ஒரு தொடருந்து நிலையம் இருந்தது. பாலைவனத்தின் பயங்கரமும் தனிமையின் வெப்பக்காற்றும் குடியிருக்கும் ஸ்டேஷன் அது. ஒரு அந்நியக் கிரகத்தில் இருப்பது போல அது இருந்தது. கார்மேகக் கூட்டங்களும் அபூர்வமான பறவைகளும் அந்த வழியாகப் பயத்துடனேயேக் கடந்து போயின. மர்மமான ஏதோ ஒன்றில் இருந்து உற்பத்தியாகி, இன்னொரு துரதிர்ஷ்ட மண்டலத்துக்கு நீளும் ஸ்டேஷனுக்கு முன்னால் கடந்து போகும் தண்டவாளங்கள்.
பெரும்பாலும் அவை சுட்டுப் பழுத்திருந்தன. ஏதோ விஷப்பாம்பை போல மயங்கிக் கிடந்தன. டெலிபோன் கம்பிகளில் காற்றடிக்கும் போது ஆள் அரவமில்லாத தனிமையும் ஒற்றைப்படலும் சேர்ந்து மரணத்துக்குச் சமமான ஒரு பேரிரைச்சல் அங்கே உருவெடுத்திருந்தது.
ஸ்டேஷன் மாஸ்ட்டர் அகால முதுமை பாதித்த சின்ன வயசுக்காரண். பிரிட்டிஷ் ஆட்சி கட்டிடக்கலையில் கட்டப்பட்ட உருக்குத் தூண்களும், புராதனமான மேற்கூரையும் கொண்டு அது மரணம் அடைந்தவர்களுடைய வீடு போலக் காட்சியளித்தது. தனிமையின் பெருங்கடலில் அகப்பட்ட அந்த ஸ்டேஷன் மாஸ்டர் மேலதிகாரிகளுக்குக் கடிதங்களை எழுதிக் கொண்டேயிருந்தார்.
”இது இப்போது எத்தனையாவது விண்ணப்பம் என்று தெரியவில்லை. யாருமில்லாத இந்த ஸ்டேஷனில் எந்த வேலையும் செய்யாமல் எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன! தெரியவில்லை. “இங்க இருந்து இருந்து என்னோடக் கடந்த காலமே எனக்கு மறந்து போயிடுச்சு”. குளிர்காலத்துல காத்து பட்டு பட்டு இலைங்க உதுந்து போறத எத்தனைத் தடவ பாத்துட்டேன். உண்மையில இந்த வேலயில நான் சேர்ந்து ஆயுள் தண்டனையில் இருக்கேன் சார். தனிமைச் சிறையில இருக்கேன் சார். ஒரு ஆளு யாருமில்லாதப்ப தனிமையில தன்னப்பத்தித் தானே யோசிச்சுகிட்டு இருப்பான். அவன் சமூக ரீதியா நாடுகடத்தப்பட்டவந்தானே? மறதியோட பாதாளச் சிறைக்கு அது அவனைக் கொண்டு போய்விட்டுடும். நான் உடம்புல பாதி மட்டும் வெறும் கால் சட்ட மட்டும்தான் போட்டுகிட்டு இருக்கேன். என்னோட கடந்த காலமும் நிகழ்காலமும் இதுதான். வேறென்ன இங்க இருக்கு? இதுக்கு நடுவுல சூன்யமான ராத்திரி பகலுங்க. சூன்யமான பொழுதுங்க. இதுக்கெல்லாம் நடுவுல பெரிய சத்தத்தோட வேகவேகமா எப்பவோ வந்து போகற ரயிலுங்க. அதோட முழக்கங்க. பச்சைக்கொடியக் காட்டறது கூட எதுக்காகன்னு பல சமயத்துல எனக்குப் புரியறதேயில்ல. இந்தக் கொடிய யாராச்சும் கவனிக்கறாங்களா?”. இவ்வளவையும் எழுதி முடித்த பிறகு அவனுக்குள் இருந்த தனிமை முழுவதும் நஷ்டமானது.
“தூரத்திலேர்ந்து ஒரு பேரிரைச்சல் கேக்குதா?.. அது ஒரு ரயில் வண்டியோடதா? பேசஞ்ஜரா, சரக்கு வண்டியா?”அறிவிக்கப்படாத காதலைப் போல இந்த எண்ணங்கள் அவனை என்றும் மூச்சு முட்டச் செய்து கொண்டிருந்தன. உண்மையில் அவனை உலக வாழ்க்கையோடு இணைத்தது அந்த சாப்பாட்டி என்கிற மனுஷந்தான்.
ஏறக்குறைய மனித ரூபத்தில் இருந்த வேலைக்காரன் அவன். வேலைக்காரன் என்ற வார்த்தை எந்த அளவுக்கு பொருந்தும் என்று தெரியவில்லை. பசிக்கும்போது ஒரே ருசி உணவுகள் உள்ள பொட்டலங்களுமாக அவன் வருவான். அருவருப்பான உடல் உறுப்புகளும் உறுதியான கண்களும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும்.
மேலதிகாரிகளுக்கு எழுதும் கடிதங்களை ரிஜிஸ்ட்டர் செய்ய அவன் அந்த வேலைக்காரனைத்தான் நம்பியிருந்தான். மாதச்சம்பளம் என்ற பெயரில் அவன் ஏதோ கொண்டு வந்து தருவான். அவன் எடுத்துக் கொண்டு வரும் செய்தித்தாள்கள் கூடப் பொய்யானதோ? சந்தேகமாக இருந்தது அவனுக்கு. “நீங்க அந்தக் கடிதங்கள ரிஜிஸ்ட்டர் செஞ்சீங்கதானே?” மாஸ்ட்டர் வழக்கம்போல கேட்பான்.
“மேலதிகாரிங்களப் பாத்தீங்களா? என்னோட விஷயத்தச் சொன்னீங்களா? ஒரே ஒரு நாளைக்காச்சும் எனக்குப் பதிலா ஒரு மாத்து ஆள அனுப்பணும்னு நான் சொன்னதச் சொன்னீங்களா?”. வேலைக்காரன் எல்லாவற்றையும் அலட்சியமாகக் கேட்டுக்கொண்டிருப்பான். பிசாசுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு ஜீவன் மாதிரி அப்போது அவனுடைய முக பாவம் இருக்கும்.
வேலைக்காரனுடைய கையாலாகாத்தனத்தையும், அக்கறையில்லாத நடத்தையையும் பார்த்து, பல சமயங்களில் மாஸ்ட்டர் வெடித்துச் சிதறுவான். “நான் சொல்றதக் கவனிக்கிறீங்களா இல்லயா? வேற எதக் கவனிக்கிறீங்க? என்னோடக் கடிதங்களயும் புகாருங்களயும் நீங்க மேலதிகாரிங்களுக்குச் சொல்றதுண்டா?”. சூன்யமான கண்களோடு அவன் மாஸ்ட்டரைப் பார்ப்பான்.
எத்தனையோ நூற்றாண்டுகளாகத் திரும்பத் திரும்பப் பார்க்கப்படும் அந்தப் பார்வை. மாஸ்ட்டர் அந்தப் பார்வையில் இருந்து தப்ப படாதபாடு படுவான். “கொடியைத் தூக்கியெறிஞ்சுட்டு நான் பாட்டுக்கு என்னோட பாட்டுல போயிடுவேன். என்னால இத விட்டுட்டுப் போக முடியாதுன்னு நினைக்கிறீங்களா நீங்க?”. வேலைக்காரன் கருவிழி இல்லாத கண்களோடு நிற்பான்.
அன்றைக்கும் இதேக் காட்சிகளுடன் ஒரு மீள் காட்சி நடந்தது. வழக்கத்துக்கு மாறாக மாஸ்ட்டருக்கு மூச்சிரைத்தது. “வயதாறதோட அடையாளமா இது? கைவிடமுடியாத ஒரு தண்டனையாக வந்த ஒரு நன்மை அவனை அரித்துத் தின்று கொண்டிருப்பது போல அவன் உணர்ந்தான்.
“எனக்கு இங்க செய்யறதுன்னு சொன்னா ஒரே ஒரு வேலதான் இருக்கு. நான் விபத்துங்களுக்கு காரணமா இருந்துடக்கூடாது. ஒரே தண்டவாளத்துல ரெண்டு ரயிலுங்க ஓடக்கூடாது. சின்னக் குழந்தைங்க அலறி அழக்கூடாது. குழந்தைஞ்கள இழந்த அம்மாக்கள் உண்டாகக்கூடாது. விதவைங்களா யாரும் மாறிடக்கூடாது”
இந்த ஸ்டேஷன விட்டு என்னால வெளியப் போக முடியாதா?”. அவனுடைய ஆத்மாவை திடுக்கிட வைத்துக்கொண்டு எதிர்பாராமல் ஒரு இரயில் அலறிப் பாய்ந்து ஓடிப் போனது.
மின்னல் வேகத்தில் உள்ளேப் போய் கொடியை எடுத்து ஆட்டினான். “கடமையை நிறைவேத்தின திருப்தியா, இல்ல அலட்சியத்தோட பதில் உருவமா?”. ஒவ்வொரு இரயில் கடந்து போகும் போதும் இந்த எண்ணம் அவனை மணிக்கணக்கில் வேட்டையாடியது. அந்தத் தூண்டலில் அவன் மேலதிகாரிகளுக்குக் கடிதங்களை எழுதினான்.
வேதனையாலும், மனம் பேதலித்துப் போனதாலும் ஒரு அரசு அதிகாரிக்கு மனு எழுதும் முறையையே மறந்து போனான். அந்தக் கடிதங்கள் பலவீனமான ஒரு மரணக் காவியமாக மாறாமல் இருக்க வெகுநேரம் செலவழித்தான். ஒரு புகார் கடிதத்தில் ஒருசமயம், அவன் “எதுக்காக சார் இந்த வழியா போன் கம்பிங்க கடந்து போகுது? ஒரு தடவை கூட தகவல்களை பகிர்ந்து கொள்ளாத தெம்மாடியா இந்த கம்பிங்கள யாரு சார் முறுக்கி கட்டினது?”
அந்த சுற்றுப்புறத்தை விட்டுவிட்டுப் போக தைரியம் வரவில்லை. தண்டவாளங்கள் இரயில் வண்டியுடைய பேரிரைச்சல்களை கவனமாக கூர்ந்து கேட்டன.
கண்களை அகல விரித்து அவன் தண்டவாளத்தின் வழியாக கொஞ்ச தூரம் நடந்து போனான். நல்ல பனி பொழியும் ஒரு காலை வேளை. வழி நெடுகிலும் பூதம் மாதிரி டெலிபோன் கம்பங்கள். பறவைகள் எதையோப் பார்த்துப் பயந்தது போல ஒற்றை மரத்தை விட்டுப் பறந்து சென்றன. ஸ்டேஷனை விட்டு நடந்த ஒவ்வொரு காலடியும் அவனுக்கு ஒரு நாட்டியம் போலத் தோன்றியது.
கடமையும் அதிகாரமும் சேர்ந்து கையாலாகாத்தனத்தோட கடினமான ஒரு பாவத்துக்கு அவனை இழுத்துச் சென்றது. அவனுடைய இதயத்துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது. துரதிர்ஷ்டவசமான தூரங்களில் பனி மூடிக் கொண்டிருந்தது. நீண்டு நீண்டு செல்லும் தண்டவாளங்களுடைய மெல்லிய ஓசை பூமிக்குள் இரங்கிச் செல்கிறதா? இரயில் வண்டி வந்து கொண்டிருந்தது.
“அடக் கடவுளே! அனாதையான என்னோட இந்த ரயில்வே ஸ்டேஷன்” அவன் பயத்தோடு வேகமாக ஓடினான். கொடியை எடுத்து ஆட்டத் தயாரானான். வேலைக்காரன் அப்போது பல தடவை வந்தான். அவன் பிசாசு போல இருந்த முகத்தைக் கழுவவேயில்லை. தனிமையைத் துரத்த மாஸ்டர், தன் அறையில் கண்ணாடிகளையும் சுகபோக பொருட்களையும் நிரப்பி வைத்தான்.
கூட்டமாக நிற்கும் மனிதர்கள் நிறைந்த படத்தை அவன் சுவரில் ஒட்டி வைத்தான். தனிமையை தோற்கடிக்க முயன்றான். ஆரம்பத்தில் தாங்கமுடியாத விரக்தி ஏற்பட்டது. அப்போது கண்ணாடி முன்னால் போய் நின்றான். தன்னைத்தானேப் பார்த்துக் கொண்டான். வேறு எவரும் பார்க்கவில்லையா என்பதை உறுதிப்படுத்தினான்.
இதுவும் கொஞ்ச நாட்களில் அலுத்துப் போனது. அப்போது, கண்ணாடிக்கு முன்னால் இருந்து அவன் டான்ஸ் ஆடினான். நாட்டியமாடுபவன் வேறு எவரையும் பார்க்கக்கூடாது என்பது போல அவன் ஆடினான். மெல்ல மெல்ல இதுவும் அவனை பைத்தியக்காரத்தனம் என்று நினைக்க வைத்தது.
சலிப்பு ஏற்பட்டது. சிறிது நாட்களிலேயே அவன் அழகு சாதனப் பொருட்களையும் அலங்காரப் பொருட்களையும் வாங்கி வைத்தான். எல்லா பொருட்களிலும் அவனுக்கு ஒரு நெருக்கமான உணர்வு ஏற்பட்டது. மறுபடியும் புராதன வாசனையுள்ள அந்த ரயில்வே ஸ்டேஷனும், இரயில் வண்டிக்காகக் காத்திருப்பதும் தனிமையும் சூடான காற்றும் அவனை வேட்டையாடின.
கடந்த காலத்தில் ஒரு தடவை கூட எந்த ஒரு இரயில் வண்டியுடைய வரவும் அவனுக்குத் தெரியாமல் இருந்ததேயில்லை. ஒரு இரயிலுக்குக் கூட அவன் கொடி காட்டாமல் இருந்ததேயில்லை. அவனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. அப்போதும் அவன் மேலதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பிக் கொண்டேயிருந்தான். வேலையில் நியமனமான தேதியும் அதற்காக அவன் எழுதிய பரீட்சைகளும் பெற்ற பயிற்சிகளும் எல்லாம் நினைவுகளின் மயானத்தில் சமாதி கட்டப்பட்டிருந்தன.
இப்படி இருக்கும்போது குளிர்காலம் கடந்து போன ஒரு நாள் அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. “என்னை மாதிரி ஒரு ஆள் இந்த தண்டவாளங்களோட ரெண்டு முனையிலும் நிக்கவச்சா என்ன? ஏன் நிக்கமாட்டான்? தண்டவாளத்து வழியா நடந்தா அதுல ஒரு ஆள நிச்சயமாக் கண்டுபிடிக்கலாம். ஆனா... ஸ்டேஷன விட்டுட்டுப் போகமுடியாது. இதுக்கு நடுவுல ஏதாச்சும் ரயில் வண்டி வந்துடுச்சுன்னா?
பொறுப்பில்லாத ஒருத்தன் ஒரு பிணம். லட்சணமான குற்றவாளியும்கூட..”. பட்டென்று ஒரு யோசனை. “வருஷக்கணக்கான மறைவுல ஒரு ஆயிரம் இரும்பு ரயிலுங்க இந்த வழியாப் போயிருக்கு. ஒரு தடவ கூட ஒரு ரயிலும் இங்க நின்னதாத் தெரியவேயில்ல.
ஒருத்தன் கூட எனக்கு வணக்கம் சொன்னதேயில்ல. பகல் நேரத்துலயும், ராத்திரி நேரத்துலயும் அந்த ரயிலுங்க வெறுமனே இந்த ஸ்டேஷன் வழியா ஓடிச்சு. அவ்வளவுதான்”. யூனிபார்மில் வைக்கோலை நிரப்பி ஒரு பொம்மையை உண்டாக்கினான். ஒரு பச்சைக்கொடியையும் பிடித்துக் கொண்டு அது ஸ்டேஷனில் இருந்து தண்டவாளத்தை நோக்கி லேசாக குனிந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தது. வேலைக்காரனிடம் இருந்து இதெல்லாவற்றையும் அவன் ஒளித்து வைத்தான். ஏதோ பாதாள உலகத்தோட தலைவருங்களோட ஒற்றனைப் போல அவன் இருந்தான். பொம்மையை இரண்டு பக்கங்களிலும் நிற்கவைத்தான். எல்லாம் சரியாக நடக்கிறது என்று தோன்றியபோது ஸ்டேஷனை விட்டு இறங்கினான். ஒவ்வொரு காலடியும் தாங்கமுடியாத சுமையாக பூமியில் பதிந்தது.
நின்றுகொண்டிருந்த டெலிபோன் கம்பங்களில் இறுக்கி கட்டிய கம்பிகளில் காற்றடித்தது. அவற்றின் முனகல் சத்தத்தைக் கேட்டு அவனுக்கு முதல்முறையாக பயம் ஏற்படவில்லை. பறவைகள் எவையும் பயந்து போய் அந்த இடத்தை விட்டுவிட்டு பறந்து ஓடவேயில்லை. அவை எல்லாம் முழுக்க முழுக்க அது வரை பார்க்காத நல்லவனைப் பார்ப்பது போல அவனைப் பார்த்தன. தன்னுடைய ஸ்டேஷன் தூரத்தில் ஒரு பொட்டு போல மாறுவதை மாஸ்டர் உணர்ந்தான்.
இரண்டு பக்கங்களிலும் இருந்த தரிசு பூமிகளுக்கு கறுப்பு நிறமாகத் தோன்றியது. ஸ்டேஷனை சூழ்ந்திருந்த ஒரு புராதனமான வாசனை தன்னை விட்டு விலகி விலகிச் செல்வதை உணர்ந்தான். தூரத்தில் ஒரு பறவைக் கூட்டம் பறந்து போனதா? நறுமணம் பூசிக்கொண்ட ஒரு காற்று தன்னை முத்தமிட்டதா? அவன் யோசித்தான்.
தண்டவாளங்கள் வழியாக நடந்து செல்லும் அந்த பயணத்தின் போது அதற்கு தனி தாளம். தனி லயம். அரவம் இல்லாத வெறும் பரப்பில் காலம் காலமாக மறைந்திருந்த புற உலகம் அவன் கண் முன் காட்சி தந்தது. ஸ்டேஷன் என்ற சூன்யம் அவனுடைய பார்வையில் இருந்து பட்டென்று மறைந்து போனது. இதோ… தண்டவாளங்களுக்கு நடுவில் மாஸ்டர் நடுங்கினான்.
அவை வழி மாறிப் போகின்றனவா? அவை இரட்டையாக இரட்டையாக.. அப்புறம் ஒன்றாக… “அப்படீன்னா…? என்னோட ரயில் வண்டிங்களும் ஒரு ஆயுசு காலமும் எதுக்காக ஓடிகிட்டு இருந்துச்சு?”. அவனுக்குள் இருந்து பதட்டம் பீறிட்டு எழுந்தது.