாழும் அம்மாவைப் பற்றியும் நினைத்துக் கொண்டான்.
ராத்திரிகளைப் பார்த்தால் அம்மாவுக்கு பயம். இருட்டின் ஓட்டை வழியாக குளிர் பாய்ந்து நுழைந்து வந்து சுவாசக் குழாய்களை மோதி இடிக்கும் கெட்ட கனவில் அம்மா விதும்பி விதும்பி அழுவாள். தாய்ப்பாசத்தால் பிணைக்கப்படும் ஒரு நிமிடமே மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது என்று அவனுக்குத் தோன்றியதுண்டு. அவன் சின்னக் குழந்தையாக இருக்கும் போது, அம்மாவுடைய நெஞ்சின் அரவணைப்பில் மல்லாந்து கிடந்து இளம் சூட்டை அனுபவித்த ஞாபகம் கூடிதான் அது.
“லால். நாம நாளைக்கு ஒரு இடம் வரைக்கும் போகணும்” ராகுல் மத்தாய் சொன்னான்.
“காலையில ஒரு ஒம்பது மணியாறப்ப நீங்க எனோடா ப்ளாட்டுக்கு வந்துடுங்க. நாம என்னோட கார்ல போலாம்”.
“சரி” என்று தலையை ஆட்டும் போதும் “எங்கே?” என்று லால் கேட்கவில்லை.
கேலுகுட்டேயில் மிகப் பழமையான அகோர சிவன் கோயிலுக்குதான் அந்தப் பயணம் என்று எதனாலேயோ அவனுக்குத் தோன்றியது.
இரண்டாயிரம் வருடங்களுக்கும் கூடுதலான பழமையானது என்று கருதப்படும் ஒரு கோவில் அது. மதில்கள் இடிந்து விழுந்து உள்ளேப் போகும் வழி தடைப்பட்டிருக்கும். அங்கு வருடங்களாக பூசையோ திருவிழாக்களோ நடப்பதில்லை. குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அரசு கண்டுபிடித்து வைத்திருந்த இடம் அது. முன்பு ஒரு தடவை லால் மத்தாயியோடு அங்கே போயிருக்கிறான்.
முழுக்க முழுக்க பயங்கரமான சுற்றுச்சூழல். கோவிலின் மேற்கூரையில் மிகப் பழையதாகிப் போன ஓடுகள் பல இடம் விட்டு நகர்ந்து போயிருக்கின்றன. திருக்கோயில் மட்டும் சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்தது. வருடங்களாகப் பூசை நடக்காத சிவலிங்கம் பளபளப்போடு நிற்கிறது. சிவகனங்கள் வந்து திருக்கோயிலையும் திருமூர்த்தியையும் காவல் காக்கின்றன என்று ஆட்கள் நம்பினார்கள்.
அதனால் சாயங்காலம் ஆனால், அங்கே யாரும் போவதில்லை. சில இரவுகளில் சிவ தாண்டவத்தின் பெரிய சத்தங்கள் அங்கேயிருந்து கேட்கின்றன என்று சிலர் சொன்னார்கள். பூதக் கனங்களின் அட்டகாசமும் காதைச் செவிடாக்கும் மணியோசையும் செண்டை மேளத்தின் முழக்கமும் எல்லாம் அங்கே கேட்டன.
அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு லால் மத்தாயியுடைய ப்ளாட்டுக்குப் போனான். வில்லி அக்கா சமைத்திருந்த சூடான புட்டையும், கடலைப் பொறியலையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது லால் ராகுலிடம் கேட்டான். “நாம கோயிலுக்குத்தானேப் போறோம்?”- லால் ராகுலிடம் கேட்டான்.
லாலை அதிசயிக்க வைத்து ராகுல் சொன்னான்.
“இல்ல”.
“அப்பறம்?”
லாலுக்கு ஆர்வத்தை அடக்க முடியவில்லை.
“ரமேசன் பூசாரியோட வீட்டுக்கு”
லாலுக்கு ரமேஷ் பூசாரியைத் தெரியும். ரொம்பக் காலத்துக்கு முன்பு அகோர சிவனுக்கு பூசை செய்து கொண்டிருந்த பாயன்னா பூசாரியோட மகன். கேலுகுட்டேயில் குப்பைகளை அகற்றும் திட்டத்தை எதிர்க்கும் மக்கள் சங்கத்தின் தலைவன்.
புதிய கருத்துக்களையும் கண்ணோட்டத்தையும் உடைய இளைஞன். மணிப்பால் மருத்துவக் கல்லூரியில் இருந்து மருத்துவப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு கேலுகுட்டேயில் பாவப்பட்ட மனிதர்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ரமேசனை லாலுக்குப் பிடிக்கும். மரியாதையும் உண்டு. மழை பெய்து நெகிழ்ந்து போயிருந்த சேற்று வழியில் ரமேசனுடைய பழமையான இரண்டு மாடிக் கட்டிடத்துக்கு முன்னால் கார் போய் நின்றபோது மணி பத்தைத் தாண்டியிருந்தது.
வீட்டுக்குள் நுழைவதற்கு முன் நீண்ட பெரிய வராந்தா. வீட்டின் திண்ணையில் அவனுடைய தொண்டர்களாக சில இளம்வயதுக்காரர்கள். அவன் ராகுல் மத்தாயியையும், லாலையும் மேல் மாடியிலிருந்த ரூமுக்குக் கூட்டிக் கொண்டு போனான்.
“கொஞ்சம் சர்க்கரத்தண்ணி குடிச்சுட்டு அப்புறம் நாம பேச ஆரம்பிக்கலாம்”. ரமேசன் சொன்னான்.
அது அந்த இடத்தில் இருந்த ஒரு விருந்தோம்பும் பழக்கம். சர்க்கரை கலந்த பச்சைத் தண்ணீர் குடித்தால் ஏற்பட்ட சோர்வு நீங்கும் என்று ஒரு நம்பிக்கை.
“சரி” ராகுல் சிரித்தான்.
விருந்தோம்பலுக்குப் பிறகு ரமேசன் விஷயத்துக்கு வந்தான்.
“சாரே. உங்க ப்ராஜெக்ட்ட ஏத்துக்கறதுல எங்களுக்கு பல கஷ்டங்க இருக்கு”
சிறிது நேரம் ராகுல் எதுவும் பேசவில்லை.
பிறகு மெதுவாக எழுந்திருந்து, ரமேசனுடைய தோளில் கையை வைத்துக் கொண்டு சொன்னான்.
“நானும் இந்த ப்ராஜெட்ட ஏத்துக்கல”
ரமேசன் நம்பமுடியாதவன் போல ராகுலுடைய முகத்தைப் பார்த்தான்.
லாலுக்கும் ஆச்சரியம்!! கேலுகுட்டேயில் குப்பைகளை அகற்ற அரசாங்கம் நியமித்த பெரிய அதிகாரியான ராகுல் அரசின் திட்டத்தை எதிர்க்கிறாரா?
லாலுக்கு எதுவும் புரியவில்லை. “நான் சொன்னது சத்தியம். உங்களோட கேலுகுட்டேயில ஒரு வேள சோத்துக்குக் கூட வழியில்லாத மனுஷங்களோடதான் நானும் இருக்கேன். அரசாங்கம் தத்தெடுக்கவேண்டிய ஒரு கிராமம் இது. அதில்லாம விஷத்த நிரப்பி கொல்றதுக்கு உரியது இல்ல எந்தத் திட்டமும்”
ரமேசனின் கண் நிறைவதை லால் பார்த்தான்.
அவன் ராகுலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு சொன்னான். “நீங்கதான் உண்மையான ஒரு மனுஷன்! இப்ப எங்களோட தலைவர்”
அந்த வார்த்தைகள் நடுக்கத்தோடு விதும்பின. லாலுக்கும் ராகுலுடைய மனதுதான்.
இருந்தாலும் அவன் சொன்னான். “ராகுல்ஜி. கலெக்டர்கிட்ட நாம் என்ன சொல்றது?”
லாலை ஆச்சரியப்படுத்தி ராகுல் சொன்னான்.
“என்னோட ராஜினாமாவ நான் கொடுத்துட்டேன். அகோர சிவனோட மண்ணு அழுக்காகக் கூடாது. மனுஷங்களோட மனசும்”
“அப்பாவப் பாக்க வேணாமா உங்களுக்கு?” ரமேசன் கேட்டான்.
“பாக்கணும்” ராகுல் சொன்னான்.
உடம்பு முழுவதுமாக தளர்ந்து கீழ் அறையில் இருக்கும் பூசாரியைப் பார்த்த போது ராகுல் வேதனையோடு சொன்னான்.
“தெய்வத்துக்கு ரொம்பப் பிடிச்சமான பூசாரி”
அதை அவர் கேட்டிருக்கவேண்டும். ஒரு சிறிய மந்தகாசச் சிரிப்பு பூசாரியுடைய முகத்தில் பளிச்சிட்டது.
விடை பெற்றுக் கொண்டு திரும்பும்போது ராகுல் ரமேசனிடம் சொன்னான்.
“இன்னிக்கு சாயங்காலம் நாங்க அந்தக் கோயில் வரைக்கும் போகணும்”
“இருட்டு மூடிடுச்சுன்னா அங்க யாரும் போறது இல்ல” ரமேசன் சொன்னான்.
“அகோர சிவன ஒரு தடவை பாக்கணும்”
ரமேசனுக்கு கேட்காது என்ற தோரணையில் ராகுல் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
“லால். வண்டிய ஓட்டு. நான் கொஞ்ச நேரம் கண்ண மூடிட்டு இருக்கேனே?” வண்டி சாவியை லாலுக்கு முன்னால் நீட்டியபடி ராகுல் சொன்னான்.
“கேலுகுட்டே முழுக்க குப்பைங்க மூடி பெரிய குப்பத்தொட்டி போல ஆயிடுச்சு. மனுஷங்க எல்லாரும் அதுக்குள்ள அகப்பட்டுகிட்டு மூச்சு விட முடியாம செத்துகிட்டிருக்காங்க.
\மரணத்தோட கையில துடிதுடிக்கற பிஞ்சுக் குழந்தைங்க. பொண்ணுகளோட முடிவில்லாத அலறல்”
“நிறுத்து!” ராகுல் அலறினான்.
லால் ஒரு அதிர்ச்சியோடு வண்டியை சட்டென்று நிறுத்தினான்.
“என்ன? என்ன ஆச்சு?”. அவன் கேட்டான்.
ராகுலுடைய முகம் வியர்வையில் குளித்திருந்தது.
“ஹோ! ஒன்னுமில்ல. ஒரு கெட்ட கனவு”
“முகத்த கழுவிட்டு கொஞ்சம் தண்ணி குடிங்க’ லால் வாட்டர் பாட்டிலை ராகுலுக்கு முன்னால் நீட்டினான்.
அவன் வெளியில் இறங்கி தண்ணீர் குடித்து பாட்டிலைத் திரும்பக் கொடுத்துக் கொண்டு சொன்னான். இனிம நான் ஓட்டறேன்”
ப்ளாட்டுக்கு உள்ள ரோடு பிரியும் இடத்தில் வண்டியை நிறுத்திய ராகுல் லாலிடம் கேட்டான்.
“நீ அம்மாவப் போய்ப் பாக்கவேணாமா?”
“ஒவ்வொரு நிமிஷமும் அம்மாவப் போய்ப்பாக்கணும்னு நினைக்கற” லால் உடனே சொன்னான்.
“வேணும்.. வேணும்.. போய்ப் பாக்கணும்”
”போயிட்டு வா” ராகுல் தொடர்ந்தான்.
“அம்மாவுக்குக் கொஞ்சம் சாமான்கள நான் வாங்கி வச்சிருக்கேன். ப்ளாட்டுல இருந்து அத எடுத்துக்க”
“அப்ப ராகுல்ஜி கோயிலுக்குத் தனியாவாப் போறீங்க?” லால் கேட்டான்.
“தனியாயில்லயே? பூத கணங்கள் இல்லயா?” ராகுல் சிரித்தான்.
“அய்யோ. அது வேணாம். நானும் கூட வர்றேன்”
“வேணாம் லால். இந்த தடவ நான் தனியாத்தான் போறேன். அது இந்த இடத்துல இருக்கற மனுஷங்களுக்கான பிரார்த்தனையும் வழிபாடும் கூட”
“எச்சரிக்கையா இருக்கணும். அங்க ஊர்ந்து போற ஜீவிங்க நிறய இருக்கு” லால் நினைவுபடுத்தினான்.
“துணைக்கு அகோர சிவன் இருக்காரில்லயா?” சொல்லிவிட்டு ராகுல் வழக்கத்துக்கு மாறாக உரத்த குரலில் சிரித்தான்.
மாலையில் ஊருக்கு போகும் இரயிலில் இருக்கும் போது லால் ராகுலை நினைத்துக்கொண்டான்.
“தன்னந்தனியா பிடிவாதத்தோட கோயிலுக்கு போறது எதுக்காக?” காரணமில்லாத ஒரு பயம் லாலுக்குள் எட்டிப் பார்த்தது.
இரண்டு மூன்று தடவை ராகுலைத் தொடர்பு கொண்டு பேச முயற்சித்தான்.
ராகுல் கிடைக்கவில்லை.
“தொடர்பு எல்லைக்கு வெளியில்” இருந்தான்.
இரவு வெகுநேரம் கழித்தே லால் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.
அம்மா தூங்காமல் சாப்பாட்டை எடுத்துவைத்துக் காத்துக் கொண்டிருந்தாள்.
“வலி கொஞ்சம் குறஞ்சது மாதிரி இருக்கு” அம்மா மகிழ்ச்சியில் இருந்தாள்.
அவள் லாலுக்கு மிகப் பிடித்த சாப்பாடு செய்து வைத்திருந்தாள்.
ருசித்துக் கொண்டு சாப்பிடும் போது அம்மா சொன்னாள். “நான் இன்னிக்கு நம்ம மகாதேவன் கோயிலுக்குப் போயிருந்தேன். அகோர சிவன் இல்ல, சிவனோட பஞ்ச முகங்கள்ல ரொம்ப அழகா இருக்கற முகம். இன்னிக்கு புரட்டாசி சதுர்த்தசி இல்லயா? அகோர சிவனோட புண்ணிய நாள்”
திடீரென்று ஏதோ ஞாபகத்துக்கு வந்தவனைப் போல, லால் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்ட மாதிரி இருமினான்.
“தண்ணி குடிப்பா. ஏதோ வேண்டாதத நினைச்சுகிட்டயா?” லால் ராகுல் மத்தாயியை நினைத்தான்.
கேலுகுட்டேயில் மனிதர்களை நினைத்தான். அங்கே கோர சிவனுடைய பூத கணங்களை நினைத்தான். அகோர சிவனை நினைத்தான்.
“அன்போட இருக்கற சிவன், அத விட அன்போட இருக்கற ராகுல காப்பாத்துவாரு” லால் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான் என்றாலும் அன்று இரவு அவன் தூங்கவில்லை.
அம்மா கவலையில்லாமல் தூங்குவதைப் பார்த்துக் கொண்டே அவன் கண்களைத் திறந்தபடி இருட்டில் கிடந்தான்.