இந்தக் கதைக்கு இப்படி ஒரு பெயரைக் கொடுத்தது நானில்லை. அது ஆர்.சி.சியில் நர்ஸாக வேலை பார்க்கும் அன்னம்மாதான். ஆறுதலின் குளிர்ச்சி தரும் கைகளுடனும் ஒளி ததும்பும் விழிகளுடனும் உள்ள அன்னம்மா இந்த நகரத்திற்கு விருப்ப இடமாற்றம் வாஞ்கிக்கொண்டு வந்து வேலை பார்ப்பவள். என்னுடைய மனைவி பானுமதியுடைய சிகிச்சைக்காகத்தான் நான் ஆர்.சி.சிக்குப் போனேன். அவளுடைய இரைப்பையில் ஏதோ ஒரு நோய். இதைத் தெரிந்துகொண்ட குடும்ப டாக்டர்தான் அவளை எவ்வளவு சீக்கிரம் கூட்டிக்கொண்டு போகமுடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக ஆர்.சி.சிக்கு கூட்டிக்கொண்டு போய் காட்டும்படி ஆலோசனை சொன்னார்.
அங்கே பணி புரிபவர்கள் தெய்வத்துக்கு சமமானவர்கள் என்றே நான் சொல்வேன். நோயாளிகளுக்குப் பணிவிடை செய்யும்போது, அவர்கள் எல்லோரும் மிகப் பொறுமையுடையவர்களாகக் காட்சி தந்தார்கள். பக்குவம் நிறைந்தவர்களாக இருந்தார்கள். நெருக்கமான சொந்தக்காரர்களுடன் பழகுவது போலத்தான் அவர்கள் நோயாளிகளுடன் பழகினார்கள். அன்னம்மா சிஸ்டர் பெரும்பாலான நேரமும் கீமோ அறையில்தான் இருப்பாள். இல்லாவிட்டால் குழந்தைகளுடைய வார்டில் இருப்பாள். கல்யாணமாகிப் பத்து வருடங்கள் கழிந்தும், ஒரு குழந்தையைக் கூடப் பெற முடியவில்லையே என்ற துக்கத்தைக் குழந்தைகளுடைய வார்டில் வேலை
பார்க்கும்போதுதான் அவள் மறக்கிறாள். அன்னம்மா என்ற அந்தக் கோட்டயத்துப் பெண்ணைப் பற்றிச் சொல்லப் பல சிறப்புகள் இருந்தன. அவள், நல்ல ஒரு வாசகரும் கூட. மலையாளத்தில் மிகச் சிறந்தக் கதைகளைப் பற்றி நன்கு தெரிந்தவள். அதைப் பற்றி அதிகாரப்பூர்வமாகப் பேசக்கூடிய ஆற்றலும் திறமையு பெற்றவள். தளர்ந்து போன நோயாளிகளை நோக்கி அவள் மின்னல் வேகத்தில் நடந்து போவாள். அவர்களுக்கு ஆத்ம பலம் கொடுப்பாள்.
சிகிச்சையுடைய ஆரம்பத்தில் என்னுடைய மனைவிக்கும் சில சந்தேகங்களும் பயங்களும் இருந்தன. அதெல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் துடைத்தெறிந்தது அவளுடைய புத்திசாலித்தனத்தால்தான். கீமோ என்றால் ஏதோ பெரிய ஆபரேஷன் போன்றதொரு வேலை என்று என்னுடைய மனைவி நினைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தளர்ந்து மெலிந்து போயிருந்த கைகளைத் தழுவித் தழுவி, ஆழங்களில் மூழ்கிப் போன இரத்தத்
தமணிகளை உயிரூட்டவும் விழிப்புறச் செய்யவும் அதன் ஓட்டத்தில் ஊசிகளை வலி தெரியாமல் இறக்கவும் அன்னம்மா சிஸ்டருக்கு ஸ்பெஷலாக ஒரு திறமை இருந்தது.
எச்சரிக்கையோடு ஊசியைப் போடும்போது “அம்மா” என்று நிரந்தர ஆறுதலுடன் அழைப்பாள். சத்தியமாகச் சொன்னால், அப்போது எனக்கு அந்தக் கைகளை ஈரப்படுத்தவேண்டும் என்று தோன்றும். கெட்டியான கவசத்திற்குள் குழாய்கள் தொங்கிய முகத்தில் இருந்து உதயமாகும் இரண்டு குட்டி நட்சத்திரங்களை அவளிடம் அப்போது நான் பார்த்தேன். நோயாளியுடைய அடையாள அட்டையைப் பரிசோதிக்கும் போதும், அதைத்
திருப்பிக் கொடுக்கும்போது மட்டுமே கூட வந்தவர்களுடைய முகத்தை நிமிர்ந்து பார்ப்பாள். காதுகளின் பக்கவாட்டில் இருந்து முகத்தில் விழுந்துகொண்டிருந்த சில நரைத்த முடிகளுடன் இருந்த பானுமதியை “அம்மா” எண்றும், முழுவதும் வழுக்கை தலையுடன் இருந்த என்னை “அப்பா” என்றும் அன்போடு அழைத்தாள்.
ஆர் சி சிக்கு முதல்முறையாக சென்ற போது அன்னம்மா சிஸ்டர்தான் டூட்டியில் இருந்தாள். இன்னொரு சிஸ்டர் இருந்தாலும் அவர் ஏதோ எழுதிக் கொண்டிருப்பதை பார்த்தேன். கீமோதெரபியின் தொடக்கத்தில் ஏற்பட்ட
கஷ்டங்கள் எல்லாவற்றையும் என்னுடைய மனைவி பொறுமையோடு சகித்துக்கொண்டாள். உள்ளுக்குள் செல்லும் மருந்து, இரத்தக்குழாய்களில் தீ பற்ற வைக்கும் போது கண்களை மூடிப் பிரார்த்தனை செய்தபடி இருக்கவேண்டும் என்று அன்னம்மா சிஸ்டர் அவளுக்குச் சொல்லிக்கொடுத்தாள். அவள் பக்கத்தில் நிற்கும்போது பானுமதிக்கு இனம் புரியாத ஆத்ம தைரியம் ஏற்பட்டது. அமைதியின் பள்ளத்தாக்கை நோக்கி
அவளுடைய உடலும் மனதும் நழுவி விழ ஆரம்பிக்கும்போது “கைய அசைக்காமப் பாத்துக்கணும் அப்பா” என்று சொல்லிவிட்டு, அவள் பக்கத்து நோயாளியிடம் போனாள்.
பானுமதி குணமடைந்து வருவதைப் பார்த்தபோது எனக்கும் சமாதானம் ஏற்பட்டது. உண்மையில் அவள் பல விஷயங்களிலும் என்னை விடத் தைரியசாலி. மருந்தின் துளிகள் கீழிறங்கிக் கொண்டிருந்த குழாயைப் பார்த்து நான் பெருமூச்சு விட்டேன். அப்போதைய சலிப்பை அகற்ற என்னுடையத் தோல் பையில் வைத்திருந்த புத்தகத்தைக் கையில் எடுத்தேன். நிமிடங்கள் போனது தெரியவில்லை. சட்டென்றுதான் சிஸ்டர் பின்பக்கத்தில்
இருந்து வந்தாள். உரத்த குரலில் சொன்னாள். “புத்தகத்த வாசிச்சுக் கொண்டிருந்தா கை அசயறதப் பாக்கமுடியுமா அப்பா?” எனக்கு வெட்கமாக இருந்தது. குற்றவுணர்வும் ஏற்பட்டது. ஊசி முனையில் இருந்து லேசாக இரத்தம் கசிந்ததையும் லேசாக நீர் வெளியில் வந்ததையும் அப்போதுதான் நான் கவனித்தேன்.
பட்டென்று சிஸ்டர் ஊசியை இன்னொரு கையில் மாற்றிவிட்டாள். என்னுடைய பதட்டத்தைப் பார்த்து விட்டு மனைவி “பரவாயில்ல” என்று கண்ணால் சைகை காட்டிச் சமாதானப்படுத்தினாள். “அப்படி என்ன இவ்வளவு சுவாரசியமான வாசிப்பு?”. திரும்பிப் போகும் நேரம் என்னுடைய கையில் இருந்து புத்தகத்தைத் தட்டிப்பறித்து அன்னம்மா கேட்டாள்.
“லிபரேஷன் டே. ஜாய்ஸ் ஹொண்டஸ்”அலட்சியத்துடன் பக்கங்களை புரட்டியபடி தொடர்ந்தாள். “மேல் நாட்டு எழுத்தாளருங்களோட கதங்க தானே?” இப்படிதான் அந்த தோழமையின் ஆரம்பம் அமைந்தது. அன்று திரும்பும்போது, தானும் ஒரு வாசிப்பாளர்தான் என்பதை நிரூபிக்க அன்னம்மா தன்னுடைய பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து எனக்குக் காட்டினாள்.அது கோட்டயத்தில் இருந்து முன்பு வெளியிடப்பட்ட வாரப்பத்திரிகை ஒன்றில் வந்த குற்றப் புலனாய்வு நாவல் தொடர். “எங்க ஊர்க்காரரு புஷ்பநாத்துடைய நாவல். வாசிச்சுகிட்டு இருந்தா மத்த எல்லாம் மறந்துபோயிடும்”. அன்னம்மா ஒரு குழந்தையைப் போல சிரித்தாள்.
நல்ல மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாள், பஸ் ஸ்டாண்டில் இருந்து இறங்கிய நானும் பானுவும் ஆட்டோவுக்காக காத்துக் கொண்டிருந்தோம். மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டோ எதுவும் கிடைக்கவில்லை. “என்ன செய்யறது?” என்று யோசித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு ஆட்டோ எனக்கு முன்னால் வந்து நின்றது.
அதில் இருந்து அன்னம்மா சிஸ்டருடைய குரல் கேட்டது. “அம்மா அப்பா. ஏறிக்கங்க. நான் ஆஸ்பத்திரிக்குதான் போறேன். அந்தக் குரலை அடையாளம் கண்டுகொள்ள பானுமதிக்கு எந்தக் கஷ்டமும் ஏற்படவில்லை. அவள் உற்சாகத்தோடு என்னுடைய கைகளைப் பிடித்து ஆட்டோவுக்குள் நுழைந்தாள். மெலிதான இருட்டில் பளபளக்கும் இரண்டு நட்சத்திரக் கண்களை நான் பார்த்தேன்.
“சாப்பிட்டுவிட்டுதான் கிளம்பினீங்களா அப்பா?” அன்னம்மாவுடைய கேள்வியைக் கேட்டு நான் சிரிக்க முயற்சி செய்தேன். அதற்குப் பானுமதிதான் பதில் சொன்னாள். “அப்பா காபி மட்டும் குடிச்சுட்டுக் கிளம்பினாரு. எதுவும் சாப்பிடாம வரணும்னு டாக்டர் எங்கிட்ட சொல்லியிருக்காரு”.
“இன்னிக்குப் புதுசா என்ன வாசிச்சீங்க அப்பா?” அந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டதுதான் என்று தெரிந்தும் நான் பதில் சொல்லவில்லை.
“அவரு கத எழுதற ஆளு. நாலு புத்தகங்க வெளியாயிருக்கு” பானுமதி பெருமிதத்தோடு சொன்னாள். அதற்குப் பிறகு அவர்களுடைய பேச்சு அதைப் பற்றித்தான் இருந்தது. மழையின் இரைச்சலில் அது எதுவும் என் காதில் விழவில்லை.
அன்று கீமோ சிகிச்சை கிடையாது. பரிசோதனைகளை முடித்து டாக்டரையும் பார்த்து விட்டு நாங்கள் சீக்கிரமாகவே அங்கிருந்து வெளியில் வந்தோம்.
ஆஸ்பத்திரி கேண்டீனில் டீ குடித்துக் கொண்டிருக்கும்போதுதான் அன்னம்மாவைப் பற்றியக் கூடுதல் விவரங்களைப் பானுமதி என்னிடம் சொன்னாள். அன்னம்மாவுடைய புருஷன் இந்த நகரத்தில் பிரபலமான ஒரு ஹையர் செகண்டரி ஸ்கூலில் மலையாள ஆசிரியராக இருந்தார். வாசிப்பில் பெரும் ஆர்வம் உள்ள ஒரு ஆள். ஒரு நாள் காலை நடைப்பயிற்சிக்கு போன அவர் திரும்பி வரவில்லை. விசாரித்தபோது சாலைக்குப்
பக்கத்தில் ஓடையில் இறந்து கிடப்பதாக தெரியவந்தது. ஏதோ ஒரு வாகனம் இடித்துவிட்டு போனதால் ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு மேல் இரத்தக்குளியலில் கிடந்தார். பிறகு பழைய சாமான்களைப் பொறுக்க வரும் ஒரு கிழவன் கண்டுபிடித்துச் சொன்னான். புருஷனுடைய மரணத்திற்குப் பிறகு, அன்னம்மா சிறிய ஒரு வீட்டுக்கு மாறினார். வயதான அம்மாவும் ஒரு வளர்ப்பு நாயும்தான் துணை.
ஒரு சமயம் அன்னம்மா சிஸ்டர் என்னிடம் கோபமாகப் பேசினாள்.“எழுதற உங்கள மாதிரி ஆளுங்க துஷ்டங்க. அழகழகா நிறய கதைங்கள நீங்க எழுதுவீங்க. அதயெல்லாம் வாசகருங்க எதிர்பார்ப்புகளோடு வாசிச்சாங்கன்னா அதுலெல்லாம் நாயகன் அல்லது நாயகி செத்துப்போகறதுதான் முடிவா இருக்கும். அதனாலதான் அத மறுபடியும் வாசிக்கத் தோனறது இல்ல”.
“சாவைப் பாத்து அவ்வளவு பயமா?” நான் கேட்டேன்.
“எந்த ஒரு ஆஸ்பத்திரி ஊழியருகிட்டயும் எப்பவும் கேட்கக்கூடாத கேள்வி இது. உங்க கதைங்க எல்லாத்துலயும் வர்ற காதல், காமம், வெறுப்பு, கண்ணீர், இது எதுலயும் ஒரு அர்த்தமும் இல்ல. இதத் தெரிஞ்சுக்கணும்னா இங்க வந்து இந்த நோயாளிங்களோட வாழ்க்கையப் பாக்கணும். எவ்வளவு வேதனைய இவுங்க சகிச்சுகிட்டு இருக்காங்கன்னு புரிஞ்சுக்கணும். எங்களால முடிஞ்ச வரைக்கும் எல்லாரயும் கவனிச்சுக்கறோம். பணிவிடை
செய்யறோம். ஆனா சில சமயத்துல காரியங்க கைய விட்டுப் போயிடும். அப்ப வாழ்க்கை இவ்வளவுதான்னு சமாதானப்படுத்திக்கறதத் தவிர வேற வழியில்ல. இங்க பயத்துக்கோ, துக்கத்துக்கோ முக்கியத்துவம் இல்ல. ஆனா. உண்மையா உங்கள மாதிரி எழுத்தாளருங்க அப்படி இல்ல. அதெல்லாம் விரகமானது”. பட்டென்று அவளுடைய குரல் தழுதழுத்தது. ஏதோ ஒரு நோயாளியைப் பார்க்கப்போவது போல சட்டென்று திரும்பிப் போனாள்.
பிறகு ஓன விடுமுறை காலத்தில்தான் நாங்கள் அங்கு சென்றோம். நோயாளிகள் மிகக் குறைவாகவே இருந்தார்கள். எங்களுடைய கையில் ஒரு பெரிய தூக்குப் பாத்திரம் இருந்தது. அது நிறைய பாயசம். பல சமயங்களில்
அனுபவித்த வேதனைகளுக்கு ஒரு முடிவு என்பது போல பாயசத்தை பானுமதி அறைகளில் இருந்த நோயாளிகளுக்கும் அவர்களுடன் வந்தவர்களுக்கும் கொடுத்தாள்.
படுக்கைகளுக்கு இடையில் நடந்து சிறிய கோப்பையில் அவள் பாயசத்தைப் பரிமாறுவதை பார்த்தபோது எனக்கு சந்தோஷம் ஏற்பட்டது. அன்று அன்னம்மா சிஸ்டருடன் பானுமதி நிறைய நேரம் இருந்தாள். அப்போது நான் வெளியில் ஆவணி மாதத்து வெய்யிலின் மினுமினுப்பைப் பார்த்து நின்றுகொண்டிருந்தேன். பிறகு நெரிசல் குறைந்த வராந்தாவில் நடக்கும்போது பானுமதி சொன்னாள்.
“அப்பப்ப நாம இங்க வரணும். சரியா? இந்த சிஸ்ட்டரயும் டாக்டரயும் பாக்கனும். எவ்வளவு அன்பானவங்க!”. என்னுடைய கையைப் பிடித்து அவள் புன்னகை செய்தாள். “நான் ஒரு விஷயத்த சொன்னா விச்சுப்பீங்களா?”.
குறும்புத்தனத்தை ஒளித்து வைத்த ஒரு பார்வையோடு அவள் தொடர்ந்தாள்.
“நீங்க கதை எழுதற அந்த நோட்டுப்புத்தகங்க இருக்கு இல்ல? அத நான் சிஸ்ட்டருக்கு படிக்கறதுக்காகக் கொடுத்தேன். பயப்படவேணாம். திரும்பித் தந்துடுவாங்க.அப்பா எழுதின புது கதைங்க ஏதாச்சும் இருக்கான்னு கேட்டாங்க. கொடுத்தேன். உங்ககிட்ட கேட்டா கிடைக்காதுன்னு தெரியும்”. என் மனதில் கோபம் தோன்றியது. ஆனால் அதை நான் வெளியில் காட்டவில்லை.
“பரவாயில்ல” என்ற அர்த்தத்தில் நான் குனிந்த தலையுடன் நடந்தேன். அந்த நாட்கள் எல்லாம் பானுமதிக்கு ஆறுதல் தரும் நாட்களாக இருந்தன. இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை டாக்டரைப் போய்ப் பார்க்க வேண்டும் என்பது கட்டாயம். அப்போது எல்லாம் அன்னம்மா சிஸ்ட்டரைப் பார்க்க பானுமதி மறக்கவில்லை.
“இனிமே கீமோவுக்கு அவசியமில்ல” என்று அன்னம்மா சொன்னபோது அவள் நினைத்துப்பார்த்தாள்.
அன்னம்மா சிஸ்ட்டருக்கு கொடுப்பதற்கென்று அவள் மொட்டைமாடியில் வளர்ப்புப் பைகளில் கொஞ்சம் கீரை விதைகளை நட்டாள். அதை அறுவடை செய்தபோது, கிடைத்த கொஞ்சம் கீரைகளுடந்தான் நாங்கள் அங்கே போனோம்.
டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிய பிறகு காகிதத்தில் பொதிந்த கீரைகளுடன் நாங்கள் அதிவேகமாக நான்காவது மாடியில் இருந்த கீமோ அறைக்கு சென்றோம்.
ரிஜிஸ்டரில் எழுதிக் கொண்டிருந்த உடல் பருமனான இன்னோரு சிஸ்ட்டர் உடனே பானுமதியை அடையாளம் கண்டுகொண்டாள். “ஓ. அம்மா ஸ்மார்ட்டாயிட்டீங்களே! முடியெல்லாம் நல்லா வளந்து அழகியாயிட்டீங்க.
பானுமதியுடைய முகம் நாணத்தால் சிவந்து போனது. புன்னகையுடன் சொன்னாள்.
“அன்னம்மா சிஸ்ட்டருக்காக இதக் கொண்டு வந்தேன். நான் மொட்டை மாடியில நட்டு வளர்த்தது”. அதை வாங்கிக்கொள்வதற்கு முன்பே சிஸ்ட்டர் சொன்னாள். “அட. ஒரு நோட்டுப் புத்தகத்தை அன்னம்மா சிஸ்டர்
எங்கிட்டக் கொடுத்துட்டுப் போனாங்க”.
பழைய கவரில் பொதிந்த என்னுடைய நோட்டுப்புத்தகத்தை நீட்டினாள்.
அந்த சிஸ்டர் கண்ணாடிக்கு இடையின் வழியாக என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். “அன்னம்மா சிஸ்டர் எங்க?”. பானுமதியுடைய கண்கள் தேடின. “சிஸ்டர் இல்ல. லீவுல”.
“என்னிக்கு வருவாங்க?”.
“ஊருக்குப் போயிருக்காங்க”. சட்டென்று பானுமதியுடைய முகம் வெய்யில் பட்ட கீரை போல வாடியது.
“அப்படீன்னா இத நீங்க எடுத்துக்கங்க. அன்னம்மா சிஸ்டர் வர்றப்ப நான் வேற கொண்டுவந்து தர்றேன்”. பழைய கவரில் பொதிந்த நோட்டுப்புத்தகத்தை பானுமதி என்னிடம் கொடுத்தாள்.
“இப்ப திருப்தியாயிடுச்சா?” என்ற அர்த்தத்தில் அவள் தலையை ஆட்டினாள். கீமோ அறையில் இருந்து வெளியில் வந்தபோது வழியில் க்யூவில் நின்றுகொண்டு தங்கள் முறைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களின் நீண்ட
வரிசை.
காலம் செல்லச்செல்ல நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிறது.
திடீரென்று பின்னால் வந்த மற்றொரு நர்ஸ் என்னிடம் சொன்னாள். “அப்பா. உங்கள உள்ள கூப்பிடறாங்க”.
“என்ன விஷயம்?” என்று விசாரிக்க நான் உள்ளே போனேன்.
டூட்டி சிஸ்டருடைய முகம் வாடியிருப்பதை பார்த்தேன். “அப்பா. அன்னம்மா சிஸ்டரோட விஷயத்த வேணும்னுதான் அம்மா கிட்ட சொல்லல. அவங்க இறந்து போயிட்டாங்க. கடைசி ஸ்டேஜ்லதான் நோய் இருக்கறது தெரிஞ்சுது. மேசைக்குள்ளே இருந்து எதையோ வெளியில் எடுத்து நீட்டினாள். “அம்மா கேட்டா இதத் தர்றதுக்குதான் கூப்பிட்டேன்னு சொன்னா போதும். சரியா?”.
இரண்டு மிட்டாய்களை அவள் என்னுடைய கையில் கொடுத்தாள். அதற்கு மரணத்தின் ஜில்லிப்பு. நிசப்தமாக நான் அதை பானுமதியிடம் கொடுத்தேன். அவள் எதுவும் பேசவில்லை. வீட்டிற்கு போய்ச்சேர்ந்த நான் அந்த நோட்டுப் புத்தகங்களை அலட்சியமாக மேசை மீது வைத்தேன். ராத்திரியில்தான் நான் அதை வெளியில் எடுத்தேன்.
சும்மா அதை முகர்ந்து பார்த்தேன். அதற்குள் இருந்து சகிக்க முடியாத ஒரு ஆஸ்பத்திரி வாசனை. உள்ளே பக்கங்களில் பென்சிலால் யாரோ எதையோ எழுதியிருந்தார்கள். சில கதைகளுக்கு அடிக்குறிப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. நான் அதை மடக்கி வைத்தேன். பானுமதி கொசு வலைக்குள் சுகமாக தூங்கிக்கொண்டிருந்தாள்.
அன்னம்மா சிஸ்டருடைய புன்னகைக்கும் முகம் மனதில் தோன்றியது.
சங்கடமாக இருந்தது. மெதுவாக வாசல் கதவைத் திறந்து வெளியில் இறங்கினேன்.
நல்ல குளிர் பொழியும் கிறிஸ்துமஸ் ராத்திரி. முற்றத்தில் மாமரத்தில் இருந்த ஏதோ ஒரு பறவை என்னுடைய வரவை விரும்பாமல் பறந்து போனது. அடுத்த வீட்டில் மொட்டை மாடியில் இருந்து கண் சிமிட்டும் எல் இ டி நட்சத்திரங்கள் முற்றத்தில் வெளிச்சம் வீசின. வானத்தைப் பார்த்தேன். நிலா உதிக்கவில்லை. லேசாகக்கூட இளம் காற்று வீசவில்லை. ஒரு இலை கூட அசையவில்லை. என்றாலும் நிறைய நட்சத்திரங்கள்
அங்கே மின்னிக்கொண்டிருந்தன.
அதோ… அந்தக் கூட்டத்தில் தன்னந்தனியாக அந்த இரண்டு நட்சத்திரங்கள்!