குஞ்சுன்னி பிள்ளை சாலையில் இருந்து வலது பக்கம் திரும்பி நடந்தான். அதிக உயரம். “அந்தப் பக்கமாப் போயிருக்கணும். அந்த வழியாத்தான் முன்னாலெல்லாம் வந்தேன். திரும்பி போக வேற குறுக்கு வழி இருக்கு. பலரும் அந்த வழியாத்தான் வருவாங்க. இறங்கிப் போறதும் அதே வழியிலதான். கொஞ்ச நேரம் நிக்கறேன்”
குஞ்சுன்னி பிள்ளை நினைத்தான். இடதுப் பக்கமாக இருந்த ஸ்கூல் வளாகத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். “மூச்சிரைச்சதுனாலதான் நிக்கறேன்னு யாருக்கும் தெரியக்கூடாது” சிறுவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தான்.
“டேய்… அதோ பாருடா. உன்னோட தாத்தா நிக்கறாரு”
“அவரு என்னோட தாத்தா இல்ல. உன்னோட தாத்தா”
”என்னோட தாத்தாவும் இல்ல” இன்னோரு பையன் சொன்னான்.
“மணி என்ன ஆச்சு தாத்தா?”
வராந்தாவில் இரண்டு பெண் டீச்சர்கள். அவர்கள் எதைப் பற்றியோப் பேசிக் கொண்டிருந்தார்கள். சிரித்தார்கள்.
“டேய். அந்த வாட்ச் ஓடலடா” ஒரு பையன் சொன்னான்.
“தாத்தாவுக்கு பேரப்பசங்க விளயாடக் கொடுத்ததுடா” கூட்டமாகச் சிரிப்பு. அதோடு சேர்ந்து மணி முழங்கியது. பையன்கள் வகுப்பறையை நோக்கி ஓடினார்கள். குஞ்சுன்னி பிள்ளை வாட்சைப் பார்த்தான். பையன்கள் சொன்னது சரிதான். ஒன்பது மணி ஆனபோது அது நின்றிருந்தது. அவன் வாட்சையெல்லாம் கட்டிக்கொண்டு வெளியில் வருவதில்லை.
“நேரம் பாக்கறதுக்கு இங்க ஒன்னும் இல்லயே?” என்று சொல்லி, பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் மகளுடைய மகன் வீட்டில் வைத்துவிட்டுப் போன வாட்ச் அது. அவன் புதிதாக வேறொன்றை வாங்கிக் கொண்டான். கொஞ்ச தூரம் நடந்தபோது மூச்சு இரைத்தது.
கொஞ்சநேரம் இங்கயும் நிக்கலாம். கிண்டல் செய்ய இங்கப் பசங்க யாரும் இல்ல. எவ்வளவு சத்தமா அந்தப் பசங்க அப்படிச் சொன்னாங்க?
தூரத்துல நின்னுகிட்டு இருந்த டீச்சருங்களும் இதயெல்லாம் கேட்டாங்க. வலது பக்கமாக நடந்தான். “முன்னால இது ஒரு மண் மேடாட்டம் இருந்துச்சு. இப்ப இங்க கம்பீரமா ஒரு கட்டிடம். நல்ல அழகு. ஒரே நேரத்துல குலை தள்ளத் தயாராக் காத்துகிட்டு வரிசை வரிசையா நிக்கற நேந்திரம் வாழைங்க. அதையும் தாண்டி கோட்டை கொத்தளம் போல நீண்டதூரம் பச்சைப்பசேல்னு வயலுங்க.
அது வெத்தல கொடியாயிருக்கும். இந்த குன்றுப்பகுதியில கூட இப்படித் தேங்காய் காய்க்குமா? காசு இருக்கற யாராச்சும் நிலத்த வாங்கியிருப்பாங்களா இருக்கும். இது அவுதாவோட வீடா இருந்ததுதானே? அவன் வித்துட்டு வயநாட்டுக்குப் போயிருப்பான். தாலுகா ஆபீஸ்ல வேல பாத்த சின்ன மரியோட மகந்தான் அவுதா. அவனுக்கு கறுப்பு காபியயும் பீடியயும் விக்கற வியாபாரம். முன்னால எப்பவோ பாத்தது.
இப்பத்தான் இந்த இடத்த பாக்கறேன். கொஞ்சக் காலத்துக்கு முன்னால இந்த இடம் எப்படி இருந்துச்சு! சுத்தி மதில் கட்ட எவ்வளவு பணம் செலவாயிருக்கும்? “அய்யோ! இது எங்க எஜமானன் இல்லயா!”. மதிலுக்கு உள் பக்கத்தில் இருந்து கேள்வி வந்தது. “ஓ. என்னைத் தெரிஞ்ச ஒரு ஆள் இங்க இருக்கானே!” “யாரது? சொன்னாத்தான் ஞாபகம் வரும்”
“குட்டி அவுதாதான் நான்”
“நான் பென்ஷன் வாங்க வந்தேன். நீ நல்லா இருக்கியா?” வெறுமனே நலம் விசாரித்தான்.
அவன் நன்றாகத்தான் இருக்கிறான் என்பதை அவனுடைய வீட்டையும் தோட்டத்தையும் பார்த்தா தெரியும். “வாழ்க்கை அப்படியும் இப்படியுமாப் போயிக்கிட்டு இருக்கு. மண்ண வெட்டறவனுக்கும் உழவு செய்யறவனுக்கும் சுகமா இருக்க எங்க நேரமிருக்கு? ட்ரஷரிக்குப் போறப்ப இங்க கொஞ்சம் வந்துட்டுப் போனா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்”
“ஆகட்டும்” என்று சொல்லி குஞ்சுன்னி நடந்தான்.
“முன்னால இங்க வர்றப்ப பதக்கத்த அங்கியிலக் குத்திகிட்டிருக்கற ஊழியர்களயும் கான்ஸ்டபிளயும் பாக்கலாம். இன்னிக்கு அதெல்லாத்தயும் பாத்தா பசங்க கேலி செஞ்சு சிரிப்பாங்க”. வராந்தாவில் வேட்டியை இரண்டாக மடித்துக்கட்டி சுவரில் சாய்ந்து கொஞ்ச நேரம் நின்றான்.
“சாகலைன்னு நிரூபிக்க வருஷத்துக்கு ஒரு தடவ ட்ரஷரி ஆபீசருக்கு முன்னால வரணும்”. டிரஷரி ஆபீசர் முன்னால் போய் குஞ்சுன்னி இதைச் சொன்னான்.
“கொஞ்ச நேரம் கழிச்சுக் கூப்பிடறேன்” அதைக் கேட்டால் அவள் ஏதோ சாக்குபோக்கு சொல்வது போலத் தோன்றும்.
“அறுவைசிகிச்சை செய்ய தயாராகற மாதிரி இதுக்கும் தயாராவாங்க. இது எனக்கு தெரியும். நானும் ஒரு ஆபீசரா இருந்திருக்கேன் இல்லயா? பென்ஷன் புத்தகத்துல இனிஷியல் செஞ்சு எழுதினா வேலை முடிஞ்சுது”. குன்று ஏறி வந்த களைப்பு இன்னும் நீங்கவில்லை.
“கொஞ்சம் சூடா ஏதாச்சும் குடிக்கலாம். இங்க காபியோ டீயோ கிடைக்குமா?”. கடந்து சென்ற ஒரு ஆளிடம் குஞ்சுன்னி கேட்டான்.
“எஜமானனா!”
“எனக்கு அடையாளம் தெரியல”
“நாந்தான் ராமப்பணிக்கர்”
“ஓ”
“உங்களுக்கு இப்பவும் வேல இங்கதானா?”
“இல்ல. பென்ஷன் வாங்க வந்தேன். காபியா டீயா? என்ன வேணும்? நான் வாங்கிட்டு வரேன். வெத்தலப் பாக்கும் வேணும்தானே?”
“நானேக் கடைக்குப் போறேன். உங்களுக்கு எதுக்குக் கஷ்டம்?”
“எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல. நான் எத்தன காபி வாங்கிட்டு வந்திருக்கேன்? அப்படியிருக்கறப்ப இது கஷ்டமாத் தோணுமா? அதுவும் இல்லாம உங்களுக்கு நடக்க கஷ்டமில்லயா?” ரிடையர்டு மாஜிஸ்ட்ரேட் குஞ்சுன்னிப் பிள்ளையின் முகம் தெளிவடைந்தது.
“டீயேப் போதும்”. டீ பாத்திரத்தை திருப்பிக் கொடுக்கப் போகும்போது காசு கொடுத்தால் போதும் என்று நினைத்து குஞ்சுன்னி தன்னுடைய நினைவு மண்டலத்தில் இருந்து ராமப்பனிக்கரைப் பற்றிய நினைவுகளை ஞாபகப்படுத்த ஆரம்பித்தான்.
இதே இடத்தில் ஒரு வருஷத்துக்கு முன்னால் அவர்கள் பிரிந்து சென்றார்கள். ஒருவரையொருவர் மறந்து போகவில்லை. அவ்வளவுதான். பணிக்கர் டீயையும் இடிச்ச வெத்திலைப் பாக்கையும் புகையிலையையும் கொண்டு வந்தான்.
“எஜமானன் நேரா வந்து பென்ஷன் வாங்கறதுதான் வழக்கமா?”
“இல்ல இல்ல. உசிரோட இருக்கேன்னு இன்னிக்கு நேர வரணும்”
“பசங்க யாரையாச்சும் கூட்டிகிட்டு வந்திருக்கலாம்தானே? துணையில்லாம எங்கப் போறதும் அவ்வளவு நல்லது இல்ல. பஸ் ஏறி இவ்வளவு தூரம் வரணும் இல்லயா? இப்ப வயசு எம்பது இருக்கும்தானே?”.
“எம்பதாயிடுச்சு” பணிக்கர் டீ கோப்பையோடு போக ஆரம்பித்தபோது குஞ்சுன்னி பிள்ளை “காசு எவ்வளவு ஆச்சு?” என்று கேட்டான்.
“அத அப்பவே நான் கொடுட்துட்டேன்” பணிக்கர் நடந்தான்.
பணிக்கர் திரும்பி வந்து குஞ்சுன்னி பிள்ளையை ட்ரஷரி ஆபீசருக்கு முன்னால் கூட்டிக்கொண்டு போனான். பென்ஷன் புத்தகத்தில் இனிஷியல் செய்யப்பட்டு வேலை முடிந்தது.
“குஞ்சுன்னி பிள்ளை. எம்பத்து ஒன்னு ரூபா பத்து பைசா இல்லயா?” என்று கேட்டு பணத்தை எண்ணிக் கொடுத்தார்கள்.
“எல்லா மாசமும் பென்ஷன் வாங்க யார அனுப்புவீங்க?”
“யாரயாச்சும் அனுப்புவேன்”
“உசிரோடதான் இருக்கோம்னு சாட்சி பத்திரத்துல கையெழுத்து போட அங்க பக்கத்தில யாராச்சும் இருக்காங்களா? நான் மாசாமாசம் பென்ஷனை வாங்கிகிட்டு வந்து கொடுக்கறேன். சாட்சிக்கு ஆளத் தேடிகிட்டு அலைய வேணாம். என்னோட பையன் இருக்கான்”
”யாரு?”
“என்னோட பையந்தான். அவன் அஸிஸ்ட்டெண்ட் என்ஜினியரா இருக்கான்”
“இதக் கேக்கறப்ப சந்தோஷமா இருக்கு. நீங்க ரொம்பக் கஷ்டப்பட்டீங்க . இப்ப சுகமா இருக்கீங்க”
“பெரிய பையன் பி ஏ படிச்சு பள்ளிக்கூடத்துல வேல பாக்கறான். ரெண்டாவது பையந்தான் என்ஜினியர். மூனாவது ஒரு பொண்ணு. அவ இப்ப முடிஞ்ச எம்பிபிஎஸ் பரீட்சை எழுதினா. ஜெயிச்சுட்டா. நாலாவது பையனோட விஷயத்துலதான் எனக்குக் கொஞ்சம் கஷ்டம். படிக்கறதுல கொஞ்சம்கூட ஆர்வம் இல்ல. கண்ட பசங்க கூட சேந்து கெட்டுப் போயிடுவானோன்னுதான் பயம்”
“அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது பணிக்கர்”
“எஜமானனோட குழந்தைங்க?”
“எனக்கு ஆம்பளப் பசங்க இல்லைன்னு தெரியும்தானே? பொம்பளப் பசங்க அப்படியும் இப்படியுமா வாழறாங்க. பெரிய பொண்ணோட புருஷன் பென்ஷன் வாங்கறான். அவ பசங்க ரெண்டு பேரும் வேலையில இருக்காங்க.
யாரும் பெரிய படிப்பு படிச்சவங்களோ சொத்து இருக்கறவங்களோ இல்ல. அவுங்க யாருகிட்டேர்ந்தும் நான் எதயும் வாங்கிக்கறது இல்ல. என்னோட செலவுக்கு இந்தப் பென்ஷன் போதும். மூனாவது மகளும் அவளோட குழந்தைங்களும் வீட்டுலதான் இருக்காங்க. அவளோடப் புருஷனுக்கு கொஞ்சம் நிலபுலம் இருக்கு.
ஒரு பையன் வில்லேஜ் அசிஸ்டெண்ட். இன்னொருத்தன் பிஏ படிக்கறான். இங்க வந்தப்ப அவுதாவப் பாத்தேன். திரும்பிப் போறப்ப வரணும்னு சொல்லிட்டுப் போனான். போய் பாக்கலாம். அவனுக்கு நல்ல காலம் புறந்திருக்கு இல்லயா? நான் அவனைப் பாக்கறது எனக்கும் சந்தோஷம். அவனுக்கும் சந்தோஷம்”
“அப்படின்னா போலாம். நானும் வரேன்”
எஜமானனுக்கு அவனோட இப்போதைய நிலைமை என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? ரெண்டு பசங்க. குழந்தைங்களும் இருக்காங்க. ஒருத்தன் ப்ரொபஸர். இன்னொருத்தன் பாம்பேயில ஒரு கம்பெனியில. மூவாயிரம் ரூபா சம்பளம்! இந்தப் பக்கமா வர்றப்ப எல்லாம் நான் அவனப் போய்ப் பாப்பேன். பெரிய உதவியெல்லாம் நானும் செஞ்சிருக்கேன். அதுக்கு நன்றியோட இருக்கான்”
அவர்கள் இரண்டு பேரும் அவுதாவுடைய வீட்டை அடைந்தனர். வீடு என்று சொல்வதை விட ஒரு பங்களா என்று சொல்வதுதான் அழகு. அவுதா விருந்தாளிகளை வரவேற்று உபசரித்தான். குஞ்சுன்னி பிள்ளை நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். பணிக்கர் ஓரமாக நின்றான். அவுதா சொன்னான்.
“எஜமானன் இங்கேர்ந்து போனதுக்கு அப்புறம் ஒன்னு ரெண்டு தடவ எங்கயோப் பாத்தேன். ஆனா இன்னிக்கு தூரத்துலேர்ந்து பாத்தப்பவே எனக்கு புரிஞ்சிடுச்சு. ரொம்ப தளர்ந்து போயிட்டீங்களே? நடக்கறீங்களா?”.
“நடந்து என்ன ஆகப்போகுது? அதுக்கு பெரிசா அவசியம் ஒன்னுமில்லயே?”
“என்ன குடிக்கறீங்க? ஜில்லுன்னு வேணுமா? சூடா வேணுமா?”
“டீ போதும்” பணிக்கர் சொன்னான்.
குடித்து முடித்துவிட்டு குஞ்சுன்னி விடைபெற்றான்.
“கொஞ்சம் உக்காரணும். காரக் கொண்டு வர்றதுக்கு ஆள அனுப்பி வச்சிருக்கேன். எஜமானனுக்கு எங்கேயாச்சும் போகணும்னு தோணிச்சுன்னா எனக்குத் தகவல் சொல்லி அனுப்புங்க. ஒரு கார்டு போட்டாக்கூட போதும். நான் காரு அனுப்பித்தறேன்.
எனக்கு ரெண்டு டாக்சி இருக்கு. இந்த ஆபீஸாலதான் நான் கஞ்சி குடிச்சேன். கடவுள் இப்ப கண்ணத் துறந்திருக்காரு. நாளைக்கு என்னன்னு பயப்படாம தூங்கலாம்”
கார் வந்தது. பனிக்கரும் அவுதாவும் கொஞ்ச தூரம் தள்ளிபோய் நின்று இரகசியமாக பேசிக் கொண்டார்கள்.
“எப்படியா இருந்தாலும் காரு இங்க தான் வரணும். எஜமானனோட நானும் வர்றேன்” சொல்லிவிட்டு பணிக்கரும் வண்டியில் ஏறினான்.
வண்டி கிளம்ப ஆரம்பித்த போது அவுதா எஜமானனிடம் சொன்னான். “கொஞ்சம் அரிசிய வண்டியில வச்சிருக்கேன். அத நீங்க வாங்கிக்கனும்”
பணிக்கர் சொன்னான். “இப்ப அவுதாவுக்கு முன்ன மாதிரி பஞ்சம் எதுவும் கிடையாது. பென்ஷன் வாங்க வர்றப்பல்லாம் நான் அவனப் போய்ப் பாப்பேன். பென்ஷன் வாங்கின காசு என்னோட கையில இருக்குன்னு அவனுக்குத் தெரியும். இருந்தாலும் அஞ்சு ரூபா இன்னிக்கும் அவன் எப்பவும் போல எனக்குக் கொடுத்தான். கார் குஞ்சுன்னி பிள்ளையின் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றது.
அவன் வண்டியில் இருந்து இறங்கிய போது சொன்னான். “அரிசி கார்லயே இருக்கட்டும். நீங்க திரும்பப்போறப்ப அவுதாவ சங்கடப்படுத்தாம சொல்லிடுங்க.
இப்போதைக்கு இதெல்லாம் அவங்கிட்டயே இருக்கட்டும். அப்புறம் எப்பவாச்சும் தேவைப்பட்டா வாங்கிக்கறேன்னு அவன் கிட்ட சொல்லணும்” பணிக்கர் வற்புறுத்தினான். ஆனால் குஞ்சுன்னி தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.
கிழவன் வேண்டா வெறுப்பாக ஐந்தாறு உருண்டை சோறு சாப்பிட்டான். பிறகு கட்டிலில் போய் படுத்துக் கொண்டான். பழைய நினைவுகள் அலைமோதின. ரிடையர்டு மாஜிஸ்ட்ரேட்டுடைய வீட்டின் படுக்கையறைக்குப் போய் பனிக்கர் சொன்னான். “பெருக்கறவளோட பையனை மோசடிக் கேசுல போலீஸ்காரங்க பிடிச்சுகிட்டுப் போயிட்டாங்க”
அதற்கு மேலும் பணிக்கரைப் பேச குஞ்சுன்னி அனுமதிக்கவில்லை.
“பையனை போலீஸ்காரங்க பிடிச்சுகிட்டுப் போய் ராத்திரி முழுக்க அடிச்சாங்க. அவனோட அப்பா செத்துப்போனதுலேர்ந்து அவதான் அவன வளத்ததுன்னு அவனுடைய ஆயா சொன்னா. தண்டிப்பதற்கு முன்பே அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். ஒரு மூட்டை அரிசியை அவன் திருடிவிட்டான் என்பதுதான் அவுதா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.
விலங்கு போட்ட கைகளோடுதான் பிள்ளை அவுதாவை முதல்முதலாகப் பார்த்தான். போலீஸுக்குப் பயந்து கொண்டு அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். திருடியதாகச் சொல்லப்பட்ட ரங்கூன் அரிசியும் எம் ஹெச் ஜி என்ற மொத்த வியாபாரியின் பெயர் பொறிக்கப்பட்ட மூட்டையும் ஊரில் எங்கு வேண்டுமானாலும் சுலபமாகக் கிடைக்கும்.
குற்றம் சுமத்தப்பட்டவனுக்காக இப்படி வாதாடினார்கள். குற்றவாளி குற்றம் செய்தான் என்பதைப் போலீசால் கோர்ட்டில் நிரூபிக்க முடியவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எடுத்ததாக சொல்லப்பட்ட பொருட்கள் குற்றவாளியிடம் ஒப்படைக்கப்பட்டது.
“திருடியிருப்பானா அவன்! இருக்கலாம். மன நிலை தவறியிருக்கலாம். கதி கெட்ட ஒருத்தன் அரிசி திருடினதுக்காக இப்ப வசதியா இருக்கற காலத்துல அவனோட மனசாட்சி இப்ப அவனை குத்துது. அந்த அரிசிதான் இது. அவனைத் தண்டிக்காம விட்டதுக்காக அவன் இந்த அரிசிய இப்ப எனக்கு லஞ்சமா இலவசமாக் கொடுக்கறான். பணிக்கர் அவந்தான் எங்கிட்ட அவுதாவுக்காக சிபாரிசு செஞ்சதா சொல்லியிருப்பான். அதனாலதான் கேஸ் ஒன்னுமில்லாம ஆச்சுன்னும் அவுதாகிட்ட அவன் சொல்லியிருப்பான். அதுக்கான பிரதிபலனை பனிக்கர்தான் அவுதா கிட்ட அப்பப்ப லஞ்சமா வாங்கிக்கறானே? எப்படி இருந்தாலும் அவுதா எனக்கு லஞ்சம் கொடுத்துட்டானே?” முள் மேல் இருப்பது போல காரில் இருக்கும் போதும் தளர்ந்து போய் இப்போது கட்டிலில் கிடக்கும் போதும் குஞ்சுன்னியின் மனதில் இதெல்லாம் ஓடின.
“இனிம அவுதா என் முன்னால வரமாட்டான். பணிக்கரும் வரமாட்டான். வர வேணாம்...”
“அப்பா தூங்கறீங்களா, “என்ன வேணும்?”
“ரேஷன்ல சாமான் வாங்க பசங்கள கடைக்கு அனுப்பலாம்னு நினைச்சேன்”
“பாக்கெட்டுல ரூபா இருக்கு. எடுத்துக் கொடு”