கதையை பற்றி ஒரு சில வரிகள்...
“வாழ்க்கையின் சாயங்காலத்தில் அமைதியையும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் விரும்பாதவர்கள் எவரும் இல்லை. சிலர் தனிமையில் மூச்சு முட்டும்போது, வேறு சிலர் குடும்பச் சொந்தங்களின் கட்டுகளால் சிறை பிடிக்கப்படுகின்றனர். வேலை நெருக்கடிகளின் அவசரகதி ஓட்டத்தின் முடிவில் கூட, ஒரு சிறிது ஓய்வெடுக்க வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கும் இதயங்கள் நம் வீடுகளிலும் சுற்றுவட்டாரத்திலும் ஏராளம் உண்டு. அப்படிப்பட்ட ஒரு நிலைமையை சித்தரிக்கும் கதைதான் இது.
*****
காலைப்பொழுது. வாசுதேவன் வாசல் திண்ணையில் இருந்து செய்தித்தாளை வாசித்துக் கொண்டிருந்தான். திடீரென்றுதான் மகன் கூப்பிடுவது கேட்டது. “அப்பா! இங்க கொஞ்சம் வா”
அவன் செய்தித்தாளை மடக்கி வைத்து முற்றத்தில் இருக்கும் மகனுக்கு பக்கத்தில் போனான். “என்ன?”
“இதப் பாத்தியா அப்பா? ஒரு எலி செத்துக்கிடக்கு. நாத்தம் சகிக்கமுடியல. இத எடுத்துக்கிட்டுப் போய் புதைக்கணும்”
முப்பத்தி எட்டு வயதுக்காரன் மகன் எழுபது வயதுடைய அப்பாவிடம் சொன்னான். அவன் தலையாட்டினான்.
மகன் உள்ளே போனான்.
வாசுதேவன் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு வந்து வாழை மரத்துக்குஅடியில் எலியைக் குழி தோண்டிப் புதைத்து மூடினான்.
சமையலறையில் நெருக்கடியான நேரம் அது. மகள் கூப்பிடுகிறாள்.
“அம்மா! கொஞ்சம் ஓடி வர்றியா?”
“என்னடி?”
“இதோ ஒரு கரப்பான்பூச்சி”
“துடப்பத்த எடுத்து அத அடிச்சு வெளிய போடமாட்டியா நீ?”
”எனக்கு பயம்” சுமதி அதைக் கொல்ல மருந்து அடித்து சாகடித்து வெளியில் தூக்கிப்போட்டாள்.
மகள் பிரசவத்திற்கு அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறாள். குழந்தைக்கு வயது நான்கு.
அவளுடைய புருஷன் வளைகுடாவில் இருப்பதால், அவள் அம்மா அப்பாவோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
அவள் காலையில் வேலைக்குப் போகவேண்டும். மகன் ஆபீசுக்குப் போகவேண்டும். குழந்தை நர்சரிக்குப் போகவேண்டும். அப்போது எல்லாருக்கும் சாப்பிட மத்தியான சாப்பாட்டைத் தயார் செய்து கொடுக்க வேண்டும்.
குழந்தையைக் காலையில் நர்சரிக்குக் கூட்டிக் கொண்டு போவதற்காகக் குளிப்பாட்டி டிரஸ் செய்து ரெடியாக்கி சாப்பாட்டை ஊட்டிவிடவேண்டும். எல்லோருக்கும் மூன்று நேரத்துக்கும் சாப்பாடு தயார் செய்வதும், வீட்டைச் சுத்தப்படுத்துவதும், துணிமணிகளை எல்லாம் தோய்ப்பதும், இதெல்லாம் போக மற்ற வேலைகளைச் செய்வது அவள்தான். அவளுக்கு மூச்சு விடக்கூட நேரம் இருப்பது இல்லை.
குழந்தையை நர்சரிக்குக் கொண்டு போய் விடுவதும் திரும்பக் கூட்டிக் கொண்டு வருவதும் வாசுதேவன். வீட்டுக்கு வந்த பிறகு, மறுபடியும் குழந்தையைக் குளிப்பாட்டி சாப்பாடு போட்டு, மற்ற எல்லா வேலைகளையும் செய்வது சுமதிதான். மகள் வரும் வரை குழந்தையுடைய நர்சரி ஹோம் வொர்க்கை செய்வதும் படிப்பு சொல்லித் தருவதும் வாசுதேவன்.
சுமதிக்கு எல்லா வேலைகளும் முடிய ராத்திரி பதினோரு மணியாகிவிடும். கொஞ்ச நேரம் முதுகைச் சாய்க்க மட்டும்தான் அவளால் முடியும். ராத்திரியில் கரண்ட் போனால் மகளும் மகனும் ஒன்றாகச் சேர்ந்து கூப்பிடுவார்கள். “அப்பா! எமர்ஜென்சி லைட் எங்க இருக்கு? அம்மா! இங்க மெழுகுவர்த்தி இல்லயா? ஃப்யூஸ் போயிடுச்சான்னு பாக்கணும்! அப்படின்னா அத சரி செய்யணும்”
அதைப் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது. அப்புறம் அந்த வீட்டில் வெளிச்சம் வரவேண்டும் என்றால் சுமதியோ வாசுதேவனோதான் பார்க்க வேண்டும். ஞாபகங்கள் அவளுடைய பழைய காலத்தை நோக்கிப் பயணித்தன.
வாசல் திண்ணையில் சாய்வு நாற்காலியில் அப்பா. வெற்றிலையில் பாக்கை வைத்துச் சுண்ணாம்பைத் தடவி மடித்துக் கொடுத்துவிட்டு, அம்மா அப்பாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பாள். இரண்டு பேரும் பழைய கால கதைகளைப் பேசி சிரித்து மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். நடுநடுவில் சில விஷயங்களைப் பற்றி அம்மாவுடைய குற்றச்சாட்டுகளும் திட்டுகளும் இருக்கும்.
“யாரது? பொழுது சாயற நேரத்துல சமையலறையோட வாசல் கதவ திறந்து வச்சிருக்கறது? தண்ணி வச்சாச்சா? ராத்திரி குடிக்கறதுக்கு போட்ட கஞ்சி என்னவாச்சு? பொழுது போயிடுச்சுன்னா அப்புறம் தேங்காய கீறக்கூடாது. பச்சடிக்கு வேணுங்கற தேங்காய முன்னாலயே துருவி வச்சுடணும்”
“என்னோட அப்பாவும் அம்மாவும் வயசான காலத்துல ஒன்னா இருந்து சந்தோஷமா வாழ்ந்தாங்க. ஒரு கவலயும் இல்லாம வாழ்ந்தாங்க. அப்ப குழந்தைங்க எல்லாருக்கும் அப்பா அம்மாகிட்ட பயமும் மரியாதையும் இருந்துச்சு. நல்லவேள. பொண்ணு ஊர்ல இருக்கா. அவ மருமகனோட வெளிநாட்டுல இருந்தா? அவளோட பிரசவத்துக்கு நாந்தான் அங்க போகவேண்டி வந்திருக்கும்.
ஏலியம்மாவோட நிலமைதான் எனக்கும் வரும். அவளோட பொண்ணோட பிரசவ சமயத்துல உதவி செய்யத்தான் அவ அமெரிக்காவுக்கு போனா. அங்க குளிரு அவளால தாங்கமுடியல. எப்பப் பாத்தாலும் வியாதிதான். ஆனா குழந்தயப் பாத்துக்க ஆள் வச்சா அது ரொம்ப செலவாகுமாம்.
சொந்த அம்மான்னா அப்புறம் என்ன செலவு இருக்கு? அர்ப்பணிப்போட வேல செய்ய ஒரு ஆளுமாச்சு. ஏலியம்மாவுக்கு திரும்ப ஊருக்கு வந்துடணும்தான் இருக்கு. ஆனா முடியல. என்ன செய்யறது? இத எல்லாம் அவ எங்கிட்ட சொல்லி அழுதப்ப எனக்கு ரொம்ப சங்கடமாப் போச்சு.
நல்ல படிப்பு. உசந்த சம்பளம். வசதியான வாழ்க்கை. எல்லாம் இருக்கு. ஆனா குழந்தைங்க கிட்டேர்ந்து கிடைக்கவேண்டிய அன்பும் அனுசரணையும் இல்லயே? தண்ணிய சூடுபண்ணி அடுப்புலேர்ந்து இறக்கி வைக்கக் கூடத் தெரியாது. ஒரு தேங்கா துருவக்கூடத் தெரியாது. அவ்வளவு எதுக்கு? திடீர்னு வீட்டுக்கு விருந்தாளிங்க யாராச்சும் வந்துட்டா, அவங்க மிரண்டு போயிடறாங்க. அவுங்களுக்குத் தேவையான சாப்பாட்டக்கூட அவுங்க சமைக்கறது இல்ல. வெளியில ஹோட்டலேர்ந்துதான் வாங்கிச் சாப்பிடறாங்க.
சுமதி நினைத்துப் பார்த்தாள்.
“என்ன சுமதி? பெரிசா யோசிச்சுகிட்டு இருக்க?”
அவன் கேள்வி சுமதியுடைய நினைவுகள் போட்ட கட்டுகளை அவிழ்த்துப் போட்டது.
“ஒன்னுமில்ல. நாம நம்மளோட குழந்தைங்கள நல்லபடியாத்தானே வளத்தோமான்னு ஒரு சந்தேகம்.
“அதென்ன இப்ப அப்படி தோண? அவுங்கள நல்லாத்தான் படிக்கவச்சோம். கை நிறய சம்பளம் தர்ற வேல. நல்ல வருமானம். அப்பறம் என்ன பிரச்சனை?”
“இதெல்லாம் இருந்தா போதுமா? ஒரு கவர் பாலை கீழ சிந்தாம பாத்திரத்தில ஊத்த தெரியாது. வண்டி ரிப்பேராச்சுன்னா அதுல என்ன கோளாறுன்னு கூட கண்டுபிடிக்கத் தெரியாம உடனே வொர்க் ஷாப்புக்கு போன் செய்யறாங்க. பெரிய படிப்பு படிச்சவங்க! பெரிய படிப்பு! ஒரு பிச்சக்காரனோ ஒரு நன்கொட வசூல் செய்யற ஆளோ கேட்டுல வந்து நின்னா “அப்பா! இல்லாட்டா அம்மான்னு அலறுவாங்க!
வாசல் பக்கம் எட்டிக்கூடப் பாக்கமாட்டாங்க. அரிசியோட வில தெரியாது. எண்ணயோட வில தெரியாது. லிஸ்ட்ட கடைக்கு மெசேஜ் செய்யறாங்க. சாமானுங்க வீட்டுக்கு வந்து சேருது. அத வச்சு காசு கொடுக்கறாங்க.
“இந்த காலத்து பசங்கல்லாம் இப்படிதான் சுமதி”
“இதெல்லாத்தயும் நமக்கு யாராச்சும் சொல்லித் தந்தாங்களா? அத கேட்டுதான் நாம வளந்தோமா?
நம்மளோட காலம் முடிஞ்சு போயிடுச்சுன்னா இவங்க எப்படி வாழ்வாங்க?”
“காலம் மாறிப்போச்சு இல்லயா சுமதி? நாமளும் ஓட்டத்தோட சேந்து நீந்தறோம். வேறென்ன செய்யறது?”
“எனக்கு இப்ப வேல செஞ்சு செஞ்சு அலுப்பாப் போயிடுச்சு. பல சமயத்துலயும் எங்கயாச்சும் ஓடிப் போயிடலாம்னு தோணுது”
“அய்யய்யோ! அப்படி கடுமையான முடிவு எடுத்துடாத. உங்கூட நான் இருக்கேன் இல்லயா?
இத சொல்றப்பதான் எனக்கு ஞாபகம் வருது. என்னோட ஒரு பழய தோழன் பிரதாபன். பார்த்தேன். பேசிகிட்டு இருந்தோம். நடுவுல அறுபது வயசானவங்களோட ஒரு நிறுவனத்தப் பத்தியும் அவன் சொன்னான். அங்க ஒரு நாளைக்கோ ரெண்டு நாளைக்கோ ஒரு மாசத்துக்கோ இல்லாட்ட அங்கயே நிரந்தரமாக் கூட தங்கலாமாம். பொழுது போக்க எல்லா விஷயங்களும் அங்க இருக்கு. விளையாட்டுங்க ஏராளமா இருக்கு. அவுங்களே ஏற்பாடு செய்யற சின்ன டூர் ப்ரோகிராம் கூட இருக்கு. நாம அங்க ஆடலாம். பாடலாம். நம்ம வயசுல இருக்கறவங்ககிட்ட நம்ம கருத்துங்கள சந்தோஷமா பகிர்ந்துக்கலாம். இந்த மாதிரி விஷயங்க நிறய அங்க இருக்கு. நாபளும் ஒரு வாரம் அங்க போய் இருந்துட்டு வரலாம். அதுக்கு கொஞ்சம் காசு செலவாகும். இருந்தாலும் சந்தோஷமா நிம்மதியா ஒரு டென்ஷனும் இல்லாம போயிட்டு வரலாம். இதப் பத்தி பசங்ககிட்ட நான் பேசறேன்”
ராத்திரி சாப்பாட்டு நேரம். வாசுதேவன் பிள்ளைகளிடம் இதைப் பற்றிப் பேசினான். அவர்களின் முகம் பட்டென்று இருண்டது. வாடிப்போனது.
“நீ அங்க போய் இருந்தா இங்க இருக்கறத எல்லாத்தயும் யாரு பாக்கறது? குழந்தைங்களோடயும் பேரக் குழந்தைகளோடயும் இருக்கவேண்டிய காலத்துல கொண்டாட்டமா? வேற வேல இல்லயா? அதுவும் காச செலவழிச்சுகிட்டு! உங்க ரெண்டு பேருக்கும் இங்க என்ன குறச்சல்? இங்க உங்களுக்கு சந்தோஷம் இல்லயா?
யாராச்சும் எதயாச்சும் சொல்லிட்டா உடனே அத சாக்கா வச்சுகிட்டு பாஞ்சு ஓடறதா?”
“எங்களுக்கும் ஒரு சந்தோஷம் ஒரு மாற்றம் வேணாமா? எப்பப் பாத்தாலும் உங்க வேலைங்கள மட்டுமே செஞ்சுகிட்டு இருந்தா போதுமா?”
“அதுக்காக? யாரு சொன்னாங்க வேணாம்னு? ஒரு வாரம் இல்ல… நிரந்தரமா அங்கயேப் போய் இருந்துடுங்க. திரும்ப இங்க வரணும்னு கிடையாது”
கடைசித் தீர்மானம் போல அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து சொன்னார்கள்.
அதோடு எல்லாம் முடிந்தது.
மூஷிக பெண் மறுபடியும் மூஷிக பெண்ணானது மாதிரி, சுமதியும் வாசுதேவனும் முன்பு போலவே தங்கள் பழைய வேலைகளில் மூழ்கினார்கள்.